Thursday 16 September 2021

வலி

வலி

1

வலிக்கும் போது ஏன் எதுவுமே பிடிக்காமல் போகிறது?
உணவு கசக்கிறது
பெண்ணுடல் வெறுப்பளிக்கிறது 
சிரிப்பவர்கள் துவேஷத்தைக் கிளப்புகின்றனர் 
குழந்தைகள் எரிச்சலூட்டுகின்றனர் 
கூரைகள் அச்சமளிக்கின்றன 
யாரோ ஏதோ பெரிய துரோகத்தை செய்துவிட்டதாக உடல் நம்பத் தொடங்குகிறது 
கேட்கும் சொற்கள் நஞ்சாகின்றன 
படிக்கும் சொற்கள் பொருளிழக்கின்றன 
சொல் வலியே
மொத்த உலகத்தையும் எதிரியென வகுத்துக் கொள்ளும் அளவு நீ என்ன அவ்வளவு பெரிய வீரனா 

2

அகவலியை அடிவயிற்றில் ஒரு விரும்பத்தகாத உணர்வென முதலில்  உணர்கிறேன்
அது மெல்லிய ஆனால் வலுவான தொடக்கம்
வலியின் அடுத்த அடி இன்னும் வலுவானதாக இருக்கும் 
ஆனால்  அது எங்கிருந்து எழப்போகிறது என்று ஊகிக்கவே முடியாது 
கைகள் எடையிழக்கின்றனவா 
உள்ளம் நம்பிக்கை இழக்கிறதா 
வாய் கசக்கிறதா
பற்கள் நரநரவென்று கடித்துக் கொள்கின்றனவா 
கண்கள் எரிகின்றனவா 
காது மடல்கள் சுடுகின்றனவா 
என்றெல்லாம் தேடித்தேடி 
ஒரு பெருமூச்சை வெளித்தள்ளும்போது 
எங்கிருந்து என்று தெரியாமல் அவ்வலி பீறிட்டு எழும் 
அது எங்கு அடித்தது என்று ஊகிக்கவே முடியாது 
ஆனால் அடிவாங்கிய பிறகு 
பசிக்காது 
உறக்கம் வராது
ஓரிடத்தில் உட்கார முடியாது 
ரொம்ப தூரம் நடக்கவும் முடியாது
பெரிய கொடுமை 
இறக்கவும் முடியாது
கண்ணகி கத்தியதற்கு 
மனம் வலித்து செத்துப்போன பாண்டியன்தான் 
எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!

Monday 23 August 2021

உண்மைகளின் பெட்டகம்



உனக்கு நினைவிருக்கிறதா 
எத்தனையோ நாட்களுக்கு முன் 
நான் உன்னைப் பார்க்க வந்தேன் 
நான் திரும்பிய பிறகு
என் வரவு உன்னை மகிழ்வித்ததாய்ச் சொன்னாய் 
அன்றுதான் நம் பெட்டகத்தில்
முதல் உண்மை விழுந்தது 
நேற்று கூடலுக்குப் பின் 
'நீ என்னை எவ்வளவு காதலிக்கிறாய்' என்று கேட்டாய் 
நான் எவ்வளவென்று சொன்னேன் 
உன் கண்களில் இருந்து வழிந்த உண்மை நம் பெட்டகத்தில் சென்று தங்கியது 
உனக்குத் தெரிகிறதா
நாம் மகிழ்ந்திருந்த கணங்கள் அனைத்தும் உண்மையானவை 
உண்மையை நம்பாதவன் இப்படிச் சொல்கிறான் என்று ஆச்சரியப்படுகிறாய்தானே? 
கண்மணி 
நேற்றேதான் உணர்ந்தேன் 
உண்மை என்பது வேறெதுவும் இல்லாத மகிழ்ச்சிதான் 
எதையும் திரும்ப எடுக்க முடியாத அந்த உண்மைகளின் பெட்டகத்தை நம் மகிழ்ச்சியால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்
வெகுநாட்களுக்கு முன்பு நிரம்பிய ஒரு பெட்டகத்தின் முன் நின்று தான் உன் பிரார்த்தனைகளை 
தினம் நீ முணுமுணுக்கிறாய்

Saturday 3 July 2021

வெண்முரசு - சொல்வளர்காடு - துகிலுரிதலும் உடலுரிதலும்

வெண்முரசு நாவல் வரிசையில் நீலம் இந்திரநீலம், இமைக்கணம் மூன்றும் மகாபாரதத்தின் மையக் கதைப்போக்கில் இருந்து வெகுவாக விலகியவை. சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகிய நாவல்கள் பாண்டவர்களின் கான்வாழ்க்கையைப் பேசுகின்றன என்றாலும் இம்மூன்று நாவல்களையும் ஒரு வகையில் மகாபாரதத்தின் அரசியல் களத்தில் இருந்து பெரும்பாலும் விலகியவை என்று சொல்லலாம். சொல்வளர்காடு தருமனும் கிராதம் அர்ஜுனனும் மாமலர் பீமனும் தமக்கான மெய்மையை பன்னிரண்டு ஆண்டுகால கான்வாழ்க்கையில் பெறுவதைப் பேசுகின்றன. ஆனால் கிராதம், மாமலர் ஆகிய நாவல்களைவிட சொல்வளர்காடு சிக்கலானது. நாவலுடைய பேசுபொருள் சார்ந்த சிக்கல் என்பதைவிட வெண்முரசு வரிசையில் சொல்வளர்காடு வைக்கப்பட்டிருக்கும் இடம் சார்ந்து இந்நாவலில் ஒரு சிக்கல் உள்ளது. உண்மையில் அச்சிக்கல் ஒரு உப பிரதியாக நாவல் முழுவதுமே பேசப்படுகிறது. இக்கட்டுரையில் அச்சிக்கலின் வழியாக நாவலை அணுகிப் பார்க்கலாம் என எண்ணுகிறேன்.


வெண்முரசு நாவல்கள் ஒவ்வொன்றும் உருவ அளவில் தனி நாவலாகவே வாசிக்கத்தக்கவை. ஒவ்வொரு நாவலிலும் ஒரு திட்டமான கால அளவும் கதைப்போக்கும் உள்ளது. ஆகவே முந்தைய நாவலைப் பற்றிய ஒரு கோட்டுச்சித்திரம் தெரிந்தாலே வெண்முரசின் எந்தவொரு நாவலையும் தனிநாவலாகவே வாசித்துச் செல்லலாம். சொல்வளர்காடு வெண்முரசு நாவல் வரிசையின் பதினொன்றாவது நாவல். பாண்டவர்களின் வனவாழ்வின் தொடக்கம் இந்நாவலில் இடம்பெறுகிறது. பாரதவர்ஷம் என்று அழைக்கப்பட்ட வேதகால இந்தியாவின் வேதக் கல்வி நிலைகளாக உள்ள வெவ்வேறு காடுகளின் வழியே பாண்டவர்களும் திரௌபதியும் கான்வாழ்க்கையை கழிக்கத் தொடங்குவதை இந்நாவல் பேசுகிறது.


இதற்கு முந்தைய நாவலான பன்னிரு படைக்களம் திரௌபதி துகிலுரியப்படுதல் என்ற உச்சத்தில் சென்று முடிகிறது. ஒரு வகையில் மகாபாரதத்திலேயே உச்ச தருணம் அது. அனைத்தும் தலைகீழாகிறது. துரியோதனனின் இணை அரசனாக சூதுக்களத்தில் அமர்ந்த தருமன் அனைத்தும் இழந்த ஒரு நாடிலியாக களத்தை விட்டு எழுகிறான். பேரரசியாக இருந்த திரௌபதி விலைமகளைப் போல சூதுக்களத்தில் ஆடை களையப்படுகிறாள். திரௌபதியை சூதுக்களம் வரை கொண்டு வந்து சேர்க்கும் அரசியல் நிகழ்வுகளை உளநிலைகளை பன்னிரு படைக்களம் நாவல் விரிவாகப் பேசுகிறது. அவற்றை இங்கு விவாதிக்க வேண்டாம். ஆனால் துகிலுறிதல் என்ற செயலை மட்டும் - மகாபாரதத்தின் மூலப்பிரதியில் இச்சம்பவம் கிடையாது என ஜெயமோகன் சொல்கிறார் - எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் ஆடை களையப்படும் செயலை எவ்வாறு விளங்கிக் கொள்வது?


ஆடை என்பது மனித குலம் உருவாக்கிக்கொண்ட பண்பாடுகளின் ஒரு வெளித்தெரியும் சாதனை. ஆடை உடலிச்சையை கட்டுக்குள் வைக்க வேண்டியதையும் சமூகமாகத் திரளும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் நமக்கு உணர்த்துவதாக உள்ளது. எந்தவொரு பண்பாட்டு மீறலும் ஆடையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு ஆண்மையச் சமூகத்தில் ஆண்களை விட பெண்களின் ஆடைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெண்ணின் ஆடை களைந்திருப்பதை சுட்டிக்காட்டும் ஆண் கண்ணியமானவனாக நினைக்கப்படுகிறான். பெண்ணின் ஆடை விலகுவதை விலகிய நினைவுகளை ஆண் நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆடை வறுமையின் செல்வத்தின் பாலியலின் இச்சையின் நாகரிகத்தின் வெளிப்பாடாக உள்ளது.


சுருக்கமாக ஆடை என்பதை பண்பாடு என்றும் ஆடையின்மையை பண்பாட்டின்மை என்றும் வரையறுக்கலாம். (உலகம் முழுவதும் இயங்கும் நிர்வாணக் குறுங்குழுக்களை கழித்துவிட்டுப் பார்த்தால் இன்றும் இவ்வரையறையில் பெரிய மாறுதல்கள் இல்லை)


திரௌபதி ஒரு தேசத்தின் அரசி. அதாவது ஒரு பண்பாட்டின் உச்சப் பிரதிநிதி. அவளுடைய ஆடை களையப்படுவதன் வழியே அப்பண்பாட்டின் மிக இழிந்த ஒரு நிலைக்கு அவள் கொண்டுவரப்படுகிறாள். பாண்டவர்களுக்கும் சூதுக்களத்தில் அதுதான் நிகழ்கிறது எனினும் துகிலுரிதல் என்பது ஒரே நேரத்தில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் மிகப்பெரிய அவமரியாதையை கொண்டு வருகிறது. அதுவொரு தலைகீழாக்கம். ஒரு விபத்துபோல. ஒரு போர், ஒரு மரணம் ஒரு, ஒரு திருவிழா போல. அதுவரையிலான சமூக ஒப்புதலை பாண்டவர்களும் திரௌபதியும் இழக்கின்றனர். இழந்து கானகத்தை நோக்கி அவர்கள் செல்லத் தொடங்குகின்றனர். 


துகிலுரிதல் என்ற ஸ்தூல நிகழ்வு அதுவரையில் அகத்தில் பேணிக்கொண்ட வேடங்களை அனைவரையும் களையும்படிச் செய்கிறது. பாண்டவர்களை என்ன செய்வது என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படுகிறது. சூதுக்கள நிகழ்வுக்காக துரியோதனனை ஏறத்தாழ சாகும்வரை அடிக்கும் பீஷ்மர் பாண்டவர்களுக்கு நாட்டினை திருப்பிக் கொடுக்கலாமா என்ற கேள்வி வரும்போது துரியோதனனை நோக்கியே சாய்கிறார். அஸ்தினாபுரத்தின் பேரரசனாக நின்று முடிவெடுக்க வேண்டிய திருதராஷ்டிரர் வெறும் தந்தையென்றே மாறி நிற்கிறார். விதுரர் திருதராஷ்டிரரால் அவருக்கு அஸ்தினாபுரிக்கு இணையானது என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட அஸ்வதந்தம் என்கிற வைரத்தை பிரிய முடியாதவராக இருக்கிறார். துரியோதனனுக்கு மண்ணாசையும் கர்ணனுக்கு வஞ்சமும் குறைவதே இல்லை.


இதுவரையிலான வெண்முரசு நாவல்கள் எதிலும் இந்நாவலில் இடம்பெறும் கிருஷ்ணன் பாத்திரம் இவ்வளவு நீண்ட தன்னுரையாடலை நிகழ்த்தியது கிடையாது. கிருஷ்ணன் தடுமாறும் கணங்களை முதன்முறையாக சொல்வளர்காடு சித்தரிக்கிறது.


ஆனால் நாவலின் பின்புலமாக அமைவது வேதக் கல்வி நிலைகளில் நடைபெறும் தத்துவ உரையாடல்களும் வேதகால முனிவர்கள் பற்றி சொல்லப்பட்ட கதைகளுமே. யாக்ஞவல்கியர், கார்கி, மைத்ரேயி,உத்தாலகர், ஜனகர் என பெயர்களாக கேள்விப்பட்டிருந்த எண்ணற்ற முனிவர்கள் நாவலில் பாத்திரங்களாக இடம்பெறுகின்றனர். 


ஒருபுறம் பாண்டவர்களின் யாதவர்களின் அரசியல் சூழல். மறுபுறம் தத்துவ விவாதங்கள் என நாவல் நிகழ்கிறது. உலகியல்வாதம், அத்வைதம், சமணம் என பௌத்தத்துக்கு முந்தைய இந்தியாவின் அத்தனை தத்துவ தரப்புகளையும் நாவல் பேசுகிறது. அது வெறும் விவாதமாக இல்லாமல் கருத்துக்களின் வளர்ச்சி நிலையாகவும் வாசிக்கத்தக்கதாக உள்ளது. உதாரணமாக பாண்டவர்கள் முதலில் செல்லும் சுனகக் காட்டிலும் அடுத்ததாகச் செல்லும் துவைதக் காட்டிலும் தருமனை படையெடுத்துச் சென்று நாட்டினை கைப்பற்றவே சொல்கின்றனர். ஆனால் இவ்விரு கல்விநிலையும் தத்துவ ரீதியாக எதிர்தரப்பு. கௌஷீதகம் என்கிற காட்டில் நடந்ததாக சொல்லப்படும் கதைகள் அனைத்துமே மானுட விழைவின் ஆடையற்ற தன்மையை சித்தரிக்கிறவையாகவும் விழைவின் மீது அறம் என்கிற கருத்துநிலை வெற்றி கொள்ளும் தருணங்களாகவும் உள்ளன. 


எட்டாவது காடான மைத்ராணியத்தில் தருமன் சந்திக்கும் அருகப்படிவர் இவ்வாறு கூறுகிறார்.


/அரசே, இப்புவியில் அனைத்து கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில் மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க! அறிவறிந்து அமைக! அருகனருள் அதற்குத் துணை கூடுக!/





இத்தகையதொரு வளர்ச்சியை நாவலில் தத்துவ உரையாடல்களின் உச்சமெனக் கொள்ளலாம். ஆனால் நாவலின் அரசியல் தளமும் தத்துவத் தளமும் இணையும் புள்ளி எது?


தொடக்கத்திலேயே சொன்னது போல இந்நாவல் துகிலுரிதலுக்குப் பிறகு இடம்பெறுகிறது. ஒரு வியாழவட்டம்(பன்னிரண்டு ஆண்டுகள்) என்பதை ஒரு பிறவி என்று கருதலாம் என நாவலில் ஒரு இடத்தில் வருகிறது. பாண்டவர்களும் திரௌபதியும் இறந்து பிறக்கின்றனர். இறப்புக்கு முந்தைய நினைவாக அவர்களுடைய கடந்தகாலம் உள்ளது. அக்கடந்தகாலத்தில் திரௌபதிக்கு நிகழ்ந்தது ஏற்றுக்கொள்ள இயலாதது. அதாவது இறப்பு போன்ற ஒரு நிகழ்வாக அந்த துகிலுறிதலை கற்பனை செய்யலாம். அதற்கு காரணமானவர் தருமன். தருமனின் எத்தனையோ வகையான இரைஞ்சுதல்களுக்கும் தன்னிரக்க பேச்சுகளுக்கும் பிறகு கூட திரௌபதி அவர் மீது கனிவதில்லை. விதுரர் இறப்பின் தருணத்தில் நின்று அவளிடம் இரக்கிறார். அப்போதும் அவள் கனிவதில்லை. ஏறத்தாழ இதுபோன்றதொரு தருணம் கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் இடையே நிகழ்கிறது. கிருஷ்ணன் யாதவ குலங்களுக்கு இடையேயான உட்பூசல்களை வன்முறையைக் கொண்டு தீர்த்த பிறகு பலராமன் கிருஷ்ணனிடமிருந்து முற்றாகவே விலகிச் செல்கிறார். அணுக்கமான உறவுநிலைகளின் நொய்மை ஒருமுறை அறுபட்டதும் அந்த இடத்திலேயே நின்று விடுகிறது. தருமன் இந்த அறுபடலைத்தான் நாவல் முழுக்க ஒட்டவைக்க முயன்று கொண்டே இருக்கிறார். திரௌபதி அவளுக்கு அவ்வளவு தேவைப்படுகிறாள். அவர் திரும்ப கடந்தகாலத்துக்குச் செல்ல விரும்புகிறார். 'அனைத்தும் சீரடைந்துவிடும்' என்று நம்ப விரும்புகிறார்.


இந்தப் பின்னணியிலேயே தருமனுக்கு அத்தனை மெய்மையும் உரைக்கப்படுகிறது. தருமன் அடையும் தெளிவுகளைவிட அவர் அடையும் குழப்பங்களே நாவலில் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றன. திரௌபதியின் உள்ளே எரியும் நெருப்பை அறியும்படி அவரை அருகப்படிவர் பணிக்கிறார்.


யக்ஷ வனத்தில் நச்சுப்பொய்கையில் நீர் அருந்தி இறந்து கிடக்கும் தருமனின் தம்பியரை அவர் யக்ஷனுக்கு அளிக்கும் பதில்களே மீட்கின்றன. அவர் தன்னை உணர்கிறார். அங்கிருந்து கந்தமாதனம் என்கிற எரிமலைக்குச் செல்லும் தருமன் தோல் உருகி வழிந்தவராக பாண்டவர்களிடம் திரும்புகிறார். ஏறத்தாழ இறந்து பிறக்கிறார்.துகில் உரியப்பட்டதால் திரௌபதி உணரும் அழலை தான் எரிந்து தருமன் உணர்கிறார். திரௌபதியின் விலக்கம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் தருமன் அடையும் மெய்மையின் முன் அவளுடைய விலக்கம் சிறுத்துப் போகிறது. 


பீமன் இறுதியாக தருமனிடன் கந்தமாதன மலையில் நீங்கள் கண்டதென்ன என்று கேட்கிறான். தருமன் 'அனலைக் கண்டேன்' என்று சொல்கிறார். 


அனலை பசி என்று மேலும் விளக்குகிறார். இந்த நாவலில் இடம்பெறும் தத்துவ விவாதங்கள் மானுடத்தின் அடிப்படை இச்சைகளையும் கணக்கில் கொள்கின்றன. நாவலின் எந்தவொரு உபகதையிலும் முழுமை நோக்குக்கான விழைவும் அடிப்படை உணர்வுகளான பயமும் காமமும் சுயம் குறித்த அலைகழிதலும் இணையாக ஓடிச்செல்வதை உணர முடியும். 


மனிதர்களை அவர்களுடைய அத்தனை பாவனைகளும் களைந்தபிறகு எஞ்சுவதைக் கொண்டு மட்டுமே சொல்வளர்காடு அணுகிறது. நாவலை வாசிக்க பெருந்தடையாக அமைவது கூர்மையான உளவியல் தருணங்களும் இணையாகச் செல்லும் தத்துவ உரையாடல்களுமே. ஆனால் வாசித்துச் செல்லும்போது ஒரு புள்ளியில் தனிமனித உணர்வுகளும் தத்துவமும் இணைந்து பயணிக்கத் தொடங்குவதைக் காண்கிறோம். முழு நாவலிலும் நெகிழச் செய்யும் ஒரேயொரு தருணம் நாவல் இறுதியில் பீமனிடம் ஏற்படும் மாற்றமே. பீமன் எப்போதும் தருமனை பகடி செய்தபடிதான் இருக்கிறான். நாவலின் இறுதியில் தன்னை மீறிச்சென்று தன் தமையன் ஒரு அறிதலை அடைந்ததும் பீமனால் அதைத் தாள இயலவில்லை. ஒரு வகையில் அது பீமனின் ஆணவம் அழியும் தருணம்கூட. 


இறப்பினை ஒத்த துகிலுறிதல் நிகழ்வால் திரௌபதி தருமனை விலகுவதில் தொடங்கும் நாவல் தருமன் உடலுருகிப் பெற்ற மெய்மையால் தன்னை விலகிவிடுவாரோ என்று பீமன் அஞ்சுவதில் முடிவது நல்லதொரு நகைமுரணன். சொல்லளர்காடு தமிழில் எழுதப்பட்ட முதன்மையான மெய்யியல் நாவல்களில் ஒன்று.


புகைப்பட உதவி: venmurasu.in



Tuesday 22 June 2021

சங்கீதா ஸ்ரீராமின் பசுமைப்புரட்சியின் கதை

சூழியல் தீவிரவாதிகள் என்ற பதத்தை முதன்முறையாக கேட்டபோது நான் அடைந்த அதிர்ச்சி மிக ஆழமானது. சூழியல் குறித்த எந்தவொரு பேச்சினை தொடங்கும்போது நவீனத்துவ மனநிலை கொண்டவர்கள் ஊடேபுகுந்து 'இதெல்லாம் பகற்கனவு', 'மக்கள் நலன்தான் முக்கியம்', 'நாட்டின் வளர்ச்சி தடுக்கப்பட்டுவிடும்' என்ற வாதத்தை முன்வைப்பார்கள். இவர்களுடைய பேச்சில் ஒரு 'நியாயம்' இருப்பதான தோற்றம்கூட ஏற்படும். பசுமைப்புரட்சியின் ஆதரவாளர்களும் இதுபோன்ற வாதங்களை முன்வைக்கிறவர்கள்தான். அதாவது பசுமைப்புரட்சி இங்கு செயல்படுத்தப்படாமல் போயிருந்தால் இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்து ஆடியிருக்கும் என்பது இவர்கள் தரப்பு. சங்கீதா ஸ்ரீராம் இவர்களுக்கு பதில் சொல்லும் விதமாகத்தான் தன்னுடைய 'பசுமைப்புரட்சியின் கதையை' சொல்லத் தொடங்குகிறார். ஆனால் அக்கதை நவீன வேளாண்மை×பாரம்பரிய வேளாண்மை, வன்முறைப் பொருளாதாரம்× சமாதானப்பொருளாதாரம், சர்வாதிகாரத் தொழில்நுட்பம்×ஜனநாயகத் தொழில்நுட்பம், துண்டுபட்ட அறிதல்×முழுமையான அறிதல் என்று பல தளங்களைத் தொட்டு விரிகிறது.


தரவுகள் அடிப்படையில் நிதானமான மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் ஒரு சிறந்த புனைவு அளிக்கும் மனக்கொந்தளிப்பையும் சோர்வையும் அளிக்கிறது.



சங்கீதா ஸ்ரீராம் 



பசுமைப்புரட்சியின் கதையை சொல்லத் தொடங்குவதற்கு முன் பாரம்பரிய இந்திய வேளாண்மையின் தன்மையை விவரிக்கிறார்

. பாரம்பரிய வேளாண்மை பல நூற்றாண்டு காலத் தொடர்ச்சி உடையது. ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்யும்போது இயல்பாகவே அவ்விஷயத்தில் ஒரு 'தேர்ச்சியை'ப் பெற்றுவிடுகிறது. பாரம்பரிய வேளாண்மையில் இந்தியர்கள் பெற்றிருந்த தேர்ச்சியை பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி சிதைத்தது என்பதை தரவுகள் அடிப்படையில் விளக்குகிறார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை ஒட்டுமொத்தமாக சுரண்டித் தின்னப்பட வேண்டிய ஒரு உணவுப்பண்டம் என்பதைத்தாண்டி வேறுதுவுமாகவும் பார்க்கவில்லை என்பது இன்று நிறுவப்பட்டுவிட்ட ஒரு உண்மை. இந்தியாவை ஒரு பசு என்று உருவகித்தால் அதன் காம்புநுனிகளின் வழியே கரக்கப்படும் செல்வம் மட்டுமே ஆங்கிலேயர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் செய்ததாக சொல்லப்படும் அத்தனை 'நலத்திட்டங்களும்' இந்த முலைக்காம்புகளை பராமரிக்க மட்டுமே. பசு குற்றுயிராக மாற்றப்படுவது குறித்த அக்கறை அவர்களுக்கு இருந்திருக்கவே இல்லை. அதனால்தான் அவர்களால் மாவட்டத்தில் உச்ச அதிகாரம் பெற்ற நிர்வாக அதிகாரியை District Collector (மாவட்ட வசூலதிகாரி) என்று குறிப்பிட முடிந்திருக்கிறது. (இன்றும் நாம் அந்தப்பெயரைத்தான் பயன்படுத்துகிறோம்!)


பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்தையும் மையப்படுத்தவே முனைந்தது. அதன் நீள நீளமான நில அளவைகள், தண்டவாளங்கள் என அனைத்தும் தனக்கு கிடைக்க வேண்டிய செல்வம் எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிடுவதற்காக செயல்படுத்தப்பட்ட 'வளர்ச்சித் திட்டங்கள்' தான். அவ்வகையில் இந்திய வேளாண்மையும் முழுமையாக லாப நோக்கில் மட்டுமே அணுகி ஒரு நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியை தங்களுடைய மூர்க்கத்தாலும் அறிவீனத்தாலும் லாப வெறியாலும் மட்டுமே சிதைத்திருக்கின்றனர்.


இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மையின் பொதுக்கூறுகளாக சிலவற்றை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். பயிர்களை வளரச்செய்யும் மேல் மண்ணைப் பாதுகாத்தல். மூடாக்குப் போடுதல், மேல் மண்ணை மர ஏரினைக் கொண்டு மென்மையாக உழுதல், பயிரின் அடிப்பகுதியை மண்ணோடு சேர்த்து உழுதல் போன்ற செயல்கள் வழியாக மேல்மண்ணின் வளத்தை தக்க வைத்துள்ளனர். சுழற்சி முறையில் பயிர் செய்யப்பட்டு வந்ததால் மண்ணிற்குத் தேவையான சத்துகளும் பயிருக்கு தேவையான சத்துகளும் ஒரு சமநிலையை பேணி இருக்கின்றன. வெள்ளம் ஆற்றுக் கரைகளில் இருந்து நிலத்தில் வடியும்போது நிலத்தில் கொண்டுவந்து சேர்க்கப்படும் வண்டல் படிவுகள் மண்ணை மேலும் வளமாக்குகின்றன.


பிரிட்டிஷ்காரர்கள் கைகளுக்கு நிலம் சென்றவுடன் உணவு தானியங்களுக்குப் பதிலாக ஓப்பியம், பருத்தி, அவுரி, ரப்பர்,தேயிலை  போன்ற பணப்பயிர்கள் பெரிய அளவில் பயிர் செய்யப்படுகின்றன. இப்பணப்பயிர்களின் விற்பனை உலக அரசியல் சூழலுடன் தொடர்புடையது என்பதால் இவற்றை பயிர் செய்த விவசாயிகளுடைய வருமானம் நிரந்தரமானதாக இல்லாமல் போகிறது. மேலும் மிகப்பெரிய நிலப்பரப்பில் ஒற்றைப் பயிராக விதைக்கப்படுவதால் மண்ணிலிருந்து சத்துகள் உறிஞ்சப்படுகின்றன. அடுத்ததாக பாசனப்பரப்பை பெறுக்குவதற்காக கட்டப்பட்ட பெரிய அணைகளால் வெள்ளம் ஏற்படும் போது நிகழும் மண் அரிப்பு மண் வளத்தை சீர்குலைக்கிறது. மண் மற்றும் சூழலின் தன்மைக்கு ஏற்றவாறு நிகழ்ந்து கொண்டிருந்த பாரம்பரிய விவசாயம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மையப்படுத்துக் கொள்கைகளால் சீர்குலைந்ததை நூலின் முற்பகுதி விளக்குகிறது. இத்தகைய சீர்குலைவுகளுக்குப் பிறகும்கூட இந்திய மண் இந்தியர்களுக்குத் தேவையான உணவை வழங்கும் திறன் கொண்டதாகவே இருந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி சுதந்திரம் அடையும் வரை இந்தியாவில் ஏற்பட்ட உணவுப்பஞ்சமும் அதனால் நிகழ்ந்த பட்டினிச்சாவுகளும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போர்வெறியாலும் லாப வெறியாலும் நிர்வாகத் திறனின்மையாலும் நிகழ்ந்ததே அன்றி உணவு உற்பத்தி குறைவினால் நடைபெறவில்லை என்று தரவுகளுடன் இந்நூல் பேசுகிறது. 





பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைவிட்டு நீங்கி பதினைந்து ஆண்டுகள் கழித்தே ரசாயன உரம், கலப்பின விதைகள் என்று பசுமைப்புரட்சி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த பதினைந்து ஆண்டு இடைவெளியில் இந்திய அரசு மேற்கொண்டு வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளை மிக விரிவாக நூல் அறிமுகம் செய்கிறது. பசுமைப்புரட்சி இந்தியாவின் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று இங்கு கொண்டுவரப்படவில்லை என்பதையும் பசுமைப்புரட்சிக்கு எதிராக அன்று ஒலித்த குரல்களையும் நூல் பதிவு செய்கிறது. பசுமைப்புரட்சி கொண்டுவரப்பட வேண்டிய அளவுக்கு அன்றைய இந்தியாவில் உணவுப்பஞ்சமும் இருக்கவில்லை என்கிறபோது ரசாயன உரங்கள், அந்நிய விதைகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணியை நூல் விவரிக்கிறது. ஏறக்குறைய ஒரு 'சதிக்கோட்பாட்டினை'ப் போன்ற தன்மையை இவ்விவரிப்பு கொண்டிருந்தாலும் ரிச்சாரியா போன்ற வேளாண் விஞ்ஞானிகள் பசுமைப்புரட்சியை கடுமையாக எதிர்த்து இருக்கின்றனர் என்கிற போது இவ்விவரிப்புகளை நம்பாமல் இருக்க முடியவில்லை.


நவீன வேளாண்மை என்பதே ரசாயனவியலிலிருந்து உருவானது முதன்மையான முரண். அங்கிருந்து நவீன வேளாண்மை எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் பெரும் அழிவினைத் தூண்டுவதாகவே இருந்திருக்கிறது. நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில அபாயங்களை மட்டும் சொல்லலாம். ஆய்வகங்களில் உருவாக்கி அளிக்கப்படும் விதைகளை ஓரிரு முறை அறுவடை செய்த பிறகு அடுத்த விதைப்புக்கு அவற்றிலிருந்து 'விதைநெல்' என எதுவும் கிடைப்பதில்லை. ஒவ்வொரு விதைப்புக்கும் விவசாயி அரசாங்கத்தையே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அளவுக்கதிமாக மண்ணில் கொட்டப்படும் உரத்தால் பயிர்கள் பூச்சிகளை கவரும் அளவுக்கு அதீத 'பச்சையாக' வளர்கின்றன. இப்பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளை தெளிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. பாரம்பரிய வேளாண்மையைவிட  நவீன வேளாண்மைக்கு அதிக அளவு நீர் தேவைப்படுகிறது. வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் நீரில் கலந்துள்ள ரசாயனம் நீர்நிலைகளில் கலந்து மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களால் ஏற்படும் உடல் உபாதைகள் அனைத்தையும் விட பெருந்தீங்கு. இந்தியாவில் பசுமைப்புரட்சி பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்சாபில் இருந்து ராஜஸ்தானுக்கு புற்றுநோய் பிணியாளர்களை அழைத்துச் செல்வதற்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது என்பது பசுமைப்புரட்சியின் உண்மையான முகத்தை நமக்கு காட்டக்கூடியது. ஃபோர்ட் பவுண்டேஷன், ராக்கஃபெல்லர் பவுண்டேஷன் போன்ற ஒருசில தனியார் அமைப்புகள் விஞ்ஞானிகளையும் பட்டதாரிகளையும் விலைக்கு வாங்கி செய்த பிரச்சாரமும் அரசியல்வாதிகளின் லாபவெறியையும் தாண்டி பசுமைப்புரட்சி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எந்த முகாந்திரமும் இருக்கவில்லை என்பதை இந்த நூல் மூலம் அறிய முடிகிறது.


பசுமைப்புரட்சியின் 'தீய விளைவுகளை' பேசுவதை இந்நூல் நோக்கமாகக் கொண்டிருந்தால் நாம் இந்நூலை பசுமைப்புரட்சிக்கு எதிரான ஒரு பிரச்சாரம் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் சங்கீதா ஸ்ரீராம் பசுமைப்புரட்சியை ஒரு ஆழமான வாழ்க்கை நோக்குகளுக்கு இடையேயான மோதலாக சித்தரிக்கிறார். நவீன அறிவியலின் அனைத்தையும் பிளவுபடுத்திப்பார்க்கும் தன்மைக்கும் பாரம்பரிய இந்திய அறிதலின் அனைத்தையும் இணைத்துப் புரிந்து கொள்ளும் தன்மைக்கும் இடையிலான மோதலின் பின்னணியிலேயே பசுமைப்புரட்சி இந்த நூலில் பேசப்படுகிறது. மையப்படுத்தும் சிந்தனைக்கும் பரலாக்க சிந்தனைக்கும் இடையிலான மோதலாகவும் இந்நூலை பார்க்க இயலும். மையப்படுத்துதல் என்பது சிந்தனையளவில் இன்றொரு பழமைவாதம் மட்டுமே. இத்தகைய சூழலில் மையப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சில தனியார் கம்பெனிகளின் லாப நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பசுமைப்புரட்சி போன்ற நவீனத்துவ சிந்தனைகள் பின்னடைவது இயல்பான ஒன்றும்கூட!


அதேநேரம் பாரம்பரிய வேளாண்மை என்பதை ஒரு 'பொற்கால கனவாக' முன்வைக்காமல் தற்போதைய நடைமுறை சாத்தியங்களையும் இந்நூல் பேசுகிறது. வேளாண்மை என்கிற தளத்தைக் கடந்து சூழியல், தத்துவம் என பல தளங்களிலும் சங்கீதா ஸ்ரீராமின் இந்த நூல் முக்கியமான ஒன்று.

Saturday 5 June 2021

மதிப்பிடுதல்

தனிமனிதர்களுக்கு அறவுணர்வு என்று ஏதும் இருப்பதாக நினைக்கிறீர்களா? உண்மையில் ஒவ்வொரு மனிதனையும் நாம் 'தனிமனிதன்' என்று அழைப்பது எவ்வளவு தூரத்துக்குச் சரி? உண்மையில் தனிமனிதர் என்பவர் உலகின் சிறுபான்மை இனம்தான். மற்ற அனைவரும் சராசரிகளே. இதை எழுதிக் கொண்டிருக்கும் நானும் வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் கூட சராசரியில் ஒருவராக இருக்கலாம். சராசரி என்று மனிதர்களை அடையாளப்படுத்துவதைவிட சராசரித்தனம் என்ற ஒன்றை அடையாளப்படுத்துவது இன்னும் சரியானது. ஒவ்வொரு நாளும் நாமொரு சராசரியாகவோ அல்லது சராசரித்தனத்துக்கு எதிராகப் போராடும் தனிமனிதராகவோ நம் செயல்களை வகுத்துக் கொள்கிறோம். நீங்கள் முகநூலுக்குள் செல்லும்போது ஒரு சராசரியாகிறீர்கள். அது வெகுமக்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு வெளி. அங்கு புழங்கும் ஒரு சொல்கூட 'தனிமனித' சிந்தனை வெளிப்பாடு கிடையாது. வீரியம் நிறைந்த ஒவ்வொரு சொல்லும் வெகு மக்கள் ரசனை என்ற படுகுழியில் விழுந்து சாகிறது. சிந்தனையாளனுக்கு முதலில் வெகுமக்கள் ரசனையை தான் மாற்றி அமைப்பதான மயக்கத்தை முகநூல் வெளி ஏற்படுத்துகிறது. ஆனால் அவன் மெல்ல மெல்ல தன் ஆற்றலனைத்தையும் இழந்து ஒரு சராசரியாக ஆகிறான். உண்மையில் சராசரித்தனம் என்று உலகில் ஒன்று இருப்பதை உணராதவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்குப் பிரச்சினையே இல்லை. உண்டு புணர்ந்து கிழண்டு இறந்து போகலாம். இடையிடையே தான் நம்பும் அரசியல் சித்தாந்தங்கள் குடும்பமும் தொழில்தளமும் நட்பு வட்டமும் உருவாக்கும் போலியான உணர்வுநிலைகள் என்று இவற்றில் உழன்றே இவையே சாசுவதம் என்றெண்ணியே வாழ்ந்து முடிக்கலாம். எளிய நிம்மதியான வாழ்க்கை. ஆனால் இப்படி ஒரு எளிய வாழ்க்கை இருப்பது தெரிந்து அதில் வாழ்ந்து கொண்டு எளிமையாக வாழாதவர்களால் உருவாக்கப்பட்ட கனவுநிலைகளை சராசரித்தனத்துக்குள் இழுக்கும் ஒரு கூட்டம் உண்டு. இவர்கள் தங்களுக்கும் ஆபத்தானவர்கள் பிறருக்கும் ஆபத்தை விளைவிப்பவர்கள். கலை விஞ்ஞானம் ஆன்மீகம் என அனைத்திலும் லட்சிய நிலைகளை போதிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் உங்களின் தனிமனித வேட்கையை அழித்து உங்களை சராசரித்தனத்துக்குள்ளும் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஆகவே உங்களை நீங்கள் தனிமனிதனாக இருத்திக் கொள்ள அதீத விழிப்புணர்வு தேவை. ஏன் நம்மை நாம் தனிமனிதனாக இருத்திக்கொள்ள வேண்டும். முதல்வரியை திரும்பப் படியுங்கள். தனிமனிதர்களுக்கு அறவுணர்வு உண்டு. ஆனால் சராசரிகளுக்கு அது இருக்காது. நீங்கள் சராசரிகளில் ஒருவராக மாறும்போது அவர்களின் சொற்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கத் தொடங்குவீர்கள். மனித வாழ்க்கை உன்னதமானது அதில் அன்பு பிரதானமானது என்றெல்லாம் நம்பத் தொடங்குவீர்கள்! அல்லது மனிதர்கள் அனைவருமே சுயநலக்காரர்கள் உலகம் தீங்கானது இரக்கமற்றது போட்டிபோட்டு வெல்லப்பட வேண்டியது என்றெல்லாம் எண்ணுவீர்கள்! ஒவ்வொரு சூழலுக்கும் சிந்தித்து எதிர்வினை ஆற்றுவதற்கு பதிலாக 'சமூகம்' என்று சொல்லப்படும் சராசரிகளின் தொகுப்பில் எழுதப்பட்ட உணர்வுகளை பிரதிபலிப்பீர்கள். ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டவுடன் உடனே பெண்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைப்படுவீர்கள். ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் அடிப்படைவாதம் குறித்து கவலைப்படுவீர்கள். யாராவது தன்னுடைய பணத்தை 'மக்களின் துயர் துடைக்க' அளித்தால் மனிதம் குறித்து விம்முவீர்கள். இந்த சராசரித்தனங்கள் ஒரு சூழலுக்கு எவ்வளவு குறைவாக மனவினை அளிக்க வேண்டுமோ அல்லது எவ்வளவு உண்மையாக மனவினை அளிக்க வேண்டுமோ அதைவிட அதிகமாக ஊதிப்பெருக்கப்பட்ட ஒன்றை உங்களிடம் உற்பத்தி செய்கிறது. உங்களைப்போலவே அழும் சிரிக்கும் விம்மும் இன்னொரு சராசரியைப் பார்த்து 'மானுட சமுத்திரம் நானென்று' கூப்பாடு போடத் தொடங்குவீர்கள். இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி! அறம் என்பது அன்றாடத்தில் இருந்து முடிவு செய்யப்படுவது. அன்றாடத்தின் நிறங்களை நிதானிக்க முடியாத ஒரு சராசரி எப்படி அறத்துடன் வாழ இயலும்? இன்றைய சராசரிகளின் ரசனையைப் பாருங்கள். அவர்களுடைய அதிகப்படியான சாதனையே ஜனநாயகம்தான். அதாவது தங்களுடைய சராசரித்தனத்தை அதிகாரம் செலுத்தும் இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். அதிகாரம் இச்சராசரிக்களுக்கான சொற்களை பிரதிபலிக்கிறது. மனிதாபிமானம், பிரதிநிதித்துவம், மக்கள் நலம்…! எத்தனை எத்தனை சராசரிகளின் சொற்கள். ஆனாலும் இந்த சராசரித்தனங்களின் முதலை வாயிலிருந்து தப்பித்து நம்மை தனிமனிதனாக இருத்திக்கொள்வது ஒரு உயர்ந்த செயல்பாடு மட்டுமல்ல மகிழ்ச்சியான செயலும்கூடதான். ஆகவே நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டியது நான் இன்று எத்தனை பங்கு சராசரியாகவும் எத்தனை பங்கு தனிமனிதனாகவும் இருந்தேன் என்று கேட்டுக்கொள்வதுதான். இப்பத்தியை எழுதும் இக்கணத்தில் நான் சராசரித்தனத்துடன் இல்லை என்பது இன்றுக்கான எனது ஆசுவாசம்.

Thursday 3 June 2021

அற்றுப்போதல்

அறையில் இரண்டு மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தின் முள்துடிப்பு விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண் விழித்தது மாடி அறை என்பதால் வாகனங்களின் எஞ்ஜின் சத்தம் மெல்லக் கேட்டது. மனம் இத்தனை சத்தங்களில் இருந்தும் ஏதோவொன்றை உருவி எடுத்துவிட்டிருந்தது. கொஞ்ச நேரம் எதற்குமே எதிர்வினை புரியவில்லை அது. சில கணங்கள்தான். மீண்டும் அத்தனை கவலைகளும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இக்கவலைகளிலிருந்து தப்பிச்செல்லதான் கீதை நமக்கொரு மார்க்கத்தைச் சொல்கிறது போலிருக்கிறது. 'ஆகவே செயல்புரிக!' ஆனால் ஆனால் செயல் எதுவும் செய்யாத போது எங்கிருந்தது வந்தது இந்த அமைதி? சுற்றி இருக்கும் எதுவும் மாறாத போது உள்ளே இருக்கும் ஒன்று மாறுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் மாறியது. வெகுசில கணங்கள் மட்டும்தான் என்றாலும் மாறியது. மாற்றம் நிகழ்ந்த அந்த கணத்தை தற்போது திரும்ப எழுத இயலவில்லை. எதன்மீதும் கருத்தற்ற நிலை உருவானது என்று சொல்லலாமா? பயமற்ற நிலை என்றுகூட சொல்லலாம். சிந்தனையற்ற நிலை? இதுகூட சரியாகத்தான் தெரிகிறது. மொத்தத்தில் அதுவொரு 'அற்றநிலை'. உயிரற்ற நிலையும்கூடதான். அப்படியெனில் உயிர்தான் உள்ளிருந்து உடற்றும் துன்பமா? பசியா? காமமா? அச்சமா? அப்படியெனில் முக்திநிலை என்பது உயிரற்று போவதுதானா? தற்கொலை செய்து கொள்கிறவர்கள் உடனடியாக முக்தியை எய்துவிடுகிறார்கள் போலிருக்கிறது. தற்கொலையை தவறென்று சொல்வது ஒரு அரசாங்க மனநிலை. ஆமாம் அரசாங்கம் நடப்பதற்கு மனிதர்கள் உயிரோடு இருந்தாக வேண்டும். ஆகவே பெரிய பெரிய பிரச்சாரங்கள் வழியாக அரசாங்கம்தான் இங்கு தற்கொலைகளின் மீதான ஒரு எதிர்ப்புணர்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறது. மற்றபடி முக்தியை விரும்பும் ஒருவன் எப்போதும் சாகலாம். உயிரோடும் இருக்க வேண்டும் முக்தியோடும் இருக்க வேண்டும் என்ற மெய்ஞானப் பேராசைதான் ஞானிகளை கடுமையான சாதகங்களை செய்யவும் லட்சியவாதிகளை பெரிய செயல்களைச் செய்யவும் தூண்டுகிறது. ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி. மெய்ஞானம், லட்சியவாதம், தற்கொலை அனைத்தும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்கின்றன.

Wednesday 2 June 2021

மகிழ்தல்

மாறுதிசை மின்னோட்டம் (alternating current). பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் ஆசிரியர் சொல்லக்கேட்ட இப்பதம் என் வாழ்வின் முதல் தத்துவக் குழப்பத்திற்கு காரணமாக இருந்தது. சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பும்போது மனதிலொரு இன்பக்கொதிப்பு இருக்குமில்லையா? காதலிக்கும் பெண் என்ன செய்தி அனுப்பி இருப்பாள் என்று எழுந்ததும் அலைபேசியைப் பார்ப்பதற்கும் இடையிலான சிலநொடிகளில் விரல்நுனிகளில் எல்லாம் ஒரு குறுகுறுப்பு ஏற்படுமில்லையா? பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தை பிரித்து படிப்பதற்கு முன்பே தொடுகையின் போதே அப்புத்தகத்தின் சாரம் உங்களுள் கடத்தப்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா? பறவைகளின் கீச்சொலி தவிர வேறெந்த ஓசையும் இல்லாத விடியலுக்காக உங்கள் மனம் ஏங்கி இருக்கிறதா? பாம்புகள் சீறும் புனையலோசையை கேட்டு அச்சத்துடன் அதைக்காண சென்றிருக்கிறீர்களா? ஊரிலிருந்து வரும் மனைவியை அழைக்க அவள் வருவதற்கு அரைமணி நேரம் முன்பே பேருந்து நிலையத்திற்கு சென்று நிலையில்லாமல் காத்திருந்து இருக்கிறீர்களா? இனிப்புகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு பயணித்திருக்கிறீர்களா? யோசித்துப் பார்த்தால் மகிழ்ச்சியான கணங்களைவிட அதற்கு முந்தைய கணங்கள்தான் மகிழ்ச்சியை பொதிந்து வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. முதல்வரியில் சொன்ன தத்துவக் குழப்பம் அதுதான். மாறுதிசை மின்னோட்டத்தினை எளிதாக கடத்தலாம். ஆனால் சேமிக்க முடியாது. மாறாக நேர்திசை மின்னோட்டத்தை (Direct current) சேமிப்பது எளிது. ஆனால் கடத்த முடியாது. இயற்கை எவ்வளவு பெரிய சிக்கலைப் பொதிந்து வைத்திருக்கிறது பாருங்கள்! நெய்வேலியிலோ கல்பாக்கத்திலோ உற்பத்தியாகும் நேர்திசை மின்னோட்டம் உற்பத்தியான உடனேயே நம் வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியிலோ மின்விளக்குகளிலோ பிரதிபலித்து விடுகிறது. ஆனால் அதை எங்குமே தேக்க முடியாது. மகிழ்ச்சியும் அப்படித்தான் இருக்கும்போல. உற்பத்தியான கணமே செலவழிந்து விடுகிறது. மகிழ்ச்சிக்கு முந்தைய கணத்திலேயே மகிழ்ச்சியை உணர்ந்து கொள்கிறவன் மகிழ்த்திருக்க வேண்டிய கணத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மகிழ்ச்சியை நடித்துக் கொண்டிருக்கிறானா? உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி என்பதுதான் உலகில் அதிகமுறை சொல்லப்பட்ட பொய்யாக இருக்குமோ? இன்பம் தேக்கி வைக்கப்படக்கூடியதல்ல என்ற எண்ணத்தின் கண்வழியே பார்த்தால் நம் வாழ்க்கை எவ்வளவு அபத்தமாகவும் துக்ககரமானதாகவும் மாறிவிடுகிறது. வங்கிகளில் பணமாக பிள்ளைகளில் நம்பிக்கையாக எவ்வளவு மகிழ்ச்சியை நாம் தேக்கி வைக்கிறோம்! ஆனால் தேக்கும் அந்நொடியே அது இன்மைக்குப் போய்விடுகிறது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இரண்டு மின்தகடுகளுக்கு இடையே ஒரு காந்தம் சுழலும்போது மாறுதிசை மின்னோட்டம் உற்பத்தி ஆகிவிடும். நம்முடைய தகடுகளுக்கு இடையே நம் காந்தம் எப்போது சுழலும் என்று நம்மால் கண்டறியவே முடியாது. லட்சியவாதிகள் 'செயல்வழியிலான மகிழ்ச்சி' என்ற போலியான செயற்கையான மகிழ்ச்சி உற்பத்தி நிலையை பரிந்துரைப்பார்கள். ஏமாந்து விடாதீர்கள்! எப்படி உங்களால் மகிழ்ச்சியை தேக்க முடியாதோ அதுபோல அதை உங்களால் உற்பத்தி செய்யவும் முடியாது. எது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. மிக நெருக்கமான ஒருவரின் இறப்பு உங்களுக்கு அளவிட முடியாத ஆனந்தத்தை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே பழுதுபட்ட மின் இணைப்பு கொண்ட ஈரமான வீட்டில் நடப்பது போல மகிழ்ச்சியிடம் செல்லுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானலும் மகிழ்ச்சியால் தாக்கப்பட்டு கொல்லப்படலாம். 

Tuesday 1 June 2021

நினைக்கப்படுதல்

குறிப்பிட்டுச் சொல்லும்படி நேற்று ஒன்றும் நடக்கவில்லை. வேலைபோய்விடுமோ, கொரோனா தொற்று வந்து நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவோமோ, பெரிய அளவில் பண நஷ்டம் வந்துவிடுமோ என்ற வழக்கமான பயங்களைத்தவிர வேறெதுவும் இல்லாத இன்னொரு நாள். யோசித்துப் பார்த்தால் என் நாட்களின் பெரும்பகுதியை இந்த பயங்கள்தான் ஆக்கிரமித்து இருக்கின்றன. என்று தொடங்கியது இந்த பயம்? பள்ளியில் படிக்கும் போது? அதற்கு முன்பே கூட இருக்கலாம். யாரும் அவமானப்படுத்திவிடக்கூடாது என்பதுதான் இந்த பயங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருக்கும்போல. எல்லோருக்குள்ளும் இந்த பயம் இருக்கிறது என்ற அறிதல் இன்றைக்கான மகிழ்ச்சியான செய்தி. நாம் எவ்வாறு நினைக்கப்பட வேண்டும் என்று ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேரும் விரும்புகிறோம். அதற்கெனவே உழைக்கிறோம். விஞ்ஞானிகளும் கலைஞர்களும் மட்டுமல்ல யோகிகளும் ஞானிகளும்கூட மரியாதையாக எதிர்காலத்தில் நினைக்கப்பட வேண்டும் என்றுதான் உழைக்கிறார்கள். உயிரின் அடிப்படை விழைவு, செயல்புரியும் இச்சை என்றெல்லாம் ஏதேதோ பெயர் கொடுத்து தாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறாக நினைக்கப்பட வேண்டும் என்பது குறித்த பதற்றத்தை மறைத்துக் கொள்கிறார்கள். எதிர்காலத்தில் தன் செயல்களின் மேன்மையை யாரோ ஒருவன் வந்து கண்டுபிடிப்பான் என்று ஆழ்மனதில் ரகசிய இச்சை இல்லாத ஒரு லட்சியவாதியையும் நீங்கள் பார்க்க முடியாது. எதிர்காலத்தில் எவ்வாறு நினைக்கப்படவிருக்கிறோம் என்ற இச்சை கொண்டோர்தான் சிலைகளாகவும் கருத்துகளாகவும் மெய்ஞானமாகவும் வரலாறாகவும் நமக்குத் தெரிகின்றனர். வெகுமக்கள் வரலாறு என்றெல்லாம் தற்போது பேசுகின்றனர். இப்பேச்சின் வழியாக வெகுமக்கள் தாங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு நினைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள் என்பதைத்தான் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆகவே நாமனைவருமே நினைக்கப்பட விரும்புகிறோம். நினைக்கப்படும் அளவுக்கு பெருஞ்செயல்கள் எதையும் செய்யாதபோது - உதாரணமாக காந்தி, ஹிட்லர், ஜோசஃப் ஸ்டாலின், நெல்சன் மண்டேலா - வெகுமக்கள் வரலாறு, எளிய மக்களின் அபிலாஷைகள் என்றெல்லாம் பிதற்றத் தொடங்குகிறோம். இந்த இச்சையின் அடிப்படையில் நம் அனைவரையுமே ஒரு ஏணிப்படியில் கொண்டு வந்து நிறுத்திவிட முடியும். வரலாறு எவ்வாறு மனிதர்களை நினைவில் கொள்கிறது என்கிற சூட்சுமம் நமக்கு எவ்வளவு தெரியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படிகள் அமைகின்றன. அரசியல்வாதிகள்,சினிமாப் பிரபலங்கள் கடைசிப்படியில் நிற்கின்றனர். புகழும் அதிகாரமும் வரலாற்றில் கொஞ்சகாலம் மட்டுமே தாக்குப் பிடிப்பவை. சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எல்லாம் அடுத்தபடியிலும் லட்சியவாதிகள் அதற்கு அடுத்த படியிலும் மெய்ஞானிகள் எல்லோருக்கும் மேலே உள்ள படியிலும் நிற்கின்றனர். ஆகவே வரலாற்றின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிந்தனை என்னளவுக்கே உலகில் உள்ளோர் அனைவரும் இழிந்த பயங்கள் கொண்டவர்கள் என்ற என் எண்ணத்தை உறுதிபடுத்துகிறது அல்லது இழிந்த பயங்கள் கொண்ட அனைவரும் அத்தனை உன்னதர்களுக்கும் இணையானவர்களே என்ற ஆசுவாசத்தை எனக்கு அளிக்கிறது. மானுடம் என்பது அதன் அஞ்சும் தன்மையால் சமத்துவத்தை எய்துகிறது. வாழ்க மானுட சமத்துவம்!

Monday 31 May 2021

உண்ணப்படுதல்

எனக்கும் வரலாற்றுக்கும் ஏதும் தொடர்பிருக்கிறதா? வரலாறு ஒரு பக்கமாகவும் நான் இன்னொரு பக்கமாகவும் நடந்து போய்கொண்டிருக்கிறோம். அது நடப்பது அரசப்பாதை. அரசனின் யானை போல கம்பீரமாக நடந்து செல்கிறது. நானோ ஒரு குறுகிய பழுதடைந்த சாலையில் அந்த யானை என்னைத் திரும்பிப் பார்க்காதா என்ற ஏக்கத்துடன் அதைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறேன். வரலாற்றுக்கு அதை நீங்கள் பார்த்த கணமே உங்களை உறிஞ்சத் தொடங்கும் ஆற்றலுண்டு. நான் அதனை கவனிக்காமல் என் குறுகிய பாதையில் நிம்மதியாக வாழ்ந்த நாட்கள் ஏக்கந்தரும் நினைவுகளாக என்னுள் எஞ்சிக் கிடக்கின்றன. அப்போது என் நாட்கள் என்னிடமிருந்தன. நான் கற்பித்து வைத்திருந்த வாழ்க்கைக்கான குறுகிய அர்த்தம் என்னை மகிழ்ச்சியும் கோபமும் கொண்டவனாக வைத்திருந்தது. ஆனால் நான் வரலாற்றை என்று  திரும்பிப் பார்க்கத் தொடங்கினேனோ அன்றே என் வாழ்க்கை குறையத் தொடங்கிவிட்டது. என் பாத்திரத்தில் துளை விழுந்துவிட்டது. என் நாட்கள் ஒழுகி ஒழுகிச் சென்று வரலாற்றில் சேகரமாகத் தொடங்கிவிட்டன. என்னிடமிருப்பதெல்லாம் இந்த கணம் மட்டும்தான். என்னுடைய கடந்துபோன நாட்களை எல்லாம் இணைப்பாதையில் நடக்கும் அந்த யானை திருடிக்கொண்டுவிட்டது. ஆனால் ஒரு மகிழ்ச்சியான செய்தி. இன்று அந்த யானையை இன்னும் கூர்மையாகப் பார்த்தேன். அது தன்னைச் சுற்றி எண்ணற்ற நுண்துளைகளை கொண்டிருக்கிறது. ஒவ்வொரு துளையின் வழியாகவும் அது உறிஞ்சுகிறது. என்னைப் போன்ற எண்ணிலடங்கா சிறியவர்களை உண்டு கொழுத்து தான் அது முன்னேறுகிறது. நான் முடிவு செய்து விட்டேன். என்னுடைய இன்னொரு நாளை நான் வரலாற்றுக்கு தின்னக்கொடுக்கமாட்டேன்.

Monday 1 March 2021

2020ல் எழுதிய கட்டுரைகள்

2020ல் இணைய இதழ்களிலும் என் தளத்திலும் வெளியான நான் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள் 


கென் லியூ.


https://aroo.space/2020/01/02/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2-%e0%ae%95%e0%af%86/


கிரிதரன் 


https://www.jeyamohan.in/129575/#.XjojB1PhU0M


யுவன் சந்திரசேகர் 


https://www.olaichuvadi.in/article/%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81/


பெருமாள் முருகன் 


http://kanali.in/poonaachi-allathu-oru-vellatin-kathai-review/


பொலான்யோ 


https://solvanam.com/2020/06/28/2666-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/


டெட் சியாங் 


https://aroo.space/2020/07/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86/


ஜெயமோகன் 


https://sureshezhuthu.blogspot.com/2020/07/blog-post.html?m=1


எம் எஸ் எஸ் பாண்டியன் 


https://sureshezhuthu.blogspot.com/2020/07/blog-post_21.html?m=1


தி. ஜானகிராமன் 


http://kanali.in/thi-janakiraman-kurunovelkal/


தெளிவத்தை ஜோசப் 


https://akazhonline.com/?p=2628


சக்கரவர்த்தி 


https://akazhonline.com/?p=2806


அ கா பெருமாள் 


https://www.jeyamohan.in/139870/


இமயம் 


http://vallinam.com.my/version2/?p=7217


செல்வம் அருளானந்தம் 


https://akazhonline.com/?p=2925


தல்ஸ்தோய் 


https://tamizhini.in/2020/11/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/