Tuesday 8 September 2020

நூல் ஒன்று - முதற்கனல்

 நூல் ஒன்று - முதற்கனல்


என் கொள்ளுப்பாட்டியின் வழியாக நம் மரபின்  சில தொன்மங்களையாவது கேட்டு வளரும்  பேறு பெற்றவன் நான். நுட்பமான  கதை சொல்லலும் பல திசைகளில் விரிந்து எழும் கதை நகர்வும் கொண்ட வெண்முரசின்  முதல் நாவலான  முதற்கனல் முதல் முறை வாசிக்கும்  போது  எனக்குள் பெருந்திகைப்பை ஏற்படுத்தாமல் உள்ளே அனுமதித்ததற்கு என்னுடைய  வாசிப்புத் திறனை மெச்சிக் கொள்ள முடியாது. மானசாதேவி  என்ற நாகர் குலத்தலைவி தன் ஏழு வயது மகன் ஆஸ்திகனுக்கு சொல்லும்  கதைகள் என்னை ஏற்று உள்ளிழுத்துக்  கொண்டதற்கு சிறு வயதில்  கொள்ளுப்பாட்டியின் இழுவையும் ஏளனமும்  நிறைந்த குரலில் கேட்ட தொன்மங்களே காரணம்.


மானசாதேவிக்கும் ஜரத்காரு முனிவருக்கும் பிறந்த  ஏழு வயதான  ஆஸ்திகன்  குருஷேத்திர போர் முடிந்து இரு தலைமுறைகள்  கடந்த பின் அஸ்தினபுரி அரசனான ஜனமேஜயன் தீமைகளை அழிக்க எண்ணி நிகழ்த்தும்  சர்ப்பசத்ர வேள்வியை தடை செய்யும்  பொருட்டு எழுகிறான். காமமாகவும் அகங்காரமாகவும் மண்ணில்  பெருகும் நாகங்கள் அழிக்கப்படுவதை வைதிகனாகவும் நாகனாகவும் ஒருசேர நின்றெதிர்க்கிறான் நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஸ்திகன். தீர்ப்புரைக்க முதிர்ந்து பழுத்த வியாசனை சபைக்கு இழுக்கிறான் ஜனமேஜயன். தட்சப்பெரு நாகத்தை  "இவ்வுலகெங்கும் காமமும் அகங்காரமும் பெருகச் செய்வாயாக" என வாழ்த்தி அனுப்புகிறார் கிருஷ்ண துவைபாயன வியாசர். திகைத்து நிற்கும்  ஜனமேஜயனின் மனநிலையை எளிய மானுட நீதிகளை மட்டும் அறிந்து பிரபஞ்சத்தை ஆளும் பெரு நியதியை அதுவரை காணாத  எந்த மனதினாலும் உணர முடியும். நன்மை தீமை கடந்து எழும் பேரரறத்தை வலியுறுத்தும்  விதமாய் எழுகிறது வியாசனின் சொல் அவர் மாணவரான வைசம்பாயணரின் குரலில்  முதற்பகுதியான வேள்விமுகத்தில்.


முதற்கனலின்  இரண்டாவது  பகுதியான  பொற்கதவம் பேரரசி  சத்யவதியையும் பீஷ்மரையும் வியாசனையும் அறிமுகம்  செய்கிறது. திரை விலக்கப்பட்டு கூப்பிய  கைகளுடன்  அறிமுகம்  கொள்வது போல் நிகழ்வதில்லை  அவர்களுடனான நம் சந்திப்பு. மகாபாரத காலகட்டத்தில்  பாரதம் முழுக்க பரவியிருந்த சூதர்கள்  எனும் கதைப்பாடகர்கள்  வழியாகவே  நாம்  இன்று  அறியும்  பல தொன்மக் கதைகள்  சொல்லப்படுகின்றன. பொற்கதவம்  என்ற இரண்டாவது பகுதி  தொடங்குவதே சூதர்களின் அறிமுகத்துடன் தான். ஒவ்வொருவரின் உளநிலையும் அவர்களிடம் சொல்லப்படும்  சூதர் பாடல்களின் வழியாகவும் அல்லது  தொன்மங்களின் வழியாகவும்  விளங்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. காசி நாட்டு இளவரசிகளை கவர்ந்து வர சத்யவதி ஆணையிட்டதும் மனம் குழம்பும்  பீஷ்மர்  தீர்க்கசியாமர் என்ற விழியற்ற சூதரை அழைக்கிறார். சத்யவதிக்கு பராசர முனிவரில் பிறந்த வியாசனின் கதையை பாடுகிறார் தீர்க்கசியாமர். அப்பாடலின் வழியாகவே  தன் வழியை உணர்ந்து வியாசனை நோக்கிச் செல்கிறார் பீஷ்மர். வியாசர் குடியிருக்கும்  வேதவனத்தில் சித்ரகர்ணி என்ற கிழ சிம்மம் குடிலில்  கட்டியிருக்கும் பசுவினை வேட்டையாட நெருங்குகிறது. பெரும்பாலானவர்கள்  அறிந்திருக்கும் சிபி சக்ரவர்த்தி  புறாவிற்காக தன் உடலைக் கொடுத்த கதையை சொல்கிறார் வியாசர். ஆனால் மிகக் கூரிய நியாங்களை பேசும்  நவீனமாக ஒலிக்கிறது அக்கதை. மானுட  உணர்வு பிரபஞ்ச விதிகளுடன் போட்டியிட்டு பேருணர்வாவதை சொல்லிச் செல்கிறது. பீஷ்மர்  தெளிவடைந்து வெளியேறுகையில் சித்ரகர்ணி தன் வேட்டையை முடித்திருக்கிறது.


ஒவ்வொருவரின் ஊழும் முன்னேற வகுக்கப்பட்டுவிட்டதாகவே விரிகின்றன சூதர்களின்  சொற்கள். காசி நாட்டு இளவரசிகளான அம்பையும் அம்பிகையும் அம்பாலிகையும் கேட்பது தட்சனுக்கும் சிவனுக்கும்  இடையே நின்று தவிக்கும்  தாட்சாயிணியின் கதையை. எரி புகுந்து விண்ணடைந்து கணவனை அடைகிறாள் தாட்சாயிணி என்பதிலிருந்தே அந்த இளவரசியரின் ஊழ் நகரும்  திசை தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. தான்  வடித்தெடுத்த சால்வ மன்னனை அடைய முடியாமல்  பீஷ்மரால் சிறையெடுக்கப்பட்ட பின் அவரிடம்  மீண்டு சால்வனை அடைகிறாள் அம்பை. அவள் வரைந்த  சித்திரம்  அழிந்து வெறும்  அரசாளனாக நின்று பேசுகிறான் சால்வன். தன் பிறந்த நாடான காசிக்கு செல்கிறாள். அத்தேசமும் அவளை மறுக்கிறது. சுவர்ணை சோபை விருஷ்டி என்ற தேவதைகளின் வழியாக அம்பை தன் காதலை பீஷ்மரிடம் கண்டு கொள்ளும்  கணம் சிலிர்க்க வைக்கிறது. அனைத்தடையாளங்களையும் இழந்து கன்னியெனவும் அன்னையெனவும் பீஷ்மர்  முன் அவர் நிற்கும்  கணங்களும் தன் பேரன்பு புறக்கணிக்கப்பட்டதும் கொற்றவையென எழும் சீற்றமும்  பெரும்  அகச்சலனங்களை ஏற்படுத்தி அச்சலனம் தணியாததாகவே மனதில்  எஞ்சுகிறது.


வியாச பாரதம் "ஜெய" என்ற பெயரில்  எழுதப்பட்ட  ஆயிரம்  பக்கங்களுக்கு  அதிகம்  சென்றுவிடாத ஒரு காவியமே. பின்னாட்களில்  அது பல்வேறு  காலகட்டங்களில்  விரித்தெடுக்கப்பட்டிருந்தாலும் பீஷ்மர்  ஜராசந்தன் அர்ஜுனன்  பீமன் என வலுவானவர்களே விரிந்துரைக்கப்பட்டிருந்தனர். பெண்ணைக் கூடினால்  இறந்து விடுபவனாக உடல் நலம்  குன்றி பிறக்கும்  சத்யவதியில் சாந்தனுவிற்கு பிறந்த இரண்டாம்  மைந்தன்  விசித்திர வீரியன் அவன் அத்தனை  குறைகளுடனும் பெரும்  ஆளுமையாகவே சித்தரிக்கப்படுகிறான். கட்டளைகளை மட்டுமே  வீசும்  அவன் அன்னை சத்தியவதியை அவன் எதிர் கொள்ளும்  விதமே அவன் ஆளுமையை சொல்லி விடுகிறது. நெஞ்சக்கனல் அணையாது வராஹியாகித் திரியும்  அம்பாதேவியிடம் சிரம் பணிந்து பீஷ்மரிடம்  நின்று ததும்புகிறான். தீர்க்கசியாமர் கங்காதேவியில் சாந்தனுவிற்கு பிறக்கும்  பீஷ்மனின் கதையை விசித்திர  வீரியனிடம்  சொல்கிறார்.   /மாபெரும் வல்லமைகளில் இருந்தே மாபெரும் தீமை பிறக்க முடியும்/ என்றறிகிறான். சூதர்கள்  சொல்லும்  கதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன நாகர்கள் சொல்லும் கதைகள். சங்குகர்ணன் விசித்திர  வீரியனிடம் சொல்லும்  கதை அத்தகையது. காசி நாட்டு இளவரசிகளின் அன்னையான புராவதி துறவு பூண்டு அன்னையாகி நிற்கும்  மகளைக் கண்டு இறக்கிறாள். விசித்திர  வீரியனிடம்  அம்பிகை காதல்  கொள்ளும்  தருணங்கள் ஒளிமிக்கவை. விடியலின்  பொன்னொளி என அக்காதல் மிகக்குறைந்த காலம்  நீடிப்பதே அதை மேலு‌ம்  ஒளிகொள்ளச்  செய்கிறது. சத்யவான் சாவித்திரியின் கதையை அம்பிகை விசித்திர  வீரியனிடம்  சொல்லும்  தருணங்கள்  அவள் பதைப்பினை நம்முள்ளும் உணர வைக்கின்றன. சாவித்ரியின் சௌப நாட்டிலேயே அம்பையை புறக்கணித்த சால்வனும் பிறக்க நேர்ந்து அந்நாட்டு  சூதர்கள்  சால்வனின் வீழ்ச்சியை பீஷ்மரிடம்  சொல்லும்  போது விசித்திர  வீரியன்  இறந்துவிடுகிறான்.


தன் துயர் மறைத்து அரசியலுக்காக அம்பிகையையும் அம்பாலிகையையும் பராசரில் தனக்கு பிறந்த மகனாக  வியாசன் கூடட்டும் என பீஷ்மரிடம்  பணிக்கிறாள் சத்யவதி. வேதவனத்தில்  சித்ரகர்ணியை குஹ்யஜாதை எனும் கழுதைப்புலி தன் குட்டிகளுடன்  உண்பதை பார்த்து நிற்கும்  வியாசர் அதற்கு  ஒப்புக் கொண்டது சொல்லப்படுகிறது. வியாசர் அஸ்தினபுரி  வரும்  போது திறந்து கொள்கிறது சத்யவதியின் மனம். தந்தையின்  ஆணைக்கேற்ப தாய் ரேணுகையை கொன்ற பரசுராமரின் கதை அறிந்ததே எனினும்  சத்யவதியின் தோழி சியாமையின் வழியாக அவளிடம்  கூறப்படும்  அத்தொன்மம் பல தளங்களை சுட்டி நிற்கிறது.


இரு இளவரசியருடன் சூதப்பெண் சிவயையும் கூடிய  பின் தன் மகனான  சுகனை தேடி பயணிக்கிறார் வியாசர். தென்னகத்தின்  பெருங்கவிஞனான பெருஞ்சாத்தனை சந்திக்கிறார். /நீங்கள்  சிரஞ்சீவியாக இருந்து உங்கள்  உயிர் முளைத்த வனத்தின்  வாழ்வனைத்தையும் காணுங்கள்/ என அவரை உந்துகிறான் சுகன்.


வியாசரின் பயணத்துக்குப் பிறகு சிகண்டினியை சிகண்டியாகக் காணும்  அம்பையின் பயணம்  தொடங்குகிறது. பன்றியின் மூர்க்கத்துடனும் பசியுடனும் வளர்கிறாள் சிகண்டினி. படகோட்டியான நிருதனிடம் விடைபெற்று சிதையேறுகிறாள் அம்பை. அனைத்து உக்கிரங்களும் அடங்கி / என் சிதைச்சாம்பலைக் கொண்டு நீங்களும் உங்கள்  குலமும் உங்கள்  சிறு தங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள்  குலத்தில்  நான் என்றென்றும்  பிறந்து கொண்டிருப்பேன்/ என அம்பை நிருதனிடம்  சொல்லும்  போது நெஞ்சு விம்மி விடுகிறது. ஸ்தூனகர்ணனை எண்ணித் தவம் புரிந்து பெண்ணென்று இல்லாமல்  ஆகிறாள் சிகண்டினி.  ஒற்றை நோக்கம் கொண்ட கர்மயோகியென எழுகிறான்  சிகண்டி. தனுர்வேதத்தை பயிற்றுவிக்கும்  அக்னிவேசர் சிகண்டிக்கு விடைகொடுக்கையில் நிகழும்  உரையாடல் ஆழம் கொண்டது. அழகிய  கிராமம்  ஒன்றில்  உர்வரை என்ற இளம்பெண்  பீஷ்மரை மணக்க எண்ணுகிறாள். சிகண்டியும் அவளும்  ஒரே நேரத்தில்  கண்ட கனவுகள்  அவளை சீற்றம்  தணிந்து பீஷ்மரை காக்க எண்ணும்  அம்பையென எண்ணச் செய்கிறது.


முற்றறிவதே பீஷ்மரைக் கொல்லும்  வழியெனக் கண்டு அவரை களத்தில்  எதிர்த்த பீஷ்மரின் சிறிய தந்தையான பால்ஹிகரை சந்திக்க சிபி நாடு சென்று மீள்கிறான் சிகண்டி.  அம்பையால் அரண்மனை  நீங்குகிறார் பீஷ்மர். சிகண்டி பீஷ்மரிடம்  யாரென்று  அறியாமல்  பீஷ்மரைக் கொல்ல  தனுர்வேதம் கற்பிக்குமாறு வேண்டுகிறான். ஈனாத தாயென அம்பையை உணர்ந்தவன் அவளுள்  வஞ்சத்தை ஏற்றிய பீஷ்மரை தன் தந்தையென கண்டு கொள்வதோடு முதற்கனல்  நிறைவுறுகிறது.


பெண்களின்  கண்ணீர்  என்றே விரிகிறது  முதற்கனல். முதியவர்களை மட்டுமறிந்த சத்யவதி முது வயதில் "அனகி" என தன் விளையாட்டு பொம்மையின் பெயர் சொல்லி உயிர்விடும் சுனந்தை "பாண்டுரன்" என்ற பளிங்குபாவையை மறக்காத அம்பாலிகை வழியின்றி வியாசரிடம் கரு ஏற்கும்  சிவை என அத்தனை  பெண்களின் கோபமும்  பிரதிபலிக்கும்  களம். அனைத்திற்கும்  மேலாக  சிதை நெருப்பென எரியும்  அம்பை. பாண்டவ கௌரவர்களின் தந்தைகளான பாண்டுவும் திருதராஷ்டிரனும் பிறப்பதோடு நிறைவடைந்தாலும் தன்னளவில்  தனித்தே நிற்கிறது  முதற்கனல். ஒரு கணத்தில்  நாகர்களின் வஞ்சமாக மீண்டும்  மீண்டும்  எதிரொலிப்பது பெண்ணின்  வஞ்சமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. 


நிகழு‌ம்  ஒவ்வொரு  தருணத்தையும் முந்தைய  தருணத்தோடு பொறுத்திப் பார்க்க முடிகிறது. அண்ணனை பிரிந்த பால்ஹிகன் சாந்தனுவிற்கு அளிக்கும்  சாபம் சாந்தனுவின் பெயரர் பிறப்பிலும் எதிரொலிக்கிறது. ஆண்டுகள் பல கடந்த பின்னும்  பால்ஹிகர் ஒளியை பார்க்காமல்  இருப்பது அவர் அண்ணன்  தேவாபியின் நினைவினால்.  யயாதியாக பீஷ்மர் தன்னைக் காணும் தருணமும் அப்படிப்பட்டதே.


ஆஸ்திகன் தன் குடிலடையும் போது நாகர்களுக்கும் ஷத்ரியர்களுக்குமான போராகவும் முதற்கனல்  தெரிகிறது.


வெண்முரசின் அணிவாயிலாக ஆசிரியரால் சொல்லப்படும் முதற்கனல் இன்றைய  சாரமற்ற எதார்த்தத்துடன் தன்னை இணைத்துக்  கொள்ளாமலும் நம்பகத் தன்மையற்ற கதைகளுக்குள்ளும் நுழையாமல்  நான்காயிரம்  ஆண்டுகளாக நீடித்து வரும்  காவிய நாயகர்களை அவர்களுக்கே உரிய கம்பீரத்துடனும் கூர்மையுடனும் அறிமுகப்படுத்துகிறது. ஒரு விதத்தில்  முதற்கனல்  வெண்முரசின்  ராஜபாட்டை.


(2017ல் எழுதிய கட்டுரை)

நூல் இரண்டு - மழைப்பாடல்

 


கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான  ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம்  மிக்க  ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக  தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில்  இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக  ஒரு மாயாஜால  கதையாகவும் நம்மில்  பலர்  அறிந்திருப்போம். ஆனால்  அக்கால  இந்தியா வரலாற்றின்  ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் மகாபாரதத்தில்  உள்ளது. மழைப்பாடல் அவ்வரலாற்றை தொட்டுச் செல்லும்  அதே நேரத்தில்  பெரும் ஆளுமைகளையும் அவர்களின்  முழு விரிவோடு அறிமுகம்  செய்கிறது. 


விழியற்றவனுக்குரிய பதற்றத்துடன்  அறிமுகமாகும்  திருதராஷ்டிரன் பீஷ்மரை மல்யுத்தத்திற்கு அழைத்து அவரிடம்  அடைக்கலம்  கொள்கிறான். விதுரன்  அரசு சூழ்கையில் பீஷ்மருக்கு இணையாக  ஏறி வரும்  இடத்திலிருந்தே மிக நுண்மையான  வார்த்தைகளில்  நிகழும் அரசியல்  உரையாடல்களும் தொடங்கி  விடுகின்றன. பண்டைய  இந்தியாவின் ஆட்சியதிகாரத்தில் மண நிகழ்வுகள்  அரசியலுடன் தொடர்புடையவாக இருந்திருக்கின்றன. அஸ்தினபுரியை ஷத்ரிய  நாடுகளை  கடந்து முழு பாரதவர்ஷத்தையும் வென்றெடுக்கும்  வல்லமை மிக்க தேசமாக  மாற்ற விரும்புகிறாள் சத்யவதி. கிழக்கில்  வணிகத்தாலும் பொன்னாலும் புது வல்லமை பெற்று வளரும்  காந்தாரத்திற்கு திருதராஷ்டிரனுக்கு மகற்கொடை கேட்டு புறப்படுகிறார் பீஷ்மர். அஸ்தினபுரியின் மன்னனான யயாதியால் ஆட்சி மறுக்கப்பட்ட துர்வசு பாலையின் தொல் குடிகளான லாஷ்கரர்களுடன் இணைந்து அமைத்த அரசு காந்தாரம். மூன்று நெருப்புகளின் மீதேறி  வரும்  மூன்று  காற்றுகளாக பாலையின்  நில விரிவும் பாலை நில மக்களின் குணமும்  விவரிக்கப்பட்ட பின் காந்தார இளவரசனான சகுனி  அறிமுகமாகிறான்.


பாரதவர்ஷத்தை வென்றெடுக்கும் அதே நோக்கத்துடன் வளர்கிறான்  சகுனி. நாக சூதன் ஒருவன்  சகுனியிடம் சொல்லும்  ஒரு கதை அவன் முடிவுகளை கட்டுப்படுத்தவதாக அமைகிறது. ஒரு செங்கழுகினை சகுனி  அம்பெய்து வீழ்த்துவதும் ஓநாய் ஒன்று அக்கழுகினை உண்பதை சகுனி  பார்த்து நிற்பதும்  அவனுள் உருவாக்கும்  நிலையின்மை அவன் ஒவ்வொரு  செயலிலும்  அவனைத் தொடர்கிறது. மூர்க்கமும் பேரன்பும் கலந்தவனாக திருதராஷ்டிரனும் அவனை நன்கறிந்து வினை புரிபவனாக விதுரனும் உருப்பெறுகின்றனர். காந்தாரத்தின் பதினொரு இளவரசியரும் திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்கப்படுகின்றனர். வசுமதியாகிய காந்தாரி நகர் நுழையும்  போது பெய்யும்  பெருமழையுடன் யமுனையில் அறிமுகமாகிறாள் குந்தி.


தன் வயிற்றுக் கருவை கலைக்க  வரும் மருத்துவச்சியிடம் நிமிர்வுடன் கட்டளையிடும் போதே குந்தியின்  ஆளுமை வெளிப்பட்டு விடுகிறது. யயாதியால் வெளியேற்றப்பட்ட இன்னொரு மைந்தனான யதுவின் குலமாக வளர்ந்து நிற்கிறது  யாதவ குலம். சூரசேனரின் மகளாய் மதுவனத்தில் வசுதேவனுடன் பிறக்கிறாள் குந்தி. குலங்கள் ஒருங்கிணைந்து யாதவ குடிகள்  தலைமை நோக்கி நகரும்  சித்திரம்  குந்தியின் பிறப்பினூடாக சொல்லிச் செல்லப்படுகிறது. வசுதேவன் மதுராபுரியின் அமைச்சனாக உயர்கிறான். துர்வாசரின் மந்திரத்தால் ஒருவனை கவரும்  குந்தி அவனால்  கருவுறுகிறாள். நாகங்களின் துணையோடு நிகழும் கர்ணனின்  பிறப்பும் குந்தி அவனை பிரிவதும்  ராதை கண்டெடுப்பதும் கொந்தளிக்கச் செய்யும்  அனுபவங்கள். 


அதேநேரம் அரசியல்  காய் நகர்த்தல்களும் நிகழ்கின்றன. அஸ்தினபுரியிலிருந்து குந்தியை பெண் கேட்டு தூது வருகிறது. கம்சன்  குந்தியை சிறையெடுக்க முயல்கிறான். தன்னை மீட்டுக்  கொண்டு  அரசியல்  நுட்பத்துடன்  குந்தி எடுக்கும்  முடிவுகள்  பிரம்மிக்க  வைக்கின்றன. குந்தி பாண்டுவை தேர்ந்தெடுக்கிறாள். தன் நிமிர்வினால் அனைத்தையும்  கடந்து செல்கிறாள். குந்தியின்  மீதான  விதுரனின் நுண்ணிய  காதலும் அவள்  வளர்ப்பு அன்னையான  தேவவதியிடம் அவள் அதனை கூர்மையுடன் வெளிப்படுத்தும்  விதமும்  எதற்கும்  நடுங்காதவளாக குந்தியை விரித்தெடுகின்றன. பாண்டுவை அவள் அன்னையெனவே அணுகுகிறாள். உடற்குறையால் அவன் சூடிக் கொண்டு வேடத்துக்கு  அப்பால் அவனை கண்டு கொள்கிறாள்.


திருதராஷ்டிரனின் உலகில்  முழுதாய்  நுழைந்து விட கண்களை கட்டிக் கொள்கிறாள் காந்தாரி. அவள்  அரசியல் நுட்பங்களும் அச்செயலினூடாக கரைகின்றன. குஹ்யமாசனம் எனும்  தடாகத்தில்  குந்தி தன் முகத்தை  காணும்  போது அதில்  அவள் காணாத  வஞ்சம்  நிறைந்த காந்தாரியின் கண்களை காண்கிறாள் எனும்  சித்தரிப்பே அஸ்தினபுரியை மையமாக்கி குந்தியும் காந்தாரியும் நிகழ்த்தும்  ஆடலாக மழைப்பாடலை மாற்றுகின்றன. சகுனி ஒரு பக்கமும்  விதுரன்  மறு பக்கமும்  நின்று  அவ்வாடலை நிகழ்த்துகின்றனர். 


அம்பிகையும்  அம்பாலிகையும்  தொடங்கி வைத்த எளிய அச்சங்களால் ஆன சிக்கலே பெரும்  வஞ்சங்களாக வளர்கிறது. திருதராஷ்டிரன் மணிமுடி சூட முடியாமல்  அச்செய்தியை திருதராஷ்டிரனிடம் தெரிவித்து பாண்டுவை மன்னனாக்கும் இடத்தில்  அவன் கூர்மதியும் தற்செயல்களை கையாளும்  திறனும்  அவன் அண்ணன்  மீதான  நம்பிக்கையும்  வெளிப்படுகிறது. காந்தார  குடிகள்  நகர் நுழையும்  போதும்  விதுரன்  அதையே செய்கிறான். அரியணை ஏற்று மாத்ரியை மணந்த பின் பாண்டு அவர்களுடன் வனம்  நோக்கிச் செல்கிறான்.


துரியோதனனின் பிறப்பு கலியுகத்தின் பிறப்புடன் இணைத்து சொல்லப்படுகிறது. குந்தி பாண்டுவிடம் தனக்கொரு மகனிருப்பதை சொல்கிறாள். அவன் இச்சையை ஏற்று மற்ற மகவுகளையும் பிறப்பிக்கிறாள். பாண்டவர்கள்  ஒவ்வொருவரின் பிறப்பும் ஒரு பருவத்துடனும் தெய்வத்துடனும் மிருகத்துடனும் இணைத்து சொல்லப்படுகிறது. அவர்களுடைய  உயிரியல்  தந்தைகளையும் நேரடியாக அறிவிக்காமல்  கோடிட்டுச் செல்கிறது மழைப்பாடல். 


தந்தையென்ற முழுமையை உணர்ந்த பின் பாண்டு  இறக்கிறான். மாத்ரியும் அவனுடன் சிதையேறுகிறாள். அதுவரை  நிகழ்ந்தவை பொருளற்றுப் போக அம்பாலிகையை அழைத்துக்  கொண்டு  காடேகுகின்றனர் சத்யவதியும் அம்பிகையும். 


முதல் முறை படித்தபோது மழைப்பாடல் அதிர்ச்சியூட்டவதாகவே இருந்தது. பல்வேறு திசைகளில் நகர்வதாகவும் தெரிந்தது. மறு வாசிப்பின் போதே மழைப்பாடலின் இறுக்கமான மொழி நடையினுள் இயல்பாக நுழைந்து கொள்ள முடிந்தது. பருவநிலை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. திருதராஷ்டிரனின் அரியணை ஏற்பு நிகழ்வு பெரு மழைக்குப்பின் ஒருங்குகிறது. காந்தாரி அஸ்தினபுரி நுழைவதற்கு முன் கடும் வெயிலும் குந்தி மார்த்திகாவதி நீங்குவது வரை பெரும் மழையும் துரியோதனன் பிறப்புக்கு முன் வெயிலும் இறுதியாக சத்யவதி தன் மருகிகளுடன் வனம் புகும்போது மழை பெய்யத் தொடங்குவதுடன் மழைப்பாடல் முடிகிறது.


கரவும் கூர்மையும் நிறைந்த நுண்மையான அரசியலாடல்கள் குந்தியாலும் விதுரனாலும் சகுனியாலும் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் அவர்களின் உயரத்தை நினைவுறுத்தும் விதமாய் விதுரனிடம் அம்பிகையும் குந்தியிடம் அம்பாலிகையும் சகுனியிடம் அவன் சகோதரிகளும் நடந்து கொள்கின்றனர். 


ஷத்ரிய தர்மங்களும் நியதிகளும் அன்றைய ஆட்சியதிகாரத்தை எவ்வாறு முன்னெடுத்தன என்பதையும் மழைப்பாடல் சொல்லிச்செல்கிறது. சிவை சம்படை என கைவிடப்பட்ட பெண்கள் மழைப்பாடலிலும் தொடர்கின்றனர். 


ஒரு யுகத்தின் தொடக்கம் என்பது மனநிலைகளிலும் நியதிகளிலும் ஏற்படும் மாற்றமே. அதனை பல்வேறு விசைகள் கட்டுப்படுத்துகின்றன. மையமும் விளிம்பும் போரிடுகிறது. மையமாக தொல் குடி ஷத்ரியர்களும் விளிம்பாக புதிதாக எழுந்து வரும் அரசுகளும் மோதப்போகும் பெரு நிகழ்வின் களம் ஒருங்கும் சித்திரத்தை மழைப்பாடல் அளிக்கிறது. ஒரு தலைமுறையினர் தங்களை கனவுகளை விடுத்து வனம் நுழைகின்றனர். அக்கனவுகளின் உச்சத்தை அடுத்த தலைமுறை ஏற்று வனத்தில் இருந்து மீள்கிறது. மத்திய மற்றும் வட இந்திய நிலப்பரப்பின் பல்வேறு உட்கூறுகளையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியலையும் முழுமையாகவே தொட்டுச் செல்லும் அதே நேரம் அன்றிலிருந்து இன்றுவரை நீளும் ஒரு தொடர்ச்சியையும் அளிக்கிறது. 


தொன்மங்களை கதை நகர்வுடன் இணைத்து விவரித்துக் கொள்ளும் பயிற்சியை முதற்கனல் அளித்திருந்தாலும் மழைப்பாடல் மேலு‌ம் சிக்கலான பரிணாமம் கொண்ட தொன்மங்களைக் கொண்டுள்ளது. அதேநேரம் அவற்றை இணைத்துக் கொள்ள முடியாததும் வாசிப்பிற்கு தடையாக இருக்காது என்றே எண்ணுகிறேன். மேலும் பல அத்தியாயங்கள் தொடங்கும் இடத்திலிருந்து பல்வேறு நிகழ்வுகளினூடாக பயணித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து நிற்கின்றன. எக்குறிப்புகளும் இல்லாமல் அத்தியாயத்தின் திசை மாறுவதையும் மீண்டும் வந்து இணைந்து  கொள்வதையும் துல்லியமாக பிரித்தறிய முடிகிறது.


மழைப்பாடலில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் கை நீட்டினால் தொட்டுவிடக்கூடிய தூரத்தில் நின்று புன்னகைக்கின்றனர். ஆவலும் அச்சமும் மேலிட நானும் புன்னகைக்கிறேன்.


(2017ல் எழுதிய கட்டுரை)

நூல் மூன்று - வண்ணக்கடல்


நம் ஒவ்வொருவரின் முடிவுகளின் மீதும் வரலாறு தனக்கான ஒரு முடிவினை கொண்டிருக்கும் போலும். ஆனால் வரலாறு என்பதென்ன? ஒரு சொல். அதன் மீது ஏற்றப்படும் அர்த்தங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. சிலவற்றை மறக்கிறோம். சிலவற்றை மறு கண்டுபிடிப்பு செய்கிறோம். அக்கணத்தில் வாழ்ந்து விடும் உரம் பெற்றவர்களால் சொல்லப்படும் வரலாறே வண்ணக்கடல். சூதர்களின் ஒளிமிக்க சொற்கள் வழியாக உயிர்பெற்று வருகின்றது ஒரு இந்திய சித்திரம். ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்ட கங்கைக் கரையமைந்த நிலப்பகுதியின் அரசியல் களத்தினை இதற்கு முந்தைய நூலான மழைப்பாடல் அறிமுகம் செய்திருக்கும். அதிகாரத்திற்கே உரிய இறுக்கமும் தெளிவும் கொண்ட படைப்பது. அக்களம் தெளிவாக வரையப்பட்ட பின் களத்தில் நிற்கப் போகிறவர்களின் இளம் பருவத்தை விவரிக்கிறது வண்ணக்கடல்.


ஏழ்பனை நாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் மூதூர் மதுரையிலிருந்து அஸ்தினபுரி நோக்கி பயணிக்கிறான். இளநாகனாக நின்று இப்படைப்பை அணுகுவதே உகந்தது என்பது என் எண்ணம். முதல் முறை படித்தபோது பல இடங்களை கடக்க முடியாமல் இணைத்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டதற்கு இந்த முடிவினை எடுக்காததே காரணம் என நினைக்கிறேன். வரைமுறை அறியாத பரிசில் அளிக்கும் ஒரு நிலக்கிழாரை "வஞ்சமாக புகழ்ந்து" அதை அவர் அறிவதற்கு முன்னே அங்கிருந்து புறப்படுகிறான் இளநாகன். சொல்லினை மட்டும் துணையெனக் கொண்டு மதுரை முதூரை அடைகிறான். வடபுல சூதர்களையும் கூத்தர்களையும் சந்திப்பதன் வழியாக அஸ்தினபுரியின் சித்திரம் விரிகிறது. 


சதசிருங்கத்திலிருந்து குந்தி பாண்டவர்களுடன் அஸ்தினபுரி மீள்கிறாள். பூச்சிகளால் ஆனதாக சகதேவனின் பாதையும் மரங்களால் ஆனதாக நகுலனின் பாதையும் பறவைகளால் ஆனதாக அர்ஜுனனின் பாதையும் மிருகங்களால் ஆனதாக பீமனின் பாதையும் சொற்களால் ஆனதாக தருமனின் பாதையும் விரிகையிலேயே அவர்களின் குணநலன்கள் முழுமையாக விரிந்து விடுகின்றன. பீமனும் துரியோதனனும் தங்கள் உடல் மூலமாகவே மற்றவரை கண்டு கொள்கின்றனர். ஆணவம் நிறைந்தவர்களின் பேரன்பு அவ்வாணவம் சீண்டப்படுகையில் எழும் பெருவஞ்சமுமாக பீமனின் மீதான துரியோதனனின் அன்பு உருமாற்றம் கொள்கிறது. இந்தியாவின் தத்துவ தரிசனங்களை அவற்றின் உச்ச நிலை விவாதங்களை சூதர்கள் வழியே அறிகிறான் இளநாகன். மனிதர்களின் முடிவுகளின் மேல் வரலாறும் தத்துவமும் குலமும் குடும்பமும் குருதியும் கொள்ளும் மேலாதிக்கம் திகைக்கச் செய்கிறது. சைலஜமித்ரரின் வழியாக சாங்கியத்தை அறிகிறான் இளநாகன். பாண்டவ கௌரவர்களின் சந்திப்பு அங்கே நிகழ்கிறது. கௌசிக குலத்து கூத்தரான காரகன் வாலியையும் சுக்ரீவனையும் கொண்டு நிகழ்த்தும் அங்கத நாடகம் நுண்மையான நகைச்சுவைகள் நிறைந்திருக்கிறது. அக்கதை வழியாகவே பீமதுரியோதனர்களின் நட்பு வெளிப்படுகிறது. தார்க்கிக மரபுக் கூத்தரான காரகரின் சொற்களின் வழியே சௌனகரின் விழிகளில் பாண்டவ கௌரவர்களுக்கு இடையேயான வஞ்சத்தின் முதல் துளி விழும் அத்தியாயம் பிழை நோக்கி நிற்கும் மனதை தட்டி எழுப்பி அமரச் செய்கிறது.


சிவயோக மரபினரின் சிலிர்ப்பும் அச்சமும் கொள்ள வைக்கும் வெறியாட்டினை கண்ட பின் கீகடரை சந்திக்கிறான் இளநாகன். அதற்குள் அவன் புகார் காஞ்சியின் வழியாக தமிழ்நிலத்தை கடந்து விடுகிறான். சென்னியம்மை அளித்த பழைய சோற்றை உண்டபின் வீரகுந்தலன் எனும் மன்னனிடம் கீகடர் உரைக்கும் பாடல் நகைப்பை வரவழைத்தாலும் அது வரலாற்றின் நோக்கிய சிரிப்பாகவே மாறி நிற்கிறது. 


பிருகு பிராமணர்களுக்கும் யாதவ குலத்து ஹேகயர்களுக்குமான தலைமுறை பழி துரியோதனனின் வந்து முடிவடைவது போலத் தோன்றினாலும் அது துரோணர் வரைத் தொடர்கிறது. ஹ்ருதாஜி எனும் வேடர் குலப்பெண்ணில் பரத்வாஜ முனிவருக்கு பிறக்கிறான் துரோணன். அவனை வளர்க்கும் விடூகரால் அக்னிவேச குரு குலத்தில் சேர்கிறான். "வில் என்பது ஒரு புல்" என்பதில் தொடங்குகிறது அவன் அறிதல். தர்ப்பை அவனுடன் என்றும் இருக்கிறது. அவன் அடையாளமாக அவன் விடுதலையாக. புறக்கணிக்கப்படும் திறமையாளனுள் எழும் ஏளமும் கடுமையும் துரோணனில் கூடுகிறது. தனுர்வேத ஞானி சரத்வானின் மகள் கிருபியை மணந்து அமைகிறான். தன்னுள் காயத்ரி உச்சரிக்கும் பிராமணனை உதறாமல் அதே நேரம் ஷாத்ர குணத்தையும் இழக்க விரும்பால் துரோணருள் எழும் தத்தளிப்பே வஞ்சமாக அவருள் நிறைகிறது.


இந்திரவிழாவில் அர்ஜுனன் தன் தனிமையை உணர்கிறான். புகழும் மக்கள் திரளை கடந்து அத்தனை பேருக்குள்ளும் ஊறும் அவனை வென்று செல்லும் விழைவை காணும் போதே அவன் முதிர்ந்து விடுகிறான். நஞ்சூட்டப்பட்டு கங்கையில் எறியப்பட்டு பாதாளத்தின் கொடுநஞ்சை அருந்தி வெளிவரும் பீமனின் அத்தியாயம் அவனை வகுத்து விடுகிறது. காடுகளுக்குள் அலையும் கசப்பூறியவனாக அக்கசப்பினாலேயே பெரும் கருணை நிறைந்தவனாக மாறுகிறான். அடுமனையில் மந்தரரிடம் அவன் அர்ஜுனனை அமர வைத்து பாடம் கேட்கும் போது அவன் உள்ளம் வெளிப்படுகிறது.


இந்தியாவின் வணிக முறைகளையும் விரிவாக அறிமுகம் செய்கிறது நெற்குவை நகர் பகுதி. அர்க்கபுரியில் இளநாகன் சூரியனை அறிமுகம் செய்து கொள்வதோடு தொடங்குகிறது கர்ணனின் அத்தியாயம். மன்னனின் பாதுகைகளில வைத்து வழங்கப்படும் தங்க மோதிரத்தை ஏழைத்தாய் ஒருத்திக்கு அளிக்கிறான். இயற்கையின் பெரு நிகழ்வுகளை விண்ணக தேவர்களோடு ஒப்பிட்டு விரித்தெடுக்கப்படும் கதைகள் மேலும் துலக்கம் பெறுகின்றன. துருபதனால் அவமதிக்கப்பட்டு வெளியேறும் துரோணர் புல் மீது விழுகையில் குசையெனும் பேரன்னையின் உருவகம் அத்தகைய ஒன்று. அது போலவே சஹஸ்ரபாகுவான இருளுடன் கர்ணன் சண்டையிடுவதும்  புலரியில் சூரியனை காண்பதும் விவரிக்கப்படுகிறது. அங்க மன்னனை எதிர்க்கும் இடத்தினில் பெரு வீரனாக வெளிப்பட்டு பீமன் உமிழும் போது குன்றிப் போகிறான். அர்ஜுனனை எதிர்க்கும் இடத்தினில் அவமானப்பட்டு வெளியேறும் கர்ணன் துரோணரில் வெளிப்படும் சீற்றம் வெவ்வேறு விதமாக பொருளளிக்கிறது. 


"வில் என்பது ஒரு சொல்" என்பதில் தொடங்குகிறது அர்ஜுனனின் அறிதல்.அஸ்வத்தாமனுக்கும் அர்ஜுனனுக்குமான பகையை துரோணர் அஞ்சி அர்ஜுனனிடம் வாக்கு பெற்று அர்ஜுனனை முதல் மாணவனாக அறிவிக்கும் இடத்தில் அர்ஜுனன் வெறுமையையே உணர்கிறான். நிறைவற்ற பெரு வீரனுக்கான கீதை அப்போதே உருக்கொள்ளத் தொடங்கி விடுகிறது போலும்.


அருகநெறியினர் அறைசாலை அமைத்து சமணத்தின் முதல் ஐந்து படிவர்களை வழிபடும் சித்திரத்தையும் இளநாகன் காண்கிறான்.  ஆசுர நாடுகளை அடையும் போது ஒரு தலைகீழ் வரலாறு விரிகிறது. மாபலியும் இரண்யனினும் அணுக்கமாகின்றனர். இரண்யனுக்கும் பிரஹலாதனுக்குமான விவாதங்கள் ஜடவாதம் பிரம்மத்துடன் நிகழ்த்தும் விவாதமாக சித்தரிப்பது இன்றைய பொருள்முதல் வாத கருத்துமுதல் வாத சித்தாதங்களுடன் பொருந்துகிறது. அசுர குலத்தின் கதைகளுடன் அறிமுகமாகிறான் ஏகலவ்யன். துரோணர் அவனிடம் கட்டை விரலை கோரும் இடத்தினில் அவன் அன்னை சுவர்ணை கழுத்தறுத்து விழும் இடத்தில் மனம் திகைத்து நின்று விடுகிறது. ஏதாவது ஒரு வழியை கண்டறிந்து ஒழுகி விடத் துடிக்கும் நீரோடை போல மனம் யார் மீதாவது பழி சுமத்தி தப்பிக்க நினைக்கிறது. நான்கு விரல்களால் தன் குலத்தவர்க்கு அம்பெய்ய கற்றுக் கொடுக்கும் ஏகலவ்யனை எண்ணும் போது மனம் மெல்லிய அமைதியை உணர்கிறது. 


இளநாகன் அஸ்தினபுரியை நெருங்க நெருங்க கதை நகர்வின் போக்கும் தெளிவடைந்தபடியே உள்ளது. அரங்கேற்ற நிகழ்வில் அர்ஜுனனை எதிர்க்கும் கர்ணனுக்கு மணிமுடி சூட்டப்படுவதோ வண்ணக்கடல் நிறைவுகிறது.


அசுரர்கள் குறித்தும் நிஷாதர்கள் குறித்தும் வண்ணக்கடல் அளிக்கும் சித்திரம் புதுமையானது. பெருவிழைவாலும் பெருஞ்சினத்தாலும் உந்தப்படுகிறவர்களாக விவரிக்கப்படும் அசுரர்கள் ஒரு குலம் என்பதைக் கடந்து அசுரனாக தன்னை உணர்வது வலிமையின் எல்லை என்ற எண்ணத்தையும் விதைக்கிறது.


வண்ணக்கடலின் தொடக்கம் முதலே தேர்ந்த நகையாடல்களும் அவற்றினூடாக கூரிய வினாக்களும் எழுந்தவண்ணமே உள்ளன. மொழியிலும் நுண்ணிய வேறுபாடுகள் தெரிகின்றன. மதுரை மூதூரின் மொழியும் கலிங்கத்தின் மொழியையும் ஒப்பு நோக்கும் போது தொடங்கிய இடத்திலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்ட உணர்வேற்படுகிறது. தொன்மங்களும் தத்துவ விளக்கங்களும் மனித மனத்தோடு கொள்ளும் உறவுகளை உணர முடிகிறது. துரோணரின் வழியாக வெளிப்படும் தனுர்வேத சொற்களும் குதிரையேற்றத்தின் போதும் யானை ஏற்றத்தின் போதும் அவரின் வெளிப்பாடுகளும் தனியே எழுதப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியவை. புல்லின் தழல் என்ற குறு நாவலாக துரோணரின் அத்தியாயங்கள் மட்டும் தனித்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் மகாபாரதத்தை பொதுவாக அறிந்திருப்பதால் பின்வரும் நாட்களில் நடைபெற இருப்பவையோடு வண்ணக்கடல் கொண்டிருக்கும் தொடர்பினை உணர்ந்தறிய முடியும். அஸ்வத்தாமன் எனும் யானை அர்ஜுனனுள் விதைக்கும் அலைகழிப்பும் துருபதன் முன் துரோணர் வெகுண்டு நிற்பதும் அத்தகைய தருணங்கள். முழுக்கவே கலைஞர்களின் சொல்லில் நிற்பதால் வண்ணக்கடலின் வாசிப்பனுபவம் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அதேநேரம் ஆழமான உள்ளோட்டங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் நுண்தகவல்களை மேலு‌ம் நெருங்க பாரதவர்ஷம் குறித்து மேலும் அறிய வேண்டும். மற்றொரு மறு வாசிப்பினை கோரும் நூலாக நிற்கிறது வண்ணக்கடல்.


(2017ல் எழுதிய கட்டுரை)