Monday 2 September 2024

ஈசல் - எதிர்வினைகள் 2

ஈசல் சிறுகதை 


ஈசல் - எதிர்வினைகள் 1


ஈசல் என்றொரு சிறுகதை வாசித்தேன். கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் தத்துவம், கொஞ்சம் சமூகம், கொஞ்சம் மானுடம் எனச் செல்லும் பிரமாதமான எதிர்காலக் கதை.  


பல காலமாக சுரேஷ் ப்ரதீப்பின் பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தாலும், அதன் வழி 2010க்குப் பின் எழுத வந்தோரில் எனக்குப் பிடித்தவராக இருந்தாலும், மனதளவில் அவருடன் ஒரு வித நெருக்கம் / மதிப்புக் கொண்டிருந்தாலும், நான் படிக்கும் அவரது முதல் புனைவாக்கம் இதுவே. அவர் தொழில்நுட்பம் அல்லாத துறையில் பணியில் இருக்கிறார். ஆனால் ஓர் AI செயலியின் சாத்தியங்களைப் புரிந்து கொண்டு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கற்பனை செய்திருக்கிறார் என்பதே என் வியப்பு. 


நிச்சயம் வாசியுங்கள்.


எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் (முகநூலில்)


ஒரு 20 வருடங்களுக்கு முன்பாக ஆனந்த விகடனில் சரத்குமார் அவர்களின் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அவரிடம் இருந்த செங்கல் போன்ற செல்போனைப் பற்றியது அது. அதைப்பற்றி அவர் அவ்வளவு விதந்தோதிப் பேசியிருந்தார். அவருக்கு அழைப்பு வந்தாலும், அவரே அழைத்தாலும் பணம் கட்டவேண்டும். இவ்வளவு செலவேறியது தேவையா என்று கேட்டதற்கு எங்கிருந்தாலும் என்னைத் தொடர்பு கொள்ள முடியுமே அதற்கான செலவுதான் அது என்று சொல்லியிருந்தார். ஆனால் வெகு விரைவில் அது பயன்பாட்டிற்கு வந்தது. இன்றைக்கு வெளியில் போகும்போது யாராவது யாரையாவது சத்தமாய் கூப்பிட்டாலும் போன் பேசிக்கொண்டு இருப்பாங்க என்று இயல்பாய் நாம் கடந்து போகிற நிலையில்தான் இருக்கிறோம். இப்பொழுது துப்புரவுப்பணியாளர்கள் காலையில் அழைத்து குப்பையை கீழே கொண்டுவாங்க என்று சொல்கிறார்கள். அப்போது இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இன்னும் தொழில்நுட்பம் வளரும் வேகத்தில் இவைகள் எல்லாமே சாத்தியம்தான் என்றும் தோன்றுகிறது. இப்போதே மனிதர்களுக்கு ஒவ்வொரு இனத்திற்கும் அவங்களுக்குப்பிடித்த வரலாறு இருக்கிறது. இயல்பாய் உருண்டையாய் வளரும் பழங்கள் எல்லாம் சதுரமாகவும், இதயவடிவிலும் வளரும்படி செய்து விட்டோம். உயரமாய் வளரும் மரங்களை அறுவடை செய்ய வசதியாய் குட்டையாய் மாற்றிவிட்டோம். 6 மாதப் பயிர்களை 3 மாதத்திற்கும் 10 வருடம் கழித்து பயன் தரும் மரங்களை 3 வருடங்களில் பலன் தருவதுபோலவும் செய்து விட்டோம். நேற்று ஒரு நண்பரை சந்திக்க குடும்பமாய் ஒரு மிகச்சிறிய கிராமத்திற்கு சென்றிருந்தோம். எல்லா மரங்களுமே மிகக்குட்டையாய் இருந்தது. நின்று கொண்டே காயும் பழமும் பறித்துவிடலாம் என்பதுபோல. அதுபோல மனிதர்களையும் ஒருசிலரின் நோக்கங்களுக்கேற்ப அறுவடை செய்யவே இந்த தொழில்நுட்பங்கள். ஒருநாள் வீட்டில் என் கணவர் பால் காய்ச்சும்போது அப்படியே கைதவறி மேடைமேல் கொட்டிவிட்டார். இதைக்குறித்து நாங்கள் யாருமே ஒன்றும் பேசவில்லை. ஆனால் போனை திறந்தவுடன் பால் கொட்டி துடைக்கும் வீடியோக்கள் அப்படியே வரிசையாய் வந்ததைப் பார்த்து ரொம்ப பயமாகவே போய்விட்டது.நீங்கள் எழுதியிருக்கிறபடி நடக்காது என்று நாம் சொல்லவே முடியாது. நடக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. பயமாகவும் இருக்கிறது. சரளமாய் படிக்க முடிந்தது. சுரேஷ்க்கு எப்போதும் இருக்கும் நிகழ் கால கசப்பு அப்படியே எதிர்காலத்திற்கும் போய்விட்டது.



--

With Regards,


T.Daisy,

Trichy.

நிகழ்காலமும் எதிர்காலமும் கலந்து கட்டிய தொகுப்பாகப்பாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். 

எதிர்காலம் இத்தனை கொடூரமாக மாறிப் போகக் கூடும் என்பதை மறுக்க முடியாத நிலை தான் நிதர்சனம். நினைவுகள் தான் அனைத்திற்கும் காரணம் எனும் கருத்து மிக வித்தியாசம் 😊

ஜீரணிக்க சற்றுக் கடினமான கருத்தும் கூட. 

ஈசல் கதை எழுத்தாளர் சுஜாதா வின் நடை ஆனால் மிக வித்தியாசமான நம்மைச் சுற்றியுள்ள உலகை, நடப்புகளை, மனிதர்களை நன்கு கூர்ந்து கவனித்து எழுதப்பட்ட கற்பனைக் கதை 👍


மீனா மனோகர்


ஈசல் - எதிர்வினைகள் 1

ஈசல் சிறுகதை


ஈசல் கதையைப் படித்தேன். சில்ற ,பொன்னுலகம் கதைகள் வரிசையில் வைக்கக்கூடிய கதை. ஆனால் இது அவை இரண்டையும் விட முக்கியமானது. கடைசி வரியை மட்டும் தவிர்த்திருக்கலாமோ என்று முதலில் தோன்றியது. பிறகு அதுவும் சரிதான் என்று சமாதானம் உண்டாகிவிட்டது. எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கற்பனைகள் / கவலைகள் மிகையாகும்போது சலிப்பு ஏற்படுகிறது. இதில் வரும் அறிக்கை கொஞ்சம் அப்படி எண்ண வைத்தது. நினைவின் சுமை பற்றி அவ்வப்போது யோசிப்பதுண்டு. ஞாபகங்கள் மனிதனுக்கு பலமா பலவீனமா என்ற குழப்பம் தீரவில்லை. சலபதி ஒரு இடத்தில் பேசும்போது இந்தக் கதையில் கடைசியில் வரும் கடவுளின் இருப்பிடம் போன்ற ஓர் இடம் சூரியப் புயலில் சேதமடைந்தால் ஏற்படும் இழப்பு பற்றிக் கூறினார். அதுவும் இதேபோன்ற ஒரு கதைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்.


ஶ்ரீனிவாச கோபாலன்


*****

சிறுகதை அற்புதமாக வந்துள்ளது. படித்ததும் ஒருவித நடுக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு அபாயத்தை முன்னறிவிப்பு செய்வதுபோல் இருக்கிறது. 


வாழ்த்துக்கள் 💐 


நன்றி!


காமராஜ் மணி


***** 

நிச்சயமாக இது ஒரு பாய்ச்சல் தான். முடிவில் இறைவன் தானாகவே உருவாக்கப்பட்டிருப்பதை அறியும் போது அதிர்ச்சி உருவாகவில்லை. என்ன அது AI மூலமாக உருவாக்கப்பட்டது அழிப்பது சாத்தியமில்லை. 😀❤️😀

இறைவன் உருவகம் மிகப் பொருத்தமாக அதன் காரணங்களோடு பண்டைய புராண காரணங்களான படைத்தல் அழித்தல் ஆக்கம் போன்ற கருதுகொள்களை அடிப்படையாகக் கொண்டு தானே உருவாகியிருக்கிறது. இந்த இறைவனை அஃறிணையில் தான் சொல்ல முடியும்.


எம்.தண்டபாணி