Sunday 19 March 2017

சில கவிதைகள் - 5

வழியனுப்பல்

எத்தனையோ பேர்

ஏற்கனவே எழுதி சலித்துவிட்டனர்

முழு நிலவு குறித்து

சுழற்சிக்கு ஏற்ற வகையில்

விரிந்து சுருங்கும் அதன் வடிவம்

காதல் ரசமோ சாம்பாரோ

ஒழுகும் வரிகள்

காமத்தின் தவிப்பும்

காத்திருத்தலின் துடிப்பும்

தனிமையின் துயரும்

தன்னொளி கொள்ளா முழுமையும்

என எண்ண எண்ண

எழுந்து வருகின்றன

முழுநிலவின் முகங்கள்

அத்தனைக்கும் மேல் அதுவொரு

துணைக்கோள்

எனும் விளையாட்டுப் பிள்ளைகள்

எத்தனை எழுதியும் இன்னும்

தொடப்படாததாய்

தள்ளி நிற்கிறது ஒரு மூதாதையின் எழுச்சி

ஊறும் அத்தனை சொற்களும்

சென்று விழுகின்றன

அவன் மனத்தில்

அவன் கண்டதென்ன

மண்டையோடா

தேங்காய் சில்லா

புதுப்பாலா

விந்தா

எது எது எது

எதைக் கண்டான் அவன்

எண்ணித் தீரவில்லை நிலவின் ஒளியை

எத்தனை இருந்தும் என்ன

என் நிலவே

உன்னிடம் சொல்ல ஒன்று தான் இருக்கிறது

என்னிடம்

அவசங்கள் நிறைந்து அடைத்துக்கிடந்த மனதை

மெல்ல வருடி நீவி சிக்கெடுத்த

அன்னை வடிவினள் அவள்

அளித்ததை பெற்றுக் கொண்ட பிறகு

மருகி நின்றேன் கொடுக்க ஏதுமற்று

உன்னை காண்பித்து அவளை மலர வைத்தேன்

அது போதும் முழுநிலவே

அவளின் மலர்ந்த முகத்துக்கென

உன்னை துதிக்கிறேன்

அந்நேரம் எழுந்த நிறைவுக்கென

அவள் கண்கள் இவ்வரிகளை காணும்

பேறுக்கென

உன்னை ஏத்துகிறேன்

உன்னொளியில் அவள் முகம் கண்ட

வரத்திற்கென

உன்னை வாழ்த்துகிறேன்

உன்னை அவளென எண்ண வைத்த

நாளுக்கென உன்னை வணங்குகிறேன்

அவளும் உன் வடிவினளே

அவள் போதும்

நீ தேவையில்லை

போய் வா நிலவே

------

ஒற்றை

ஒன்றும் மூன்றும்

ஒற்றைப்படை எண்களே

இரண்டில் நின்று

ஒற்றை என கேலி செய்பவர்

அறிவதில்லை

ஒற்றை தான்

ஆனால் நான்

ஒன்றல்ல

மூன்றென

-------

பெருவெறுப்பு

ஏதோவொரு நினைப்பில் எடுத்துப் பார்க்கிறேன்

என்னுள் திரண்டிருந்தது தொப்புள் அழுக்கு போல

ஒரு பெரிய வெறுப்பு

சொல்லாமல் விடப்பட்ட சினங்கள்

கொள்ளாமல் விடப்பட்ட அன்புகள்

அடக்கப்பட்ட அழகுணர்வு

பகிரப்படாத காமம்

தவறவிட்ட காலங்கள்

தவறாய் எழுந்த காதல்கள்

தனிமையில் எழும் ஆங்காரம்

என்னைவிட்டு இயங்குகிறது இவ்வுலகென்ற பயம்

எழுதுகையில் அருகமர்ந்து ஓரவிழியால் நோக்குபவனின் மீதெழும் வன்மம்

நோக்காதவனின் மீதும் எழும் வன்மம்

முதுமையின் மீதான வெறுப்பு

எளிமையாய் வாழ விழையும் ஏக்கம்

அற்பத்தனங்களின் மீதான கோபம்

நானும் அற்பனோ என்றெண்ணும் போதெழும்

ஆழமறியா பயம்

இத்தனையும் திரண்டு

அவ்வெறுப்பு ஊறியதென எண்ணலாம்

அல்லது

உருளைக்கிழங்கு வறுவலில் உப்பில்லாததே

காரணமென கடந்து செல்லலாம்

தேர்வு நம் விருப்பு தானே

--------
பிள்ளை விழி

நீண்டசாலையொன்றின்

நுனியில் அமர்ந்திருக்கும் மயில்

விழுந்து விடப் போகிறதென

ஒரு குழந்தை தான் பதற்றப்பட வேண்டுமா

வயல்வெளிகளுக்கு சிறையிட்டு நிற்கும்

தொடுவான் மறைக்கும் மரங்கள்

நெருங்கிச் செல்லும் போது

ஒரு குழந்தைக்கு மட்டும் தான்

விலகி வழிவிடுமா

பொட்டல் நடுவில் அநாதையாய் நிற்கும்

ஒரு கிரிக்கெட் ஸ்டம்பிற்காக

நான் கண்ணீர் விட்டால்

என்ன குறைந்துவிடப் போகிறது

தலைகளை மட்டும் வெட்டி

தாளில் ஒட்டி அச்சுறுத்தும் நோக்கில்

சாலையோரங்களில் விரித்து நட்டால்

நானும் தான் மிரண்டு போவேன்

--------

உள்ளிருப்பது

என்னை அறிந்தவர்கள் எல்லோரும் இறந்துவிட்டால்

என்னுள் நிம்மதியே எழும் என்று எண்ணுவது

மனநோயா

ஒரு தட்டின் அன்பு

மறுதட்டின் அயோக்கியத்தனங்களால்

நிகர் செய்யப்படுகிறது என்பது

ஆடையற்ற எண்ணமா

நன்றி கெட்டவன் என்பதன் பொருளென்ன

அகங்காரத்தினால் தான்

அடுத்தவரை நாம் பொருட்படுத்துகிறோம்

என்றால் நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா

எல்லாவற்றிற்கும் மேல்

இன்றும் நான் தனித்தவனே

என்றெண்ணாதவன்

இவ்வுலகில் உண்டா

யாரும் எனக்கீடில்லை என்று தன்

கருங்கனவுகளில் கற்பனிக்காதவள்

யார் உண்டு

நான் விரும்புகிறேன்

வெறுப்பு என்னுள் உண்டென உணர்வதால்

நான் அன்பு கொள்கிறேன்

அப்படி ஒன்று அவசியமில்லை என்பதால்

உயிர்வெறி உன்னதப்படுத்தப்படும் வரை

நான் உயிர் வாழ ஒரு பொருள் இருக்கிறது

உன்னதத்தை உடைத்தெறியவேணும்

எனச் சொல்லி ஏமாற்றிக் கொள்கிறேன்

இன்னும் வாழ்கிறேன்

நீங்களும் வாழுங்கள்

வாழ்த்துக்கள்

மலர் கொத்துகள்

-------

திருகாணி மனிதர்கள்

சிலரின் திருகாணிகள்

கச்சிதமாய் பொருந்துகின்றன

சில திருகாணிகள் கேட்பது

சில செண்டிமீட்டர் சிரிப்பையோ

சில துளிகள் கண்ணீரோ

சில துளிகள் குருதியோ

சில நஞ்சுப் பொறுத்தல்களோ தானே

கொடுத்துவிட்டுப் போவோமே

என்ன குறைந்துவிடும்

ஒரு மணி

என் மாலையில் கூடியது என்பதன் முன்

கண்ணீரும் குருதியும் நஞ்சும்

பெரிதல்லவன்றேபடுகிறது

உங்களுக்கு?

-------

பெருந்தன்மை

உள்ளூறி நிறையும் நஞ்சை

உமிழ்ந்தறியக் காத்திருக்கின்றன உறவுகள்

மோதியறிய முண்டியடிக்கின்றன நட்புகள்

ஊடியும் கூடியும் அறிய நினைக்கிறது காதல்

எத்தனை வழிகளில் வழிகிறது இந்நஞ்சு

என்னை வென்று நீ அடைவதென்ன

என் முகச்சுருக்கமா

என் உளக்குலைவா

என் கண்ணீரா

நான் அடிபணிவதா

உன் பாதங்களை நக்குவதா

உயர்ந்தவன் நீ என ஒத்துக்கொள்வதா

எது உன்னை நிம்மதி கொள்ளச் செய்கிறது

சொல்

அச்சிரமத்தையும் உனக்கு வைக்காமல்

நீ விரும்புவதைச் செய்கிறேன்

ஏனெனில் நீ நினைப்பதை என்னில் ஆற்ற

என் அனுமதி இல்லாமல் உன்னால் முடியாது

உன் கலக்கத்தைக் காண என்னால் முடியாது

பிழைத்துப் போ

பெருந்தகையே

------

மற்றொருவர்

ஒரு புதிய இளையவள் திரும்பிச் சிரித்த போது

தயங்கிக் குழம்பும் நண்பன்

நினைவில் எழுகிறான்

மற்றொருத்தி சட்டென திரும்பியதும்

அக்காவை பார்க்க வேண்டுமென

அன்று முழுவதும் தோன்றியது

பின்னர் எனக்குத் தெரியும்

எல்லா பெண் முகங்களிலும்

அக்கா கொஞ்சமாக கலந்திருந்தாள்

கனத்த கரமுடைய நண்பனில் உயரமான மாமா

தலையில் முடியற்ற பேருடலரிடம் தாத்தா

சிறிய உதடுடைய தோழியில் அம்மா

ஆனால் நீங்கள் நம்பமாட்டீர்கள்

இவர்களில் நீங்களும் உண்டென

அப்பாவை மட்டும்  காண முடியவில்லை

கண்ணாடி தவிர்த்த பிற இடங்களில்

------

கொல்லப்பட்டவன்

சிறந்த மனிதர் ஒருவரைக் கொல்லும் வாய்ப்பு

உனக்கு கிடைக்கிறதெனில்

நீ யாரைத் தேர்ந்தெடுப்பாய்

நண்பன் கேட்கிறான்

நானே கேட்டுக் கொண்டேன் என்பது

அவ்வளவு நாசூக்கல்லவே

அதனால் அவன் மேலு‌ம் கேட்கிறான்

ஏனென்று காரணமும் சொல் என

நான் காந்தி என்றேன்

உன் வாய்ப்பினை

ஒருவன் பறித்துவிட்டான் என்கிறான்

ஏசு என்கிறேன்

பலர் சேர்ந்து பறித்துவிட்டனர்

என பதில் வருகிறது

அப்பா என்கிறேன்

அந்த ஆசை இல்லாதவன்

இங்கு உண்டா என்கிறான்

சலித்து நீயே சொல் என்றேன்

சிறந்தவன் யார் என்றான்

புரிந்ததும் தூரத்தில் இருப்பவன் என்றேன்

அங்கு ஏற்கனவே அவன்

கொல்லப்பட்டிருப்பானே என்றான்

என் பெயரன் காலத்தில்

என் இலக்கை தேர்ந்தெடுக்கிறேன்

அவன் ஏற்கனவே

கொல்லப்பட்டிருப்பான் எனினும் என்றேன்

------

தீராப்பெருநகை

சலனமற்றோடும் நதி ஒன்றை

ஓங்கி அறைகிறது ஒரு குழந்தை

தெறிக்கும் துளிகளென்றான வாழ்வில்

ஒற்றைத் துளி நானென உணர்ந்து

ததும்பிக் குழம்புகிறேன்

நில்லாப் பெருங்கடலில்

எம்பிக் குதிக்கும் மீனென

இங்கு வந்து குதித்தேனா

கோரைகளின் குத்திக் கிழிக்கும் நுனிகளென

தன்னையே தான் கிழித்துத் துடிக்கிறது மனது

எதன் மறுதுண்டு நான்

எங்கு காண்பேன் என் இணைத்துண்டை

இணையும் ஒவ்வொரு துண்டிலும்

இதுவல்ல இதுவல்ல என

துடித்தழுவதே என் அன்றாடமா

தனியா விடாய ஒன்று

துளைகாணா எண்ணம் ஒன்று

துணை தேடா துயர் ஒன்று

-----

Friday 10 March 2017

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் - 2

வரலாற்றுப் புனைவுகளை வாசிக்கும் ஒரு நவீன இளைஞனுக்கு இப்படி ஒரு கேள்வி தொடக்கத்தில் எழு வாய்ப்பிருக்கிறது.

வரலாற்றுப் புனைவுகள் உண்மையை நெருங்கிச் சித்தரிக்க முயன்றாலும் ஆசிரியனின் உள எழுச்சி கற்பனை வீச்சு இவை சார்ந்து ஏதோவொரு விதத்தில் வரலாற்றின் மீதான இனப் பெருமிதங்களை உருவாக்கி விடுகிறன்றன. அப்படியான பெருமிதங்கள் உருவாவது குறிப்பிட்ட சமூகத்தினரை மேன்மையாக எண்ண வைக்காதா? சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கான வாய்ப்பினை இவ்வகை நூல்கள் உருவாக்கி விடாதா?

காவல் கோட்டம் பெரும்பாலும் கள்ளர்கள் மற்றும் நாயக்கர்களின் வரலாற்றை விரித்துச் சொல்லும் நூல். ஆனால் இச்சமூகங்கள் இந்நூலில் ஆய்வுக்களமாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இனப் பெருமிதங்களைச் சொல்லும் குறுகல் போக்குடைய ஒரு நூலில் இருந்து இத்தகையை வரலாற்றுப் புனைவுகள் வேறுபட்டு நிற்கும் இடம் இதுவே. அத்தனை நுண் தகவல்களுக்கும் வரலாற்று மனிதர்களுக்கும் சடங்குகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் வஞ்சகளுக்கும் மையமென இருப்பது நூலாசிரியனின் மனவெழுச்சி. அதுவே ஒரு நூலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. ஒரு கறாரான வரலாற்று விசாரணை பாவனையை மேற்கொள்ளும் நூலை நாவலாக்குவது அத்தனை பாவனைகளுக்கும் உண்மைத் தகவல்களுக்கும் ஆழத்தில் இருக்கும் எழுத்தாளனின் மனவெழுச்சியே. அதுவே நெல்சன் தொடங்கி பலரால் விரித்தெழுதப்பட்ட மதுரை குறித்த அபுனைவுகளில் இருந்து புனைவான காவல் கோட்டத்தை வேறுபடுத்துகிறது.

நவீன சமூகத்தில் ஆங்கிலேயர் நமக்கு உருவாக்கி அளித்த ஆய்வுமுறைகளைக் கொண்டே நம்முடைய தொடக்க கால சமூகங்களும் (primitive tribes or elemental society) அதன் வளர்ச்சி நிலைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. அவை ஏன் ஆய்வு செய்யப்பட வேண்டும்?

தன்னைக் குறித்த சரியான பார்வையைக் கொண்டுள்ள சமூகம் மட்டுமே உலகின் பொதுக் கருத்தியலுக்கு இசைந்து போக முடியும். சுயம் குறித்த உயர்வுணர்ச்சியோ தாழ்வுணர்ச்சியோ கொண்ட சமூகங்கள் முறையே அழிவை உருவாக்குபவையாக அழிந்து போகிறவைகளாக மாறிப் போகின்றன. உதாரணமாக ஒரு ஆப்பிரிக்க பழங்குடி குறித்த ஒரு சராசரி இந்தியனின் பார்வை எப்படி இருக்கும்? அவன் தன்னளவிற்கு இன்னும் உயரவில்லையே என அவனைக் கண்டு இரக்கம் கொள்வான். நம்மிடம் நிகழும் பெரும்பாலான "உச்" கொட்டல்கள் அவர்களை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தால் உருவாவதே. இதே ஒரு ஐரோப்பியனைக் காணும் இந்தியன் ஒரு வகை குன்றல் மனநிலையை அடைகிறான். அந்த கண்டம் போல தன் நாடு இல்லை என வருந்துகிறான். இவ்விடத்தில் அவன் கொள்வது தாழ்வுணர்ச்சி. இந்த மனநிலை பொது சமூகத்தில் பிரதிபலிப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவின் உள்காடுகளுக்குள் அவர்களின் பழங்குடி தெய்வத்தை தேடிச் செல்லும் அமெரிக்கனை நாம் மனவெழுச்சியோடு நோக்குகிறோம்.

இவர்களும் அவர்களும் வேறு வகையான வாழ்க்கை கொண்டவர்கள் என்ற பிரக்ஞை இல்லாமல் எல்லோரையும் ஒரு ஏணியில் வரிசையாக நிற்க வைக்கிறோம். இந்தப் பொது மனநிலைக்கு எதிரானதாகவே மானுடவியல் இன வரைவியல் ஆய்வுகள் அமைகின்றன. ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் உற்பத்தி முறை நீதி வழங்கல் முறை மண உறவு முறை என அனைத்தையும் பிரித்து வகைப்படுத்தி அவற்றில் காணப்படும் பொதுக்கூறுகளை  பட்டியலிடுகிறது. "அந்நியர்கள்" என எண்ணப்படுகிறவர்களை "அந்நியமானவை" என ஒதுக்கப்படுபவற்றை நவீன அறிவு தொடர்ந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சு.வேணுகோபாலின் ஆட்டம் குறுநாவலில் திருவிழா முடிந்த பிறகு குப்பையில் வீசப்படும் உணவையும் கறியையும் குறவர்கள் எப்படி பதப்படுததி மீண்டும் உண்கிறார்கள் என்பது சொல்லப்பட்டிருக்கும். ஒருவகையில் வெந்த சோற்றை மீண்டும் அரிசியாக்கும் வித்தை அது.அப்போது அவர்கள் "பொறுக்கித் திண்பவர்கள்" என்ற பொது மனநிலை சற்றே அசைக்கப்படுகிறது.

தேவரடியாள் முறையை "விபச்சாரம்" என்றும் களவு-காவல் உறவை "திருட்டு" என்றும் பொதுமைப்படுத்தி புரிந்து வைத்திருப்பதன் வழியாக நம்முடைய கடந்த காலம் குறித்த ஒரு குற்றவுணர்வும் அதனால் எழுந்த தாழ்வுணர்ச்சியும் நம்மிடம் எஞ்சுகிறது. இதன் மறுபக்கமாக உலகின் தொன்மையான நாகரிகம் ஒன்றின் சொந்தக்காரர்கள் இந்தந்த பேரரசர்களால் ஆளப்பட்டவர்கள் முதன்மையான மக்கள் என்பது போன்ற உயர்வுணர்ச்சியில் திளைக்கத் தொடங்குதல். இவை இரண்டுக்கும் இடையே நிகழ்ந்து போனவற்றை பதிவு செய்யப்பட்டவற்றை அறிவின் கண் கொண்டு பார்த்து நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பவற்றை பதிவு செய்யப்படாமல் விடப்பட்டவற்றை ஊகிக்கும் ஒரு அறிவார்ந்த தன்மை வரலாற்றுப் புனைவுகளில் உண்டு. ஆகவே வரலாற்றுப் புனைவுகளை இனப்பெருமிதம் என ஒதுக்குபவர்கள் பெருமிதத்துக்கும் தாழ்வுக்குமான அவற்றின் சமநிலையை மறுக்கிறார்கள் என்றே பொருள்.

தாதனூர் மதுரையை காவல் காக்கும் கிராமம். இரவின் வழிகளை அறிந்தவர்களாக தாதனூர்காரர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் "செய் நேர்த்தி" என ஒன்றிருக்கும். மிக நுண்ணிய தகவல்கள் வழியே களவின் நேர்த்தியும் காவலின் நேர்த்தியும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. ரெட்டிய கெடுத்த வெள்ளி சாட்டைக்கம்பு வெள்ளி முழுநிலவு அம்மாவாசை வளசை போகும் பறவைகள் ஆந்தைகள் என இரவின் அத்தனை அசைவுகளும் அவர்களுக்கு சமிக்ஞைகளாகிறது. இருளில் இறங்கியதும் களவுக்கு போகிற அத்தனை பேரும் "கருப்பன்" ஆகி விடுகின்றனர்.

காவலுக்கு வரும் கருப்பன்களில் நினைவு ராமாயணச் சாவடியில் சுற்றித் திரிகிறது. காவல்கூலி கொடுக்கப்படாத தெருக்களில் வீடுகளில் அவர்களே களவுக்கும் இறங்குகின்றனர். காவலும் களவும் இருபுறமும் கட்டப்பட்ட சரடாக மதுரையின் இரவுகள் நீள்கின்றன. டெனில்சன் ப்ளாக்பர்ன் பென்னிங்டன் என ஆங்கில ஆட்சியாளர்களுக்கு இணையாக மாயாண்டி வீரணன் ஒச்சு என தாதனூர் பெரியாம்பிளைகளும் எழுந்து வருகின்றனர்.குடிக்காவல் முறையை ஒழிக்க விரும்புகிறது ஆங்கில அரசு. தேனி கம்பம் திருநெல்வேலி என மதுரைச் சூழ்ந்து பரவியிருக்கிறது குடிக்காவல் முறை. வெளியூர்களுக்கு காவலுக்கும் நாட்டாண்மைக்கும் செல்லும் குடும்பங்களின் சித்திரமும் ஊடே புகுகிறது. கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகளும் முல்லை-பெரியாறு அணை அமைப்பதற்கான தொடக்க கால பணிகளும் துரிதம் பெறுகின்றன.

குடிக்காவலர்கள் நகருக்குள் நுழையக்கூடாதென மதுரை நிர்வாகம் சட்டம் பிறப்பிக்கிறது. ஏட்டளவிலேயே இறந்து போகிறது சட்டம். சட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பவர்கள் களவு கொடுக்கிறார்கள். மீட்டு வர மீண்டும் தாதனூரையே நாடுகிறார்கள். தாதனூரின் வழியே விரிந்து பரவிய கள்ளர்களின் பழக்க வழக்கங்கள் உணவு முறைகளையும் உறவு முறைகளும் விரிவாகப் பதிவு செய்யப்படுகின்றன. சற்றே "தாராளமான" திருமண உறவுகள் காது வளர்த்தல் இஸ்லாமியர்களிடமிருந்து வந்த பழக்கமான கவரடப்பு என தாதனூர்காரர்களின் வாழ்க்கை வழியே ஒரு இனக்குழு வரலாறும் விரிகிறது.

களவுக் குற்றத்திற்கென மாயாண்டி பெரியாம்பிள கைது செய்யப்படுகிறார். தாதனூரின் பிடி காவலில் மெல்ல நழுவுகிறது. முல்லை-பெரியாறு அணைக்கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு கைவிடப்படுகிறது. காவல் முறையை ஒழிக்க முடியாமல் திணறுகிறது பிரிட்டிஷ் நிர்வாகம்.

தாதுவருடப் பஞ்சத்தை வெள்ளையானை எரியும் பனிக்காடு போன்ற நாவல்கள் விரிவாக பதிவு செய்திருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்திய பஞ்சங்களை பதிவு செய்த  தமிழின் முன்னோடி படைப்பு என புதுமைபித்தனின் துன்பக்கேணியைச் சொல்லலாம். காவல் கோட்டம் பஞ்சம் நெருங்குவதை மெல்ல மெல்ல சூழ்ந்து கொள்வதைச் சொல்லி பஞ்சகாலத்தை தாண்டிச் செல்கிறது. எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு காலகட்டமாகவே தாது வருடப் பஞ்சம் நெஞ்சடைக்க வைக்கிறது. பஞ்சத்தில் களவும் பெருகுகிறது. காவலும் வலுப்படுகிறது. செட்டியார் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் தானியங்களைக் காத்து தாதனூர் தப்பிக்கிறது. ஒருவேளை பெரியாறு அணை அப்பஞ்ச காலத்திற்கு முன்னரே கட்டப்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும் என்ற இயலா எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டு அத்தியாயங்கள் நகர்ந்து விடுகின்றன. மதுரை நகரம் மெல்ல மெல்ல பிரிட்டிஷின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

காவல்துறையின் பரிணாம வளர்ச்சியின் வழியே ஒரு நிர்வாகம் வடிவம் பெறுவதை அதன் பிடிகள் இறுகுவதை காண முடிகிறது. கால்சட்டைப் போட வெட்கப்படும் போலீஸ்காரர்கள் காவல் நிலையத்திற்கே காவக்கூலி கொடுக்கும் காவலர்களின் தோற்றம் மெல்ல மெல்ல மாறுகிறது. பெரியாறு அணையின் நீர் மதுரை நிர்வாகத்தை குளுமையடையச் செய்கிறது. மீண்டும் குடிக்காவல் முறையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடங்குகின்றன. வில்லியம் காரே தொடங்கி வைத்ததை பென்னிங்டன் தொடர்கிறார்.

களவிற்கான பயிற்சி அதன் மீதான நம்பிக்கை இருளில் நிகழ்த்தப்படும் பழி வாங்கல்கள் என சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது தாதனூர். முந்தைய நிர்வாகத்தின் உரிமையை இன்றைய நிர்வாகத்திடம் விட்டுக் கொடுக்க மறுக்கிறது. தாதனூரில் பிறந்து கிறிஸ்துவராக மாறிய டேவிட் சாம்ராஜைக் கொண்டே தகவல்களைத் திரட்டுகிறது பிரிட்டிஷ் நிர்வாகம். மக்கள் மெல்ல மெல்ல பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தினசரிகளில் அமிழ்ந்து போகின்றனர். கொலைகள் பழிவாங்கல்கள் என நீளும் படலத்தின் வழியே தாதனூரின் வீழ்ச்சி தொடங்குகிறது. தாதனூர் வரை சாலை அமைக்கப்படுகிறது. அதன்பிறகு காவல் நிலையம். அதிலேயே தாதனூர்காரர்கள் அடைக்கப்படுகிறார்கள். குற்றப் பரம்பரையினராக சித்தரிக்கப்படும் தாதனூர்காரர்களின் நினைவில் மாயாண்டிப் பெருசு பட்டசாமியாக எஞ்சுவதோடு நாவல் முடிகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு நூலில் ராமச்சந்திரா குஹா வரலாறு சமகாலத்தை நெருங்குந்தோறும் மேலு‌ம் நம்பகத் தன்மை கொள்ள வேண்டி இருக்கிறது என்று கூறியிருப்பார். காவல் கோட்டத்தின் சிறப்பென இதனையே நான் எண்ணுகிறேன். அதன் தொடக்கம் இஸ்லாமிய அரசுகள் விஜயநகர அரசு மதுரை நாயக்கர்கள் என இருந்தாலும் பக்கங்கள் நகர நகர அது மக்களை நோக்கி வருகிறது. மக்களை நெருங்க நெருங்க பெருங்கனவுகளுக்கான சாயங்களை அழித்துக் கொண்டு யதார்த்த தளத்தில் வந்து முடிகிறது.

நாவல் முழுக்க அடர்த்தியான மௌனங்கள் நிரம்பி வழிகின்றன. இருளின் மைந்தர்கள் மதுரையில் இருள் கிழிபடும் போதெல்லாம் இருள் துல்லியம் இழக்கும் போதெல்லாம் நிலையழிகின்றனர். வாழ்விற்கான ஓட்டத்தில் இறுதி ஆற்றல் வரை செலவழிக்கின்றனர். நகருக்குள் இருந்து வெளியேறி மூன்று திசைகளிலும் காவல் காப்பது "கருது கசக்குவதன்" வழியாக கிராமக் காவல்களைப் பிடிப்பது ரயிலில் களவாடுவது என மெல்ல மெல்ல தாதனூரின் பிடி தளரும் போதும் அவர்களின் நம்பிக்கைத் தளரவில்லை. இரண்டு "ஆஜர்களுக்கு" நடுவில் ஆட்டைத் தூக்கி வரும் திறமை இறுதி வரை அவர்களுக்கு கை கொடுக்கிறது. அந்த நினைவின் துயர்களையும் பெருமிதங்களையும் "பட்டசாமி"க்கு கொடுத்தப்படி தன்னை அழிவின்மைக்கு கொடுத்து விடுகிறது தாதனூர்.

கருமையான அங்கதங்கள் செங்கன் என்பவனிடம் தாதனூரே களவு கொடுத்தல் அதன் வழியே அது மதுரை மன்னனிடம் தன் ஊர் பெண் களவு கொடுத்ததை நினைவு மீட்பது பெண் எடுத்து வரச் செல்வது கல்லெறியக் கற்றுக் கொள்வதில் இருந்து காவல்காரனாக களவுக் கொத்துடன் செல்பவனாக நிலையாளாக பெரியாம்பிளையாக ஒருவன் உயர்வது என அந்த சூழலியே வாழ்ந்து எழுந்து வந்த அனுபவத்தை காவல் கோட்டம் அளிக்கிறது.

ஒரு வரலாற்றுப் புனைவாகத் தொடங்கி கால மாற்றத்தால் ஒழுக்க மதிப்பீடுகளின் மாற்றத்தால் வீழ்ந்து போகிறவர்களை சித்தரித்து முடிகிறது காவல் கோட்டம்.

சமூக மாற்றங்களும் முன்னேற்றங்களும் பல்வேறு வரலாற்று விசைகளால் இறுகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றொன்றைச் சார்ந்தே வளர்கிறது அல்லது வீழ்கிறது. இந்நாவலை முழுமையாக எடுத்துக் கொள்ளும் போது அந்த மாற்றங்களின் வழியே ஒரு பொதுத்தன்மையை நோக்கிச் செல்லும் போக்கு தெரிகிறது. குடிக்காவல் என ஒன்றைச் சொல்ல முயல்கையில் அது மொத்த மதுரையின் வரலாற்றை அதன் வழியே இந்திய வரலாற்றை அதன் வழியே உலகம் முழுக்க உருவாகியிருந்த காலணியாதிக்கத்தை கண்டு விட முடிகிறது. இந்த பெருந்தரிசனத்திற்கென ஒரு பெருநாவலை வாசிக்கலாம்.