Monday 30 April 2018

திருவாரூர்,வாசகசாலை,நதிக்கரை,வாசிப்பு

நதிக்கரை இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஒரு நவீன இலக்கிய வாசகர் வட்டத்தை திருவாரூர் மைய நூலகத்தின் உதவியுடன் சில வாரங்களுக்கு முன் தொடங்கினோம். இரு வாரங்களுக்கு முன் இலக்கிய வட்டத்தின் முதல் கூடுகை நடைபெற்றது. மூன்று நண்பர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் நவீன இலக்கிய வாசிப்பு ரொம்பவும் குறைவு என்ற என் அனுமானத்தை நதிக்கரை இலக்கிய வட்டத்திற்கு கிடைத்த "வரவேற்பினை" வைத்து உறுதிபடுத்திக் கொண்டேன். இலக்கியம் தனிமனித முயற்சிகளால் சமூகத்தின் உதிரி மனிதர்களால் தான் முன்னெடுக்கப்படுகிறது. அத்தகைய உதிரி மனிதர்கள் உருவாவதற்கான சூழலைத்தான் ஒரு நிலம் கொண்டிருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் அத்தகைய சூழல் இல்லவே இல்லை.

திருவாரூரில் பிறந்து தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வரும் நண்பரும் இலக்கிய வாசகருமான மகேஷ் நதிக்கரை இலக்கிய வட்டத்தின் கூடுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வாரம் ஊருக்கு வந்திருக்கிறார். இத்தகைய தீவிரமான மனிதர்களை நம்பி மட்டுமே இலக்கியம் இயங்குகிறது. திருவாரூர் போன்ற மிகப்பின் தங்கிய அசலான சுய அடையாளங்களை தொலைத்துவிட்ட ஒரு மாவட்டத்தில் இலக்கியச் செயல்பாடுகளையோ பண்பாட்டு செயல்பாடுகளையோ இன்றைய நிலையில் முன்னெடுப்பது சோர்வளிக்கக்கூடியது. கடுமையான சோர்வினைத் தரக்கூடியதாக இருக்கும் என்று தெரிந்தே நதிக்கரை இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. சம்பத்,கதிரேசன்,ரமேஷ் ஆகிய நண்பர்கள் முதல் கூடுகையில் கலந்து கொண்டனர். மூவருமே தீவிர இலக்கிய வாசிப்பில் இருப்பவர்கள் என்பது நம்பிக்கையும் ஆறுதலும் தந்தது. நேற்று காலை நடைபெற்ற நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இரண்டாவது கூடுகையில் சம்பத் மற்றும் மகேஷ் ஆகியோருடன் விவாதித்தேன்.

விஷ்ணுபுரம் நாவல் குறித்து பேச்சினை நகர்த்தி கொண்டு வருவதற்கு முன் ஒரு செவ்வியல் ஆக்கத்தின் பண்புகளைப் பற்றி சொல்லிக் கொண்டே வந்தேன். அதுவரை சமூகத்தில் இருந்த குறியீடுகளை நம்பிக்கைகளை ஒரு செவ்வியல் ஆக்கம் தனக்கே உரிய முறையில் தொகுத்து கடத்துகிறது என்று சொன்னேன். ஆகவே ஒரு நிரந்தரமான அறிவியக்கத்தை எந்தத் துறையிலும் உருவாகும் செவ்வியல் படைப்புகளே கடத்த முடியும் என்று தொடர்ந்தேன். விஷ்ணுபுரம் ஏன் ஒரு செவ்வியல் ஆக்கம் என்பதையும் அது செயல்படும் களத்தையும் அதன் வடிவத்தை அணுகுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.

அறம் சிறுகதை தொகுப்பு குறித்து மாலை நடைபெறவிருந்த நிகழ்விற்காக மூன்றாவது முறையாக அறம் சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். இறுதியாக மூன்று சிறுகதைகளை மறு வாசிப்பு செய்யாமல் இருந்தேன். மதிய உணவுக்கும் மாலை நிகழ்வுக்குமான இடைவெளியில் அச்சிறுகதைகளை வாசித்து பேசுவதற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டேன்.

மாலை நிகழ்வினை நூலகர் ஆசைத்தம்பி மற்றும் நண்பர் மகேஷ் ஆகிய இருவருமே ஆர்வத்துடன் ஒருங்கிணைத்தனர். முன்பு மகேஷ் குறித்து சொன்னது போலவே நூலகர் ஆசைத்தம்பியும் வாசிப்பின் பேரில் தன்னிச்சையான ஈடுபாடும் வாசிப்பால் நிகழும் அறிவியக்கத்தின் மீது நம்பிக்கையும் கொண்டவர். மாணவர்களை நூலகத்திற்கு வரவைப்பதிலும் கல்வி நிறுவனங்கள் மூலம் அவர்களை தொடர்ந்து வாசிக்க வைப்பதிலும் பெரும் முயற்சி எடுத்து வருபவர். ஒருவரோடு பேசும் போது அவர்களை பேசிவிட்டு சற்று நேரம் அவதானித்தாலே அவர்களது ஆர்வங்களை தேர்வுகளை நம்மால் அறிந்து கொண்டுவிட முடியும். நூலகர் ஆசைத்தம்பி எப்போதும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதைப் பற்றியே அதிகம் பேசுகிறவர். இன்றும் மதிய நேரத்திலும் அது குறித்தே பேசிக் கொண்டிருந்தார்.

மாலை நெருங்கிய போது எனக்குள் ஒரு மெல்லிய நம்பிக்கையிழப்பு ஏற்படத் தொடங்கியது. மகேஷ் வீட்டுக்கு சென்றுவிட்டு ஐந்து மணிக்கெல்லாம் வந்து விட்டார். ஐந்தரைக்குத் தொடங்க வேண்டிய நிகழ்வு சில வருகையாளர்களுக்காக காத்திருந்ததால் கொஞ்சம் தாமதப்பட்டது. வ.சோ.ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் சென்னையில் பணிபுரியும் ஒரு இளைஞர் தன்னை இறுதிவரை அறிமுகப்படுத்திக் கொள்ளாத ஒரு நடுத்தர வயது கடந்தவர் ஆகியோர் ஐந்தரைக்கு முன்பே சரியாக வந்துவிட்டனர். அதன்பிறகு மெல்ல ஒவ்வொருவராக வந்து ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

மைய நூலகர் ஆண்டாள் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். நூலகர் ஆசைத்தம்பி போலவே வாசிப்பு செயல்பாடுகளில் ஆர்வம் உடைய மற்றொரு அரசு அலுவலர் அவர். நூலக ஊழியர் அபிராமி ஒருங்கிணைத்தார்.

தமிழரசி என்ற முனைவர் பட்ட மாணவி அறம் சிறுகதை குறித்துப் பேசினார். அச்சிறுகதையின் போக்கினை எடுத்து சொல்லி அதிலிருந்து தான் புரிந்து கொண்டவற்றை சொன்னார். உண்மையில் அவரும் நவீன இலக்கிய கூடுகைகள் எதிலும் இதுவரை பங்கு பெற்றதில்லை. நூலகர் ஆசைத்தம்பி அவரை இந்த நிகழ்வுக்காக பேசுவதற்கென தயார் செய்ய சொல்லி இருக்கிறார். அதற்கென தயாரித்திருந்தாலும் அவர் அக்கதையின் போக்கினை சரியாக தொட்டிருந்ததாக எனக்குப் பட்டது. இருந்தும் எதிரே இருந்த பார்வையாளர்களில் ஜெயமோகனை ஏற்கனவே வாசித்திருந்தவர்களும் இலக்கிய கூடுகைகளில் கலந்து கொண்டிருந்தவர்களும் நம்பிக்கை இழப்பதை நான் உணர்ந்தேன். எனக்கு முன் பேசிய சிலரில் தமிழரசி தவிர வேறு யாருமே ஜெயமோகன் குறித்தோ அறம் சிறுகதை தொகுப்பு குறித்தோ எதுவும் சொல்லவில்லை.

நான் என் உரை எப்படி இருக்க வேண்டுமென பேச எழுந்ததும் முடிவு செய்து கொண்டேன். நவீன இலக்கியம் குறித்து அறிந்து கொள்ள வந்திருப்பவர்கள் ஏற்கனவே இலக்கிய வாசிப்பு உடையவர்கள் என இரு தரப்பினராக வாசகர்கள் அங்கிருந்தனர். ஆகவே முதலில் சிறுகதை என்ற வடிவம் குறித்து சொன்னேன். புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற அதேநேரம் எளிமையான சிறுகதையான பொன்னகரம் கதையைச் சொல்லி அச்சிறுகதையின் இறுதி வரி ஒரு வாசகனுக்கு அளிக்கக்கூடிய திறப்பினைப் பற்றி சொன்னதும் ஒரு மெல்லிய ஆர்வத்தை நண்பர்களிடம் காண முடிந்தது. சிறுகதை என்ற வடிவம் இயல்பாகவே பூடகத்தன்மையும் கரவுகள் நிறைந்ததாகவும் இருப்பதை குறிப்பிட்டேன். ஒரு சிறுகதையில் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டு குறித்து சொல்லிச் சென்று இந்த வடிவத்தில் ஒரு மீறலை மேம்படுத்துதலை நிகழ்த்தும் படைப்புகளே காலத்தில் முக்கியமானவையாக நிலைக்கின்றன என்றேன். அவ்வகையில் அறம் சிறுகதை தொகுப்பு நிகழ்த்தும் வடிவ ரீதியான மீறல்களையும் அடங்கிய குரல் தன்மை என்பது நீங்கி அது ஓங்கி ஒலிப்பதையும் அப்படி ஓங்கி ஒலிக்கும் தன்மைக்கு பின்னே அத்தொகுப்பின் எல்லா சிறுகதைகளிலும் இருக்கும் மௌனங்களையும் சிக்கல்களையும் பற்றிச் சொன்னேன்.

யானை டாக்டர் கதையில் வரும் டாக்டர்.கே சோற்றுக் கணக்கின் கெத்தேல் சாகிப்  நூறு நாற்காலிகளில் வரும் நாயாடி சமூகத்தைச் சேர்ந்த ஆட்சியர் முதுகெலும்பு செயலிழந்த பிறகும் இமயம் நோக்கிப் புறப்படும் கோமல் சுவாமிநாதன் என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களைப் பற்றிச் சொல்லும் போது இத்தொகுப்பினை வாசித்து விட வேண்டும் என்ற உந்துதல் ஒரு சிலருக்காவது ஏற்பட்டது. பேசி முடித்த உடனேயே மேசையை நகர்த்திவிட்டு சுற்றி அமர்ந்து கொண்டோம். அப்படி அமர்ந்து கொண்டதுமே எல்லோரிடமும் ஒரு இயல்புத்தன்மை வந்து விட்டது. ஒரு சிலர் எல்லா சிறுகதைகளையும் வாசித்திருந்தனர் என்பது ஆச்சரியம் அளித்தது. அவர்களுக்கு நான் சொன்னவற்றுடன் இருந்த ஏற்பு மறுப்புகளை விவாதித்தோம். முதல் நிகழ்வு என்பதால் இலக்கியம் சார்ந்து பொதுவான கேள்விகளும் கேட்கப்பட்டன. மணி எட்டை நெருங்கிய போதும் புறப்படும் உந்துதல் பெரும்பாலானவர்களிடம் இல்லாமல் இருந்தது நிறைவளித்தது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின் சென்னையில் பணிபுரியும் இளைஞரான நரேன் திருவாரூர் பி.எஸ்.என்.எல்லில் பொறியாளராக பணிபுரியும் பாலாஜி அறிமுகம் செய்து கொண்டனர்.

கூத்தாநல்லூர் நூலகரான செல்வகுமார் அரசுப்பள்ளி மாணவர்களிடம் வாசிப்பினை கொண்டு சேர்ப்பதற்கான நடைபெறும் பணிகள் குறித்து உற்சாகமாக பேசிக்கொண்டு வந்தார்.

மகேஷ் என்னை திருவாரூர் பேருந்து நிலையத்தில் விடுவதாகச் சொன்னார். நான்  செல்வகுமார் அவர்களுடன் கமலாபுரம் வரை அவரது இருசக்கர வாகனத்திலேயே வந்துவிட்டேன். அப்போதும் அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு குறித்து அவர் சொன்னவை ஆச்சரியமூட்டின. அரசு நூலகங்கள் அரசுப்பள்ளிகளுடன் இத்தகைய நெருக்கமான தொடர்பினை பேணுவது உண்மையில் ஆரோக்கியமனது.

நேற்று முந்தினம் தஞ்சைக்கூடல் நேற்று காலை நதிக்கரை மாலை வாசகசாலை என தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருந்திருக்கிறேன். புயலடித்து ஓய்ந்தது போல வீட்டுக்கு வந்தபோது மனம் ஓய்ந்திருந்தது. ஒரு ஆறுமாத காலம் சோர்வின்றி செயல்பட்டால் திருவாரூரில்  நவீன இலக்கியத்திற்கான ஒரு வாசகப் பரப்பை உருவாக்கி இயங்கச் செய்துவிட முடியும் என்ற மெல்லிய நம்பிக்கையை இந்த நிகழ்வுகள் கொடுத்தன. நிறைவான தினம்.

செல்வகுமார் மற்றொரு தகவலும் சொன்னார். கேரளாவிற்கு நூலகம் தொடர்பான பயிற்சிக்கு சென்றிருந்த போது ஊர்புற நூலகங்கள் கூட நன்கு பராமரிக்கப்படுவதையும் நம்மில் பாதியளவோ நிலப்பரப்போ மக்கள் தொகையோ இல்லாத அந்த மாநிலத்தில் தமிழகத்தை விட இருமடங்கு எண்ணிக்கையில் நூலகங்கள் இருப்பதைக் குறிப்பிட்டார். அப்படியெனில் தமிழகத்தை விட நான்கு மடங்கு அதிகமாக கேரளம் வாசிக்கிறது.

Tuesday 17 April 2018

நதிக்கரை நிகழ்வு ஒன்று - கதிரேசன்

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டம்   கடந்த ஞாயிறன்று இனிதே நடந்து முடிந்திருக்கிறது .உண்மையில் எதிர்பார்த்ததற்கு மேல் இரு மடங்க்காக ஆட்கள் வந்திருந்தனர் (எதிர்பார்ப்பு இரண்டு,நான் ,சுரேஷ் பிரதீப்,வருகை_நான்கு ). ஒருவருக்கொருவர் அறிமுகம் முடிந்ததும் முதலில் தீவிர இலக்கியத்திற்குள் எவ்வாறு வந்தோம்( மாட்டிக்கொண்டோம்) என்பதைகுறித்து பேச்சு துவங்கப்பட்டது .எளிய தலைப்பாதலால் அனைவாரலும் தயக்கம் இல்லாமல் பேச முடிந்தது  .

 
நான் ஒன்றாம் வகுப்பில் பாபு சார் சொன்ன பைபிள் கதைகளில் ஆரம்பித்து பழைய மள்ளிகை கடைகளின் இடுக்களில் கிடந்த சிறுவர் மலர்,தங்க மலர், துப்பறியும் நாவல்களான,ராஜேஸ்குமார் ,சுபா, பின்னர் கல்கி ஜெயகாந்தன் .பின் ஜெயமோகன் என்று என் வாசிப்பு கடந்து வந்த பாதையைப்பற்றிப்பேசினேன்.

அடுத்த நிகழ்வில் நாவல் வாசிப்பு அதில் உள்ள சவால்கள்,ரசனை,நாவலின் வகைமைகள் குறித்து பேசப்பட்டது

நாவலின்(படைப்புகள்) வகைமைகளைக் கண்டு கொள்ளல் குறித்த சுரேஷ் பிரதீப் விளக்கம் :

அடிப்படையில் நாவல் என்பது சமூகம் மேல் வைக்கப்படும் ஒரு விமர்சனம்.

இயல்புவாத படைப்புகள்;

நாவலாசிரியனை படைப்புக்குள் பார்க்க இயலாது.நாம் வாழும் வாழ்வின் இருத்தலை எடுத்துக்காட்டுவது

உதராணம்; ஆரோக்ய நிகேதனம்,

 எதர்த்தவாத படைப்புகள்:

ஆசிரியர் படைப்புக்குள் ஒரு பாத்திரமாக வருவதை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊகித்து அறிவதற்கான வாய்ப்புகள் இருக்கும்

உதாரணம்.,ஆதிரை

 மீபுனைவு

ஒரு படைபுக்குள் மற்றொரு படைப்பு அல்லது ஒரு புனைவிற்குள் புனைவை பற்றி  விவரிக்கும், எழுதும் படைப்பு

உதாரணம்;விஷ்ணுபுரம்,ஒளிர்நிழல்

 அடுத்த நிகழ்வில் சிறுகதைக்கான வடிவம் பற்றி விவாதிக்கப்பட்டதுக்கப்பட்டது

விவதத்திற்கு எடுத்து கொண்ட சிறுகதைகள்,பொன்னகரம்-புதுமைப்பித்தன் ,விமோசனம்_அசோகமித்ரன் ,நகரம்-சுஜாதா

 பொன்னகரம் சார்ந்த விவாதம்

படைப்பு வெளிவந்த காலத்தை ஒப்பிடுகையில் அது பேச எடுத்துக்கொண்ட கரு முக்கியமானது,வேறு எவ்வகையில் எழுதிருயிந்தாலும்  வடிவம் இந்த அளவிற்கு சரியாக பொருந்தியிருக்காது,

 விமோசனம்

ஆண் பெண் மீது செலுத்தும் அதிகாரம் என்பது ஒரு பாவனை,ஆண் பெண் உறவுகளில் இந்த பாவனை உடையும்போது குடும்ப அமைப்பு சிதைகிறதா?,சமூக அடுக்களில் அதிகாரத்தின் எல்லை ,அது உடையும் தருணம் குறித்து விவாதிக்கப்பட்டது

 
நகரம்

முழுக்கவும் சிறுகதை வடிவத்திற்கு பொருத்தமான கதை, காலச்சூழலை ஏற்றுக்கொள்ள முடியாத தாய் தன் மகளை இழந்த தருணம்

 இவ்விவாததில் கடவுளும் கந்தசாமி பிள்ளையும்-புதுமைப்பித்தன்,மாடன் மோட்சம் –ஜெயமோகன் கதைகள் குறித்த  ஒப்பீடு  விவாதிக்கப்பட்டது

 அடுத்த விவாதம்.

வரலாற்றை எழுதுவது  வாசிப்பது;

புராணங்கள் ,தொன்மங்கள் ,நாட்டரியல் கூறுகள், இவை அனைத்தையும் அடிப்படையாகாக்கொண்டே வரலாறு எழுதப்படவும் படிக்கப்படவும் வேண்டும்.இந்திய வராற்றை ஆராய்ந்த மார்க்சிய ஆய்வுகளின் நிறை,குறைகள் பற்றி பேசப்பட்டது

இறுதியாக

குறுநாவல் அறிமுகம்

தாஸ்தாய்வொஸ்கியின் அழையா விருந்தாளி.

இந்நாவலின் சுருக்கத்தை சொல்லிவிட்டு.நாவல் எனக்குள் எழுப்பிய கேள்வியைப்பற்றிப்பேசினேன்

 இரண்டு வகையான மனம்

நாம் வளர்ந்து வந்த மரபின் மனம்

அனுபவங்கள் இலக்கியங்கள்  சார்ந்த மனம்

 முதல் மனத்தை வென்று இரண்டாம் மனம் மேழேழும்பி வரவேண்டிள்ளது,அது சறுக்கும் ,இடங்கள் தன்னை முற்போக்காக காட்டிக்கொள்ள விழைபவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதலியன குறித்து விவாதிக்கப்பட்டது.

 நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நடுவே அமர்ந்து அவற்றைபற்றி உரையாடுதல் என்பது உன்மையில் பேரானந்தமாகவே இருந்தது

 சீரான நீர்த்துப்போகத விவாதம். அடுத்த வாரத்திற்கான நதிக்கரை சந்திப்பிற்காக இப்போதே மனம் நீச்சல் அடிக்கத்துவங்கிவிட்டது!      

Sunday 15 April 2018

நதிக்கரை இலக்கிய வட்டம் நிகழ்வு ஒன்று

2016-ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா தான் நான் கலந்து கொண்ட முதல் பெரும் இலக்கிய நிகழ்வு. அங்கு பல நண்பர்கள் அறிமுகமாயினர். சம்பிரதாய அறிமுகங்களைத் தாண்டி இன்றும் நெருக்கமாகத் தொடரக்கூடிய பல நண்பர்களை அந்நிகழ்வின் வழியாகப் பெற்றேன். ஒளிர்நிழல் வெளியான பிறகு முகநூல் வெளியிலும் பலர் நண்பர்களாயினர். ஆச்சரியம் கொள்ளும் வகையில் இலங்கை மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தெல்லாம் முகநூலில் நட்பழைப்புகள் வந்தன. பலர் நண்பர்களாகத் தொடரவும் செய்கின்றனர். அவ்வகையில் இலக்கிய உலகம் குறித்த புரிதல் எனக்கு உருவாகத் தொடங்கிய காலகட்டமாக சென்ற வருடத்தைச் சொல்வேன். அதில் நிகழ்ந்த ஒரு பிழை புரிதல் எனக்கு நண்பர்களாக இருக்கிற இலக்கிய வாசகர்கள் நவீன தமிழ் இலக்கிய வாசகப் பரப்பின் "சிறு பகுதி" என்ற கற்பனை. ஆனால் நாட்கள் செல்லச் செல்லவே இலக்கிய வாசகர்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மொழிச்சூழலில் "சிறு பகுதி" என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு நண்பராக இருக்கும் ஒரு நண்பர் ஏறக்குறைய நவீன தமிழ் இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளையும் அறிந்திருப்பார். அந்த நண்பரை இலக்கியம் வாசிக்கும் எல்லா நண்பர்களும் அறிந்து வைத்திருப்பார்கள். குறைந்த எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட ஒரு "இனக்குழு" போலத்தான் தமிழ் இலக்கிய வாசகப் பரப்பு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இங்கு நிகழும் உக்கிரமான பூசல்கள் குழுச்சண்டைகள் அணி பிரிதல்கள் என இவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இவற்றால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல் தமிழ்ச் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குறுகிய வாசகப் பரப்பிலும் இலக்கிய வாசிப்பு ஓரளவு பொருளாதார தன்னிறைவு அடைந்த தமிழகப் பெருநகரங்களிலேயே ஓரளவாவது நிகழ்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரித் தண்ணீரை நம்பி நடைபெறும் விவசாயத்தில் நம்பிக்கை இழக்கத் தொடங்கிய பிறகு இப்பகுதி இளைஞர்கள் வேலை தேடி அரபு நாடுகளுக்குச் செல்வதும் கோவை திருப்பூர் போன்ற தொழில் நகரங்களைத் தேடிச்செல்வதும் பெருகத் தொடங்கியது. இன்று டெல்டா பகுதியின் பெரும்பான்மையான உட்கிராமங்களில் முதியவர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் தான் அதிகம் காண முடியும். ஆகவே நவீன கல்வி கற்றவர்களுக்கு இப்பகுதி உகந்ததாகத் தென்படுவதில்லை. அமைதியான முதுமைக் காலத்தை கழிப்பதற்கு ஏற்ற ஒன்றாகவே டெல்டா பகுதி எண்ணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை நிலவும் ஒரு பகுதியில் இலக்கிய வாசிப்பு தமிழகத்தின் மற்ற எந்த மண்டலத்தையும் விட குறைவாக நடைபெறுவது புரிந்து கொள்ளத்தக்கதே.

தஞ்சையில் எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமார் தஞ்சைக்கூடல் என்ற இலக்கிய கூடல் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார். ஒவ்வொரு மாதமும் இலக்கிய இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை தேர்ந்தெடுத்து விவாதிக்கும் ஒரு களமாக இந்த கூடுகை செயல்பட்டு வருகிறது. எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் பேசும் புதிய சக்தி என்ற மாதாந்திர இதழை திருவாரூரில் இருந்து நடத்தி வருகிறார். இவற்றைக் கடந்து வேறெந்த இலக்கியம் சார்ந்த முன்னெடுப்படுகளும் சந்திப்புகளும் டெல்டா பகுதியில் நடைபெறுவதாத எனக்குத் தெரியவில்லை. ஆகவே திருவாரூரில் குறிப்பிட்ட இடமொன்றில் இலக்கியச் சந்திப்புகளை ஒருக்கும் எண்ணம் சில மாதங்களாக இருந்து வந்தது. திருவாரூர் மாவட்ட மையத்தின் நூலகர் ஆசைத்தம்பி அவர்களிடம் நூலகத்தில் கூடுகை நிகழ்த்த இடம் தர முடியுமா என்று கேட்டதுமே அவர் சம்மதித்தார். திருவாரூர் மைய நூலகம் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படும் நூலகங்களுள் ஒன்று. ஆசைத்தம்பி ஆண்டாள் போன்ற ஆர்வம்மிக்க நூலகர்களால் தொடர்ச்சியாக "செயல்பட்டுக்" கொண்டிருக்கும் ஒரு அரசு நிறுவனம் திருவாரூர் நூலகம். நூலகத்திற்கே உரிய சலிப்பான தோற்றத்துடன் இருப்பவர்களை திருவாரூர் மைய நூலகத்தில் காண முடியாது.

உண்மையில் கூடுகைக்கு இடம் கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகே இலக்கிய வட்டம் தொடங்கும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினேன்.

ஜெயமோகனின் வாசகரான விஜய்கிருஷ்ணன் அவரது நண்பரும் திருவாரூரில் வசிக்கிறவருமான சம்பத் அவர்களிடம் நதிக்கரை இலக்கிய வட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்திருக்கிறார். இன்று காலை பத்து மணிக்கு முதல் கூடுகை திட்டமிடப்பட்டிருந்தது. எனக்கு முன்னரே சம்பத் வந்துவிட்டிருந்தார். மாநில அரசுத் துறையில் பணிபுரிகிறவர். ஒன்பதே முக்காலுக்கு நான் மைய நூலகம் வந்தேன். என் நண்பரான கதிரேசனும் அவருடைய நண்பரும் தமிழாசிரியருமான ரமேஷும் நாகையில் இருந்து வந்திருந்தனர்.

நூலகத்தின் முதல் தளத்தில் ஒரு அறையை எங்களுக்கு ஒதுக்கித் தந்திருந்தனர். சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பிறகு இலக்கிய வட்டம் தொடங்கியதற்கான நோக்கம் குறித்துச் சொன்னேன். மற்ற இடங்களில் அதிக கூச்ச சுபாவம் உடையவனாக உணரும் என்னிடம் இலக்கியம் சார்ந்த சந்திப்புகளில் என்னிடம் தயக்கங்கள் இருப்பதில்லை என்பதை உணர்கிறேன். அந்த தயக்கமின்மை பிறரையும் இயல்பாக உரையாட வைத்தது.

மூவருமே தங்களுடைய வாசிப்பு இலக்கிய வாசிப்பு நோக்கி நகர்ந்ததன் பரிணாமத்தைக் கூறினர். சம்பத் வாசிப்பு சார்ந்து விவாதிப்பது குறித்த தன் ஐயங்களை முன் வைத்தார். ஒரு படைப்பு ஏன் விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசினோம். கதிரேசன் தரமான நாவல்களிலேயே சில மனதுக்கு அணுக்கமாக இருப்பதற்கும் சில அவ்வளவு ஈர்க்காமல் போவதற்கும் காரணம் என்ன என்று கேட்ட கேள்வியின் வழியாக விவாதம் நாவல்களின் வகைமைகளுக்குள் சென்றது. பொதுவாக யதார்த்தவாத படைப்புகள் வாசிப்புத்தன்மை மிக்கவையாக இருக்கும் என்று சொன்னேன். இயல்புவாதப் படைப்புகளுக்குள் அவற்றின் மொழி செயல்படும் விதத்தை உணர்ந்து உள் நுழைய வேண்டியதன் அவசியத்தைப் பற்றிச் சொன்னேன். மேலும் பின் தொடரும் நிழலின் குரல் நாவல் ஒரு சாதாரண வாசகனுக்கு அளிக்க கூடிய அயர்வையும் சோவியத் ரஷ்யாவின் உடைவு என்ற பின்னணியில் பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவல் அளிக்கக்கூடிய திறப்புகளையும் பற்றி சொன்னேன். அதுபோல தனிமையின் நூறாண்டுகள் நாவலில் வரும் மகோந்தாவை ஸ்பெயினின் அரசியல் சூழலோடு பொருத்தி வாசிக்கும் போது அந்த நாவலை மேலும் அணுகி அறிய முடிவதையும் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை கம்யூனிஸ்ட் புரட்சியின் மீதான விமர்சனமாக அமைவதையும் கதிரேசன் சொன்னார்.

நாவலின் வகைமைகள் பற்றிய பேச்சு நீண்டபோது இயல்பாகவே மீபுனைவு பற்றிய பேச்சு எழுந்தது. புனைவுக்குள் மற்றொரு புனைவினை கொண்டுள்ள வடிவத்தை மீபுனைவு என்கிறோம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு மீபுனைவு. அந்த நாவலுக்குள் வரும் சங்கர்ஷணன் என்ற கதாப்பாத்திரத்தால் "விஷ்ணுபுரம்" என்ற காவியம் நாவலுக்குள்ளேயே எழுதப்படுகிறது. அவ்வகையில் மகாபாரமும் ஒரு மீபுனைவு தானே என்று ரமேஷ் கேட்டார். மகாபாரதத்தை எழுதிய வியாசர் மகாபாரத்திலேயே ஒரு பாத்திரம் என்ற வகையில் அதுவும் ஒரு மீபுனைவே.

நான் விமோசனம்,அறம் மற்றும் வணங்கான் ஆகிய மூன்று சிறுகதைகள் குறித்து பேசலாம் என எண்ணியிருந்தேன். மணி அப்போது பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. ஆகவே விமோசனம் குறித்து மட்டும் பேசலாம் என முடிவு செய்து கொண்டேன். சிறுகதை என்ற வடிவம் குறித்த ஒரு பொதுப்புரிதலை வழங்குவதற்காக சுஜாதா எழுதிய ஒரு "மர்மக்கதையை" சொன்னேன். அதன் முடிவு அவர்களின் ஊகத்துக்கு எதிரானதாக இருந்தது. சுஜாதா அது போன்ற கச்சிதமான முடிவைக் கொண்ட பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நகரம்,குதிரை போன்ற ஒரு சில படைப்புகளே "இலக்கியத்தகுதியை" பெறுகின்றன என்று சொன்னபோது மாற்றுக்கருத்து வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் மூவருமே சுஜாதாவை வாசித்திருந்ததால் அதை ஆமோதிக்கவே செய்தனர்.

அசோகமித்திரனின் விமோசனம் கதையை சொன்னேன். (சொல்லும் போதே அடுத்தமுறை இப்படி "கதை சொல்வது" கூடாது என முடிவு செய்து கொண்டேன்). அக்கதையில் அசோகமித்திரன் விமோசனம் என்று குறிப்பிடுவது எதை என்பது குறித்து ஒரு சிறு விவாதம் நிகழ்ந்தது. ஒரு கணவன் மனைவியின் உறவில் ஏற்படும் முறிவை மிகத்துல்லியமாக சித்தரிக்கக்கூடிய கதை அது. அப்படியே அந்தப்பேச்சு எல்லா உறவுகளிலும் இருக்கக்கூடிய அதிகார-அடிபணிவு பாவனையின் அவசியம் குறித்ததாக மாறியது. அலுவலகத்தில் குடும்பத்தில் நட்பில் என எல்லா தளத்திலும் இந்த பாவனை செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதையொட்டி கதிரேசன் தஸ்தாவெய்ஸ்கியின் அழையா விருந்தாளி என்ற குறுநாவல் குறித்துச் சொன்னார். தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு ஊழியனின் திருமணத்திற்கு தன்னுடைய "கருணையை" நிறுவுவதற்காக செல்லும் ஒரு முதலாளியைப் பற்றிய கதை அது. அழையா விருந்தாளியான அவரால் அந்த திருமணத்தில் நிகழக்கூடிய குழப்பங்களையும் அந்த நாளினைத் தொடர்ந்து முதலாளிக்கும் ஊழியனுக்குமான உறவில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தையும் கதிரேசன் சொன்னார்.  அக்குறுநாவலை வாசிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

முதல் நிகழ்வு என்பதால் எந்த "திட்டமிடலும்" இன்றி நிகழ்ந்தது. எனினும் நண்பர்களாக சிலர் சந்தித்துக் கொள்ள முடிந்தது நிறைவளித்தது. அடுத்த நிகழ்வில் குறிப்பிட்ட படைப்பினைப் பற்றிய உரையோ அல்லது கட்டுரையோ தயார் செய்து கொண்டு உரையாடலாம் என்ற திட்டமுள்ளது. அடுத்த வாரம் வரவிருக்கும் நண்பர்களைப் பொறுத்து அதை முடிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.

ரமேஷ் நாஞ்சில் நாடனின் தீவிர வாசகர் என்று அறிந்தேன். அதுபோல சம்பத் ஜெயமோகனின் வாசகர். மின் நூல்களை விட தனக்கு புத்தகத்தில் படிப்பதே எளிமையானதாக இருப்பதாக சம்பத் சொன்னார். ஒரு மணிக்கு நிகழ்வினை முடித்துக் கொண்டு நூலகத்தில் இருந்து கிளம்பினோம். கதிரேசன் திருவாரூர் நூலகத்தில் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.  திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள ஒரு கடையில் தேநீர் அருந்திவிட்டு ஒன்றரை மணிக்கு புறப்பட்டோம்.

இன்றைய நிகழ்வு இலக்கிய கூடுகையை தொடர்ச்சியாக நடத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. அடுத்தடுத்த வார நிகழ்வுகள் குறித்த பதிவுகள் மேலும் துல்லியமானவையாக இருக்கும் என்பதை இப்போது உணர முடிகிறது.