Thursday 4 July 2024

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

உத்தேசமான நினைவுதான். Newshunt என்றொரு செயலி பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அந்தச் செயலில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டி நூல்களை வாசிக்க முடியும்‌. நான் ஜீரோ டிகிரி நாவலை அப்படித்தான் வாசித்தேன் என நினைக்கிறேன். அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்பு. ஆனால் நூலாக இல்லாமல் ebookஆக படித்ததும் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது‌. அந்த வயதில் கடுமையான அதிர்ச்சியை அளித்த நூல். தன்னுடைய மாதவிடாய்க் குருதியை(நாவலில் சாண்டை என்றே எழுதப்பட்டிருக்கும்) தன்னைக் கொடுமைப்படுத்தும் குடும்பத்தினருக்குச் செய்யும் உருளைக்கிழங்கு பொறியலில் ஒரு பெண் கலந்துவிடுகிறாள். அதுவும் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் கொடுமையை அனுபவிக்கிறாள். அந்தச் சித்திரிப்பை மறக்க முடியாமல் ரொம்ப நாளாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. அதன்பிறகு சில வருடங்கள் கழித்து எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் என்ற சாருவின் முதல் நாவலை வாசித்தேன். இவற்றிற்கெல்லாம் முன்பே மனம் கொத்திப் பறவைத் தொடரை ஆனந்த விகடனில் வாசித்திருந்தேன். சாருவின் எழுத்துக்களாக ஒரு மாதத்துக்கு  முன்புவரை நான் வாசித்திருந்தது இவ்வளவுதான். இன்று எக்ஸைல்(வாசித்துக் கொண்டிருக்கிறேன்)  பெட்டியோ என்ற இரு நாவல்களைத் தவிர அவருடைய எல்லா நாவல்களையும் வாசித்துவிட்டேன். நேநோ, தாந்தேயின் சிறுத்தை, கனவுகளின் நடனம் என்ற நூல்களையும் இந்த ஒரு மாதத்திற்குள்ளாக வாசித்து இருக்கிறேன். எக்ஸைல் மற்றும் பெட்டியோவையும் இந்தத் தொடரினை எழுதி முடிப்பதற்குள் வாசித்துவிடுவேன்! ஒரு சில எழுத்தாளர்களை மட்டுமே இவ்வளவு குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஆனால் ஒரு எழுத்தாளரைக் கூட அவர் எழுத்துக்களுடன் பரிச்சயம் ஏற்பட்டு இவ்வளவு நீண்ட காலம் வாசிக்காமலும் இருந்ததில்லை. ஏன் இந்த முரண்? இந்த முரணைச் சொல்லவும்தான் இந்தத் தொடரைத் தொடங்கினேன். 


(தொடரும்)

No comments:

Post a Comment