Thursday 6 April 2023

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி - சிவக்குமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ,சதீஷ் வாசுதேவனின் கத்தலே, இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற ஆக்கங்கள் தரவுகளை மையமாகக் கொண்டு தமிழில் இதற்கு முன்பு வெளியான ஆக்கங்கள். இத்தகைய படைப்புகளால் சமூகத்தில் உடனடியாக ஒரு பேச்சினை உருவாக்க முடிகிறது என்பது உண்மைதான். விளிம்பு நிலை மக்களின் பாடுகள் பேசுபொருளாகும்போது அக்குரலுக்கு சமூகம் செவிசாய்க்க வேண்டிய ஒரு அறரீதியான கட்டாயத்தை இப்படைப்புகள் உருவாக்குகின்றன. அதில் தவறென்று கொள்ள ஏதுமில்லை. ஆனால் ஒரு படைப்பு சமகாலத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இத்தகைய படைப்புகளை அந்த அநீதி இழைக்கப்பட்ட மக்கள் என்னவாகப்‌ பார்க்கின்றனர்? என்ற வகையிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டு இப்படைப்புகளை அணுகுவது ஒரு எல்லை. மறு எல்லையில் கலாப்பூர்வமாக இவற்றின் பெறுமதி என்னவென்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.


புனைவெழுத்து , புனைவு வாசிப்பு என்ற இரண்டுமே ஞாபகம் என்கிற விஷயத்தை நம்பி இருப்பதாக நான் கருதுகிறேன். சமகாலத்தின் மீது நமக்கு அக்கறை இருப்பதாகவும் சமகாலத்தின் அநீதிகள் ஒவ்வொன்றும் நம்மை வந்து பாதிப்பதாகவும் நாம் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய உண்மையான அக்கறை நம் நினைவில் எது தங்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமே. வீட்டு வாசலில் செருப்பை கழட்டிய பிறகு அதோடு கழன்று விழாத ஞாபகங்களாக எவையெல்லாம் நீடிக்கின்றனவோ அது சார்ந்து மட்டுமே உண்மையில் நாம் அக்கறை கொள்கிறோம். தரவுகள் சார்ந்து நிற்கக்கூடிய படைப்புகளின் பலவீனம் அத்தகைய ஆழமான ஞாபகங்களை வாசகனிடம் உருவாக்க முடியாமல் போவதுதான். கையில் தரவுகள் இருக்கும் உற்சாகத்தில் ஒரு பலவீனமான கற்பனைச் சரடில் அத்தகைய தரவுகளைக் கோர்த்து புனைவு வெளியை கட்டமைக்க முடிகிறது. ஆனால் அது வாசகனில் எந்தவொரு நிரந்தர விளைவையும் உருவாக்க முடியாது. இலக்கிய வடிவங்கள், படைப்பின் வெளிப்பாட்டு உத்தி, யதார்த்தவாதம்,கற்பனாவாதம் போன்ற பேச்சுகள் எல்லாம் படைப்பு வாசகனில் ஏதாவது உணர்ச்சியை உருவாக்குகிறதா என்று பார்ப்பதற்காகவே. எழுத்தாளர் தான் உணர்ந்ததை எளிய இரக்கவுணர்ச்சி சார்ந்து அல்லாமல் அனுபவங்கள் தனக்குக் கொடுத்த அதிர்ச்சி, தொந்தரவு அல்லது தொந்தரவின்மை போன்றவை சார்ந்து விவரித்துச் செல்லும்போது ஒரு படைப்பின் அர்த்த உலகத்திற்குள் வாசகரால் எளிதாகப் புழங்க முடிகிறது. நாவல் வடிவத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர் உருவாக்கும் அர்த்த உலகம் மிகுந்த வலிமை வாய்ந்ததாக பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். தரவுகள் சார்ந்து உருவாகும் படைப்புகள் இந்த நாவலின் புறவுலகத்தை வலுவாக கட்டமைத்துவிடுகின்றன. ஆனால் வாசிப்பு நிலையில் அப்படைப்பு உருவாக்கும் அர்த்த உலகம் என்ன என்று பார்க்கும்போது பல படைப்புகள் ஏமாற்றம் தருகிறவையாகவே உள்ளன. சிவகுமார் முத்தய்யாவின் குரவை நாவல் வலுவான அர்த்த உலகத்தை கட்டமைத்திருப்பது அதன் முதன்மையான கலப்பூர்வமான வெற்றி என்று சொல்ல வேண்டும்.







சிவகுமார் முத்தய்யா கீழ்தஞ்சை மாவட்டத்தின் விவசாயப் பின்புலம் கொண்டு இயங்கும் மக்களின் பாடுகளை தொடர்ச்சியாக எழுதிவரும் படைப்பாளி. ஆனால் குரவை நாவல் விவசாயக் குடிகள் பற்றியதல்ல. கலைஞர்கள் பற்றியது. குரவையாட்டம் ஆடுகிறவர்கள், குறவன் குறத்தி வேடங்கட்டி ஆடுகிறவர்கள், தவில் கலைஞர்கள், பறையிசைப்பவர்கள், நாதஸ்வர வித்வான்கள், பறை தயாரிப்பவர்கள் என கீழ் தஞ்சை நிலம் வேறொரு பின்னணியில் இருந்து இந்நாவலில் அணுகப்படுகிறது. நாவலின் காலம் இன்றிலிருந்து கால் நுற்றாண்டுக்கு முன்பு. உலகமயமாக்கலும் நவீன கல்வியும் உருவாக்கி இருக்கும் அபரிமிதமான வளர்ச்சியின் ரேகைகள் மெல்லியதாகத் தென்படத் தொடங்கும் காலத்தை நாவல் தொட்டுக் காட்டுகிறது. மழையின்மை, பெரிய புயல்கள், நீர்வரத்து குறைந்து போவது போன்ற நாட்களைத் தவிர பிற நாட்களில் விவசாயக் குடிகளின் வாழ்க்கை ஏறத்தாழ 'ஒரே' தன்மையைத்தான் கொண்டிருக்கும். திருவிழாக்களும் விவசாயச் சமூகங்களின் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கிறது. தை மாதத்தின் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு நடைபெறும் ஆனி,ஆடி மாதங்கள் வரை விவசாய வேலைகள் சற்று குறைந்த காலம். ஏறத்தாழ எல்லாப் பெருந்திருவிழாக்களும் இக்காலத்திலேயே நடைபெறும். இந்தத் திருவிழாக்களில் பங்கு பெறும் கலைஞர்களின் வாழ்க்கை வழியாக மொத்த கீழ்தஞ்சைப் பகுதியின் பண்பாட்டையும் சிவகுமார் முத்தய்யா இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறார். அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.


தப்படிச்சான் மூலை தஞ்சையில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கும் ஒரு பகுதியாக நாவலில் சொல்லப்படுகிறது. இன்னுமே கூட தஞ்சையின் கீழவாசல் பகுதியில் இவர்களைக் காணலாம். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஆப்பரக்குடி நாட்டுப்புற கலைஞர்கள் வசிக்கும் ஒரு ஊர். கலியமூர்த்தி, நித்யா,பேபி,நாகராசன்,முத்துப்பட்டன், முருகேசன், குமரேசன்,வசந்தா என எண்ணற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் கதைகள் நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இடம்பெறுகின்றன. அவர்களுடைய வாழ்க்கை சொல்லப்படும் விதத்தினைக் கொண்டும் சிவகுமார் முத்தய்யா இந்நாவலுக்கு எழுதி இருக்கும் முன்னுரையை வைத்தும் நாவல் பெரும்பாலும் நேரடித் தரவுகள் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. அத்தரவுகளை சிவகுமார் முத்தய்யா அலுப்பான மொழிநடையில் நாவல் முழுக்க தூவிவிட்டுச் செல்லாமல் தரவுகளைக் கொண்டு எதைப் பேச வேண்டுமோ அதை மிகச் சரியாகவே பேசி இருக்கிறார்.


ஸ்திரமான வருமானமும் நிலையான உறவுகளும் அற்ற வாழ்க்கை அமைந்தவர்களாக இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர். கலைக்கு மனிதனை பீடிக்கும் தன்மை உண்டு. ஆட்டக்காரிகளாக வரும் பெண்கள் ஆடுவதால் சந்திக்கும் இன்னல்களைத் தாண்டி ஆடுவதின் வழியாக உருவாகும் பெருமிதத்திற்காவும் நிறைவுக்காகவுமே அந்த வாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். மரியாதையற்ற வாழ்க்கையில் இருந்து அடுத்த தலைமுறையாவது தப்பிப்போக வைத்துவிடும் எண்ணமே அவர்களுடைய வாழ்க்கையை உந்துகிறது. பேபி தன் மகள் ரேகாவை ஆட்டக்கலையில் இருந்து தப்புவிக்க நினைக்கிறாள். கலியமூர்த்தி தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தப்பி தன் குழந்தைகள் மனைவியுடன் வாழவே முயல்கிறான். ஆனால்  'குடும்ப வாழ்க்கை' ஒரு கனவாகவே உள்ளது. குமரேசன் போல திட்டவட்டமாக சுயநலத்துடன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்கள் நீங்கலாக மற்ற அனைவரும் நிலையற்றே அலைகின்றனர். சரியாக அமைந்த குடும்பத்தை தன் சந்தேகத்தால் சீர்குலைத்துவிட்டு சாகும்வரை அதற்கென வேதனைப்படும் நாகராசன் போன்றவர்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். வறுமையான வாழ்க்கையின் காரணமாக ஆட்டக்காரியாகும் சாந்தி,சித்ரா போன்ற பெண்களும் பேசப்படுகின்றனர். பபூன் வேஷம் போடும் குள்ளன் ஆல்பர்ட்டுக்கு பெண் பார்க்கச் செல்லும் இடம் நாவலில் முக்கியமான ஒன்று. ஆட்டக்காரிகளை காமத்துடன் அணுகுகிறவர்கள், எந்நேரமும் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும் பாலியல் தொல்லைகள்,குடும்பத்தைக் கெடுப்பவர்கள் என்று குடும்பப் பெண்களிடமிருந்து அவர்கள் பெறும் வசை எல்லாமும் மிகுந்த அக்கறையுடன் நாவலில் பேசப்படுகிறது. 





காமம் சார்ந்த விவரிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அத்தகைய இடங்களை சிவகுமார் முத்தய்யா கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். காமத்தைக் கடந்து அவ்வுறகளால் ஏற்படும் அன்றாடப் பாடுகளையும் சிக்கல்களையும் பேசுவதிலேயே சிவகுமார் முத்தய்யா அக்கறை கொள்கிறார். உதாரணமாக கலியமூர்த்தி வசந்தாவிற்கு இடையேயான உறவைச் சொல்லலாம். பேரழகியான வசந்தாவை திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரம் ஒன்றிலிருந்து கலியமூர்த்தி காப்பாற்றுகிறான். கலியமூர்த்தி தவில் கலைஞன். இருவருக்கும் இடையேயான உறவு வளர்கிறது. ஆனால் வசந்தா அவனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள். (வசந்தா மட்டுமின்றி ஆடும் பெண்கள் பலரிடமும் திருமணத்துக்கு எதிரான இந்த மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அப்படி எண்ண காரணம் தங்களுடைய சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதா அல்லது 'பத்தினி' உருவகத்தினால் ஏற்படும் அழுத்தமா என்பது நாவலில் சொல்லப்படுவதில்லை.) கலியமூர்த்திக்கு மணமாகிறது. கலியமூர்த்தியின் முந்தைய வாழ்க்கை அவன் மனைவி பாப்பாவுக்குத் தெரிகிறது. அந்தப் பழைய உறவினை அறுத்தும்விடாமல் வளரவும் விடாமல் பாப்பா தன் குடும்பத்தை நடத்திச் செல்கிறாள். வசந்தாவின் வாழ்க்கை வேறு விதமாக நகர்கிறது. அவளுடைய ஆட்டத்தைப் பார்க்க வந்த சண்முகம் குடும்பத்தை விட்டு அவளுடனேயே தங்கி விடுகிறார். அவருடைய கடைசி காலத்தில் வசந்தாவே அவருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்கிறாள். அதற்கு கலியமூர்த்தியும் உதவுகிறான்! அப்படி அவள் உதவி கேட்டு வரும் சித்திரம் நாவலில் இடம்பெறுகிறது. கலியமூர்த்தி தன் மனைவியிடம் வசந்தாவை உதவி கேட்கும்படிச் சொல்கிறான்.


/ கலியமூர்த்தி தவிலால் தட்டி டும்...டும்.. என அடித்து ஓசையெழுப்பி கேட்கச் சொல்லி சமிக்ஞை செய்தான். தவில் வாசிப்பவர்களுக்தும் ஆடுபவர்களுக்குமான ரகசிய மொழி அது. வாசிப்பவர்கள் தங்களுக்கு சோர்வு ஏற்படும் போது குறைவான சத்தத்தை எழுப்பினால் ஆடுபவர்கள் அதைப் புரிந்து கொண்டு கூட்டத்தில் இருந்து எவ்வளவு விசில் சத்தம் வந்தாலும் வேகமெடுத்து ஆடமாட்டார்கள். அதுபோல ஆடுபவர்கள் ஆடமுடியாது கால் வலிக்கும்போது காலில் அணிந்திருக்கும் சலங்கையை தரையில் வைத்து இரண்டு முறை குலுக்கினால் அடியின் வேகத்தை குறைப்பது தொடங்கி சாப்பிடுவது,சம்பளம் அதிகம் கேட்பது வரை பல சங்கதிகள் அதில் உண்டு/


இது மாதிரியான பல நுண்ணிய தருணங்களை நாவலில் குறிப்பிட முடியும். திடீரெனக் கிடைக்கும் புகழ், புகழ்வெறியில் எடுக்கும் தவறான முடிவுகள் எப்படியெல்லாம் இக்கலைஞர்களின் வாழ்க்கையை அலைகழிக்கின்றன என்பதைத் தாண்டி சொல்லப்படாத கோணமாக சமூகம் இவர்களைப் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களை என்னவாகப் பார்க்கிறது என்பதும் வாசிப்பின் வழி உணரத்தக்கதாக உள்ளது. தவில் கலைஞர்களுக்கு இடையேயான ஆசிரியர் மாணவர் உறவு, போட்டியில் நடைபெறும் கொலைகள், அப்பாவின் தொழிலான பறையிசையை கைக்கொள்ளும் செவத்தகன்னி என்று முடிவற்றது என்று தோன்றும் பாத்திரங்களும் கோணங்களும் நாவலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன.


பல இடங்களில் நாவலில் பாத்திரங்களின் பெயர்களே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்திரன் என்று வரவேண்டிய இடத்தில் குமரேசனின் பெயர் வருகிறது. இதுபோன்ற குறைகளை அடுத்தடுத்த பதிப்புகளில் கவனமாகக் களைவது நாவல் வாசிப்பு அனுபவத்தை மேலும் நிறைவானதாக மாற்றும். மயில் ராவணனின் கொலையும் அதைச் சந்திரன் 'துப்பறிந்து' தப்படிச்சான் மூலைக்குச் செல்வதும் நம்பகத் தன்மையுடன் சொல்லப்பட்டிருந்தாலும் நாவலின் பொதுவான உணர்வு நிலையில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.


முன்பின்னாக நகர்ந்து பல்வேறு கலைஞர்கள் வழியாக நகரும் நாவலின் உணர்வுத்தளத்தில் ஒரு அமைதி நிலவுகிறது. எங்குமே போலியான சீற்றமோ கோபமோ வெளிப்படுவதில்லை. மிகையான காமமோ வன்முறையோ நாவலில் இல்லை. முன்பின்னாக நகர்ந்து பாத்திரங்களின் போக்கு காண்பிக்கப்படுவதாலேயே  எங்குமே செயற்கையான அதிர்ச்சிகளும் திருப்பங்களும் இல்லை. சந்திரன்,செவத்தகன்னி, மயில் ராவணன் என்று தஞ்சையின் வேறு வேறு ஊர்களில் வாழ்கிறவர்கள்கூட ஏதோவொரு வகையில் தப்படிச்சான் மூலையுடன் தொடர்புடையவர்களாக மாறுகிறார்கள். தொடர்ச்சியான வாழ்க்கைச் சித்தரிப்புகள் வழியாக சிவகுமார் முத்தய்யா தப்படிச்சான் மூலையை ஒரு பெரிய தொன்ம நிலமாக மாற்றிக் காட்டி விடுகிறார்! ஆனால் அங்கு மாயங்களோ தெய்வங்களோ பிசாசுகளோ இல்லை. முழுக்க முழுக்க கலைஞர்களும் அவர்களின் உற்சாகமும் சுதந்திரமும் வலியும் நிறைந்த வாழ்க்கைப்பாடுகளே உள்ளன. இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த வாழ்க்கைச் சூழல் ஒரு நாவலில் உருவாகி வருவது அபூர்வமான ஒன்று. அந்த வகையில் தப்படிச்சான் மூலை தமிழ் நாவல் பரப்பு பேசியிருக்கும் முக்கியமான களங்களில் ஒன்று.


-சுரேஷ் பிரதீப்.


சிவகுமார் முத்தய்யா தமிழ் விக்கி


https://tamil.wiki/wiki/File:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE.png













Saturday 11 March 2023

புதுமைப்பித்தன் எனும் அறிவன் - காணொளி


புதுமைப்பித்தன் படைப்புகள் குறித்து எழுபத்தைந்து நிமிடங்கள் இடைவிடாமல் பேசி இருக்கிறேன். என் உரைகளில் இதுவே நீண்டது. ஆனால் திரும்ப கேட்டுப் பார்க்கும்போது எந்தவிதமான நீட்டி முழக்குதல்களும் இல்லாமல் நவீன இலக்கியம் எந்த மொழியை எனக்குக் கொடுத்திருக்கிறதோ அதே மொழியில் ‌செறிவாகத்தான் பேசி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. இந்த உரையை வழக்கமான பேச்சாளர்கள் போல இழுத்து நீட்டினால் நான்கு மணிநேரம்வரும். ஆகவே உரையை சற்று கவனமுடன் கேட்கும்படி நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். ஏறத்தாழ இருபது நாட்கள் புதுமைப்பித்தன் குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் வாசித்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். இன்று இவ்வுரையை பதிவு செய்து முடித்தவுடன் ஒரு கடினமான தேர்வை எழுதி முடித்த விடுதலை உணர்வும் வெறுமையும் மனதை நிரப்புகின்றன. இவ்வுரையின் பெரும்பகுதியை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன்.‌ புதுமைப்பித்தனின் பிற்கால கதைகள் பற்றி மட்டும் எழுத நேரமில்லாததால் குறிப்புகளாக எடுத்து வைத்திருக்கிறேன்.‌ விரைவில் அவற்றையும் விரிவாக்கி எழுதி முழுக் கட்டுரையைப் பகிர்கிறேன். ஒரு மேதையை முழுதாக வாசிக்கும்போது அவருடைய உணர்ச்சிகளிலும் மேதைமையிலும் தோய்ந்திருக்கும் போது தகப்பன் தோளேறிய குழந்தைபோல அவரைவிட சில செண்டிமீட்டர்கள் கூடுதலாக சிலவற்றை தரிசித்து விடுகிறோம்.‌ அவ்வாறாக நானடைந்த சில புரிதல்களை இந்தக் காணொளியில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இக்காணொளி பரவலான கவனத்தைப் பெற வேண்டும் என்றும் புதுமைப்பித்தன் பற்றிய வாசிப்பு இன்னும் விரிவடைய வேண்டும் என்றும் விரும்புகிறேன். நண்பர்கள் இவ்வுரை குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டால்- உரையை பகிர்ந்து கொண்டாலும் - மகிழ்வேன். உரையின் சுட்டி முதல் கீழே


https://youtu.be/-Fxkz6W9Ex8


#tamilliterarytalks

Sunday 19 February 2023

இலக்கிய முன்னோடிகள் என்னும் 'தேறாத கேஸ்கள்'



அழிசி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் 'சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்', 'புதுமையும் பித்தமும் (ஆளுமை-படைப்பு-விவாதம்)' என்ற இரு நூல்களும் நவீனத் தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் என்ற இரு வகையிலும் முக்கியமான நூல்கள். இவ்விரு நூல்களின் ஆசிரியரும் க.நா.சுப்ரமண்யம்தான் என்றாலும் இந்த நூல்கள் க.நா.சுவால் வெளியிடப்படவில்லை. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் நூலில் எழுத்து இதழில் 1959ஆம் ஆண்டும் அதைத் தொடர்ந்த சில ஆண்டுகளிலும் தமிழின் சிறந்த சிறுகதைகளை தொகுப்பது என்றால் தன்னுடைய எதிர்பார்ப்பு எத்தகையதாக இருக்கும் என்று க.நா.சு எழுதிய கட்டுரைகளும் அதற்கான எதிர்வினைகளும் க.நா.சுவால் முன்வைக்கப்பட்ட எட்டு சிறுகதைகளும்(மௌனி, புதுமைப்பித்தன்,கு.ப.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி ஆகியோரின் தலா இரண்டு சிறுகதைகள்) தொகுக்கப்பட்டிருக்கின்றன. புதுமையும் பித்தமும் என்ற நூலில் க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள்,க.நா.சு புதுமைப்பித்தன் பற்றி எழுதிய சில கட்டுரைகள் (புதுமையும் பித்தமும் என்ற மிக முக்கியமான கட்டுரை உட்பட) மற்றும் ஒரு கவிதை ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளன.( இவ்விரு நூல்களையும் முறையே பாலன் , பாலு என்ற இருவர் தொகுத்திருக்கின்றனர். இவ்விரு மர்ம நபர்களும் நண்பர் ஶ்ரீனிவாச கோபாலனின் புனைப்பெயர்கள் என்று கொள்வதில் தவறில்லை என நினைக்கிறேன்!) .


இலக்கிய விமர்சன மரபு வலுவிழந்திருக்கும் இன்றைய சூழலில் சங்கடமான விமர்சனங்களை மௌனமாக கடந்து செல்லும் 'நாகரிகம்(!?)' வலுப்பெற்றிருக்கும் இக்காலத்தில் க.நா.சுவின் இந்தக் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப்படுகின்றன. க.நா.சு எந்த அளவுகோலின் அடிப்படையில் படைப்புகளை ஏற்கிறார் அல்லது நிராகரிக்கிறார் என்பது இக்கட்டுரைகளில் வெளிப்படவில்லைதான். ஆனால் அவருடைய கதை சார்ந்த 'நுண்ணுணர்வு' அவரைப் பெரும்பாலும் கைவிடவில்லை. இன்று யோசித்துப் பார்க்கும்போது நாம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகள் என்று உருவகிக்கும் வரிசை ஏறத்தாழ க.நா.சு என்ற ஒற்றை மனிதராலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லிவிடலாம். மணிக்கொடி காலம் தொடங்கி தொடர்ச்சியாக இலக்கியச் சூழலை அவதானித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அவர் தமிழில் வாசிக்கவும் எழுதவும் தொடங்குவது பதின்பருவம் கடந்தபிறகுதான். அதற்கு முன்னதாகவே ஐரோப்பிய இலக்கியத்தில் க.நா.சுவுக்கு ஆழமான பரிச்சயம் இருந்திருக்கிறது. அன்றைய சூழலில் 'கதைகள்' என்று முன்வைக்கப்பட்ட பெரும்பாலான எழுத்துக்களின் சாரமின்மையை மிகச் சரியாக எடுத்துக் காட்டுகிறார். அவ்வளவு கறாரான அளவுகோல் கொண்டிருப்பதாலேயே க‌.நா.சுவால் 1959வரை எழுதப்பட்ட ஒட்டுமொத்த சிறுகதைகளிலேயே ஒரு பதினைந்து கதைதான் 'தேறும்' என்று சொல்ல முடிகிறது. புதுமைப்பித்தன் எழுதிய எல்லாமும் பொக்கிஷம் என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் கூட  புதுமைப்பித்தன் பற்றி க.நா.சுவின் 1959ஆம் வருட மதிப்பீடான 'பூரணம் பெறாத தனித்துவம்' என்பது பொருத்தமானதாக அமைகிறது (பின்னாட்களில் இந்நிலைப்பாட்டை க.நா.சுவே மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை!) என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.





இலக்கிய 'மோஸ்தர்' என்பதற்கும் க.நா.சு எதிரானவராகவே இருந்திருக்கிறார். கல்கி போன்றோரை வெறும் 'பத்திரிக்கை கதைக்காரர்கள்' என்று நிராகரிக்கும் க.நா.சு மணிக்கொடி ஆசிரியர்களில் ஒருவரான பி.எஸ்.ராமையாவையும் நிராகரிக்கவே செய்கிறார். மணிக்கொடியில் எழுதப்படுவதெல்லாம் பொன்னாக இருக்க வேண்டும் என்ற முன்முடிவு எதுவும் க.நா.சுவிடம் இல்லை.‌ சிறந்த தமிழ்ச் சிறுகதைகளுக்கான க‌.நா.சுவின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. சிறுகதையின் வடிவம் சார்ந்த தெளிவான புரிதல் உருவாகி இருக்காது காலத்தில் க.நா‌.சு மீண்டும் மீண்டும் கதைக்கும் சிறுகதைக்குமான வேறுபாட்டைச் சொல்லி சிறுகதையின் வடிவ இலக்கணங்களுக்குள் பொருந்திப் போகும் கதைகளையும் சிறுகதையின் வடிவ சாத்தியங்களைத் தாண்டிச் செல்லும் கதைகளையுமே சிறந்த கதைகள் என்று வரையறுக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளின் மீதான க.நா.சுவின் அங்கலாய்ப்பு இந்த வடிவம் சார்ந்ததாகவே இருக்கிறது. புதுமைப்பித்தன் இக்கதைகளை இன்னும் மேம்படுத்தி இருக்கலாமே என்றுதான் அக்கறைப்படுகிறார். புதுமைப்பித்தன் தன் கதைகளை திரும்ப வாசிப்பதே கிடையாது என்பதை பலமுறை இந்நூல்களில் சொல்லி இருக்கிறார்.





புதுமையும் பித்தமும் நூலில் தீவிரமான விமர்சன உளப்பாங்கு கொண்ட சமகால எழுத்தாளர்கள் இருவருக்கு இடையேயான உறவின் நெருக்கத்தையும் விலகலையும் காண்கிறோம். மணிக்கொடியில் சிற்பியின் நகரம் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தனை க.நா.சு சந்திக்கச் செல்கிறார். முதல் சந்திப்பிலேயே 'இதுவும் நம்மைப்போலத் தேறாத கேஸ்' என்று சிரித்துக் கொண்டே புதுமைப்பித்தன் க.நா.சுவை நெருங்கிவிடுக. 'புதுமைப்பித்தன் என்ற ஒரு மேதை' என்கிற கட்டுரையில் க.நா.சு இப்படி எழுதுகிறார். 


/திருவனந்தபுரத்திலிருந்து நண்பர் ரகுநாதன் - சொ.வியின் கடைசி நாட்களில் அவருடன் கூட இருந்து உதவியவர் அவர்தான் - 'மருந்துச் செலவுக்கும் கூட சிரமப்படுகிறது. பண உதவி தேவை' என்று எனக்கு ஒரு கார்டு எழுதி,அதை அடித்திவிட்டு 'இன்று புதுமைப்பித்தன் காலமானார்' என்று 1948ல் எனக்கு எழுதினார்/


தன்னுடைய சக 'தேறாக கேஸ்' தன்னை விட்டு சீக்கிரம் போய்விட்டதான கவலையும் தான் நீண்ட நாட்கள் வாழ்வது குறித்த சலிப்பும் க.நா.சுவிடம் வெளிப்படுகிறது. இந்த கவலைக்கும் சலிப்புக்கும் அடியில் புறக்கணிப்பு மிகுந்த தமிழ்ச்சூழல் மீதான கசப்பும் வெளிப்படுகிறது. 'புதுமையும் பித்தமும்' ஐந்திணை பதிப்பகத்தின் வாயிலாக வெளியான புதுமைப்பித்தன் சிறுகதைகள் (இதுவொரு முழுத் தொகுப்புக்கான முயற்சி) நூலுக்கு க.நா.சு 1987ல் எழுதிய கட்டுரை. வேகம் குறைந்து சமநிலை கூடியிருக்கும் மொழியில் புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி மட்டும் பேசிச் செல்லாமல் அவருடன் தான் பகிர்ந்து கொண்ட ஏராளமான நினைவுகளை இக்கட்டுரையில் சுவாரஸ்யமாக க.நா.சு விவரிக்கிறார். தன்னுடைய சொற்ப ஆயுள்காலத்தில் ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் புதுமைப்பித்தன் இலக்கியத்திற்கு பங்காற்றியிருக்கிறார். க.நா.சு இந்த பதினைந்து ஆண்டுகளில் பத்தாண்டுகள் புதுமைப்பித்தனின் நண்பராக இருந்திருக்கிறார். வெறும் பதினைந்து ஆண்டுகளில் புதுமைப்பித்தனின் அக்கறையற்ற விரிந்திருந்த எல்லைகளைப் பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது. ஒரு‌ அக்மார்க் 'தேறாத கேஸ்' மட்டுமே இப்படி வெறிகொண்டு செயல்பட்டிருக்க மேடியும். க.நா.சு புதுமைப்பித்தனை சந்திக்கும்போது இருவருமே முப்பது தொடாத இளைஞர்கள்.(புதுமைப்பித்தன் க.நா.சுவுக்கு மூத்தவர்).  சுந்தர ராமசாமி தோட்டியின் மகனை மொழிபெயர்த்தபோது இருபது வயது.‌எம்.வி.வெங்கட்ராம் எழுதத் தொடங்கியபோது பதினாறு வயது என்கிறார்கள். ராஜமய்யர்,கு.ப.ரா,பாரதி எல்லோருமே சொற்ப வயதில் இறந்தவர்கள். இன்றைய ஆயுள் கால நீட்சியை ஒப்பிட்டால் ஐம்பத்து மூன்று வயதில் மறைந்த அ.மாதவையாவும் சொற்ப வயதில்தான் மறைந்திருக்கிறார். இந்த நூலில் என்னை அதிகம் தொந்தரவு செய்த விஷயம் முன்னோடிகளின் இந்த வயதுதான். இன்றைய சூழல் ஒரு வகையில் சோர்வளிப்பதாக உள்ளது. ரொம்ப நாள் உயிரோடு இருப்போம் என்கிற சொகுசு ஒட்டுமொத்த இலக்கிய உலகத்தையும் மந்தத்தன்மை கொண்டதாக மாற்றிவிட்டதாக தோன்றுகிறது.


க.நா.சுவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நடந்த விவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு கதையை 'தழுவி' எழுதுவது அவ்வளவு தவறாக எடுத்துக் கொள்ளப்படாத காலத்தில் க.நா.சுவும் புதுமைப்பித்தனும் தழுவல் குறித்து கொண்டிருந்த பார்வைகள் பல விஷயங்களை புரிய வைக்கின்றன. க.நா.சு போரும் அமைதியும் படித்த உற்சாகத்தில் ஏறத்தாழ இலக்கிய தூய்மைவாதியின் உன்மத்தத்துடன் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதற்கு மறுப்பாக

'இந்தக் கோபம் இலக்கிய சேவையா?' என்று புதுமைப்பித்தன் எழுதி இருக்கும் கட்டுரை மிக மிக முக்கியமானது. அதீதமான 'இலக்கியப்பற்று' சமூகத்தை ஒரு கலைஞன் அவதானிப்பதில் நிதானக்கேட்டினை ஏற்படுத்துவதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டி இருக்கிறார். எப்போது நிதானமாக இருக்கும் க.நா.சு போரும் அமைதியும் கட்டுரையில் உணர்ச்சிவசப்படுவதும் உணர்ச்சிவசத்துடனேயே எழுதும் புதுமைப்பித்தன் நிதானமாக அக்கட்டுரைக்கு மறுப்பு எழுதி இருப்பதும் சுவாரஸ்யமான முரண்கள்!


இவ்விரு நூல்களும் இலக்கிய வரலாற்று நோக்கில் எழுதப்படவில்லை. ஆனால் அன்றைய சூழல் குறித்த ஒரு தெளிவினை அளித்துவிடுகின்றன. மேலும் சமகால இலக்கியவாதிகள் (வாசகர் எழுத்தாளர் இருவருமே) கற்பதற்கு இந்த விவாதங்களில் நிறைய இருப்பதாகவும் தோன்றுகிறது. ஒரு நல்ல 'தேறாத கேஸாக' மாற இந்நூல் வாசகரை ஊக்குவிக்கும் என்பது இதன் சிறப்பு!



Wednesday 18 January 2023

அரைக்கிணறு

15.01.2023 பதிவேற்றிய நிழலின் தனிமை நாவல் குறித்த அறிமுகக் காணொளியுடன் 'முப்பது நாட்கள் முப்பது நூல்கள்' வரிசையில் பதினைந்து காணொளிகள் நிறைவடைந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது இரண்டு மூன்று காணொளிகளாக பதிவு செய்து வைக்கும்படி நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். நேரம் கிடைக்கவில்லை என்பதுதானே முக்கியமான பிரச்சினை! Tamil literary talks சேனல் தொடங்கியபோது நூல் அறிமுகங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்தக் காணொளிகளால் உந்தப்பட்டு எனக்குத் தெரிந்தே பன்னிரண்டு நண்பர்கள் நான் அறிமுகம் செய்திருக்கும் நூல்களை வாசிக்கத் தொடங்கியுள்ளனர். கருணாகரத் தொண்டைமான்,ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் மாதிரியான ஆய்வு நூல்கள் குறித்தெல்லாம் விசாரிக்கின்றனர். உள்ளபடியே இந்த நூல் அறிமுகங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. ஒருசில நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் முன்பு எப்போதோ வாசித்து நினைவிலிருந்து மீள்கிற நூல்களாக இருக்கின்றன. இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்கள் என முன்னரே அறிவித்துவிட்டேன். ஒரேயொரு பிரச்சினை இருநூறு பக்கங்களுக்கு குறைவான நூல்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன் என்பதுதான்! கவிதைத் தொகுப்புகளை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்களுக்குள் அறிமுகம் செய்வது அவற்றுக்கு நியாயம் செய்வதாக இருக்காது என்ற எண்ணத்தினாலேயே கவிதைத் தொகுப்புகளை இதுவரை தவிர்த்து வந்திருக்கிறேன். இனிவரும் காணொளிகளில் முயன்று பார்க்க வேண்டும். குறைந்தது கவிதைகள் குறித்த நூல்களையாவது அறிமுகம் செய்ய வேண்டும். எது எப்படி இருப்பினும் இந்தச் செயல் மிகுந்த நிறைவளிப்பதாக உள்ளது. அதேநேரம் சேனல் தொடங்கிய நோக்கம் இதுவல்லவே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. இன்னும் பதினைந்து நாட்களில் இந்த காணொளி வரிசை நிறைவுற்றதும் மீண்டும் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த காணொளிகளை புதுமைப்பித்தனிலிருந்து தொடருவேன். இதுவரை அறிமுகம் செய்த காணொளிகளின் சுட்டிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.


1.நாரத ராமாயணம் - புதுமைப்பித்தன்


https://youtu.be/XsgWcwJJTwM


2.கருணாகரத் தொண்டைமான் - குடவாயில் பாலசுப்ரமணியன்


https://youtu.be/1iJwKE5mPhQ


3.கடுகு வாங்கி வந்தவள் - பி.வி.பாரதி(தமிழில் - கே.நல்லதம்பி)


https://youtu.be/nMk15fIOPbc


4.காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்(தமிழில் - கே.நல்லதம்பி)


https://youtu.be/znbZ1Drp1Kc


5.பால்யகால சகி - வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில் - குளச்சல் மு.யூசுப்)


https://youtu.be/sXby1mjVYLs


6.எம்ஜிஆர் கொலைவழக்கு - ஷோபாசக்தி


https://youtu.be/wlVnlEZ0H08


7.மணல் - அசோகமித்திரன்


https://youtu.be/RC8VUcZmWio


8.மிக்காபெரிசம் - சிவானந்தம் நீலகண்டன்


https://youtu.be/XJkRSRah14Y


9.சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்


https://youtu.be/9X8ewEcx030


10.விருந்து - கே.என்.செந்தில்


https://youtu.be/8n4DkvvKuLQ


11.விசும்பு - ஜெயமோகன்


https://youtu.be/XNbAROe6JNg


12.வீடியோ மாரியம்மன் - இமையம்


https://youtu.be/67B0AdtcbN4


13.ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் - ராஜ் கௌதமன்


https://youtu.be/IuaLi7Funfw


14.நானும் ஒருவன் - சுரேஷ்குமார இந்திரஜித்


https://youtu.be/Ajup9vggcFU


15.நிழலின் தனிமை - தேவிபாரதி


https://youtu.be/ZE_2OyOjyZs