Thursday 3 June 2021

அற்றுப்போதல்

அறையில் இரண்டு மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த கடிகாரத்தின் முள்துடிப்பு விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண் விழித்தது மாடி அறை என்பதால் வாகனங்களின் எஞ்ஜின் சத்தம் மெல்லக் கேட்டது. மனம் இத்தனை சத்தங்களில் இருந்தும் ஏதோவொன்றை உருவி எடுத்துவிட்டிருந்தது. கொஞ்ச நேரம் எதற்குமே எதிர்வினை புரியவில்லை அது. சில கணங்கள்தான். மீண்டும் அத்தனை கவலைகளும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இக்கவலைகளிலிருந்து தப்பிச்செல்லதான் கீதை நமக்கொரு மார்க்கத்தைச் சொல்கிறது போலிருக்கிறது. 'ஆகவே செயல்புரிக!' ஆனால் ஆனால் செயல் எதுவும் செய்யாத போது எங்கிருந்தது வந்தது இந்த அமைதி? சுற்றி இருக்கும் எதுவும் மாறாத போது உள்ளே இருக்கும் ஒன்று மாறுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் மாறியது. வெகுசில கணங்கள் மட்டும்தான் என்றாலும் மாறியது. மாற்றம் நிகழ்ந்த அந்த கணத்தை தற்போது திரும்ப எழுத இயலவில்லை. எதன்மீதும் கருத்தற்ற நிலை உருவானது என்று சொல்லலாமா? பயமற்ற நிலை என்றுகூட சொல்லலாம். சிந்தனையற்ற நிலை? இதுகூட சரியாகத்தான் தெரிகிறது. மொத்தத்தில் அதுவொரு 'அற்றநிலை'. உயிரற்ற நிலையும்கூடதான். அப்படியெனில் உயிர்தான் உள்ளிருந்து உடற்றும் துன்பமா? பசியா? காமமா? அச்சமா? அப்படியெனில் முக்திநிலை என்பது உயிரற்று போவதுதானா? தற்கொலை செய்து கொள்கிறவர்கள் உடனடியாக முக்தியை எய்துவிடுகிறார்கள் போலிருக்கிறது. தற்கொலையை தவறென்று சொல்வது ஒரு அரசாங்க மனநிலை. ஆமாம் அரசாங்கம் நடப்பதற்கு மனிதர்கள் உயிரோடு இருந்தாக வேண்டும். ஆகவே பெரிய பெரிய பிரச்சாரங்கள் வழியாக அரசாங்கம்தான் இங்கு தற்கொலைகளின் மீதான ஒரு எதிர்ப்புணர்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறது. மற்றபடி முக்தியை விரும்பும் ஒருவன் எப்போதும் சாகலாம். உயிரோடும் இருக்க வேண்டும் முக்தியோடும் இருக்க வேண்டும் என்ற மெய்ஞானப் பேராசைதான் ஞானிகளை கடுமையான சாதகங்களை செய்யவும் லட்சியவாதிகளை பெரிய செயல்களைச் செய்யவும் தூண்டுகிறது. ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி. மெய்ஞானம், லட்சியவாதம், தற்கொலை அனைத்தும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்கின்றன.

2 comments:

  1. இலைகளை தெருக்களை உங்கள் கால் நகங்களை பார்க்கவும்
    வீட்ல சின்ன சின்ன வேலை கொடுத்தா செய்ங்க
    வாழப்பூ வடை சாப்பிடுங்க
    போங்க வாங்க
    ஞானம் லட்சியம் யாவும் பற்றி
    எழுதுவதற்காக கூட
    யோசிக்க வேண்டிதில்லை
    Blog போட்டு சேர்க்கிறது
    மீட்டிங்கு போடறது
    யாவும்
    பொய் விளையாட்டு
    திமிரு


    என்னான்னு பாருங்க
    தெரியாதவை வரட்டும்


    வாழ்க

    ReplyDelete
    Replies
    1. இங்க வந்து இவ்வளவு மகா 'புத்திசாலித்தனமான' பின்னூட்டத்தை இடும் நேரத்தில் நீங்கள் உங்கள் கால் நகங்களை உற்றுப்பார்த்தபடி வெங்காயவடை சாப்பிட்டிருக்கலாமே

      Delete