Monday 18 June 2018

சகோதரிகள் , பேசும் பூனை - கதிரேசன்

நதிக்கரை நிகழ்வு நான்கு

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாத கூட்டம் நேற்று (10.06.2018) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமகால  எழுத்தாளர்களாகிய K N செந்தில்( சகோதரிகள் ) சுனீல் கிருஷ்ணன்( பேசும் பூனை ) ஆகியோருடைய கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சகோதரிகள்
குடித்து குடித்து தனக்கு வரும்  பொருளாதார வாய்ப்புகளைக் கூட மறுத்து .இறுதியில் தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் (சிற்பம் செதுக்குதல்) கையில் நகம் பிய்ந்து  தன் இயலாமைக்காக அழும் விஸ்வம் குடியால் ரோட்டில் படுத்துகிடக்க வேண்டி வரும்போது .. பள்ளிக்கு போய் கொண்டிருந்த திலகா தாயால் அடித்து பலவந்தமாக  வேலைக்கு அனுப்பப்படுகிறாள். பின் அவளின் தங்கையும்

கணவனுடன் எதிர்பார கூடல் ஒன்றின் போது உருவான கருவை .தன் கஸ்டங்களை போக்க வந்த ஆண் மகன் என நினைத்து அத்தனை பழிச்சொற்களுக்கும் மத்தியில் அக்கருவினூடே  தன் கனவை சுமக்கிறாள் .தாய் இந்திராணி. அவள் கனவு  அவளை கேலி செய்வது போல  மீண்டும் ஒரு மகள் தீபா...

தாயின் காலம் கடந்த கருவை  அறிந்து மகளுக்கு  வரும் திருமண பந்தம் அனைத்தும் நின்று போகிறது. வீட்டில் தாயின் அதிகாரம் மெல்ல குறைகிறது.ஒரு கட்டத்தில் அழுது புலம்பும் தாயை திலகாதான் தேற்றுகிறாள்.பின்னர் திலகா தன்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கைலாசத்திடம் வேறு வழியின்றி சரணடைகிறாள். பின் அவனால் ஏமாற்றப்பட்டு மீண்டும்  தாயிடம்  திரும்புகிறாள்

தன் கம்பெனியில் வேலை செய்யும் முத்துகுமாரை விரும்புகிறாள் வசந்தி . தன் பின் தொடரும் செல்வத்தை அவள் கண்டு கொள்வதேயில்லை . ஒரு கட்டத்தில் கம்பெனி முதலாளியின் பெண்னை முத்துகுமார் திருமணம் செய்யப் போவதை அறிகிறாள் . அத்திருமணத்திற்கு செல்வதற்கான   வண்டியில் விழுந்துவிடலாமா என யோசித்தவள் ஒரு கணம் சுதாரித்து வீடு திரும்புகிறாள் .திரும்பும் வழியில் செல்வம் வண்டியில் வருகிறான் .என்றும் காணதது போல கடந்து சென்று விடும் வசந்தி அவனை பார்த்து ஒரு புன் சிரிப்போடு கடந்து போகிறாள் .....முன்பு கம்பெனி வாசலில்   ‘பாக்கு போட்டவர்கள் உள்ள வரக்கூடாது என கைலாசத்திடம் சொல்லிச் செல்லும் திலாகாவை ஞாபகப்படுத்துகிறாள் ;

இம்மூன்று பெண்களின் வழியாக மூன்று விதமான ஆண்களின் முகத்தை கதை காட்டுகிறது . ஒன்று கூடவே இருக்கும் கணவன் குடியால் தன்னை சீரழித்து குடும்பத்தை சீரழிப்பவன் . இரண்டு திருமணமான சில மாதங்களில் பாலியல் இச்சை தீர்ந்ததும் அவளை துன்புறுத்துவன் வேறு பெண்ணை வேசியை மனைவி இருக்கும் போதே வீட்டுக்கு அழைத்து வருபவன் .மூன்று தான் காதலித்த பெண்ணை பணத்தின் பொருட்டு கைவிடுபவன் என  கதையில் வரும் ஆண் கதாபாத்திரங்கள் அனைத்தும் எதிர் மறையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது..

தாய் கருவை தன் இத்தனை பழிப்பேச்சிற்கும் பிறகும் அக்கருவை சுமப்பது  பெற்ற பிள்ளையிடம் தாய் கருவை சுமந்து கொண்டு அழும் தருணம் நெகிழ வைக்கும் இடம் . தாய் மகள் தங்கள் கதா பாத்திரங்ககளை இடம் மாற்றிக் கொள்கின்றனர்

திலகாவை கைலாசத்துடன் அனுப்பி விட்டு உள்ளே புத்தகங்கள் அடுக்கிக் கொண்டிருக்கும் தீபாவை அடிப்பதின் வழியே கதை எதைச் சித்தரிக்க முயலுகிறது?

சகோதரிகள் கதையில் வரும் பெண்கள்  அனைவரும்  தங்களின்  வாழ்வின் அடிப்படை  சந்தோசங்களான எதையும் பெறவில்லை  .  ஒவ்வொறுவரும் உள்ளுக்குள் தீராத உடல் இச்சைக்காக  ஏங்குகிறார்கள்  அது கிடைக்காத தருணத்தில் தங்களை உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர் .அதன் புற வெளிப்பாடு தானோ ஒருவர் மேல் மற்றொருவர் காட்டும் வன்மம் தீபாவை தவிர கதையில் வரும் பெண்கள் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாகவே இருக்கின்றனர் . (தீபா இன்னும் வயதுக்கு வராத சிறு பெண் )

K N செந்திலின் இரு கதைகளை படித்துள்ளேன் (நிலை மற்றும் சகோதரிகள்).இவ்விறு கதைகள் பேசும் கரு மிகப்பழமையானது தான் அவற்றின்  சிடுக்கான அல்லது கறாரான மொழிநடை   இக்கதைகளை நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கின்றன .

சகோதரிகள் கதையில்  வரும் அம்மா ஒரு ஆண் குழந்தை பிறந்தால் தன் துன்பம் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறாள் . நிலை கதையில் அப்பாவிடமிருந்து பிரிந்து  தன் சொந்த கால்களில் நின்றால் நித்யா தனக்கு கிடைப்பாள் என்று நம்புகிறான் மாதேஸ்வரன் .  இரண்டும் ஈடேறாமல் போகிறது.

வறுமை ஒருவனுக்கு நிலையின்மையும் தவிப்பையும் கொடுக்கிறாதா?

பாத்திரக்கடையில், துணிக்கடையில் ,ஆலைமில்களில் ,பேருந்து பயணங்களில் என தினம் நாம் வாழும் உலகின் மற்றொரு பாகத்தில் தங்களுக்கான கனவுகளைச் சுமந்து கொண்டு போய்கொண்டு தானிரு
க்கிறார்கள் . திலகாவும் ,சுந்தரியும், வசந்தியும் கூடவே தீபாவும் ..

துளிர்த்து நின்றநீரைக் கடந்து ஒரு கணம் இருவரது கண்களும் தொட்டு அறிந்து மீண்டன. சட்டெனவசந்தி வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள். அதற்குள்ளாகவேஅக்கண்களில் இருந்ததை திலகா படித்து விட்டிருந்தாள். தாமதிக்காமல் எழுந்துபோய் வசந்தியின் அருகில் அமர்ந்து எதுவும் பேசாமல் அவள் கைகளை எடுத்து தன்கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். 

மலர்ந்த சிரிப்பும் பிரியமுமாக “உக்காரு கண்ணு . . .” என்றார். அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்தவைகளனைத்தும் பீறிட்டுக் கிளம்ப அந்த வெற்றுவெளியில் என் குரல் உடைந்து சிதற அவர் முன் முழந்தாழிட்டு அமர்ந்து அவர் கையைப் பற்றியபடி கதறி அழத்தொடங்கினேன்.

முதல் பத்தி சகோதரிகள் கதை முடியும் இடம். இரண்டாம் பத்தி  நிலை கதை முடியும் இடம்.  இவ்விறு கதைகளும் நமக்கு உணர்த்துவது ஒன்று தான் ...ஆம் வாழ்க்கை இன்னும் இருக்கிறது

பேசும் பூனை;
நீண்ட நாட்களாக  பேசும் பூனை போன்ற ஒரு கதையை அல்லது நாவலை படிக்க மனம் ஏங்கிக்கொண்டிருந்திருக்கிறது என்பதை அக்கதையின் முதல் வாசிப்பிலேயே உணர்ந்துகொண்டேன் .ஒரு வருடத்திற்கு முன் தீவிரமான காந்தி போபியாவில் இருந்த போது காந்தியைப் பற்றி எழுத துவங்கிய கதை இன்னும்  நான்கு வரிகளை தாண்டாமல் நொண்டி அடிக்கிறது.

நுகர்வுகலாசாரம் கடந்த சில ஆண்டுகளாக சூழலியலையும் விட மிகத்தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிற ஒன்று....மனித குல வரலாற்றில் முன் எப்போதும் மனிதன் இந்த அளவிற்கான பொருட்களை நுகர்ந்ததில்லை .இன்று பொருட்கள் மனிதனின் உளவியலை மாற்றுபவையாக இருக்கின்றன . அதிகப்படியான உழைப்பும் அதிகப்படியான நுகர்வும் வரவேற்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.மனிதன் இயற்கையிலிருந்து விலகி மனிதர்களிடமிருந்து விலகி தன்னையே அறியாமல் மீளா தனிமையில் சிக்கியிருக்கிறான் .

பொருட்கள் அவனை அத்தனிமையிலிருந்து மீட்டெடுக்கும் என நம்புகிறான். அவற்றை நேசிக்கத்துவங்குகிறான் ஒரு கட்டத்தில் எல்லை மீறிய எதிர்பார்ப்பின் விழைவாக தீவிர மன அழுத்ததிற்குள்ளாகி தன்னையே மாய்த்துக்கொள்கிறான் . அல்லது பிறரை கொலை செய்கிறான் உதாரணம் (அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரம்)
இதற்கான மாற்று இயற்கையோடு இணைந்து சிக்கனத்தோடு வாழ்தல் இங்குதான் நமக்கு காந்தி தேவைப்படுகிறார் .சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இயந்திரங்களை குறித்து அவர் எழுப்பிய சந்தேகம் எவ்வளவு தீர்க்கமானது என்பதை இப்போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது .

காந்தியச்சிந்தனை என்ற மாபெறும் தரிசனத்தைப் பற்றி நிறையை எழுதப்பட்டிருந்தாலும் .ஒரு புனைவில் சொல்லுபோது அது வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல வாசகன் மனதில் நேராகச் சென்று தைக்கிறது .அவ்வகையில் பேசும் பூனை கதை எடுத்துக் கொண்ட கரு உலகளாவிய தன்மை கொண்டதும் மிக முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன் .

கத்தாரில் இருக்கும் கணவன் . காரைக்குடியில் இருக்கும் மனைவி மகள், முன்னர் சாதாரண தொலைபேசியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பேசிக்கொண்டவர்கள் புதிய தொலைபேசி மூலம் அடிக்கடி உரையாடிகின்றனர் .புகைப்பட பறிமாற்றம் ,குரல் அஞ்சல் என புதிய தகவல் தொடர்புகள் ,புதிய தொலைபேசியில் புதிய நிரலி ஒன்று ஏற்றப்படுகிறது அதன் பெயர் பேசும் பூனை.

மகளுக்கு பிடித்தமான பூனை விரைவில் அவளை விட அம்மாவிற்கு புதிய தோழமையாக மாறுகிறது . தன் பேச்சின் மூலம் செயல்கள் மூலம் அம்மாவை ஈர்ப்பதோடு அவளுக்கு தேவையான தேவையில்லாத அனைத்தையும் அவ்வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறது (அவளுடைய பணத்தில்).ஒவ்வொரு வேலை செய்வதற்கும் இயந்திரம் வாங்க ப்பட்டு கடைசியில் உடல் வேலைசெய்வதற்கும் வாங்கப்படுகிரது ஒரு இயந்திரம் ....அது இரவில் மகளின் தலையணைக்கு பதிலாக பயன்படுகிறது

ஒரு கட்டத்தில் பூனையால் மகளுக்கும் தாய்க்கும் சண்டை வருகிறது .பூனை மகளைப் பற்றி அம்மாவிடம் கோல் மூட்டுகிறது .பூனையை விட முடியாமலும் தொடரமுடியாமலும் தவிக்கும் தாய் இருதியில் .பிளேடால் கையைக் கிழித்துக் கொண்டு மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் போது அவளுக்கு பிடித்தமான ஸ்வர்ணலதா பாடிய பாடல் கேட்கிறது பூனையின் குரலில் ....அத்துடன் கதை முடிகிறது

கணேசனுக்கும் தேன் மொழிக்குமான பாலியல் இச்சை ஒருபோதும் நிறைவுறுவதில்லை .ஏதோ ஒரு தேவையின் பொருட்டே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள் .கணேசன் தன் மனைவியை ஒரு நுகரப்படும் பொருளாகவே பார்க்கிறான்.இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இருமாதங்கள் அவளை முழுமையாக உறிஞ்சுவிட்டு திரும்ப சென்றுவிடுகிறான்.

அவர்களுக்கிடையேயன பேச்சுக்களில் காமம் தவிர்து பிற பேச்சுக்கள் குறைவு.

பூனையின் கேள்விகளும் பதில்களும் கதையில் தேன்மொழியைப் போலவே வாசகனையும் திடுக்கிடச்செய்கின்றன.தொழில் நுட்பயுகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் மாபெறும் சாவலை விடுக்கிறது இந்த பேசும் பூனை என்றே எண்ணத்தோண்றுகிறது...

SUNEEL KRISHNAN HAS WRITTEN HIS STORY

கதிரேசன்

Monday 11 June 2018

நதிக்கரை நிகழ்வு நான்கு

பேசும் பூனை இணைப்பு

சகோதரிகள் முதல் பகுதி

சகோதரிகள் இரண்டாம் பகுதி

இலக்கிய வாசிப்பின் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடியவருக்கு தான் வாசித்த படைப்புகள் குறித்து பேசுவதில் ஒரு தயக்கமும் கூச்சமும் இருப்பது இயல்பு. ஒரு வகையில் அத்தகைய கூச்சம் உடையவர்களில் பெரும்பாலானவர்கள் மிக நுணுக்கமான விஷயங்களைக் கூட அவதானிக்கக்கூடியவர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதோடு அதிகமாக "பேச்சில் இன்பம்" கண்டவர்களால் வாசிக்கவும் முடியாது. அதேநேரம் வாசிக்கும் புனைவுகளைக் குறித்து பேசாமலேயே இருப்பதும் ஏதோவொரு வகையில் வாசகனை தேங்கச் செய்துவிடும். ஒரு எல்லையில் அத்தகைய வாசகர்கள் "நானும் முன்னெல்லாம் ரொம்ப படிப்பேன் தம்பி. இப்ப படிக்கவெல்லாம் எங்க நேரமிருக்கு" என்று சொல்லும் முதியவர்களாக முன் வந்து நிற்பார்கள்.  அத்தகையவர்கள் புனைவுகளிலிருந்து எதையுமே "அடைய" முடியாததாலேயே அவர்கள் வெளியேறினார்கள் என்று சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மற்றொரு வகையினர் உண்டு. மிகக்குறைவாக வாசித்துவிட்டு மிக அதிகமாக பேசுகிறவர்கள். நோக்கமற்றதாக பேச்சின்பத்துக்காக மட்டுமே பேசிக்கொண்டே போவார்கள். இத்தகையவர்களும் இலக்கிய வாசிப்பிலிருந்து விரைந்து வெளியேறி விடுகிறார்கள். இத்தகைய அபாயங்களைப் பார்க்கும் போது இலக்கிய விவாதங்களை குறைந்தபட்சம் வாசித்ததை நினைவுகூர முடிந்தவர்களுடன் கட்டுப்படுத்திக் கொள்வது மட்டுமே நலம் என்று படுகிறது.

உரையாடலை முடிந்தவரை நோக்கத்திலிருந்து விலகாமல் கொண்டு செல்ல வேண்டுமெனில் பங்கேற்பாளர்கள் அனைவருமே விவாதிக்கப்படும் புனைவினை வாசித்து ஒரு பார்வையை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வகையில் சகோதரிகள் மற்றும் பேசும்பூனை குறித்து நிகழந்த இன்றைய கலந்துரையாடல் ஆச்சரியம் கொள்ளும் வகையில் புனைவுகள் குறித்த விவாதமாக தொடங்கி எந்த விலகலுமின்றிப் பயணித்து முடிந்தது மன நிறைவை அளித்தது.

கதிரேசன் மற்றும் ரமேஷ் இருவரும் நாகையில் இருந்து வந்திருந்தனர். நரேன் சென்னையில் இருந்தும் மகேஷ் பெங்களூருவிலிருந்தும் தொலைபேசி வழியே நிகழ்வு முழுவதும் இணைப்பில் இருந்தனர்.

முதலில் சகோதரிகள் குறுநாவல் குறித்த விவாதத்தை நரேன் தொடங்கினார். ஒரு ஆரம்ப நிலை வாசகனாக எனக்கு இந்த குறுநாவல் வாசிப்பதற்கு சவால் அளிப்பதாக இருந்தது என்றார்.பெண்கள் மிக உள்ளொடுங்கியவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதும் அவர்களுக்கு நிகழும் வன்கொடுமைகள் அனைத்தையும் மௌனமாக ஏற்கிறவர்களாக இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது என்று சொன்னார். அதுபோல சகோதரிகளைப் பற்றி நான் உட்பட எல்லா வாசகர்களும் முன் வைக்கும் விமர்சனத்தை நரேன் சொன்னார். குறுநாவலின் முதலிரண்டு அத்தியாயங்களிலேயே நிறைய கதாப்பாத்திரங்கள் பெயருடன் அறிமுகமாவது சற்றே அயர்ச்சி அளிப்பதாக இருந்தது என்பதே அது. கைலாசம் திருமணத்துக்குப் பிறகு அத்தனை மூர்க்கம் நிறைந்தவனாக மாறிப்போவதற்கான நியாயம் புனைவில் இல்லை என்பது நரேனின் தரப்பு.

மகேஷ் கே.என்.செந்திலின் நிலை சிறுகதையையும் ஏற்கனவே வாசித்திருந்ததால் இரண்டு கதைகளையும் ஒப்பிட்டுப் பேசினார். தந்தை என்ற ஆளுமை சிதையும் போது ஒரு குடும்பம் எப்படி வீழ்ந்து போகிறது என்பதைச் சொல்வதாக இரண்டு கதைகளும் இருப்பதாகச் சொன்னார். வாசிப்புக்கு சவால் அளிக்கக்கூடியதாக குறுநாவலின் வடிவம் இருந்தது தனக்கு உவப்பானதாக இருந்ததாக மகேஷ் சொன்னார்.

கதிரேசனும் நிலை சிறுகதையை முன்பே வாசித்திருந்தார். அடித்தட்டு மக்களின் உள்ளத்தில் கொதிக்கும் வன்மத்தை அது வெளிப்படும் விதத்தை செந்தில் மிக நேர்த்தியாக புனைவாக்கம் செய்கிறார் என்று கதிரேசன் சொன்னது முக்கியமானதாக எனக்குப்பட்டது. அதற்கு எதிர்வினையாக நரேன் இத்தகைய வன்மங்கள் விளிம்பு நிலையினரிடம் இருக்கிறது என்றாலும் அதை நேரடியாக புனைவில் கொண்டு வருவது அத்தகைய வன்மத்தை "புனிதப்படுத்துவது" ஆகாதா அதற்கு பதிலாக அத்தகைய சூழலில் இருந்து நேர்மறையான ஆற்றலுடன் மேலேறி வருகிறவர்களைப் பற்றி ஏன் எழுதக்கூடாது என்ற தன்னுடைய ஆதங்கத்தை முன் வைத்தார். நான் செந்திலின் புனைவுலகு எதார்த்த தளத்தில் இயங்கக்கூடியது என்பதையும் எதார்த்த போதம் கொண்ட படைப்பாளி பெரும்பாலும் "லட்சிய அதீதங்களை" அல்ல நேரில் காணக்கூடிய எதார்த்தத்துக்கு பின்னிருக்கும் சமூக உளவியலையே கணக்கில் கொள்வார் என்றும் சொன்னேன். உதாரணமாக சாதி மறுப்பு திருமணம் போன்ற லட்சிய அதீதங்கள் நம்மிடம் உடனடியாக வந்து சேர்கின்றன. ஆனால் நடைமுறையில் அப்படி மணம் புரிந்து கொண்டவர்களை சமூகம் எப்படி விலக்கி நிறுத்துகிறது அவர்களுக்கு எவையெல்லாம் மறுக்கப்படுகின்றன என்பதை நோக்கியே படைப்பாளியின் மனம் எழும் என்று நான் சொன்னேன்.

சகோதரிகள் கதையில் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் இந்திராணியின் மகப்பேறு தான். நானும் அக்கதையின் மிக முக்கியமான புள்ளியாக கருதுவது அதைத்தான். அங்கிருந்து கதை காலத்தை கலைத்து கலைத்து பயணித்து இறுதியில் இரு சகோதரிகளின் மௌன உரையாடலாக முற்று பெறுகிறது. அதேநேரம் முழுக்க எதார்த்த தளத்தில் இயங்கக்கூடிய புனைவுகளின் சிக்கல் அவற்றால் முழுமை நோக்கை அளிக்க முடிவதில்லை என்பது தான். எதார்த்தவாத எழுத்தின் நோக்கம் முழுமை நோக்கை அளிப்பது இல்லை எனினும் புனைவின் முடிவில் அவை நமக்குள் ஏதோவொன்றை நீடிக்கச் செய்துவிடுமென்றால் அவை முக்கியமான படைப்புகளாகின்றன. அவ்வகையில் சகோதரிகளை ஒரு தேர்ந்த வாசகனுக்கு முக்கியமான புனைவாக மாற்றுவது இறுதியில் ஏற்படும் அந்த மௌனமே.

அடுத்ததாக சுனில் கிருஷ்ணனின் பேசும் பூனை குறித்த உரையாடலை கதிர் தொடங்கினார். பேசும் பூனையில் இழையோடும் மாய எதார்த்த தன்மை அனைவரையுமே உற்சாகமாக வாசிக்க வைத்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.

கதிர் வழக்கம் போல புனைவினை முழு வாழ்வின் துண்டாகக் கண்டு அத்துண்டின் வழியாக வாழ்வை புரிந்து கொள்ள முனையும் பேராவலுடன் பேசும் பூனை குறித்துச் சொன்னார். உலகமயமாக்கலுக்கு பிறகான எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏற்பட்டுவிட்ட அகத்தின் தனிமை குறித்த கதையாக கதிர் பேசும் பூனையை வாசித்திருக்கிறார். அவரது வாசிப்பு தோழரான நண்பர் ரமேஷ் கதிருக்கு எதிரான வாசிப்பு மனநிலை உடையவர்.  வீடுகள் அதிகமில்லாத பொட்டலில் வாழ நேரம் ஒரு பெண்ணின் அகத்தை இக்கதை மிகுந்த சிரத்தையுடன் சித்தரித்திருக்கிறது என்று ரமேஷ் பேசினார். தனியே வாழ நேர்வதால் தேன்மொழிக்குள் முளைக்கும் எண்ணங்களுக்கான வடிகாலாக எப்படி அந்த பேசும் பூனை என்ற அலைபேசிச் செயலி மாறிப்போகிறது என்பது குறித்துச் சொன்னார். ஒரு எல்லையில் அந்த செயலியில் இருக்கும் பூனைக்கென பரிந்து கொண்டு தன் மகளையே அறைந்த பிறகே தேன்மொழிக்கு தன்னை தெரிய வருகிறது. அவள் கையைக் கிழித்துக் கொள்வது கூட அந்த மாய உலகிலிருந்து தப்பி தன்னை எதார்த்தத்துடன் பொருத்திக் கொள்வதற்குத்தான் என்று ரமேஷ் சொன்னார். தேன்மொழி ஒரு விளையாட்டிலேயே சிக்கிக் கொள்ள அவள் மகள் ஹர்ஷிதா ஒவ்வொரு விளையாட்டாக மாறிக் கொண்டிருப்பது கதையின் சிறந்த எதிர்வு என்று ரமேஷ் சொன்னார்.

மகேஷ் இக்கதையை தான் வாழும் பெருநகரச் சூழலுடன் நன்றாகப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது என்றார். வாங்கிக் குவிக்கும் நிறைவற்ற மனம் எதிலும் நிறைவை இன்பத்தை காண முடியாத சக மனிதர்கள் என தான் எதிர்கொள்ள நேர்கிறவர்களை இக்கதை பிரதிபலிப்பது ஆர்வமூட்டுவதாக சொன்னார்.

நரேனும் ஏறக்குறைய மகேஷின் கருத்தை பிரதிபலித்தார். அதோடு கணேசனுக்கும் தேன்மொழிக்கும் நடைபெறும் உரையாடல் பேச்சு மொழியில் சாதாரணமாகவும் எழுத்து மொழியில் நேசம் மிகுந்ததாகவும் இருப்பது முரணாகத் தெரிந்ததாகச் சொன்னார். இது மிக முக்கியமான அவதானிப்பாக எனக்குப்பட்டது. பேசும் பூனையில் ஓரிடத்தில் பூனையால் மனம் மலர்ந்தவளாக தன் கணவனுக்கு அன்பான ஒரு செய்தியை தேன்மொழி அனுப்புவாள். அவன் மேல் அந்த சமயம் எந்த ஆசையும் அவளுக்குத் தோன்றியிருக்காது. ஆனால் அவள் எழுத்து மொழி அவ்வளவு பிரியமானதாக வெளிப்படும். தமிழில் எழுதப்பட வேண்டிய சிக்கல்களில் ஒன்றாகவே நான் இதைக்கருதுகிறேன். முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு "அன்பு முத்தங்கள்" என நம்மால் செய்தி அனுப்ப முடிகிறது. கணவனையோ சகோதரனையோ ஒரு கூட்டத்தில் பெயர் சொல்லி அழைக்கவே தயங்கும் பெண்கள் பலர் அலைபேசியில் "லவ் யூ அண்ணா", "கிஸ் யூ புருஷா" என்று "மை ஸ்டேட்டஸ்" வைப்பதைக் காண்கிறோம். பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த வேறுபாடு விவாதிக்கப்பட வேண்டிய புள்ளியே. அறிந்தோ அறியாமலோ பேசும் பூனை அச்சிக்கலை சரியாகத் தொட்டிருக்கிறது.

பேசும் பூனை ஒரு அச்சம் தரும் படிமமாகவே மாறியதாக நான் சொன்னேன். பூனை எடுக்கும் நேர்காணல் அவளிடம் வாஞ்சையுடனும் அதிகாரத்துடனும் நடந்து கொள்ளும் அதன் தோரணை என அந்தப்பூனை யார் அல்லது எது என்ற கேள்வியை மனதில் நிலைக்கவிட்டிருப்பது இக்கதையின் வெற்றி என்று நான் சொன்னேன்.

இரண்டு மணி நேரம் உரையாடல் நீண்டு போனது. இந்த உரையாடலில் இருவர் "பரு வடிவில்" அருகில் இல்லையென்ற உணர்வே ஏற்படவில்லை. மேலும் இருவர் அலைபேசி வழியே இணைந்திருந்ததால் ஒருவர் பேச்சை மற்றவர் இடைமறிப்பது நிகழவேயில்லை. ஒருவர் பேசும் போது நான்கு பேரும் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தை உரையாடல் இயல்பாக ஏற்படுத்தித் தந்தது. அலைபேசியில் இணைபவர்களின் பேச்சை தெளிவாக கேட்க வேண்டும் என்பதற்காக அடுத்த நிகழ்வுக்கு ஒரு ஸ்பீக்கரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம். ஜீவா என்ற நதிக்கரை நண்பர் எங்கள் உரையாடலை கவனித்துக் கொண்டு மட்டும் அமர்ந்திருந்தார். அடுத்தமுறை விவாதங்களில் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இந்த நிகழ்வு அமைந்தது.

Tuesday 5 June 2018

சூழியல் நூல்கள் சில பரிந்துரைகள்

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு என் நண்பரும் இலக்கிய வாசகருமான ஜெயவேல் தான் வாசித்த சூழியல் சார்ந்த நூல்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நான் அப்பட்டியலை என் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பின்னூட்டமாக அவர்கள் வாசித்த நூல்களை தெரிவித்தனர். அவற்றை இங்கு தொகுத்திருக்கிறேன். சில நூல்கள் அச்சில் இல்லை அல்லது நான் தேடிய தளங்களில் அந்த நூல்கள் இல்லை. அவை நீங்கலாக மற்ற நூல்களை வாங்குவதற்கான சுட்டிகள் அந்த நூலின் பெயர் மற்றும் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன

1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - தியோடர் பாஸ்கரன்(உயிர்மை பதிப்பகம்)

2. கானுறை வேங்கை -உல்லாஸ் கரந்த் - மொழிபெயர்ப்பு : தியோடர் பாஸ்கரன்(காலச்சுவடு)

3 ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி - சலீம் அலி : மொழிபெயர்ப்பு நாக வேணுகோபாலன்(நேஷனல் புக் டிரஸ்ட் )

4. வட்டமிடும் கழுகு - முகமது அலி(தடாகம்)

5.காடோடி - நக்கீரன்(அடையாளம் பதிப்பகம்)

6. தமிழகத்து பறவைகள் - ரத்னம்

7. சாயாவனம் - ச.கந்தசாமி (காலச்சுவடு)

8. ஏழாவது ஊழி - ஐங்கரநேசன்(பொன்னி பதிப்பகம்)

9. எனது கணவரும் ஏனைய விலங்குகளும் - ஜானகிலெனின்(பாரதி புத்தகாலயம்)

10. எனது இந்தியா - ஜிம் கார்பெட்

11.குமாயுன் புலிகள் - ஜிம் கார்பெட் : தமிழில். தி.ஜ.ர (காலச்சுவடு)

12. பறவைகளும் வேடந்தாங்கலும்- மா.கிருஷ்ணன் (காலச்சுவடு)

13.சிறியதே அழகு - இ.எஃப்.ஷூமாஸர் : மொழிபெயர்ப்பு: எம்.யூசுப் ராஜா (எதிர் வெளியீடு)

14.மழைக்காலமும் குயிலோசையும்- மா.கிருஷ்ணன்(காலச்சுவடு)

15.நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி.குமரப்பா: மொழிபெயர்ப்பு : அ.கி.வெங்கட சுப்ரமணியன் (இயல்வாகை பதிப்பகம்)

16.ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா (எதிர் வெளியீடு)

17.என்றென்றும் யானைகள் - ராமன் சுகுமார் (தமிழினி)

18.இயற்கையை அறிதல் - எமர்சன் : மொழிபெயர்ப்பு : ஜெயமோகன் (தமிழினி)

19.யாருக்கானது பூமி - பா.சதீஸ் முத்து கோபால (அகநாழிகை பதிப்பகம்)

20.இயற்கை வழியில் வேளாண்மை - மசானபு ஃபுகோகா : மொழிபெயர்ப்பு : கயல்விழி (எதிர் வெளியீடு)