Friday 1 December 2017

ஒளிர்நிழல் - எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்கள்

தனிப்பட்ட முறையில் எனக்கும் முகநூலிலும் ஒளிர்நிழல் நாவல் குறித்து வந்த எதிர்வினைகள் மற்றும்  விமர்சனங்களை தொகுத்துள்ளேன். நாவல் குறித்த பார்வையை பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

அனிதா

வணக்கம். 

சற்று முன்பு உங்கள் ஒளிர் நிழல் நாவலை நிறைவு செய்தேன். வெகு சிறப்பாக இருந்தது என்ற ஒற்றை வரி நிச்சயமாக போதாது.

வாசகர் சொல்ல வேண்டிய அனைத்தையுமே நீங்களே மகேந்திரன் முத்துசாமி கடிதம் வாயிலாகவும் ஜெயக்குமாரின் உரை மூலமாகவும் சொல்லி விடுகிறீர்கள். இனி புத்தகம் பற்றி நான் சொல்ல வேண்டியவற்றை சொன்னால் அது உங்கள் வரிகளையே உங்களுக்கு திருப்பி சொல்வது போலத்தான். 

ஒளிர் நிழல் உண்மையிலேயே எழுதாத அத்தியாயங்களை தன்னுள் கண்டுணர உதவும். ஓர் நிறைவை தருகிறது. எனவே நீங்கள் உங்கள் தோளினை பலமாகவே தட்டி கொள்ளலாம். 

ஒரு சிறந்த புனைவு வாசிப்பவரையும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு பொருத்தமான கதாபாத்திரமாக்கி கதையோடு ஒன்ற வைத்து விடுகிறது. என்னையும் அவ்வாறு தான் செய்துவிட்டது.

மலம் பற்றிய வர்ணனையையும் பெண்கள் எப்போது வெகு அழகாகவும் கவர்ச்சியான தோற்றமும் கொள்வார்கள் என்ற வார்த்தைகளிலும் உங்கள் சிந்தனையும் மொழியும் அபாரம். சிலாகிக்க நூல் முழுவதும் ஏகப்ப்பட்ட அம்சங்கள் இருக்கின்றது எனக்கு சொல்ல தெரியவில்லை.

உங்கள் அடுத்த படைப்பும் வெளியாகிவிட்டதாக அறிகிறேன். வாசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போவது துரதிஷ்டமே. என் செய்வேன்.

என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்.

நன்றி

விஷ்ணு பிரகாஷ்

சுரேஷ் பிரதீப்பின் - "ஒளிர் நிழல்"

       நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இறந்த போது கூட மனதில் துயரம் ஏற்படுவதில்லை என்பதை கவனித்திருக்கிறேன். மனிதன்  பெரும்பாலும் பிறர் மரணங்களுக்காக துயரம் கொள்வதில்லை. சில மரணங்கள் நம்மை மரணத்தை பற்றி நினைக்கச் செய்து ஒரு வித பயத்தினை மனதில் ஏற்படுத்துவதுண்டு. துக்க விசாரிப்புகள் அபத்தமாகவே தோன்றுவதுண்டு. அதையும் மீறி சூழல் நம்மை ஒருவித உணர்வுகளுக்கு கொண்டு செல்லும். மனிதன் முழுக்க சுயநலம் மிகுந்தவன் என்பதை மறக்கச் செய்ய சற்றே மழுங்கச் செய்யவே நமது சமூகத்தின் பெரும்பாலான நூல்கள் முயன்று கொண்டிருக்கின்றன.

       சில நூல்கள் முற்றிலும் இருளை நோக்கி பேசும்போது ஒருவித அச்சத்தை அடைகிறோம். மனித இயல்புகளின் போலித்தனங்களை விலக்கி அதன் உக்கிரத்தை காட்டும் படைப்புகள் நம்மை மறு விசாரணை செய்கின்றன. அனைத்தையும் விலக்கி இருளின் முன் நிற்க வைக்கின்றன. தந்தையின் மரணத்திற்கு பின் தற்கொலை செய்து கொள்ளும் சுரேஷ் பிரதீப்பின் ஒளிர் நிழல் அப்படிப் பட்ட ஒரு நாவல்.
வெகு நாட்களாக வாசிக்க நினைத்திருந்தாலும் சற்றே பொறாமையின் காரணம் வாசிப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.
நாவலில் பெரியண்ணனிலிருந்து குணா வரை நான்கு தலைமுறைகளின்  வரலாறும் அவை எதிர்கொண்ட எதிர் கொள்ளும் சிக்கல்களும் ஒரு இழையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

       நாவலின் சிக்கலான கட்டமைப்பை தாண்டி சக்தி, குணா, அருணா, வெற்றி நான்கு முக்கியமான கதாபாத்திரங்களின் மூலமாக நாவலை உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன்.

      சக்தி எல்லாவற்றையும் வரையறை செய்கிறான். பொருளியல் அடிப்படையில்  சமூகம் பற்றி சிந்திக்கிறான். ஆனால் அவன் தன் அருணாவை பாலியல் ரீதியாக சுரண்டுகிறான். அதற்கு அவளும் ஒத்துழைப்பு கொடுக்கிறாள். அதற்கே உரிய பாசாங்குகளை இருவரும் அடியாழத்தில் உணர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அப்பால் இருக்கும் சக்தியை அவளால் வெல்ல முடியாத போது வன்மம் கொள்கிறாள். தன் இயலாமையை உணரும் தருணத்தில் தன் கணவனோடு இயல்பாக இணைந்து கொள்கிறாள்.

      குணா காவலாளி சுந்தரத்தின் தற்கொலையை கண்ட பின் வாழ்வின் அலைக்களிப்புக்குள் சிக்கித் தவிக்கிறான். வாழ்க்கையின் உள்ளே நுழையத் தயங்கும் தயக்கமும் தாழ்வு மனப்பான்மையும் கூச்சமுமாக நிற்கிறான்.

சக்தியின் குரூரம் அரசியலில் அவன் பிரவேசம் தீர்க்கமாக சித்தாந்த ரீதியாக தன்னை காட்டிக்கொள்ளும் திறமை, பின்னாளில் அருணாவின் இரண்டாவது பெண் குழந்தை தனக்கு பிரச்சினையாக வரும் என்பதை அறிந்து தீர்த்துக் கட்டுவது, அதன் பின் வரும் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக எதிர் கொள்வது எங்கும் இருளை நோக்கி தீர்க்கமாகச் செல்கிறான்.

வெற்றியின் தடம் புரண்ட வாழ்க்கை அதன் காரணமாக கோமதியின் மீதான குரூரம் தண்டனையில் மாட்டிக்கொள்வது ஒருபுறமும் அவனை விட குரூரமாக இருக்கும் சக்தி தன் அறிவால் நேர்த்தியாக மாட்டிக் கொள்ளாமல் குற்றத்தில் ஈடுபடும் குரூரம் மறுபுறமுமாக தொட்டுச் செல்கிறது.

     குணாவிடம் மட்டுமே ஒளியின் சாயல் தென்படுகிறது. அவனை மையமாக வைத்து அனைத்தும் நகர்கின்றன. அவனின் மனமும் இருளின் பிரதிபலிப்புகளை கண்டாலும் அவன் பாதை மாறுவதில்லை.

      அருணா குணாவை திருமணம் செய்து கொள்வது சக்தியை வெல்லும் பொருட்டா?
அல்லது குணா அருணாவின் கணவரும் குழந்தையும் கொல்லப்பட்டதின் நியாயம் கேட்பது தன்னை கண்டடைந்து கொள்ளும் பொருட்டா?

     தன் தனித்த மொழி நடையின் மூலம் இயல்பாக மனித மனங்களின் ஆழங்களை பிரதிபலிக்கிறார் சுரேஷ். வாழ்த்துக்கள்.

Ashok Santhanam

ஒளிர்நிழல் / OlirNizhal

Just completed reading the novel, I just wanted to write the immediate thoughts that rise in my head after finishing it. The greatest strength of the novel is the razor sharp language of the writer, hard to believe it is his first novel in Tamil. Such clarity and seamlessness in writing. The portions in the novel where he captures the darker emotional turmoil are brilliant. Especially the multilayered emotions underpinning any act. There is an underlying darkness in the novel, especially the way the emotions are deconstructed to really show the starker realities. But it is no way shocking, as you read it you only feel they are real. That is a real hallmark of any literary work to bring it to our own notice the things we always knew.
The strength of the novel is in the ease with which the writer has effortlessly traveled into the many layers of the character’s subconscious.

The novel is a metafiction about the writer’s novel OlirNizhal, like a novel within another novel. This creates this confusion of which is real and which is fictional, in a way life itself is a fiction we create for ourself is the underlying premise of the novel. We are constantly creating a fictional account of ourself, it is only through our stories we say ourself we come to know who we are. Also the stories we don’t even acknowledge also reveal much more about who we really are. This duality and fictional nature of our life come out really well due to the metafiction form of the novel.

Although it has a dalit social life as its platform, it is a novel of the individual, it has very little substance to read it as a social novel.

அகில்குமார்

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்:

தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்த தலைமுறையின் வாழ்வு கொஞ்சம் பரிதாபகரமானதுதான். ஆனால் அதே வேளையில் அதற்கு முன் பிறந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. பொருள் சேர்த்தல் என்பது அந்தந்த சூழலுக்கேற்ற பேராசை மனப்பான்மையுடனே இருந்திருக்கிறது. ஆனால் தனியார்மய, உலகமயத்தின் விளைவுகளால் இந்தப் பேராசை அதன் அதியுட்சத்தை அடையும் காலம் தொண்ணூறுகளாக ,இரண்டாயிரமாக இருந்திருக்கிறது. மென்பொருள் துறையின் வளர்ச்சியும் அது உருவாக்கும் புதிய பணக்காரர்களும் அனைவரையும் பிரமிக்க செய்ய வீதிக்கொரு பொறியியல் கல்லூரி துவங்கப்படுகின்றது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையைவிட அதிகமாக ஆட்கள் கிடைக்க, சம்பளம் குறைகிறது. தரமற்ற கல்வியின் மூலம் உருவாக்கப்படும் மாணவர்களைத் தேர்வு செய்ய நிறுவனங்கள் தயங்குகிறது. வேலை இருந்தாலும் தகுதியின்மை காரணமாக நிரப்ப ஆள் இல்லாததால் வேலையின்மை உருவாகிறது. வேலையின்மையின் காரணமாக மன உளைச்சல் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த சமூக வெறுப்பாக இது திரும்புகிறது. அது அமைப்புகளின்மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. வாழ்வின் மீதும், ஒவ்வொரு தனிமனிதரின்மீதும் இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் எழுதவரும் ஒருவரின் எழுத்து இதன் பாதிப்புகளைக் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அது லட்சியவாதங்களை அலட்சியம் செய்கிறது. " முற்றொழுங்கின் மீதான கற்பனைகள், நூறு சதவீதத் திறன் அடைவதற்கான போலியான லட்சியவாதங்கள் இளவயதில் ஏன் கொடுக்கப்படுகின்றன? நான் அடையாததை என் சந்ததி அடையட்டும் எனும் எளிய மூதாதையின் எண்ணமா அது?" என்று கேட்கிறது.அது வெறும் எண்ணமல்லாமல் போலியான செயல்கள்மூலம் தன்னைச் சார்ந்த அமைப்பொன்றின் உறுப்பினரைக் கொண்டு பெருமை அடைவதாகவும், அவரைப் பயன்படுத்தி பொருளியல் தேவையை பூர்த்தி செய்துகொள்வதாகவும், ஒருவகையான பயன்படுத்திக் கொள்ளலாகவும் எஞ்சுகிற பொழுது அந்த அமைப்பு தேவையா என்ற எண்ணம் எழுகிறது.

ஆக ஒட்டுமொத்தமாக குடும்ப உறவுகள் பொருளியல் சார்ந்ததாக மாறிவிட்ட காலத்தில் பெற்றவர்கள் குழந்தைகளுக்கு செய்யும் செலவை ஏன் கணக்கு வைத்து வசூலிக்கக்கூடாது என நாவல் கேள்வி எழுப்புகிறது. பிறப்புறுப்பில் விந்தை செலுத்தும் எளிய செயல்தானே காதல் என்று கேட்பதற்கு விடையாகவே சக்தி என்ற கதாபாத்திரத்தை படைத்து அருணாவில் விந்தை செலுத்துகிறது. அதற்கு முரணியக்கமாக குணாவை உலவ விடுகிறது. இருத்தலிய, அபத்தவாத கூறுகள் இந்நாவலில் தொடர்ந்து வருகின்றன.அறம் என்பது என்ன? அது அவரவரை பொறுத்ததுதானே என்ற கேள்வி எழுகிறது.

நிழலின் தன்மையாக ஒளிர்தல் இல்லாத பட்சத்திலும் அப்படி மாற்றிக்கொண்டு வாழ வேண்டியதன் தேவை இங்கு இருக்கிறது. அந்த நடிப்புதான் நாவலில் வரும் சுரேஷின் தந்தை இறந்தபிறகு சுரேஷ் அக்காவையும், அண்ணனையும் கட்டி அழுவதும் , சக்தி அருணாவிடம் காட்டுவதும், அருணா சக்தியிடம் காட்டுவதும், 
அருணா சந்திரசேகரிடம் காட்டுவதும், மீனா குணாவிடம் காட்டுவதும் , ஆனால் இயல்பென்ற ஒன்று எது என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. இது இயல்பா என்றெண்ணும்போதே அது இயல்பில்லாமல்தான் போய்விடுகிறது. இதை திட்டமிடாத நடிப்பென்று சொல்லலாம். ஆனால் சக்தி இளைஞர்களிடத்தில் சொற்பொழிவாற்றிவிட்டு காரில் சென்று சிரிக்கும்போது அது திட்டமிட்டதாகிறது. இருந்தாலும் சரி, தவறுகளை நோக்கி இதை எடுத்துச்செல்லாமல் தனிமனித இருத்தலின் தேவைக்கான கூறாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட விளைவென்பதே சமூகத்தின், உறவுகளின் மீதான நம்பிக்கையின்மையில் உருவானதாக இருக்கிறது. இப்படித்தான் வாழ முடியுமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதுதான் சுரேஷ் பிரதீபை அத்தனை ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளே என சொல்ல வைப்பதாய் தோன்றுகிறது. இதனால் அறம் என்பதே கேள்விக்குறியாகிறது. அறம் என்பதே இல்லையென்பதைத்தான் இது ஆமோதிக்கிறது.

மனித அக உணர்வுகளை எழுதுவது சுரேஷ் பிரதீப்பிற்கு இயல்பாக கைகூடி வருகிறது. அதுவே அவரது பலம் என்று தோன்றுகிறது. ஆனால் மற்ற இடங்களில் அவரது நடை சற்று மாறுபட்டு மிகவும் எளிய நடையாகிவிடுகிறது. இந்த நாவலுக்கு மையம் அமைந்துவிடக்கூடாதென்றுதான் இந்த வடிவத்தை அவர் தேர்ந்தெடுத்தாரென்று தோன்றுகிறது. காலத்தை முன்பின்னாகப் போட்டாலும் தவிர்க்கமுடியாமல் மையம் உருவாகிவிடுகிறது. இந்த வடிவமே கதாபாத்திரங்கள் யார் எவரென புரிந்துகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது. நாவலின் முதல் பாதியில் இருக்கும் சுவாரசியம் கிராமத்தின் கதைகளை சொல்ல ஆரம்பித்த பிறகு கொஞ்சம் குறையத்தான் செய்கிறது.

"துயர்கொண்டு அழுவதற்கு முந்தைய கணம் உதடுகள் துடித்துக் கண்கள் கலங்கி முகத்தசைகள் இழுபடுவதைவிடக் கவர்ச்சியான தோற்றம் பெண்ணுக்கு வாய்த்துவிட முடியாது" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறகு ஒரு அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதையில் வரும் முழுமை குறித்த வரிகள் அருமையாக வந்திருக்கிறது

" கால் வளைந்து உடல் சூம்பி முலை வற்றி முகம் சுருங்கி நிற்பவள் ஓரழகு.  உடல் நிமிர்ந்து விழி சரிந்து தோள் நிமிர்த்தெழுபவள் மற்றோரழகு.

சீழ் ஒழுகி உடல் கிழிந்து தோல் சுருங்கி பற்களின்றி சிரிப்பவளே. முகம் பொலிய உடல் ஒசிய முலை நிமிர விரைவடியில் நடப்பவளே

குறையென ஏதுமுண்டோ பெண்ணில் முழுமை முழுமை முழுமை முழுமையென ஏங்குகிறதடி நெஞ்சு"

பிறகு பாம்பு மாத்திரையை உவமையாக்கும் வருணனைகள் . "பல நூறு பாம்பு மாத்திரைகளை ஒன்றாக வைத்துக் கொளுத்தியது போல, தடித்துக் கருத்த பனைமரங்கள் அந்தக் குறுகிய சாலையை நோக்கிக் குனிந்திருந்தன. வெகு நேரம் உற்றுப் பார்த்தால் மேலே வந்து விழுந்து விடும் என்ற பயத்தினை ஏற்படுத்தக்கூடியவை. நிறைந்த கருமையில் எச்சில் துப்பியது போல, நாங்கள் பயணித்த பேருந்து அந்தச் சாலையில் ஒளியையும் ஒலியையும் கலங்கடித்துச் சென்றது.பேருந்துக்கு வெளியே இருள் அடர்த்தியாகத் திரண்டிருந்தது. முழித்துப் பார்க்கும் கண்களென இடையிடையே தென்பட்ட குடிசைகளின் வெளிச்சம் என்னை அதிரச் செய்து கொண்டிருந்தது. வெளிச்சங்கள் தென்படாமலாகி அடர் இருள் சூழ்ந்துகொண்டபோது தனித்து விடப்பட்டவன் போல உணர்ந்தேன்" 

"ஒன்றைச் செய்து முடிக்கும்போது அது எவ்வளவு அற்பமானதெனினும் அல்லது எவ்வளவு உயர்வானதெனினும் மனதில் எழும் நிம்மதி ஒன்றுதான் போல" என்று சுரேஷே சொல்வதுபோல ஒளிர்நிழலை முடித்தபிறகு ஒரு நிம்மதியையும், விடுபடலையும் அவர் உணர்ந்திருப்பாரென்று எண்ணுகிறேன். பொதுவாகவே வயது குறைவானவர்களின் புனைவைப் படிக்கும்போது பெரியவர்களுக்கு எழும் எண்ணம் " இவன்லாம் என்ன சொல்லிருக்கப் போறான்" என்பதுதான். பெரியவர்கள் என்றால் வயதானவர்களை மட்டும் எண்ணிக்கொள்ள வேண்டியதில்லை. இருபத்து ஐந்து வயதில் இருப்பவர்களுக்கு இருபது வயது உள்ளவரே ஒண்ணும் தெரியாத சின்னப்பையன்தான். ஆனால் நாற்பது வயதுள்ளவர் இருபத்தி ஐந்து வயதுள்ளவரை நோக்கி இதைச் சொன்னால் இருபத்தி ஐந்து வயதுள்ளவர் பொறுத்துக்கொள்ளமாட்டார். ஆக மனித இயல்பாக, அகங்காரமாக மாறியிருக்கும் இந்தத் தன்மைகளைக் கடந்து சுரேஷ் பிரதீப்பை எவரும் வாசிக்கலாம். வயது வெறும் எண் என்பதை நிரூபிப்பவர்களில் சுரேஷும் ஒருவர். சக வயது இளைஞரான சுரேஷ் பிரதீப்பை கொஞ்சம் பொறாமையோடு பார்க்கும் அதே நேரத்தில் அவருடைய இந்த முதல் முயற்சிக்காக அவரை மனதார வாழ்த்துகிறேன். ஒரு நம்பிக்கைக்குரிய படைப்பாளியாக அவரை நிச்சயம் குறிப்பிடலாம்.

1 comment: