Sunday 23 April 2017

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு - மிஷல் தனினோ(தமிழில் - வை.கிருஷ்ணமூர்த்தி)


ஆர்குட் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்து இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் ஒரு சமூக வலைதளம். மின்னஞ்சலில் இன்றும் கோலோச்சும் ஜிமெயிலின் பகுதி. ஆனால் அது நிறுத்தப்பட்டுவிட்டது. அடிப்படையில் ஆர்குட்டைப் பற்றித் தெரிந்தவர்களின் வியப்பு நேரடியாக முகநூலையும் இன்னபிற சமூக வலைதளங்களையும் பயன்படுத்துகிறவர்கள் அடைகிற பரவசத்தை விட குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு "தொடக்கம்" பற்றிய ஒரு கணிப்பு இருக்கிறது. ஆகவே இந்த தொடக்கத்தை அறிந்தவர்கள் எந்தவொரு சாதனையையும் "முன்னகர்தலாகவே" பார்ப்பார்கள். "முன்னுதாரணங்களற்ற" என்ற வார்த்தையை எப்போதும் சந்தேகத்துடனே அணுகுவார்கள். ஆனால் பெரும்பாலும் இத்தகையவர்கள் சோர்வூட்டுகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் பரவசத்துடன் எதைப்பகிர்ந்து கொள்ளச் சென்றாலும் அந்தப் பரவசத்தை குறைக்கும் வகையில் அதற்கு முன்னர் அதே மாதிரி நடந்த ஒரு சம்பவத்தை சொல்வார்கள். அதிலிருந்து இது எப்படி நடந்தது என்பதை விளக்குவார்கள். உண்மையில் இந்த பார்வையே சரியானது. ஏனெனில் நம்மில் பெரும்பாலானவர்கள் இன்று ஒரு "தலைப்புச் செய்தி" மனநிலையிலேயே இருக்கிறோம். எல்லா முன்னகர்தல்களையும் பரவசத்துடன் "முன்னுதாணரங்கள்" அற்றதாக விளக்கிவிடவே முயல்கிறோம். இந்த பரவச மனநிலை ஒருவித "நுகர்வுத்" தன்மை உடையது. ஆனால் ஏதோவொரு துறையில் நம்முடைய வாசிப்பு ஆழம் கொள்ளும் போது பெரும்பாலும் "அந்தகாலத்தின் இருட்டு vs இந்த காலத்தின் வெளிச்சம்" அல்லது "அந்தகாலத்தின் வெளிச்சம் vs இந்தகாலத்தின் இருட்டு" போன்ற மனநிலைகள் மறைந்து அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்று இருக்கும் "முன்னகர்தல்களை" காணும் பக்குவம் நமக்கு கைகூடுகிறது. இப்பக்குவம் ஒரு வகையான கால தரிசனம். ஓரளவு இலக்கிய வாசிப்பு உடையவர்கள் இந்த அனுபவத்தை அடைந்திருப்பார்கள். என் தோழி ஒருவர் டால்ஸ்டாயின் குடும்ப மகிழ்ச்சி என்ற குறுநாவலைப் படித்துவிட்டு "எப்படி இந்த கிழவர் நூறாண்டுகள் கழித்துப் பிறந்த என் வாழ்க்கையை அப்போதே எழுதி வைத்திருந்தார்" என்று கேட்டார். பெரிய பீடிகையாகி விட்டதோ?
சரி தொடரலாம்...
கடந்த காலம் குறித்த கண்டடைதல்களும் சமூகத்தில் இத்தகைய பரவச மனநிலையை உருவாக்குகின்றன. அந்த பரவசத்திற்கான அடிப்படை காரணம் நாம் அங்கிருந்து இங்கு வந்து "குதித்து இருக்கிறோம்" என்று எண்ணுவதே. இன்றும் "ராஜாக் கதைகள்" நமக்கு ஏன் வியப்பையும் பரவசத்தையும் தருகிறது? ஏனெனில் முடியாட்சியில் இருந்து ஜனநாயகத்துக்கு உலக சமூகங்கள் முன்னகர்ந்த நெடும் பாதையை அது கழித்து விட்டு சட்டென நமக்கு தொடர்பே இல்லாத காலத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. ஆனால் வரலாற்றை வாசிக்கும் ஒருவர் "அரசன்" என்ற கற்பிதம் நாம் எண்ணும் அளவுக்கு பரவசம் உடையது அல்ல என்ற உண்மையை அறிகிறார். அன்றைய அரசில் இருந்து இன்றைய அரசு வரையிலான ஒரு நேர்க்கோட்டினை இழுத்துப் பார்க்கிறார். அதுவும் ஒரு "முன்னகர்தல்" மட்டுமே என கண்டடைகிறார். ஆனால் பொதுச் சமூகம் அத்தகைய சோர்வேற்படுத்தும் நீண்ட வேலைகளை செய்து கொண்டிருக்காது. அது "முன்னகர்தல் காலத்தை" கழித்து விட்டு வரலாற்றுப் பெருமிதத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும்.  உலகில் எந்த நாடும் சமூகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒருவேளை ஜனநாயகம் களைய வேண்டிய ஒரு மனநிலையாக இருக்கலாம். ஆன்மீகமான தேடலுக்கும் தன் வரலாற்றை அறிவதற்கும் தொடர்புண்டு. ஆனால் அது இன்னும் தீவிரமான உணர்வுபூர்வமான தளம். அப்படி அச்சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பெருமிதங்களின் வழியாகவே அச்சமூகத்தின் அரசியல் பிரக்ஞைகள் உருவம் பெறுகின்றன. அப்பெருமிதங்களை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு ஆய்வும் பெரும் சலனங்களை அறிவியக்கத்தில் உருவாக்கும்.
பேகன் இன மக்கள் குறித்த எந்தவொரு ஆய்வும் கிறிஸ்தவத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும். தலித் சமூகம் குறித்த ஆய்வுகள் பெரும்பான்மை இந்துக்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கலாம். அதுபோலவே சரித்திர காலத்துக்கு முந்தைய இந்தியாவைப் பற்றிய ஒரு கற்பிதமான ஆரியர்-திராவிடர் என்பதை மிக வலுவாக கேள்விக்கு உட்படுத்துகிறது இந்த நூல். மேலும் தொலைந்து போன புராதன நதியை தேடிப்போகும் ஒரு சாகசப் பயணமும் இந்நூலில் உள்ளது. போதாதா என்ன? டான் பிரவுனிடம் சொல்லி ஒரு நாவலே எழுதச் சொல்லி விடலாம். ஆனால்...

பிரச்சாரம் அல்ல ஆய்வு

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஒரு வகையில் நான் வாசிக்கும் முதல் ஆய்வு நூல். அந்ந எண்ணத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தொடக்கம் முதலே மனதில் கொள்ள பரிந்துரைக்கிறேன். ஏனெனில் பொதுவாக சிந்து சமவெளி நாகரிகம் என்று அறியப்படும் சரித்திர காலத்து முந்தைய நாகரிகம் என்று சொல்லப்படுகிற ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரிகத்தை இதற்கு முன்பு இவ்வகையில் வெளிவந்த நூல்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் நூல் இது. ஆனால் பொதுவாசகரை மனதில் கொண்டே எழுதியிருக்கிறார் மிஷைல் தனினோ(மெல்லிய அங்கதச் சுவையுடன்). அந்த சுவை குன்றாமல் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார் வை.கிருஷ்ணமூர்த்தி. திராவிடம் என்ற குரலை இன்றும் அரசியல் முகமாகக் கொண்ட தமிழகத்தில் அந்த கற்பிதத்தையே கேள்விக்கு உட்படுத்தும் இந்த நூல் குறித்து எந்த விவாதங்களும் எழாதது ஒரு முரண் தான். அதற்கு இந்நூல் அளிக்கும் பொது வாசிப்புக்கான ஒரு மெல்லி தடையும் காரணம் என நினைக்கிறேன். ஆனால் அந்த தடையைக் கடந்து வாசிக்கும் இந்தியக்கல்வி கற்றவர்கள் அனைவருக்கும் இந்நூல் பரவசம் அளிப்பதாகவே இருக்கும்.

கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் வந்தனர் ஆரியர்(இன்றுவரை இந்த ஆரியர்கள் யார் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த தெளிவான முடிவுகள் இல்லை). சிந்து நதிக்கரையில் அமைந்திருந்த மக்களை அடித்து வீழ்த்தி விரட்டிவிட்டு மேய்ச்சல் இன மக்களான ஆரியர்கள் தங்கள் நாகரிகத்தை இந்தியாவில் நிறுவினர். அவர்களால் இயற்றப்பட்டதே வேதங்கள். இதுதான் பெரும்பாலும் நாம் அறிந்திருக்கும் இந்திய சித்திரம். அந்த ஆரியர்களால் விரட்டப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் திராவிடர்களே என்பது நம் தமிழகத் தரப்பு. இந்த தரப்புகளில் இருக்கும் பிரிவினைத் தன்மை உண்மைதானா என்ற கேள்வியை மீட்டெடுக்கிறது இந்நூல். அதற்கென அது எடுத்துக் கொண்ட ஆய்வுக்களம் இமயமலையில் இருந்து(குறிப்பாக ஷிவாலிக் குன்றுகள்) பாகிஸ்தானில் உள்ள கோலிஸ்தான் வரை நீளும் வட இந்தியாவின் நீண்ட பகுதியும் சப்தசிந்துவும் கங்கை யமுனை நதிகளும். இந்திய நாகரிகம் மொத்தமும் எங்கிருந்தோ வந்த ஆரியர்களால் கட்டமைக்கப்பட்டது என்று நிறுவப்பட்டிருக்கும் கற்பிதத்தை வலுவான ஆதாரங்கள் வழியாக கேள்விக்கு உட்படுத்துகிறது.

வேதங்கள் இயற்றப்பட்டது முதல் இந்தியாவின் சரித்திர காலம்(ஒரு வகையில் இரும்பு காலம்) தொடங்குகிறது. இக்காலம் இன்றிலிருந்து நான்காயிரம் ஆண்டுகள் ஆகும். அதற்கு முந்தைய வெண்கல காலத்தைச் சேர்ந்ததான சிந்து சமவெளி நாகரிகத்தின் உருவாக்கத்தில் இருந்து அதன் வளர்ச்சி வீழ்ச்சி ஆகியவற்றை ஒரு புராதன(புராண?) நதியினை மீள் கண்டுபிடிப்பு செய்வதன் வழியாக விளக்க முயல்கிறது இந்நூல்.

காணாமல் போன சரஸ்வதி

மூன்று பாகங்களைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதி காணமல் போன சரஸ்வதி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய பல்வேறு காரணங்களை முன்னிட்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளுடன் தொடங்குகிறது இப்பகுதி. பாலைவனப் பகுதியான கக்கர் படுகையில் கிடைக்கும் நல்ல குடிநீர் ஏற்கனவே கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் கிணறுகள் ஆகியவற்றை அவற்றின் வழியே பயணித்தவர்கள் பதிவு செய்கிறார்கள். அதன்வழியே மெல்ல மறைந்த நதியான சரஸ்வதி தரிசனம் தரத் தொடங்குகிறது.
கிழக்கில் இமயமலையின் ஷிவாலிக் குன்றுகளில் இருந்து மேற்காகப் பாய்ந்து (ஹரியானா,ராஜஸ்தான் வழியாக) போயிருந்த கக்கர் என்ற நதியும் இந்திய எல்லையைத்தாண்டி நீளும் அப்படுகையின் பாகிஸ்தான் தொடர்ச்சியான ஹக்ரா நதியும் ஆய்வு செய்யப்படுவதை இப்பகுதி விளக்குகிறது. கன்னிங்ஹாம் மாக்ஸ் முல்லர் போன்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களில் இருந்து ஒல்தாம் ஜேம்ஸ்டாட் என அவ்வளவாக அறியப்படாத எண்ணற்ற ஆராய்ச்சியாளர்களின் மேற்கோள்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது இந்நூல். முன்னரே சொல்லி இருப்பது போல இதுவொரு ஆய்வுநூல்(ஆனால் பொதுவாசிப்புத்தன்மை கொண்டது) என்பதால் இத்தகைய மேற்கோள்கள் தவிர்க்க முடியாதவை. 

சட்லெஜ் சிந்து என பல்வேறு நதிகளுடன் ஒப்பிடுவதன் வழியாகவும் கக்கர் ஹக்ராவிற்கு அருகில் வசிக்கும் மக்களிடம் சொல்லப்படும் செவிவழிக்கதைகளை ஆராய்வதன் வழியாகவும் இன்றும் கக்கருக்கு தெற்காக ஓடும் சிறு நதியான சர்சுதி என்பதை ஆராய்வதன் வழியாகவும் மகாபாரதம் சித்தரிக்கும் நிலங்களை ஆராய்வதன் வழியாகவும் மகாபாரதத்திற்கும் முந்தைய பிரதிகளான( ஆரியர்களால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும்) வேதங்களின் மேற்கோள்கள் வழியாகவும் கக்கர்-ஹக்ரா என்று அறியப்படும் நதிகள் ஹரப்பா காலத்தில் பெருநதியாகப் பாய்ந்த சரஸ்வதி தான் என்று நிறுவுகிறது இப்பகுதி. குஜராத்தின் கட்ச் ராண்(Rann of kutch) பகுதியின் சதுப்புகள் உட்பட பல்வேறு தடயங்கள் வழியாக ஆராய்ச்சி தொடர்கிறது. நதி வறண்டு போனதற்கான காரணங்களையும் இப்பகுதி ஊகிக்கிறது. நிலநடுக்கம் சட்லெஜ் நதியின் திசை மாற்றம் என நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. எப்படியாயினும் வேதங்களில் சொல்லப்பட்டது போல ஹராப்பா காலகட்டத்தில் இந்நதி நற்சிந்தனைகளை எழுப்புகிறவளாக கரைபுரண்ட ஓடினாள் என்பதை இப்பகுதியை வாசித்து முடிக்கும் போது ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இந்தியாவின் முதல் நாகரிகம்

தலைப்பைப் போலவே வாசிப்பதற்கும் பரவசத்தைக் கொடுக்கும் பாகம் இது. ஒரு புராதன நகரத்துக்குள் நுழைந்து சுற்றிப் பார்க்கும் பரவசத்தை அளிக்கிறது இப்பகுதி. நாடு முழுவதும் விரைவாக ராணுவங்களை அனுப்புவதற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசு நீளமான இருப்புப்பாதைகளை அமைத்தது. பஞ்சாப் பகுதியில் இருப்புப்பாதை அஸ்திவாரம் அமைப்பதற்கு எண்ணற்ற செங்கற்கள் தேவைப்பட்டன. ஹரப்பா நாகரிகம் உலகுக்கு தெரிய வருவதற்கு முன்பே அக்காலத்தில் பயன்பட்ட எண்ணற்ற செங்கற்கள் ரயில்பாதையின் அஸ்திவாரம் அமைப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன என்பதை பின்னாட்களில் கன்னிங்ஹாம் வருத்தத்துடன் பதிவு செய்கிறார். அவரைத் தொடர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் என ஹராப்பா கிராமத்தையும் அதைச்சூழ்ந்த பல்வேறு பகுதிகளையும் தொடர்ந்து ஆராய்கின்றனர். ஒரு பிரம்மாண்டமான நதிக்கரை நாகரிகத்தை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். சீரான குடியிருப்புகள் குளியல் அறைகள் (சில இடங்களில் டைல்ஸ் கூட பதிக்கப்பட்டுள்ளது!) உபயோகப் பொருட்கள் விளையாட்டுப் பொருட்கள் கிணறுகள் ஆலயங்கள் என தோண்டத் தோண்ட மண்ணுக்குள் புதைந்து கிடந்த ஒரு மாபெரும் நாகரிகம் கண் முன்னே எழுந்து வருகிறது. அதற்கு முன்னரே கண்டறியப்பட்டிருந்த மெசபடோமியா போன்ற நாகரிகங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது இந்த சிந்து நதிக்கரை நாகரிகம். பெரும்பாலும் மக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய நகரங்களின் எல்லைகளைப் பாதுகாக்க ராணுவங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருக்கவில்லை. இன்றளவும் தொடரும் பல்வேறு இந்திய குணங்கள் வரலாற்று முந்தைய காலத்திலேயே இந்தியர்களிடம் இருந்தது என்பது கொஞ்சம் அதிகப்படியான ஊகம் என்றாலும் வேறு வகையில் விளங்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை அந்த மர்ம மனிதர்கள் விட்டுச் செல்லவில்லை. ஆனால் மெசபடோமியா ஆக்ஸஸ் பாக்டீரியா போன்ற அக்காலகட்டத்தின் பிற நகரங்களில் ஹராப்பா முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களுடைய குறிப்புகளில் மெலுஹா என  குறிப்பிடப்படும் இடம் ஹரப்பா தான் என்றொரு கருத்தும் உண்டு. (இதை அடிப்படையாகக் கொண்டு அமீஷ் திருபாதி என்பவர் சிவபுராணங்களை இணைத்து மூன்று தொகுதிகள் கொண்ட ஒரு நெடுங்கதை எழுதி இருக்கிறார். இந்தியாவில் அது போன்ற நூல்களே அதிகம் விற்கும் போல.)

ஒரு அரசன் அனைத்தையும் கட்டி ஆண்டதற்கான தடயமோ போர்கள் நடந்ததற்கான தடயமோ சிந்து-சரஸ்வதி நதிக்கரைகளில் காணப்படவில்லை. பொதுவாக நம் பாடப்புத்தகங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்டது இதுதான். ஹராப்பா மொஹஞ்சதாரோ என்ற இரு நகரங்கள் சிந்து நதிக்கரையில் இருந்தன என்பது. ஆனால் அவற்றை நாம் படித்து மனப்பாடம் செய்து கொண்டிருந்த நாட்களுக்குப் பல வருடங்களுக்கு முன்பே லோத்தல், காலிபங்கன், தோலவிரா, பனவாலி எனப் பல நகரங்கள் கண்டறியப்பட்டுவிட்டன. மூன்றாயிரத்துக்கும் அதிகமான அகழ்வாய்விடங்கள் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டன.

சிந்து சமவெளி காலகட்டத்தையே முற்காலம், முழுவளர்ச்சி அடைந்த காலம், பிற்காலம் எனப் பிரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலகட்டத்தில் இருக்கும் அகழ்வாய்விடம் மற்றொன்றிலும் இருக்கலாம் என்பதால் இந்த "மூவாயிரத்துக்கும் மேற்பட்ட" என்பது சற்றே அதிகமாக இருக்கலாம். ஆனால் கண்டெடுக்கப்பட்ட பல அகழ்வாய்வு இடங்கள் சரஸ்வதி(அல்லது கக்கர்-ஹக்ரா) நதிப்படுகையை ஒட்டியே அமைந்துள்ளன. முழு வளர்ச்சி கட்டத்திலேயே சரஸ்வதி வறளத் தொடங்கி இருக்கிறது. பிற்கால ஹரப்பா காலத்தில் மேலும் கிழக்காக நகர்ந்து சட்லெஜை நோக்கிச் செல்கின்றன குடியிருப்புகள்.
இதன் வழியாக சரஸ்வதி நதி வறண்டு போனதே சிந்து சமவெளி நாகரிகம்(அல்லது சிந்து - சரஸ்வதி நாகரிகம்) கைவிடப்பட்டதற்கான பிரதான காரணம் என்ற முடிவினை நோக்கி இப்பகுதி நம்மை உந்துகிறது.
மேலும் நதி கைவிடப்பட்டதற்கான காரணங்கள் என்னவாக இருப்பினும் இன்று பரவசத்துடன் அதனை ஆராய்ந்து கொண்டிருப்பினும் ஒரு நதி வறண்டு குடிபெயர்தல் என்பது அத்தனை எளிமையாக நடக்கக்கூடிய ஒன்றல்ல. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களைத் தேடி ஒரு துன்பம் நிறைந்த பயணத்தை மேற்கொண்டிருப்பார்கள். இக்காலத்திலும் அது எப்போதும் நடக்கவே வாய்ப்பிருக்கிறது. வற்றாத ஜீவநதி என்ற பதத்தை சற்றே அச்சத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்தும் எச்சரிக்கையையும் இந்நூல் விடுக்கிறது.

சரஸ்வதியிலிருந்து கங்கை வரை

சிந்து சமவெளி நாகரிகத்தை முற்றழித்த ஆரியர்கள் கங்கைக்கரையில் தமது பாரம்பரியத்தை நிறுவினர் என்ற கூற்றின் உண்மைத்தன்மையை ஆழமான கேள்விகளுக்கு உட்படுத்தும் இப்பகுதி சிந்து-சரஸ்வதி நாகரிகத்துக்கும் கங்கைச் சமவெளி நாகரித்துக்குமான பண்பாட்டுத் தொடர்ச்சியை விளக்க முயல்கிறது. ஹராப்பா காலகட்டம் என்பது இன்றிலிருந்து ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் முடிவுக்கு வருகிறது( ஆசிரியர் கி.மு மற்றும் கி.பி என்ற கால அளவுக்கு பதிலாக பொது யுகத்துக்கு முன் மற்றும் பொது யுகம் என்ற அளவுகளை பயன்படுத்துகிறார். பொ.யு.மு என்பது கி.முவை விட இருநூறு ஆண்டுகள் கூடுதல்.) அந்த காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கழித்தே கங்கை நதிக்கரையில் குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடைவெளிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வறண்ட சரஸ்வதியின் மணற்குன்றுகளை தொடர்ந்து ஆய்வு செய்ய முடிகிறது. ஒரு விரிந்த நிலப்பரப்பிலும் அந்த ஆய்வு நடந்திருக்கிறது. ஆனால் கங்கைச் சமவெளியின் பெரும்பாலான வேதகால நகரங்கள் இன்றைய கான்கிரீட் கட்டடங்களுக்கு அடியிலேயே உறைகின்றன. ஆகவே மிக்குறைந்த இடங்களிலேயே கங்கைச் சமவெளியில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.
இந்த குறைந்த நிலப்பரப்பிலும் கூட பல்வேறு பண்பாட்டு தொடர்ச்சிகள் இருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நகர அமைப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஜியோமிதி அளவுகள் சதுரங்கம் பகடை போன்ற விளையாட்டுப் பொருட்கள் படகு கட்டும் முறை என பல ஒற்றுமைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் முத்திரைகளை கங்கைச் சமவெளி முத்திரைகளுடன் ஒப்பிட்டு ஆராயும் போதும் ஆச்சரியப்படும் வகையில் பல ஒத்துப் போகின்றன. இருந்தும் இங்கிருக்கும் ஒரு பெரிய சிக்கல் சிந்து மக்களின் மொழி தான். அதை இன்றளவும் புரிந்து கொள்ள எவ்வளவோ முயற்சிகள் நடக்கின்றன. சிந்து மக்களின் மொழிப்புதிர் அவிழ்க்கப்படும் வரை இரு நாகரிகங்களுக்கு இடையேயான தொடர்பில் பெரும்பகுதி மர்மமாகவே நீடிக்கும் என்ற சோர்வேற்படுத்தும் செய்தியை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதே சமயம் தொடர்ச்சியாக எழுத்து வடிவத்தை மாற்றிக் கொள்ளும் மொழிகளை புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தாலும் பெரிய மாற்றங்களுக்கு உட்படாத கடவுள் உருவங்ளும்(வினாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் சிக்ஸ்பேக் வைத்துப் பார்க்கும் அசட்டுத்தனங்களை தவிர்த்து விடலாம்) சிந்து மக்களின் மதமும் கங்கைச் சமவெளியோடு ஒத்துப் போகிறது. பசுபதி சிவன் பெண் தெய்வம்  அனைத்துமே பின்னர் கண்டெடுக்கப்பட்ட கங்கை நாகரிகத்தில் தொடர்ச்சியைக் கொண்டுள்ளன.

இன்றைய பாரம்பரிய இந்திய விவசாயி ஒருவரால் சிந்து நாகரிகத்தை எந்த சிரமும் இல்லாமல் புரிந்து கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர். சரஸ்வதியின் வாக்குமூலம் என்ற கடைசிப்பகுதியில் சரஸ்வதி என்ற ஒரு நதி இல்லை என வாதிடும் ஆய்வாளர்களுக்கு ஆசிரியர் பதில் சொல்கிறார். மறுக்க முடியாதவை என்று சொல்லப்படும் வாதங்களுடன் விவாதிக்கிறார். ரொமிலா தாப்பர் இர்பான் ஹபீப் போன்ற புகழ்பெற்ற வரலாற்று அறிஞர்கள் இந்த புராதன நதி குறித்த உண்மையை ஏற்க மறுகின்றனர். இருந்தும் அவர்களுக்கான பதிலையும் சரஸ்வதியின் வாயிலாகவே சொல்கிறார் ஆசிரியர்.

இந்நூலில் முடிவுகள் நோக்கிச் செல்வதற்காக சில எளிமைப்படுத்தல்கள் இருக்கலாம். ஆனால் ஆரியர்-திராவிடர் என்ற எளிமைப்படுத்தலை விட அது மேம்பட்டதாகவே இருக்கும். சில தாவல்களும் நிச்சயமாக இருக்கும். இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ள தரவுகள் ஆய்வுத் தகவல்கள் உள்ளூர் மக்களின் நம்பிக்கை என ஒன்று விடாமல் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தாலும் உண்மை தூரத்தில் இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். ஆனால் இத்தகைய பார்வை புதிது. இதில் இருக்கும் நேர்மறைத் தன்மை நம்பிக்கையூட்டுவது. தன்னுடைய வாழ்நாள் பணியான ஒன்றைத் திரட்டி நம்முன் வைத்திருக்கிறார் ஆசிரியர் என்பது குறிப்புதவி நூல்களின்(Reference books) பெயர் பட்டியலே நாற்பது பக்கங்களைத் தாண்டிச் செல்வதில் இருந்து தெரிகிறது. அதே நேரம் அவருடைய நேரடிக்கள ஆய்வுகளையும் இந்நூல் கொண்டுள்ளது.

ஒரு பொதுவாசகனுக்கு இத்தகைய சந்தேகம் வரலாம். ஐந்தாயிரம் வருடத்துக்கு முன்பிருந்தவர்கள் ஆரியராய் இருந்தால் என்ன திராவிடராய் இருந்தால் என்ன என்று? இது சரியென்று கூடத் தோன்றி விடும். ஆனால் தமிழகத்தின் ஐம்பதாண்டு கால அரசியலை இந்த வாதம் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்திருக்கிறது. ஒரு சமூகத்தின் பொதுக் கருத்தியலில் ஏற்பட வேண்டிய மாற்றங்களுக்கான அறைகூவல் இந்த நூலில் உள்ளது. சமீபத்தில் எழுந்திருக்கும் ஆட்சி மொழி சிக்கல் வரை(கொஞ்சம் அதிகப்படியாய் போகிறதோ) இந்த கருத்தியல்களை பொறுத்திப் பார்க்க முடியும் என்பது என் துணிபு.

இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கென இத்தகைய அறிஞர்கள் வாழ்நாளை அர்ப்பணித்து ஆய்வுகளை நடத்துவதில்லை எனினும் மிக ஆழமான ஆய்வுகள் அவற்றுக்கே உரிய வகையில் பிரச்சாரங்களுக்கு அவசியமின்றி சமூகத்தில் எல்லா தளங்களிலும் ஆழமான பாதிப்பை நிகழ்த்தவே செய்யும்.
சரஸ்வதி ஒரு நதியின் மறைவு - மிஷைல் தனினோ(தமிழில் - வை.கிருஷ்ணமூர்த்தி)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை:350

Saturday 8 April 2017

நவீன இந்தியாவின் சிற்பிகள் - ராமச்சந்திர குஹா (தமிழில் - வி.கிருஷ்ணமூர்த்தி)

ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் தான் வரலாற்றின் மீது எனக்கொரு ஈர்ப்பை ஏற்படுத்திய முதல் நூல். மன்னர்கள் அவர்களின் ஆட்சிப் பரப்பு ஆண்ட வருடங்கள் எதிர்கொண்ட போர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் செய்த குளறுபடிகள் என்று வரலாறு ஒரு பெரும் புனைவாக (grand fiction) என் நினைவில் நின்றிருந்தது. ஆனால் வருடங்களை நினைவில் நிறுத்துவது எளிமையானதாக இல்லை. இருந்தும் இந்திய வரலாறு குறித்தும் தமிழக வரலாறு குறித்தும் ஒரு தோராயமான பொதுச் சித்திரம் மனதில் உருவாகி இருந்தது. பெரும்பாலானவர்களுக்கு துல்லியமாகவோ தோராயமாகவோ அத்தகையதொரு வரலாற்று சித்திரம் இருக்கவே செய்யும். ஆனால் வரலாறு காலத்தில் நெருங்கி வர வர அறிவு சார்ந்ததாக இல்லாமல் ஆகிறது. வரலாற்று விசைகளோடு நம் நாடு நம் மொழி நம் சாதி நம் மதம் அல்லது நம் குலதெய்வம் கொண்டிருந்த தொடர்பென்ன ஆற்றிய பங்களிப்புகள் என்னென்ன அடைந்த லாப நஷ்டங்கள் என்ன என்று தேடத் தொடங்கி விடுகிறோம். தூரத்தில் இருக்கும் போது ஒரு திரைக்கு பின் நடக்கும் படம் போல வரலாறு நம்மை கொந்தளிக்கச் செய்கிறது மயிர்கூச்செறிய வைக்கிறது சிந்திக்க வைக்கிறது விழுமியங்களை கற்றுக் கொடுப்பதாக இருக்கிறது. ஆனால் திரைகள் கிழிபட்டு காலம் நெருங்க நெருங்க வரலாற்றில் நம்மால் ஏற்பட்ட பாதிப்பென்ன(நாம் என்பது சாதி மொழி மதம் இன்னபிற) என்ற ஆதாயப் பார்வை தோன்றிவிடும் வாய்ப்பே அதிகம் தெரிகிறது. அந்த பார்வையின் அடிப்படையிலான முன் முடிவுகள் ஒருவருக்கு இருக்க வேண்டிய வரலாற்று உணர்வையும் பார்வையையும் மொத்தமாக அழித்து மொத்த வரலாறும் தங்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதி அல்லது வரலாற்றுப் பெருமிதங்கள் அத்தனையும் தங்களுக்கே சொந்தமானவை என்ற எல்லைக்கு கொண்டு சென்று நிறுத்துகிறது. வரலாற்றின் மீது அத்தகைய முன் முடிவுகளுக்கு நம்மை இழுத்துச் செல்லும் முக்கியமான காரணி "நம்மவர்கள்" என எண்ணும் ஆளுமைகள் குறித்தப் பெருமிதமும் "அயலவர்கள்" என எண்ணும் ஆளுமைகள் மீதான வெறுப்புமே ஆகும். பெருமிதம் ஆளுமைகளை புனிதர்களாக மாசற்றவர்களாக கட்டமைக்கிறது. வெறுப்பு ஆளுமைகளை அயோக்கியர்களாக கேடு நிறைந்தவர்களாக சித்தரிக்கிறது.
பெரும்பாலும் இத்தகைய முன் முடிவுகளுக்கு நம்மை இழுத்துச் செல்பவை கட்சி,மதம் போன்ற நிறுவனங்களே. நிறுவனங்களுக்கு தேவனையும் சாத்தானையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் எப்போதும் உண்டு. அத்தகைய முன் முடிவுகளின் ஒரு பக்கச் சார்பை உணர்ந்த யாரும் நிறுத்தப்படுவது ஒரு வரலாறற்ற வெட்ட வெளியில் தான். அங்கே போற்றவும் தூற்றவும் பெரும்பாலும் ஆட்கள் கிடைக்காமல் போகிறது. ஆகவே உடனடியாக வரலாற்ற மனிதர்களாக மாறிப் போகிறோம். வரலாறு என்றாலே மன்னர் காலமும் அரியணையும் போரும் அரண்மணைகளும் அந்தப்புரங்களும் மட்டுமே நினைவுக்கு வருகின்றன. நவீன வரலாற்றை நெருங்கிப் பார்க்க ஒவ்வாமையும் சோர்வும் ஏற்படுகிறது. அங்கு சதிகளும் வசைகளும் மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்து நிற்கிறோம். இந்த வெட்ட வெளியைக் கடந்து நவீன வரலாற்றை குறிப்பாக நவீன இந்தியாவின் வரலாற்றை உருவாக்கிய மனிதர்களை அவர்களின் சொற்கள் வழியாகவே தரிசிக்க வைக்கிறது குஹாவின் இந்த நூல்.


வரலாற்றை எழுதிக் கொள்ளுதல்
ஆங்கில இந்து நாளிதழின் கட்டுரைகள் வழியாகவே குஹாவின் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினேன். அதன்பின் பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் அவருடைய பிரபலமான நூலான "காந்திக்குப் பின் இந்திய வரலாறு" என்ற நூலை அண்ணனின் நண்பரனான லட்சுமணனின் வழியாக வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் குஹாவின் கட்டுரைகள் தமிழ் இந்துவில் மொழிபெயர்க்கப்பட்டு அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. மிகுந்த உற்சாகத்துடன் "காந்திக்குப் பின் இந்திய வரலாறு" என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். ஏனோ இருநூறு பக்கங்களுக்கு மேல் அந்த நூலை தொடர முடியவில்லை. ஒரு முட்டுக்கட்டை இருந்தபடியே இருந்தது. ஆனால் சமகால வரலாற்றை வெறும் சம்பவங்களாக நிகழ்ச்சிகளாக வெற்றிகளாக தோல்விகளாக அல்லமால் வரலாறாக மாற்றி பதிவு செய்து பார்க்கும் ஒரு பாங்கு அந்த நூலில் இருப்பதை உணர முடிந்தது. குஹாவின் கட்டுரைகளிலும் அத்தகைய நிதானம் வெளிப்படும்.
விஷ்ணுபுரம் விருது விழாவில் சந்தித்த நண்பர் பிரகாஷ் அலைபேசயில் உரையாடிய இரண்டு முறையும் நவீன இந்தியாவின் சிற்பிகள் நூல் குறித்து குறிப்பிட்டார். குஹாவைப் படிக்கும் ஆர்வமும் இருந்ததால் இந்நூலை நியூஸ்ஹண்ட்டில் தரவிறக்கினேன். அச்சிடப்பட்ட நூலை விட விலை குறைவு. என்ன அலைபேசியில் படிப்பதால் சற்று தலைவலியை பொறுத்துக் கொள்ள வேண்டும். முதல் பக்கதிலேயே தொகுப்பாசிரியர் என்ற வாக்கியம் சற்றே மனச்சோர்வை அளித்தது. குஹா இந்நூலை தொகுக்கவே செய்திருக்கிறார். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பத்தொன்பது ஆளுமைகளின் உரைகள் கட்டுரைகள் பதில்கள் பேட்டிகள் என விரிந்து பரவும் இந்நூலிற்கு தன்னை தொகுப்பாசிரியர் என்று மட்டுமே சொல்லிக் கொள்வது ஆசிரியரின் தன்னடக்கம் மட்டுமே.
ஒரு பரந்த நோக்கில் நன்மை தீமைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் சுதந்திர போராட்டமும் சுதந்திரப் போராட்டத்துடன் ஊடாடியும் விலகியும் நடைபெற்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளும் சமய மற்றும் சமூக மறுமலர்ச்சி நடவடிக்கைகளும் ஒற்றைப் பெருஞ்செயல் என்று சொல்லி விட முடியும். ஆங்கிலமும் ஐரோப்பிய வாழ்வு முறையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தவைகளும் இந்தியா கொண்டு வரப்பட்டவற்றுடன் நிகழ்த்திய உரையாடல்களும் ஏற்புகளும் மறுப்புகளும் அடங்கிய கால கட்டமாக ஏற்கப்படக்கூடியது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தது இந்திய சுதந்திரம் ஸ்திரத்தன்மை அடைந்த சுதந்திர இந்தியாவின் முதல் இருபது வருடங்கள் வரை நீளும் காலகட்டம். நூற்றைம்பது வருடங்களைத் தாண்டும் இந்த காலகட்டத்தை ஒரு வரலாற்று காலமாக கண் முன் கொண்டு வருகிறது இந்நூல். கொள்கை சார்புடைய யாருக்கேனும் நவீன இந்தியாவின் சிற்பிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் மீதேனும் கசப்பு இருக்கவே செய்யும். இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிற்பிகளில் ஒருவர் கூட கடந்த இரு பதிற்றாண்டுகளில் உயிருடன் இருக்கவில்லை. இறந்து இருபது வருடம் ஆகிய ஒருவர் மேல் காழ்ப்புடன் இருக்கும் ஒருவர் இந்நூலை அல்ல எந்த நூலையுமே வாசிக்க உகந்தவர் அல்ல என்பது என் எண்ணம். ஆகவே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்நூலின் பன்முகத் தன்மையை ஏற்று உள் நுழைவதே சிறந்தாக இருக்க முடியும்.
நூல் அமைப்பு
"மெல்லத் திறக்கும் இந்திய மனது." பலமுறை பரவசத்துடன எண்ணிக் கொள்ள வைத்த முதல் பகுதியின் தலைப்பு இது. இப்பகுதியுடன் சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களும், தேசத்தை வளர்த்தெடுத்தல்,ஜனநாயகம்:விவாதமும் விளக்கமும்,வலுவாக்கப்பட்ட பாரம்பரியம் என ஐந்து பகுதிகளைக் கொண்ட நூல். இந்த ஐந்து பகுதிகளையும் ஊடாடித் தழுவும் ஐந்து புரட்சிகள் இந்தியாவில் ஒரே சமயம் நிகழ்ந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். தொழில் புரட்சி,நகர்ப்புற புரட்சி, ஜனநாயகப்புரட்சி, சமூகநீதிக்கான புரட்சி, தேசியப்புரட்சி என அவற்றை வர்ணிக்கும் ஆசிரியர் அவை  முன்னெடுக்கப்பட்டதற்கு பல்வேறு வகையில் முக்கிய காரணமாய் விளங்கியவர்களை நவீன இந்தியாவின் சிற்பிகள் என வர்ணித்து அவர்களின் குறிப்பிடத் தகுந்த உரைகளையும் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட கட்டுரைகள் மற்றும் உரைகளையும் தொகுத்தளிக்கிறார். மேலும் மற்ற நாட்டு தலைவர்களுக்கும் இந்திய சிற்பிகளுக்கும் உள்ள மூன்று வேறுபாடுகளை தெளிவாக சுட்டுகிறார்.
முதலில் சிந்தனையாளர் மற்றும் செயல்வீரர் என இரண்டுமாக ஒரே நேரத்தில் விளங்கிய இந்தியத் தலைவர்கள். காந்தி-நேரு-அம்பேத்கர் என மூவருமே ஒரே நேரத்தில் சிறந்த சிந்தனையாளர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் விளங்கினர் என்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டாவதாக கருத்தியல் தளத்தில் இவர்களின் நீண்ட கால தாக்கம். ரஷ்யா ஸ்டாலினையும் சீனா மாவோவையும் ஜெர்மனி ஹிட்லரையும் இங்கிலாந்து சர்ச்சிலையும் நினைவில் வைத்திருக்கும் காலத்தை விட இவர்களின் நினைவு இந்தியாவில் நீண்ட காலம் தொடர்கிறது.
மூன்றாவதாக இந்த சிற்பிகளுக்கு இடையேயான வேறுபாடு. கிராமப் பொருளாதாரம் குறித்து நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இருந்த கருத்துடன் காந்தி முரண்படுவார். தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து ஏறத்தாழ இந்த மூன்று பேருக்குமே ஆளுக்கொரு நிலைப்பாடு இருந்தது. நவீனக்கல்வி, பெண்கள் முன்னேற்றம் என அனைத்திலும் நுட்பமான வேறுபாடு கொண்டவர்களாகவே இவர்கள் இருந்து வந்திருக்கின்றனர். இந்த வேறுபாடுகள் இந்தியாவிற்கே உரிய சிறப்பம்சம் ஆகும்.
பரவலாக அறியப்பட்ட காலத்தில் முற்பட்டவரான ராம் மோகன் ராய் தொடங்கி சமீப காலத்தவரும் பரவலாக அறியப்படாதவருமான ஹமீத் தல்வாய் வரை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. வெரியர் எல்வின் ஹமீத் தல்வாய் போன்ற இருபதாம் நூற்றாண்டின் மனிதர்கள் அறியப்படாமல் விடுபட்டிருப்பதை ஒரு குறையுடன் எண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் சுபாஷ் சந்திர போஸ் வல்லபாய் பட்டேல் போன்ற அரசியல் தலைவர்களும் அயோத்திதாசர் நாராயண குரு போன்ற சிந்தனையாளர்களும் இப்பட்டியலில் சேர்க்கப்படாததற்கான காரணங்களையும் இந்நூல் குறிப்பிடுகிறது.
நூலின் ஒழுக்கு
மெல்லத் திறக்கும் இந்திய மனது என்பதை ஐரோப்பாவின் தொழிற்புரட்சியையும் ஜனநாயகப் புரட்சியையும் இந்தியா எதிர் கொள்ளத் தயாரானதை குறிப்பிடும் குறியீட்டுச் சொல்லாக எடுத்துக் கொள்ள முடியும். சதி ஒழிப்பு தொடங்கி பிரம்ம சமாஜத்தின் தோற்றம் வரை நவீன ஐரோப்பிய சிந்தனைகளுடன் உரையாடுவதற்கு இந்தியா தனக்கான களத்தை அமைக்கத் தொடங்கிய காலகட்டம் எனக் குறிப்பிடலாம். தன்னுடைய வளமான பாரம்பரியத்தையும் அதன் இருள்களையும் இந்தியா ஒரு பொது அரங்கில் பரிசோதிக்கத் தயாரானது. அம்மாற்றத்தின் தொடக்கப்புள்ளியான ராம்மோகன் ராயை மட்டும் அறிமுகம் செய்கிறது இந்தப் பகுதி. ஒவ்வொரு சிற்பி அறிமுகம் செய்யப்படும் போதும் அவர்களுக்கான முன் குறிப்பு ஒன்றை ஆசிரியர் அளிக்கிறார். அதனுடன் அவர்களுடைய உரைகளும் சேர்ந்து துலக்கம் பெறுகின்றன.
இன்றளவும் இந்தியாவில் பெரும் சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் தெளிவுகளையும் கோரி நிற்கும் சில துறைகள் உண்டு. சிறுபான்மையினர் நலன், தாழ்த்தப்பட்டோர் நலன், பெண்கள் நலன் போன்ற துறைகளில் தேவைப்படும் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கான அடிக்கோடிட்டவர்களாக முறையே சையது அகமது கான், ஜோதிராவ் பூலே, தாராபாய் ஷிண்டே ஆகியோரை சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களும் என்ற இரண்டாம் பகுதி எடுத்து விளக்குகிறது. தேசிய உணர்வை ஊட்டுவதில் தீவிரம் காட்டிய திலகரும் காங்கிரஸில் மிதவாதியாக அறியப்பட்ட சீர்திருத்தவாதியுமான கோகலேயும் இப்பகுதியில் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
அடுத்த பகுதியான தேசத்தை வளர்த்தெடுத்தலில் ஒரு வகையில் இரண்டாம் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டவர்களின் சிந்தனைகள் பல்வேறு வகையில் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதை அச்சிந்தனை போக்குகளில் இருந்த உள் முரண்கள் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை காண்பிக்கிறது. காந்தி, தாகூர்,அம்பேத்கர் ஈ.வே.ரா, ஜின்னா என பரவலாக அறியப்பட்ட பெருந்தலைவர்களே இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். தாராபாய் ஷிண்டே போல் அல்லதா நடைமுறைப் பெண்ணியவாதியான கமலாதேவி சட்டோபாத்யாய மட்டுமே அவ்வளவாக அறியப்படாத சிற்பி. இந்திய சுதந்திர காலகட்டத்தை ஒட்டி இத்தலைவர்களின் கருத்துகளும் சிந்தனைகளும் அமைந்துள்ளன. சாதியை அழித்தொழிப்பதற்கான வழி என்ற அம்பேத்கர் உரையின் சுருக்கமும் ஒத்துழையாமை இயக்கம் குறித்த தாகூரின் ஐயமும் பாகிஸ்தான் கோரிக்கைக்கான ஜின்னாவின் நியாயங்களும் அவர்களின் சொற்கள் வழியே வெளிப்படுகின்றன. மேலும் இந்த மூன்று பேருமே காந்தியின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். காந்தியும் இவர்களின் சிந்தனையால் பாதிக்கப்படவே செய்கிறார். தாகூரின் ஐயப்பாட்டுக்கும் அம்பேத்கரின் கேள்விகளுக்கும் ஜின்னாவின் கொள்கைகளுக்கும் தனக்கான நிலைப்பாட்டை காந்தி தெரிவிப்பதாக மூன்றாம் பகுதியின் இறுதி அத்தியாயங்கள் அமைந்துள்ளன.
நான்காவது பகுதி ஜனநாயகம்: விவாதமும் விளக்கமும். மக்களாட்சி குறித்த விவாதங்களில் அம்பேத்கர் தவிர்க்க முடியாதவர் ஆகையால் இப்பகுதியிலும் அவர் இடம்பெறுகிறார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில வருடங்கள் முன்பு தொடங்கி நவீன இந்திய உருவாக்கத்தின் காலமான நேருவின் ஆட்சி காலம் வரையும் அதை சற்று கடந்தும் இப்பகுதி நீண்டு செல்கிறது. இந்திர அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது அம்பேத்கர் ஆற்றிய உரை மீண்டும் அவரை இப்பகுதியில் கொண்டு வந்து நுழைக்கிறது. பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நேரு முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்கள் வழியாக பன்னாட்டு தொடர்புகள் குறித்தும் சீனப் போர் குறித்தும் அவருடைய நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்து தேசியவாதியான கோல்வால்க்கர் சோஷலிஸ்டுகளான ராம மனோகர் லோஹியா மற்றும் ஜெய்பிரகாஷ் நாராயண் ஆகியோர் காங்கிரஸுக்கும் நேருவுக்கும் எத்தகைய எதிர்ப்புகளை அறிவார்ந்த முறையில் அளித்தனர் என்பதை அவர்கள் ஆற்றிய உரைகளும் எழுதிய கடிதங்களும் சொல்கின்றன. ஆகவே மையக் கருத்தியலுக்கு எதிராக இயங்கிய இவர்களும் சந்தேகம் இல்லாமல் இந்தியாவின் சிந்தனைகளை வடிவமைத்தவர்களில் சேர்க்கப்பட வேண்டியவர்களே. காந்திய வழி சிந்தனையாளரும் தமிழரே ஆனாலும் பெரும்பாலான தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டவருமான ராஜகோபாலச்சாரியார் நேருவுடன் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அரசுக் கொள்கைகளுடனும் விவாதிக்கும் வலிமை பெற்றிருந்ததை அவருடைய கட்டுரைகளும் நூல்களும் விளக்குகின்றன. அதோடு அவருடைய பெரும்பாலான கொள்கைகள் நவீன இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இப்போது உணர முடியும். காந்தியைப் போல எழுபது வயது கடந்தும் ராஜாஜியும் அயராது உழைத்திருக்கிறார் என விளங்குகிறது. இந்நூலின் ஒரு சிற்பி மட்டும் சற்றே வித்தியாசமானவர். அவர் இந்தியர் கிடையாது. மேலும் அவருடைய செயல்தளமும் மேற்சொன்ன யாருடனும் ஊடாடவில்லை. இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவீதம் மட்டுமே இருந்த பழங்குடிகளின் நலனுக்காக பாடுபட்டு இருக்கிறார் வெரியர் எல்வின்.கிறிஸ்துவ மத போதகரான அவர் பழங்குடிகளிடம் சென்று பின் மதத்தை உதறி அவர்களுடன் இணைந்து அவர்களுக்காக போராடி இருக்கிறார். இந்திய அரசிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். அவர் எழுதிய நூலின் சில பகுதிகளும் சில கட்டுரைகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளனர்.
வலுவாக்கப்பட்ட பாரம்பரியம் என்ற ஐந்தாவது பகுதி ஒரு சிற்பியை அறிமுகம் செய்வதோடு முடிவுரையையும் கொண்டுள்ளது. ஹமீத் தல்வாய் என்று அறியப்படும் அந்த இஸ்லாமியரின் உரைகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான ஒரு எச்சரிக்கை குரலாக எழுபதுகளிலேயே ஒலித்துள்ளது. அக்குரலுக்கான தேவை இப்போது பெருகி இருப்பதையும் உணர முடிகிறது. இந்தியப் பெருஞ்சமூகத்துடன் சரியான குரலில் உரையாடும் ஒரு குரலாக அவரை எடுத்துக் கொண்டு அவரை வாசிக்க முனைவது நமக்கு பல நன்மைகளை அளிக்கும் என்றே எண்ணுகிறேன். வலுவாக்கப்பட்ட பாரம்பரியம் என்ற தலைப்பும்
மகிழ்ச்சியை அளிக்கிறது. பாரம்பரியம் நீண்ட நாள் செயல்பாடுகளில் இருந்து உருவாகி வருவது. சுதந்திர இந்தியாவின் ஆட்சிமுறை ஜனநாயகம் என வகுத்த போது அதை எள்ளி நகையாடியவர்களும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா அழிந்து போகும் என்று ஆருடம் சொன்னவர்களுமே அதிகம். மேலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு முன்பே வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்துவிட்டது. அந்த தைரியமான முடிவின் அடிப்படையில் தான் நவீன இந்தியா கட்டமைக்கப்பட்டது. சீன மற்றும் பாகிஸ்தான் போர்கள் அதன் பொருளாதாரத்தை பாதித்தாலும் இந்தியா தன்னை மீண்டும் கட்டிக் கொண்டது. ஆகவே இங்கு பாரம்பரியம் எனக்குறிப்பிடப்படுவது ஜனநாயகமே. அது வலுவடைந்திருப்பதும் உண்மை.
முடிவும் எச்சரிக்கையும்
கடந்து போன "பொற்கால கனவுகளின்" வழியாக நிகழ்காலத்தை குறை சொல்லும் நோக்கத்துடன் இந்நூல் எழுதப்பட்டிருக்கவில்லை. இன்றைய அரசியலு களத்திலும் சமூகக் களத்திலும் செயல்படும் ஒருவருக்கு இத்தகைய ஆழமான பார்வைகள் இருக்குமா என்பது சந்தேகமே. அதுவும் அரசியல் தளத்தில் லாப நஷ்டங்களைக் கடந்து அடிப்படைகளை விவாதிக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் ஏறத்தாழ இல்லையென்றே சொல்லிவிடலாம். மக்களை நேரடியாக கை நீட்டி கேள்வி கேட்கும் நேர்மையும் சமூகத்துக்கு பிடித்ததை அல்லாமல் உகந்ததை செய்யும் தைரியமும் இன்றைய அரசியலில் எதிர்பார்க்க முடியாத செயல்கள்.
உலகம் பனிப்போர்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி பேசிக் கொண்டிருந்த நிலையில் இருந்து இந்திய ஜனநாயகம் உலகுக்கு அளித்ததை பேசத் தவறிவிட்டது. அத்தகையதொரு உலகளாவிய விவாதத்திற்கு அழைப்பு விடுப்பதை தன்னுடைய ஒரு குறிக்கோளாக கொண்டுள்ளது இந்நூல். மற்றொரு குறிக்கோள் சற்றே மனம் சுருங்கச் செய்தாலும் அது உண்மையே. இந்தியர்களின் சிந்தனைகளை கட்டமைத்தவர்களை இந்தியர்களுக்கே அறிமுகம் செய்கிறது இந்த புத்தகம். எந்த துறையில் மாற்றத்தை விரும்பும் விளைவிக்க நினைக்கும் இந்தியரும் தனக்கான பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கான கச்சாப் பொருட்கள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிற்பிகளிடமே உள்ளன.
அரசியல் தன்னை முழுக்கவும் அறிவுச் செயல்பாட்டில் இருந்தும் ஆரோக்கியமான முன்னேற்றங்களில் இருந்தும் விடுவித்துக் கொண்ட நிலையிலேயே மூன்று பதிற்றாண்டுகளாக நீடிக்கிறது. ஆகவே அத்தளத்தில் அன்றி சிந்தனை தளத்தில் நிகழ வேண்டிய மாற்றங்களுக்கென அறைகூவுகிறது இந்நூல். மேலும் எதிர்காலம் அரசியலாளர்களிடம் இல்லை சிந்தனையாளர்களிடமே என்ற செய்தியையும் ஆழமாகப் பதிவு செய்து செல்கிறது.

Monday 3 April 2017

நான் ஏன் தலித்தும் அல்ல? - டி.தருமராஜ்

பேராசிரியர் டி.தருமராஜின் "நான் ஏன் தலித்தும் அல்ல? தலித் என்ற சாதியற்ற பேதநிலை" என்ற நூலை (கட்டுரை தொகுப்பு) மறு வாசிப்பு செய்தேன். முதல் முறை படித்த போது ஆசிரியர் பயன்படுத்தி இருந்த கலைச் சொற்களும் கட்டுரைகளின் நவீன வடிவமும் (புனைவில் எத்தகைய வடிவத்தையும் செறிக்கும் என் மனதிற்கு அபுனைவின் மரபான வடிவம் மட்டுமே ஏற்புடையதாக இருந்தது போல) பெரும் அயர்ச்சியையே தரத் தொடங்கின. ஆனால் மறுவாசிப்புக்குப் பிறகு ஒரு சிறந்த நூலை வாசித்த திருப்தியும் சிறந்த நூல்கள் மட்டுமே தரக்கூடிய உணர்வுச் சமநிலையும் அச்சமநிலை தாண்டி எழும் கொந்தளிப்பும் மனதில் எஞ்சியிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு என்று நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர். யானை தடவும் குருடர்கள் கதையை இத்தனை வசீகரத்துடன் இதற்கு முன் கேட்டதில்லை. அதனுள் ஒரு வலியும் உள்ளோடுகிறது என்பதே அக்கதையை எப்போதும் நினைவில் நிறுத்துவதாய் மாற்றுகிறது.

"நான் ஏன் தலித்தும் அல்ல" என்ற கேள்வியை ஆதாரமாகக் கொண்டே முன்னுரை தொடங்குகிறது. எவ்விதத்திலும் மைய விவாதத்திற்கு தலித் பிரச்சினைகள் வரதாததற்கும் அவ்வடையாளம் தன்னை துன்புறுத்துவதற்குமான காரணங்களை சொல்கிறார். இலக்கியம் சமூகம் பண்பாடு அரசியல் என அனைத்திலும் அவ்வடையாளம் ஏற்படுத்தும் ஒவ்வாமையை உருவாக்கும் பதற்றத்தை தேர்ந்த மொழியில் விவரிக்கிறது "நான் ஏன் தலித்தும் அல்ல தலித் என்ற சாதியற்ற பேத நிலை" எனும் தலைப்பிடப்பட்ட முன்னுரை.

வாசித்து முடித்த பின் ஒவ்வொரு கட்டுரையுடனும் இம்முன்னுரையை சரியாகவே பொருத்திப் பார்க்க முடிகிறது. ஒருவகையில் இந்நூல் தான் நான் வாசிக்கும் முதல் கட்டுரைத் தொகுப்பு. இக்கட்டுரைகள் வேறு வேறு காரணங்களுக்காக வேறு வேறு காலங்களில் எழுதப்பட்டவை. இருந்தும் அவற்றுக்கு இடையே நான் ஏன் தலித்தும் அல்ல என்ற ஒவ்வாமையை உருவாக்கும் கேள்வி ஓடிக்கொண்டே இருக்கிறது. வாசித்து முடிக்கும் போது அக்கேள்வி உருவாக்கும் ஒவ்வாமை மறைந்து விடுகிறது என்பதையே இந்நூலின் வெற்றியாகவும் நூலாசிரியரின் வெற்றியாகவும் சற்றே உணர்ச்சிவசப்பட்டு சொல்வதென்றால் அறிவின் வெற்றியாகவும் சொல்ல முடியும். சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன.

தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் கொண்ட நூல்.

என் போதாமைகள்

தலித் அரசியலை முன்னெடுத்த  தலைவர்கள் குறித்து எழுதப்பட்ட நூல்கள் சமகால தலித் அரசியல் இயக்கங்களின் செயல்பாடு மற்றும் தலித் இலக்கியங்கள் என வகைப்படுத்தப்பட்ட சில நூல்களைத் தவிர உண்மையில் தலித் என்ற அரசியல் அடையாளம் குறித்த அறிவு என்னிடம் இல்லை என்பதை முதல் கட்டுரையை வாசித்த போதே உணர்ந்து கொண்டேன்.  ஆனால் மேலும் ஆழமான நூல்களை வாசிப்பதற்கான ஒரு வழிகாட்டியாக அல்லாமல் இந்நூல் தன்னளவிலேயே ஆழமானதும் செறிவான விவாதப் புள்ளிகளை கொண்டிருப்பதும் இதன் தனிச்சிறப்பு என்றே கருதுகிறேன்.

சமூகத்தின் மையத்தில் தகிக்க வேண்டிய விவாதங்கள் எந்தவித கவனிப்பும் இன்றி சம்பிரதாயமான முத்திரை குத்தல்களுடன் எவ்வாறு புறமொதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணரும் வகையிலும் விவாதங்களை உருவாக்கும் கேள்விகளையும் சூழல்களையும் ஏற்படுத்தும் வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது. இது தலித்துகளுக்கான "விழிப்பு உணர்வு" நூல். மற்ற சாதிகளுக்கான எச்சரிக்கை நூலும் அல்ல. சூழியல் பெண்ணியம் என்று நடக்கும் மேம்பட்ட சமூக உருவாக்கத்திற்கான முன்னெடுப்புகளில் ஒன்றான தலித்தியம் குறித்து இதுவரை சமூகத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றின் நிகர மதிப்பினை எடுத்து வைக்கும் நூல். துரதிர்ஷ்டவசமாக  அதுவொரு எதிர்மறை சித்திரத்தையே வழங்குகிறது. ஏனெனில் நிகர மதிப்பு எதிர்மறையானதாகவே இருக்கிறது. சுருக்கமாக தலித் விவாதத்தை ஒவ்வாமைகளற்றதாக மாற்றி ஒரு ஆரோக்கியமான விவாத களத்தையும் செயற்களத்தையும் உருவாக்குவதை இந்நூலின் அடிப்படையாகச் சொல்லலாம்.

கட்டுரைகள்

உடுமலைப்பேட்டையில் படுகொலை செய்யப்பட்ட சங்கர் என்ற தலித் இளைஞரின் கொலைக்கான பதற்றத்துடன் தொடங்குகிறது முதல் கட்டுரை. தமிழ் கிராமங்கள் குறித்தும் அதன் மரபான சாதி அடுக்குமுறைகள் குறித்தும் விவரித்துச் செல்லும் கட்டுரை வன்கொடுமை தடுப்புச் சட்டம் தலித் பலியாள் திராவிட பலியாள் என பல தளங்களை தொட்டுத் திறக்கிறது. தலித் பலியாளை ஆசிரியர் விவரிக்கும் இடம் ஒரு கசப்பான அங்கதத்தை வாசிக்கும் மனக்கொந்தளிப்பை தருகிறது. இடைச்சாதியினரிடம் சாதியப் படுகொலைகள் குறித்த குற்றவுணர்வு இல்லாமல் ஆகிக் கொண்டிருப்பது "துடியான" தெய்வங்களின் உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் தடைகளைக் கொண்டு விளக்குவது அதிர்ந்து நிற்கச் செய்கிறது. கட்டுரையின் இறுதியில் பல்வேறு சமூக இயக்கங்கள் சாதிக்க முடியாததை காதல் சாதிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

மாட்டுக்கறி பிரச்சினை குறித்த அங்கதத்துடன் தொடங்குகிறது இரண்டாவது கட்டுரை . ஜே.என்.யுவில் மாட்டுக்கறி உண்ணப்பட்டதில் தொடங்கி கல்வி நிலையங்கள் அளிக்கும் போலியான லட்சிய சமூக தோற்றத்தை கேள்விக்கு உள்ளாக்கி இந்திய சமையலறை மாட்டுக்கறியை அனுமதிக்காததை மிகப்பெரிய கலாச்சார சிக்கலாக்காமல் புனிதத்தன்மையை ஏற்றாமல் அது சமைக்கப்படுவதில்லை என்ற எளிய உண்மையை நிறுவுகிறது. ஆனால் சமையலறைக்கு வெளியே இந்திய சமூகம் மாட்டுக்கறியை அனுமதிக்கிறது அது வெறும் விடலைத்தனம் என்கிற கூற்றுடன் சமூக மாற்றத்திற்கான அத்தனை குரல்களையும் இந்தியப் பொது சமூகம் வெறும் விடலைத்தனமாகவே கருதுகிறதோ என்ற கேள்வி ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது.

மெட்ராஸ் திரைப்படம் குறித்த மூன்றாவது கட்டுரையை படித்த பிறகாவது படத்தின் கதையை திருப்பிச் சொல்லும் விமர்சகர்கள் என்று தங்களை எண்ணிக் கொள்ளும் அரைவேக்காடுகள்(இல்லை அரைகூட அதிகம். அரைக்கால்வேக்காடுகள்) திருந்த வேண்டும். அத்திரைப்படத்தின் கலை,காளி,அன்பு என்ற மூன்று கதாப்பாத்திரங்களின் பெயர்களைக் கொண்டே ஆசிரியர் கட்டமைக்கும் உலகம் சினிமா எனும் வலிமையான கலைப்படைப்பை எவ்வளவு அசட்டையுடன் நான் அணுகி வந்திருக்கிறேன் என்பதை உணர்த்தியது. பெரும்பாலும் நம் சினிமாக்கள் வெறும் அசட்டை தனத்திற்கு தீனி போடுபவை தான். ஆனால் மெட்ராஸ் திரைப்படத்தைக் கொண்டு இக்கட்டுரை தொட்டுச் செல்லும் உலகு மேலும் விரிந்தது. திரைக்கு வெளியேயும் அது உருவாக்கிய அதிர்வுகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது இக்கட்டுரை. நம் சூழலில் எழுதப்படும் பெரும்பாலான குப்பை விமர்சனங்களை வாசிக்கும் தீவிரமற்ற மனநிலையோடு வாசித்து கடந்து செல்ல முடியாத கட்டுரை.

நாட்டார் ஆய்வாளர் அ.கா.பெருமாள் கைசிக நாடகம் மீட்டெடுக்கப்பட்டது குறித்து எழுதிய கட்டுரைக்கு எதிர்வினைபோல் நாளாவது கட்டுரை அமைந்துள்ளது. திருக்குறுங்குடி வடிவழகிய நம்பி கோவிலில் நடக்கும் கைசிக நாடகத்தின் மையக்கதையை எடுத்துக் கொண்டு சில சாதாரண கட்டுடைத்தல்கள் வழியே ஒரு தீவிரமான சித்திரத்தை உருவாக்குகிறது இக்கட்டுரை. மிகவும் முற்போக்கான எச்சமூகமும் மரபான பெருமைகளை கொண்டாடுவதில் கூச்சமோ விலக்கமோ கொள்வதில்லை என்பதை பிராமணர்கள் அதிசிரத்தையுடன் (சிலிக்கன் வேல்லியில் இருப்பவர்கள் உட்பட) அந்நாடகத்தை கொண்டாடுவதைக் கொண்டு ஒருபுறம் விலக்கியபடியே மறுபுறம் நம்பாடுவான் என்ற பாடகனை வேறொரு பரிணாமத்தில் மறுகட்டமைப்பு செய்கிறது இக்கட்டுரை.

அடுத்தபடியாக கைசிக நாடகத்துக்கு நேர்மாறான நயினார் நோம்பினை விளக்குகிறது ஐந்தாவது கட்டுரை. மீட்டெடுக்கப்பட்டு வலுவாக நீடிக்கக்கூடிய ஒரு புராணத்தை சொல்லிய உடனே அழிந்து போகப் போகிற ஒரு சடங்கினை சொல்வது அயர்ச்சியை அளிக்கிறது. கதைபடித்தல் எனும் நிகழ்வின் வழியாக நடந்தேறும் நயினார் நோம்பினை நம்பிக்கை இல்லாமல் தான் வாசிக்க முடிகிறது. பெரிய எழுத்து புத்தகங்கள் என்று சொல்லப்படுபவற்றைக் கொண்டு கதை படிக்கும் பழக்கம் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நீடிப்பதாக அதனை நல்ல கதை (திருவிழா போன்ற நிகழ்வுகளில் படிக்கப்படுவது) கெட்டகதை (துக்க வீடுகளில் வாசிக்கப்படக்கூடியது) என்று பிரித்து விலக்குகிறது இக்கட்டுரை. முழுக்கவே ஒரு ஆய்வுக்கட்டுரையின் தோரணை கொண்ட இக்கட்டுரையில் ஏதொவொரு வெறுமையை மட்டுமே உணர முடிகிறது. ஒருவேளை அதை உணர வைப்பதே ஆசிரியரின் நோக்கமாக இருக்கலாம்.

திராவிட சிந்தனையாளரான எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூலின் மதிப்புக் கட்டுரை ஆறாவதாக இடம் பெற்றிருக்கிறது. பிராமணர் - பிராமணரல்லாதோர் எனும் முரணை விளங்கிக் கொள்வதில் இருக்கும் சிக்கல்களையும் நடைமுறையில் புழக்கத்தில் இல்லாத "பிராமணரல்லாதோர்" என்ற சொல்லின் பயன்பாட்டையும் மிகத் துல்லியமாக விளக்குகிறது. எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய நூலினை பகுதிகளாக பிரித்து அவர் ஆய்வுமுறையின் சிக்கல்களையும் எல்லைகளையும் மிக கவனமாக விளக்குகிறார். தேசிய உருவாக்கத்திற்கான தேவை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர்களுக்கு எழுந்தது ஏன் என்ற கேள்வியின் வழியாக "பிராமணரல்லாதோர்" என்ற அடையாளத்தை உடைக்கிறது இக்கட்டுரை. தலித்துகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதில் திராவிடக் கொள்கைகளின் பங்கையும் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகைமை எத்தன்மையுடையது?, இருபதாண்டுகள் ஆகியும் அது தனித்து வெளிப்படாமல் போனதற்கான காரணங்கள் என்னவென்று ஆராய்கிறது ஏழாவது கட்டுரை. அர்ஜுன் தாங்ளேவை முன் வைத்து மராட்டியத்தில் நிகழ்ந்த தலித் இலக்கிய முயற்சிகளையும் அதனுடன் இணைந்தே நிகழ்ந்த அரசியல் செயல்பாடுகளையும் விளக்கியபடியே வரும் கட்டுரை தமிழில் தலித் என்ற அரசியல் அடையாளம் எப்படி அபத்தமாக கையாளப்பட்டது என்பதையும் எடுத்துரைக்கிறது. அது விரிந்து பரவாமைக்கான காரணங்களையும் அதன் செல் திசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளையும் விட்டுச் செல்கிறது. தனிப்பட்ட வாழ்வியல் அபத்தங்களைத் தாண்டி பெருஞ்சமூகமாக சித்தரிக்கப்பட தலித் வாழ்வில் நிறையவே எஞ்சியுள்ளது என்ற நடைமுறை சார்ந்த எண்ணத்தை இக்கட்டுரை ஆழமாக விதைக்கிறது. தன் வாழ்க்கையை எழுத வரும் ஒவ்வொரு தலித் படைப்பாளியையும் வரலாற்றையும் இணைத்து சிந்திக்கச் சொல்கிறது.

பூமணியின் அஞ்ஞாடி நாவலை ஒரு பனுவலாக வாசித்து பல திறப்புகளை அளிப்பதாக உள்ளது அடுத்த கட்டுரை அமைந்துள்ளது.  மானிடவியல் ஆய்வறிக்கை எனும் அறிவியலையும் நாவல் எனும் இலக்கிய வகைமையையும் நெருக்கிக் கொண்டு வரும் முயற்சி இக்கட்டுரையில் தெரிகிறது. இனவரைவியல் ஆய்வுகள் படைப்பில் பயன்படுத்துவது குறித்து இக்கட்டுரை பேசுகிறது. அஞ்ஞாடியின் முக்கிய பாத்திரங்களான ஆண்டி எனும் குடும்பர் சாதியை (சாதிப் படிநிலையில் சற்றே உயர்ந்தவர்கள்) சேர்ந்தவனுக்கும் மாரி என்ற வண்ணான் சாதியினனுக்குமான நட்பை அதன் சிக்கல்களை வேறு வேறு தளங்களில் எதிர்கொள்ளும் ஆண்டி மாரி ஆகியோரின் தன்னிலைகளை படைப்பு விளக்குவதாக ஆசிரியர் கணிக்கிறார். விடலை - குடும்பன் என்ற எதிர் நிலைகளைக் கொண்டு காட்டு உணவு - வீட்டு உணவு , கருத்து உற்பத்தி - உணவு உற்பத்தி, தவறான உறவு  - முறைப்படுத்தப்பட்ட உணவு என பல எதிர்நிலைகளை விளக்கிச் செல்கிறார். மரபான ஒடுக்குமுறைகளையும் தாண்டி பல நுண் ஒடுக்கு முறைகளை ஆண்டி மாரி நட்பினைக் கொண்டு திறக்கிறது. அதனோடு கிராமம் குறித்த ஏக்கங்களை ஐரோப்பிய சமூகம் உருவாக்கிக் கொண்டதில் இருக்கும் நியாயங்களையும் நம் சமூகம் உருவாக்கிக் கொண்டதில் இருக்கும் மோசடிகளையும் விளக்குகிறது.

மாதொருபாகன் சர்ச்சையை முன் வைத்து எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை நூலினை எதிர்ப்பவர்களை கண்டிப்பதோடு நின்று விடவில்லை. மேலும் சென்று திருவிழாக்களில் நடைபெறும் தலைகீழாக்கங்களையும் அத்தலைகீழாக்கங்களை கண்டடைவதில் இருக்கும் வெற்றுப் பரவசத்தையும் அதனை புனைவாக மாற்றுவதில் இருக்கும் பொறுப்பின்மையையும் கண்டிக்கிறார். எப்படியாயினும் பிரதியை எரிப்பதோ கிழிப்பதோ அல்ல அதற்கான எதிர் பிரதியை உருவாக்குவது மட்டுமே அறிவார்ந்த செயல்பாடாக இருக்க முடியும் என்பதை நிறுவுகிறார் ஆசிரியர்.

ஒப்பீட்டளவில் இக்கட்டுரைத் தொகுப்பின் பெரிய மற்றும் கடினமான கட்டுரை இறுதிக் கட்டுரையான "போலச் செய்தலும் திரும்பச் செய்தலுமே." இந்நூல் ஆதாரப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டிருக்கும் பெருஞ்சமூகம் vs தலித் என்பதை எப்படி புரிந்து கொள்வது என்று அதிக நுட்பத்துடன் விளக்குகிறது இக்கட்டுரை. எண்டாவூர் என்ற கிராமத்தில் ஆய்வு செய்த மிஷல் போமா என்ற பிரெஞ்சு மானிடவியலாளர் "தலித்துகள் தங்கள் மேல்நிலையில் உள்ளவர்களை நகலெடுக்கிறார்கள். அவர்களைப் போல ஆக முயல்கின்றனர். ஆகவே அவர்களைப் போலச் செய்கிறார்கள்" என்ற முடிவுக்கு வருகிறார். அவருடைய ஆய்வு முறைகளை கேள்விக்கு உட்படுத்தும் ரொபேர் தாழியேல் எனும் மற்றொரு மானிடவியலாளர் இந்த முடிவினை மறுக்கிறார். பறையர்களை ஆய்வு செய்யும் அவர் "என் தம்பி பாப்பான்(பிராமணன்)" என்கிற ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் தொன்மங்களை ஆய்வு செய்து "தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தலித்துகள் ஒருபோதும் ஏற்கவில்லை" என்ற முடிவுக்கு வருகிறார். தூய்மையற்றவர்களாக சித்தரிக்கப்பட்ட பறையர்கள் குறித்த தொன்மத்தை தலைகீழாக்கி பிராமணர்களை அப்படி சித்தரித்ததை அயோத்திதாசர் பிராமணர்களுக்கு திரும்பச் செய்தார் என ஆசிரியர் விளக்குகிறார். மேலும் சாதியப் படிநிலைக்குள் நுழைய முடியாத பறையர்களுக்கும் கீழிறிங்க வாய்ப்பே இல்லாத பிராமணர்களுக்குமான எதிர் நிலைகளை சித்தரிப்பது மேலும் பல திறப்புகளை அளிக்கிறது. அதோடு மறவர் சாதியினருக்கு பள்ளர்கள் குருபூஜை வழியாக திரும்பச் செய்ததையும் பேசுகிறது இக்கட்டுரை. போலச் செய்தலில் உள்ள தீவிரமின்மையையும் அங்கதத்தையும் திரும்பச் செய்தலில் இருக்கும் தீவிரத்தில் இருந்து பிரித்து நிறுத்துகிறது இக்கட்டுரை.

இக்கட்டுரைகளை வாசித்து முடிக்கும் போது இந்நூலின் நோக்கம் நிறைவேறும் என்றே படுகிறது. ஏனெனில் இந்நூலின் சவால்தன்மை காரணமாகவே இது மறுக்க முடியாத வாசிப்பினை கோருகிறது.