Pages

Thursday 6 April 2023

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி - சிவக்குமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி ,சதீஷ் வாசுதேவனின் கத்தலே, இரா.முத்துநாகுவின் சுளுந்தீ போன்ற ஆக்கங்கள் தரவுகளை மையமாகக் கொண்டு தமிழில் இதற்கு முன்பு வெளியான ஆக்கங்கள். இத்தகைய படைப்புகளால் சமூகத்தில் உடனடியாக ஒரு பேச்சினை உருவாக்க முடிகிறது என்பது உண்மைதான். விளிம்பு நிலை மக்களின் பாடுகள் பேசுபொருளாகும்போது அக்குரலுக்கு சமூகம் செவிசாய்க்க வேண்டிய ஒரு அறரீதியான கட்டாயத்தை இப்படைப்புகள் உருவாக்குகின்றன. அதில் தவறென்று கொள்ள ஏதுமில்லை. ஆனால் ஒரு படைப்பு சமகாலத்தின் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை மட்டும் பதிவு செய்தால் போதுமா? இத்தகைய படைப்புகளை அந்த அநீதி இழைக்கப்பட்ட மக்கள் என்னவாகப்‌ பார்க்கின்றனர்? என்ற வகையிலான கேள்விகளை எழுப்பிக் கொண்டு இப்படைப்புகளை அணுகுவது ஒரு எல்லை. மறு எல்லையில் கலாப்பூர்வமாக இவற்றின் பெறுமதி என்னவென்றும் பார்க்க வேண்டியிருக்கிறது.


புனைவெழுத்து , புனைவு வாசிப்பு என்ற இரண்டுமே ஞாபகம் என்கிற விஷயத்தை நம்பி இருப்பதாக நான் கருதுகிறேன். சமகாலத்தின் மீது நமக்கு அக்கறை இருப்பதாகவும் சமகாலத்தின் அநீதிகள் ஒவ்வொன்றும் நம்மை வந்து பாதிப்பதாகவும் நாம் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால் நம்முடைய உண்மையான அக்கறை நம் நினைவில் எது தங்கி இருக்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமே. வீட்டு வாசலில் செருப்பை கழட்டிய பிறகு அதோடு கழன்று விழாத ஞாபகங்களாக எவையெல்லாம் நீடிக்கின்றனவோ அது சார்ந்து மட்டுமே உண்மையில் நாம் அக்கறை கொள்கிறோம். தரவுகள் சார்ந்து நிற்கக்கூடிய படைப்புகளின் பலவீனம் அத்தகைய ஆழமான ஞாபகங்களை வாசகனிடம் உருவாக்க முடியாமல் போவதுதான். கையில் தரவுகள் இருக்கும் உற்சாகத்தில் ஒரு பலவீனமான கற்பனைச் சரடில் அத்தகைய தரவுகளைக் கோர்த்து புனைவு வெளியை கட்டமைக்க முடிகிறது. ஆனால் அது வாசகனில் எந்தவொரு நிரந்தர விளைவையும் உருவாக்க முடியாது. இலக்கிய வடிவங்கள், படைப்பின் வெளிப்பாட்டு உத்தி, யதார்த்தவாதம்,கற்பனாவாதம் போன்ற பேச்சுகள் எல்லாம் படைப்பு வாசகனில் ஏதாவது உணர்ச்சியை உருவாக்குகிறதா என்று பார்ப்பதற்காகவே. எழுத்தாளர் தான் உணர்ந்ததை எளிய இரக்கவுணர்ச்சி சார்ந்து அல்லாமல் அனுபவங்கள் தனக்குக் கொடுத்த அதிர்ச்சி, தொந்தரவு அல்லது தொந்தரவின்மை போன்றவை சார்ந்து விவரித்துச் செல்லும்போது ஒரு படைப்பின் அர்த்த உலகத்திற்குள் வாசகரால் எளிதாகப் புழங்க முடிகிறது. நாவல் வடிவத்தைப் பொறுத்தவரை எழுத்தாளர் உருவாக்கும் அர்த்த உலகம் மிகுந்த வலிமை வாய்ந்ததாக பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். தரவுகள் சார்ந்து உருவாகும் படைப்புகள் இந்த நாவலின் புறவுலகத்தை வலுவாக கட்டமைத்துவிடுகின்றன. ஆனால் வாசிப்பு நிலையில் அப்படைப்பு உருவாக்கும் அர்த்த உலகம் என்ன என்று பார்க்கும்போது பல படைப்புகள் ஏமாற்றம் தருகிறவையாகவே உள்ளன. சிவகுமார் முத்தய்யாவின் குரவை நாவல் வலுவான அர்த்த உலகத்தை கட்டமைத்திருப்பது அதன் முதன்மையான கலப்பூர்வமான வெற்றி என்று சொல்ல வேண்டும்.







சிவகுமார் முத்தய்யா கீழ்தஞ்சை மாவட்டத்தின் விவசாயப் பின்புலம் கொண்டு இயங்கும் மக்களின் பாடுகளை தொடர்ச்சியாக எழுதிவரும் படைப்பாளி. ஆனால் குரவை நாவல் விவசாயக் குடிகள் பற்றியதல்ல. கலைஞர்கள் பற்றியது. குரவையாட்டம் ஆடுகிறவர்கள், குறவன் குறத்தி வேடங்கட்டி ஆடுகிறவர்கள், தவில் கலைஞர்கள், பறையிசைப்பவர்கள், நாதஸ்வர வித்வான்கள், பறை தயாரிப்பவர்கள் என கீழ் தஞ்சை நிலம் வேறொரு பின்னணியில் இருந்து இந்நாவலில் அணுகப்படுகிறது. நாவலின் காலம் இன்றிலிருந்து கால் நுற்றாண்டுக்கு முன்பு. உலகமயமாக்கலும் நவீன கல்வியும் உருவாக்கி இருக்கும் அபரிமிதமான வளர்ச்சியின் ரேகைகள் மெல்லியதாகத் தென்படத் தொடங்கும் காலத்தை நாவல் தொட்டுக் காட்டுகிறது. மழையின்மை, பெரிய புயல்கள், நீர்வரத்து குறைந்து போவது போன்ற நாட்களைத் தவிர பிற நாட்களில் விவசாயக் குடிகளின் வாழ்க்கை ஏறத்தாழ 'ஒரே' தன்மையைத்தான் கொண்டிருக்கும். திருவிழாக்களும் விவசாயச் சமூகங்களின் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கிறது. தை மாதத்தின் அறுவடை முடிந்து அடுத்த விதைப்பு நடைபெறும் ஆனி,ஆடி மாதங்கள் வரை விவசாய வேலைகள் சற்று குறைந்த காலம். ஏறத்தாழ எல்லாப் பெருந்திருவிழாக்களும் இக்காலத்திலேயே நடைபெறும். இந்தத் திருவிழாக்களில் பங்கு பெறும் கலைஞர்களின் வாழ்க்கை வழியாக மொத்த கீழ்தஞ்சைப் பகுதியின் பண்பாட்டையும் சிவகுமார் முத்தய்யா இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறார். அம்முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.


தப்படிச்சான் மூலை தஞ்சையில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் வசிக்கும் ஒரு பகுதியாக நாவலில் சொல்லப்படுகிறது. இன்னுமே கூட தஞ்சையின் கீழவாசல் பகுதியில் இவர்களைக் காணலாம். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஆப்பரக்குடி நாட்டுப்புற கலைஞர்கள் வசிக்கும் ஒரு ஊர். கலியமூர்த்தி, நித்யா,பேபி,நாகராசன்,முத்துப்பட்டன், முருகேசன், குமரேசன்,வசந்தா என எண்ணற்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் கதைகள் நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இடம்பெறுகின்றன. அவர்களுடைய வாழ்க்கை சொல்லப்படும் விதத்தினைக் கொண்டும் சிவகுமார் முத்தய்யா இந்நாவலுக்கு எழுதி இருக்கும் முன்னுரையை வைத்தும் நாவல் பெரும்பாலும் நேரடித் தரவுகள் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது. அத்தரவுகளை சிவகுமார் முத்தய்யா அலுப்பான மொழிநடையில் நாவல் முழுக்க தூவிவிட்டுச் செல்லாமல் தரவுகளைக் கொண்டு எதைப் பேச வேண்டுமோ அதை மிகச் சரியாகவே பேசி இருக்கிறார்.


ஸ்திரமான வருமானமும் நிலையான உறவுகளும் அற்ற வாழ்க்கை அமைந்தவர்களாக இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர். கலைக்கு மனிதனை பீடிக்கும் தன்மை உண்டு. ஆட்டக்காரிகளாக வரும் பெண்கள் ஆடுவதால் சந்திக்கும் இன்னல்களைத் தாண்டி ஆடுவதின் வழியாக உருவாகும் பெருமிதத்திற்காவும் நிறைவுக்காகவுமே அந்த வாழ்க்கையில் தொடர்ந்து நீடிக்கின்றனர். மரியாதையற்ற வாழ்க்கையில் இருந்து அடுத்த தலைமுறையாவது தப்பிப்போக வைத்துவிடும் எண்ணமே அவர்களுடைய வாழ்க்கையை உந்துகிறது. பேபி தன் மகள் ரேகாவை ஆட்டக்கலையில் இருந்து தப்புவிக்க நினைக்கிறாள். கலியமூர்த்தி தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தப்பி தன் குழந்தைகள் மனைவியுடன் வாழவே முயல்கிறான். ஆனால்  'குடும்ப வாழ்க்கை' ஒரு கனவாகவே உள்ளது. குமரேசன் போல திட்டவட்டமாக சுயநலத்துடன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்கள் நீங்கலாக மற்ற அனைவரும் நிலையற்றே அலைகின்றனர். சரியாக அமைந்த குடும்பத்தை தன் சந்தேகத்தால் சீர்குலைத்துவிட்டு சாகும்வரை அதற்கென வேதனைப்படும் நாகராசன் போன்றவர்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றனர். வறுமையான வாழ்க்கையின் காரணமாக ஆட்டக்காரியாகும் சாந்தி,சித்ரா போன்ற பெண்களும் பேசப்படுகின்றனர். பபூன் வேஷம் போடும் குள்ளன் ஆல்பர்ட்டுக்கு பெண் பார்க்கச் செல்லும் இடம் நாவலில் முக்கியமான ஒன்று. ஆட்டக்காரிகளை காமத்துடன் அணுகுகிறவர்கள், எந்நேரமும் அவர்கள் எதிர் கொள்ள நேரிடும் பாலியல் தொல்லைகள்,குடும்பத்தைக் கெடுப்பவர்கள் என்று குடும்பப் பெண்களிடமிருந்து அவர்கள் பெறும் வசை எல்லாமும் மிகுந்த அக்கறையுடன் நாவலில் பேசப்படுகிறது. 





காமம் சார்ந்த விவரிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அத்தகைய இடங்களை சிவகுமார் முத்தய்யா கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். காமத்தைக் கடந்து அவ்வுறகளால் ஏற்படும் அன்றாடப் பாடுகளையும் சிக்கல்களையும் பேசுவதிலேயே சிவகுமார் முத்தய்யா அக்கறை கொள்கிறார். உதாரணமாக கலியமூர்த்தி வசந்தாவிற்கு இடையேயான உறவைச் சொல்லலாம். பேரழகியான வசந்தாவை திருவிழாவின் போது ஏற்பட்ட கலவரம் ஒன்றிலிருந்து கலியமூர்த்தி காப்பாற்றுகிறான். கலியமூர்த்தி தவில் கலைஞன். இருவருக்கும் இடையேயான உறவு வளர்கிறது. ஆனால் வசந்தா அவனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாள். (வசந்தா மட்டுமின்றி ஆடும் பெண்கள் பலரிடமும் திருமணத்துக்கு எதிரான இந்த மனநிலையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அப்படி எண்ண காரணம் தங்களுடைய சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வதா அல்லது 'பத்தினி' உருவகத்தினால் ஏற்படும் அழுத்தமா என்பது நாவலில் சொல்லப்படுவதில்லை.) கலியமூர்த்திக்கு மணமாகிறது. கலியமூர்த்தியின் முந்தைய வாழ்க்கை அவன் மனைவி பாப்பாவுக்குத் தெரிகிறது. அந்தப் பழைய உறவினை அறுத்தும்விடாமல் வளரவும் விடாமல் பாப்பா தன் குடும்பத்தை நடத்திச் செல்கிறாள். வசந்தாவின் வாழ்க்கை வேறு விதமாக நகர்கிறது. அவளுடைய ஆட்டத்தைப் பார்க்க வந்த சண்முகம் குடும்பத்தை விட்டு அவளுடனேயே தங்கி விடுகிறார். அவருடைய கடைசி காலத்தில் வசந்தாவே அவருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்கிறாள். அதற்கு கலியமூர்த்தியும் உதவுகிறான்! அப்படி அவள் உதவி கேட்டு வரும் சித்திரம் நாவலில் இடம்பெறுகிறது. கலியமூர்த்தி தன் மனைவியிடம் வசந்தாவை உதவி கேட்கும்படிச் சொல்கிறான்.


/ கலியமூர்த்தி தவிலால் தட்டி டும்...டும்.. என அடித்து ஓசையெழுப்பி கேட்கச் சொல்லி சமிக்ஞை செய்தான். தவில் வாசிப்பவர்களுக்தும் ஆடுபவர்களுக்குமான ரகசிய மொழி அது. வாசிப்பவர்கள் தங்களுக்கு சோர்வு ஏற்படும் போது குறைவான சத்தத்தை எழுப்பினால் ஆடுபவர்கள் அதைப் புரிந்து கொண்டு கூட்டத்தில் இருந்து எவ்வளவு விசில் சத்தம் வந்தாலும் வேகமெடுத்து ஆடமாட்டார்கள். அதுபோல ஆடுபவர்கள் ஆடமுடியாது கால் வலிக்கும்போது காலில் அணிந்திருக்கும் சலங்கையை தரையில் வைத்து இரண்டு முறை குலுக்கினால் அடியின் வேகத்தை குறைப்பது தொடங்கி சாப்பிடுவது,சம்பளம் அதிகம் கேட்பது வரை பல சங்கதிகள் அதில் உண்டு/


இது மாதிரியான பல நுண்ணிய தருணங்களை நாவலில் குறிப்பிட முடியும். திடீரெனக் கிடைக்கும் புகழ், புகழ்வெறியில் எடுக்கும் தவறான முடிவுகள் எப்படியெல்லாம் இக்கலைஞர்களின் வாழ்க்கையை அலைகழிக்கின்றன என்பதைத் தாண்டி சொல்லப்படாத கோணமாக சமூகம் இவர்களைப் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களை என்னவாகப் பார்க்கிறது என்பதும் வாசிப்பின் வழி உணரத்தக்கதாக உள்ளது. தவில் கலைஞர்களுக்கு இடையேயான ஆசிரியர் மாணவர் உறவு, போட்டியில் நடைபெறும் கொலைகள், அப்பாவின் தொழிலான பறையிசையை கைக்கொள்ளும் செவத்தகன்னி என்று முடிவற்றது என்று தோன்றும் பாத்திரங்களும் கோணங்களும் நாவலில் வெளிப்பட்டபடியே இருக்கின்றன.


பல இடங்களில் நாவலில் பாத்திரங்களின் பெயர்களே தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சந்திரன் என்று வரவேண்டிய இடத்தில் குமரேசனின் பெயர் வருகிறது. இதுபோன்ற குறைகளை அடுத்தடுத்த பதிப்புகளில் கவனமாகக் களைவது நாவல் வாசிப்பு அனுபவத்தை மேலும் நிறைவானதாக மாற்றும். மயில் ராவணனின் கொலையும் அதைச் சந்திரன் 'துப்பறிந்து' தப்படிச்சான் மூலைக்குச் செல்வதும் நம்பகத் தன்மையுடன் சொல்லப்பட்டிருந்தாலும் நாவலின் பொதுவான உணர்வு நிலையில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.


முன்பின்னாக நகர்ந்து பல்வேறு கலைஞர்கள் வழியாக நகரும் நாவலின் உணர்வுத்தளத்தில் ஒரு அமைதி நிலவுகிறது. எங்குமே போலியான சீற்றமோ கோபமோ வெளிப்படுவதில்லை. மிகையான காமமோ வன்முறையோ நாவலில் இல்லை. முன்பின்னாக நகர்ந்து பாத்திரங்களின் போக்கு காண்பிக்கப்படுவதாலேயே  எங்குமே செயற்கையான அதிர்ச்சிகளும் திருப்பங்களும் இல்லை. சந்திரன்,செவத்தகன்னி, மயில் ராவணன் என்று தஞ்சையின் வேறு வேறு ஊர்களில் வாழ்கிறவர்கள்கூட ஏதோவொரு வகையில் தப்படிச்சான் மூலையுடன் தொடர்புடையவர்களாக மாறுகிறார்கள். தொடர்ச்சியான வாழ்க்கைச் சித்தரிப்புகள் வழியாக சிவகுமார் முத்தய்யா தப்படிச்சான் மூலையை ஒரு பெரிய தொன்ம நிலமாக மாற்றிக் காட்டி விடுகிறார்! ஆனால் அங்கு மாயங்களோ தெய்வங்களோ பிசாசுகளோ இல்லை. முழுக்க முழுக்க கலைஞர்களும் அவர்களின் உற்சாகமும் சுதந்திரமும் வலியும் நிறைந்த வாழ்க்கைப்பாடுகளே உள்ளன. இப்படி ஒரு தனித்துவம் மிகுந்த வாழ்க்கைச் சூழல் ஒரு நாவலில் உருவாகி வருவது அபூர்வமான ஒன்று. அந்த வகையில் தப்படிச்சான் மூலை தமிழ் நாவல் பரப்பு பேசியிருக்கும் முக்கியமான களங்களில் ஒன்று.


-சுரேஷ் பிரதீப்.


சிவகுமார் முத்தய்யா தமிழ் விக்கி


https://tamil.wiki/wiki/File:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE.png













No comments:

Post a Comment