Friday 5 July 2024

சாரு நிவேதிதாவை வாசித்தல் 2

எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக அவர் பேச்சில் வந்து விழுகின்றன. உதயாவிற்கு கழிப்பறை செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் அந்தப் பேச்சிலிருந்து விடுதலையே கிடைப்பதில்லை. குணரத்தினம் ஒரு மார்க்ஸியரும்கூட. 


அவர் வீட்டில் தங்கி இருக்கும்போது மூன்றாம் நாள் இரவு உதயாவுக்கு ஒரு கனவு வருகிறது. அவன் எங்கோ கடத்திக் கொண்டு போகப்படுகிறான். தான் கொல்லப்படப் போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. அதோடு மூத்திரம் வேறு முட்டுகிறது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். தான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கிறான். இனி எழுதவே போவதில்லை, உயிரோடு மட்டும் விடுங்கள் அதோடு மூத்திரம் பெய்யவும் அனுமதியுங்கள் என்று கெஞ்சுகிறான். அவனுடைய கால்சராய் நனைந்து போயிருக்கிறது. குணரத்தினத்தின் வீட்டில்தான் தூங்கிக் கொண்டிருக்கிறான்.





சாரு நிவேதிதாவின் படைப்புலகைப் புரிந்து கொள்ள இதுவொரு முக்கியமான கண்ணி என நினைக்கிறேன். குணரத்தினம் வெறுமனே பேசிக் கொண்டிருக்க மட்டுமே செய்கிறார். ஆனால் அந்தப் பேச்சு உதயாவுக்கு பல்வேறு ஞாபகங்களை இழுத்துவந்து உயிரச்சத்தை அவனிடம் உருவாக்கி விடுகிறது. மேம்போக்காகப் பார்க்கும்போது உதயாவின் அச்சம் அர்த்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் அதீத தன்னுணர்வு கொண்ட உதயாவிற்கு அந்த சொற்களின் வழியாகவே மிகப்பெரிய வன்முறையை கற்பனை செய்து பார்த்துவிட முடிகிறது. எந்தவொரு வன்முறையும் நிகழ்ந்த பிறகு எல்லாவிதமான சமன்பாடுகளையும் மாற்றி விடுகிறது. அறிவுடைய யாருமே போரைத் தள்ளிப்போடவோ அல்லது தவிர்த்து விடவோதான் விரும்புகின்றனர். ஏனெனில் போர் சமூகத்தில் பல்வேறு காரணிகளால் உருவாக்கி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமைதியை உடைத்து விடுகிறது. எல்லோரும் சந்தேகப்படத்தக்கவர்கள் துரோகிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. உயிரோடு இருப்பது மட்டுமே செய்யக்கூடிய ஒற்றைச் செயலென்று ஆக்கிவிடுகிறது. உதயாவின் அச்சத்தை இந்தப் பின்னணியில் வைத்தே நான் புரிந்து கொள்கிறேன். அதுவொரு தனிமனிதனின் சுயநலமான அச்சமல்ல. மொத்த சமூகமும் இரக்கமின்மையை வெளிப்படுத்தும் தருணத்தை முன் உணரும் ஒரு அகம்‌. இந்த அத்தியாயத்திற்கு சில அத்தியாயங்களுக்கு முன்புதான் கீழ் வெண்மணி இந்த நாவலில் இடம்பெறுகிறது. நாஜிப் படைகளால் எரிக்கப்பட்ட ஒரு நகரம் வருகிறது. குணரத்தினத்தின் பிசிறற்ற தர்க்கப்பூர்வமான பேச்சின் உள்ளுறையாக அமையும் வன்முறையை உதயா உணர்வதே அவனை நிலை கொள்ளாமல் அடிக்கிறது. கதை சொல்லியின் இந்த அக இயல்பு சாருவின் படைப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு முக்கியமான கண்ணி.

Thursday 4 July 2024

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

உத்தேசமான நினைவுதான். Newshunt என்றொரு செயலி பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அந்தச் செயலில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டி நூல்களை வாசிக்க முடியும்‌. நான் ஜீரோ டிகிரி நாவலை அப்படித்தான் வாசித்தேன் என நினைக்கிறேன். அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்பு. ஆனால் நூலாக இல்லாமல் ebookஆக படித்ததும் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது‌. அந்த வயதில் கடுமையான அதிர்ச்சியை அளித்த நூல். தன்னுடைய மாதவிடாய்க் குருதியை(நாவலில் சாண்டை என்றே எழுதப்பட்டிருக்கும்) தன்னைக் கொடுமைப்படுத்தும் குடும்பத்தினருக்குச் செய்யும் உருளைக்கிழங்கு பொறியலில் ஒரு பெண் கலந்துவிடுகிறாள். அதுவும் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் கொடுமையை அனுபவிக்கிறாள். அந்தச் சித்திரிப்பை மறக்க முடியாமல் ரொம்ப நாளாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் முதல் நாவலை வாசித்தேன். இவற்றிற்கெல்லாம் முன்பே மனம் கொத்திப் பறவைத் தொடரை ஆனந்த விகடனில் வாசித்திருந்தேன். சாருவின் எழுத்துக்களாக ஒரு மாதத்துக்கு  முன்புவரை நான் வாசித்திருந்தது இவ்வளவுதான். இன்று எக்ஸைல்(வாசித்துக் கொண்டிருக்கிறேன்)  பெட்டியோ என்ற இரு நாவல்களைத் தவிர அவருடைய எல்லா நாவல்களையும் வாசித்துவிட்டேன். நேநோ, தாந்தேயின் சிறுத்தை, கனவுகளின் நடனம் என்ற நூல்களையும் இந்த ஒரு மாதத்திற்குள்ளாக வாசித்து இருக்கிறேன். எக்ஸைல் மற்றும் பெட்டியோவையும் இந்தத் தொடரினை எழுதி முடிப்பதற்குள் வாசித்துவிடுவேன்! ஒரு சில எழுத்தாளர்களை மட்டுமே இவ்வளவு குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளரைக் கூட அவர் எழுத்துக்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு இவ்வளவு நீண்ட காலம் வாசிக்காமலும் இருந்ததில்லை. ஏன் இந்த முரண்? இந்த முரணைச் சொல்லவும்தான் இந்தத் தொடரைத் தொடங்கினேன். 


(தொடரும்)