Tuesday 20 September 2016

தேவதையைக் காத்திருப்பவன்

அன்பிற்குரிய நண்பனே

இது நான் உனக்கெழுதும் முதல் கடிதம். இறுதிக் கடிதமாகவும் இது இருக்க வாய்ப்பிருக்கும் காரணத்தால் இதுவரை உன்னுள் பிரதிபலித்த என்னை மறந்து விடு. தோல் மட்டுமல்ல நொய்மையான நம் உள்ளுறுப்புகளை காப்பது. அதற்கும் மேலே நாம் பூசிக்கொள்ளும் நட்பு காதல் தாய்மை அம்மா பாசம் பிள்ளை பாசம் போன்ற நறுமண திரவியங்களும் நம்முள் நொதிக்கும் இழி மணங்களை மூடி நிற்கின்றன. நான் அந்த இழி மணங்களின் பிரதிநிதி என எண்ணிக்கொள். மீண்டும் என் பச்சையான இச்சைகளின் மீது சந்தனம் பூசத் தொடங்குகிறேன்.

மதங்கள் எளியவர்களுக்காக பேசுகின்றன. பேசிப் பேசிய பலரை எளியவராக்குவதால் சிலர் மட்டும் வலியவர்கள் ஆகி விடுகின்றனர். துயரில் உழல்பவர்களுக்காக நோயில் வதைபடுபவர்களுக்காக அவை பேசிக் கொண்டே இருக்கின்றன. மதங்களுக்கும் மதங்களின் மேல் கட்டமைக்கப்படும் அரசுகளுக்கும் தேவை அதிகமான எளியவர்கள். கருணை எனும் துர்மலத்தினை பெருங்கேவலத்தினை இன்னொருவன் மீது சுமத்தி அதிகாரம் தன்னை நிறுவிக் கொள்கிறது. வலுவான குறிச்சதை என்பது இங்குள்ள பெண்ணின் லட்சியம். வளமான முலைகளும் தொடைகளுமே ஆணின் லட்சியம். இவ்விரு லட்சியங்களையும் அடைந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளை உற்பத்தி செய்கின்றனர். அதன்பிறகு சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவம் அகிம்சை என இன்னபிற லட்சியங்களை அடையப் பாடுபடுகின்றனர். புணர்ச்சிக்கு வலுவான இணையைத் தேர்ந்தெடுப்பதற்கென இடப்பட்ட பெயர் காதல். எனக்குத் தெரிந்தவரை உலகின் மிகப்பெரிய நகைச்சுவை சொல்லாட்சி இந்தக் காதல் தான்.எனக்கு கைகூடவில்லை என்பதால் கூட இருக்கலாம். இருந்தும் உடைந்த சாக்கடைக் குழாயிலிருந்து பீறிடும் கழிவு போல மனித மனத்தின் அத்தனை கீழ்மைகளும் பொய்மைகளும் வெளிப்படுவது அவர்கள் தாங்கள் காதலிப்பதாக நம்பும் இப்பருவத்தில் தான். புணர்ந்துவிட வேண்டும் என்ற இச்சையை அப்பட்டமாக அல்லாமல் பகுதி பகுதியாக பிரித்து வெளிப்படுத்துவதற்கு இதுவரை எத்தனை மொழிகளில் எத்தனை சொற்களில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புணரும் இச்சையை வெளிப்படுத்த பெண் மேற்கொள்ளும் புத்திசாலித்தனமான உத்தி நாணம். தன்னை புணர்வதற்கு தகுதியுடையவன் என அவள் நினைக்கும் ஆணை மட்டும் ஓரக்கண்ணால் பார்ப்பதும் அளவெடுப்பதும் பிற ஆண்களின் முன் தலைகுனிந்து பொற்பின் செல்வி எனப் பெயரெடுப்பதற்கும் பெயர் நாணம். ஆணில் அது பெருந்தன்மையெனவும் வீரமெனவும் வெளிப்படும்.

பெண்ணை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆண்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே என் அவல நிலை. புணரும் இச்சையை நாசூக்காக வெளிப்படுத்தும் காதல் என்ற உணர்வை இவர்கள் கொண்டாடுகின்றனர்.என்னை எந்தப் பெண் மிருகமும் இதுவரை தேர்ந்தெடுக்கவில்லை. இனி தேர்ந்தெடுக்கப் போவதும் இல்லை என உறுதியாகவே எனக்குத் தெரிகிறது. அதனால் தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை எனும் எண்ணமாக மாற்றிக் கொள்கிறேன்.

அடுத்தது தாய்மை. இதுவரை உலகில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஊற்றுக்கண் இவ்வுணர்வு தான். தன் குறியின் வழியாக வெளியேறிய உயிர் என்ற ஒரு காரணத்துக்காக அதன் மீது ஒரு அன்னை கொள்ளும் அன்பு எவ்வகையிலும் அருவருக்கத்தக்கதே. உலகின் மிகக் கீழான முட்டாள்தனமான அபாயகரமான ஒன்று இருக்க முடியுமெனில் அது தாயன்புதான். இதனைப் பயன்படுத்தியே காவியங்கள் இயற்றப்பட்டன. இதனை மையமாகக் கொண்டே தத்துவங்கள் விரிந்துரைக்கப்பட்டன. இங்கு நிலவும் அத்தனை ஏற்றத்தாழ்வுகளுக்கும் தன் பிறப்புறுப்பின் வழியே வெளியேறிய சதைப்பிண்டத்தின் மீது ஒரு தாய் கொள்ளும் முட்டாள்தனமான பிடிப்புணர்வே காரணம். உலகின் முதல் சமத்துவமின்மையை உருவாக்கியது தாயாகவே இருக்க இயலும். அழகான அன்னை உடைய ஆண் குழந்தையை அழகான பெண்கள் சூழ்ந்து வளர்க்கின்றனர். பத்து வயது கடக்கும் போது அவனுள் அப்பெண்கள் மீது உருவாகும் காம உணர்வையும் அப்பெண்களுக்கு அவன் மீது உருவாகும் காம உணர்வையும் சகோதர பாசமெனவும் தாயன்பெனவும் அசிங்கமாக விளக்கிக் கொள்கிறார்கள்.

அழகு. விளக்க முடியாத இன்னொரு கேவலம். அழகானவர்கள் போற்றப்படுகிறார்கள். கை தூக்கி விடப்படுகிறார்கள். நிறைய பணமும் குறைந்த உழைப்புமே அழகுக்கு அடிக் கட்டுமானம். ஆக அழகின் வழியே நாம் கொண்டாடுவது நிறைய பணத்தையும் குறைந்த உழைப்பையுமே. அந்த வலுவான பெற்றோர்களுக்கு பிறந்த ஒரு குழந்தை அழகாக இருக்கிறது. அழகெனச் சொல்லி நாம் இங்கு வளர்த்தெடுப்பது சமத்துவமின்மையை மட்டுமே. தன் அழகினால் திறனினால் கம்பீரம் கொள்வதென்பது நடுக்கூடத்தில் சுய மைதுனம் செய்வதற்கு நிகர். அழகுக்கு நிச்சயம் வரலாறுண்டு. அழகையும் கம்பீரத்தையும் நினைத்து பெருமை கொள்ளும் அத்தனை பேரும் ஏதோவொரு விதத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

நண்பா இவையனைத்தும் தோற்றவனின் புலம்பல்களாக உனக்குத் தெரியும். அது உண்மையும் கூட. மீண்டும் சந்தனம் பூசத் தொடங்குகிறேனா?

நண்பனே இன்றுவரை வலியது மட்டுமே வாழ்கிறது. எளியவற்றுக்கு வீழ்ந்து போவதைத் தவிர வலியதை பாராட்டுவதைத் தவிர இவ்வுலகு எதைக் கொடுத்திருக்கிறது. தன் மீது படியும் ஒவ்வொரு துளி புகழும் கோடிக்கணக்கான எளியவர்களின் குருதி என வலியவர்கள் அறிவார்களா? எளியவனுக்கு இருக்கும் இறுதித்துளி ஆணவத்தையும் இவ்வுலகு அழித்துத் துடைக்க நினைப்பதேன்? என் போன்ற எளியவர்களை நோக்கி இருக்கும் அத்தனை வாயில்களும் மூடியே கிடப்பதேன்?

எங்களுக்கு நீதி வழங்குவது ஒன்று தான். மரணம். மரணத்தை எண்ணும் போதே எங்களுக்கு எக்களிப்பு ஏற்படுகிறது. ஆம்! இவ்வுலகில் பிறந்த அனைவருமே இறந்து விட்டனர். சில நியூட்டன் விசையுடன் ஒரு கத்தியை கழுத்தில் வைத்து அழுத்தினால் இங்கு இறக்காதவன் யாரும் கிடையாது. இறப்பு மட்டுமே சமத்துவதத்திற்கு வித்திடுகிறது. இறந்தவர்கள் பிறந்து வருவார்கள் என காத்திருப்பவர்கள் காத்திருக்கட்டும். உடல் கொண்டு மண் பிறந்த அத்தனை உயிர்களும் இறந்து விட்டன. கேவலமான தங்கள் பகற்கனவுகளை பிள்ளைகள் மேல் ஏற்றி வைத்துக் காத்திருக்கும் அத்தனை பெற்றோர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது இதைத்தான். உங்களுடைய அருமைப் பிள்ளைகள் அனைத்தும் செத்துப் போவது உறுதி. அதை மறந்து விடாதீர்கள். சுயநலம் ஊறி நொதிக்கும் பெருங்கலம் குடும்பம். அவை இணைந்து உருவாக்கும் சமூகமெனும் அமைப்பிலும் அந்த குடும்ப நாற்றமே வீசும்.

என் உணர்வுகள் ஒரு சோம்பேறியின் தோற்றவனின் தைரியம் இழந்தவனின் கழிவிரக்கம் என நீ எண்ணலாம். ஆனால் இவற்றை என்னுள் தூண்டுவது எது? முடை நாற்றமெடுக்கும் குடும்பம் எனும் அமைப்பில் சிக்கிக் கொண்ட குற்றவுணர்வில் இவற்றை சொல்கிறேனா? நண்பனே இருந்து விடுவது மட்டுமே ஒரு தீர்வு எனத் தோன்றுகிறது.

என் குழப்பங்களைத் தீர்த்து என்னை அனணத்துக் கொள்ள உங்கள் கருணை நிறைந்த உலகு நாளையே ஒரு தேவதையை அனுப்பலாம் அல்லது அது எனக்கு விடுக்கும் அறைகூவலே இந்த நிலையைக் கடப்பது தானா? எத்தனை சொற்களைக் கொண்டு இவ்வுலகு என்னை கட்டுப்படுத்துகிறது.

இல்லை எனக்குத் தெளிவாகவேத் தெரிகிறது. எனக்கான தேவதை ஒரு பெண். நியதிகளுக்கு முற்றிலும் எதிரானவள். வலுவை அரவணைக்கும் கற்பெனும் வேசைத்தனம் கொண்டவள் அல்ல அவள். என்னையும் என்னினும் இழிந்தவனையும் என்னினும் உயர்ந்தவனையும் ஒரே விழியால் நோக்கும் சமநோக்கு உடையவள். அத்தகைய பெண் இதுவரை இப்பூமியில் பிறக்கவில்லை. பெண் அசிங்கமான காதலி அல்லது ஆபாசமான தாய். ஆண் வெறி மிகுந்த காதலன் அல்லது சுயநலமிக்க தகப்பன். இவர்களைப் போலல்ல அவள். புரக்கவும் அழிக்கவும் கற்றவள். கருணை தாய்மை போன்ற கீழ்மைகளில் மட்டுமல்ல பொறாமை வஞ்சம் போன்ற மேன்மைகளும் கொண்டவள்.

அவள் வரக் காத்திருக்கிறேன்.

நண்பா அவ்வளவு தான். நான் உயிர்விடப் போவதில்லை. எழுதத் தொடங்கும் போது என்னை இழிதகையோன் என்றே எண்ணியிருந்தேன். இப்போது ஒன்று புரிகிறது. இங்கு கடவுளாகி நிற்பவன் வரை அத்தகைய இழிந்தவர்களே என. இழிந்தவர்களாக அவர்கள் ஆகி விடக் கூடாது என்பதற்காகவே புணராமல் அவர்கள் பிறந்ததாக நாம் நம்புகிறோமா? எது எப்படியோ இங்கு மேன்மை என ஏதுமில்லை. எனவே என் பகற்கனவின் தேவதை எழும் வரை நானும் கீழ்மைகளில் உழன்று காத்திருக்கிறேன்.

நன்றி

அன்புடன்

சுரேஷ்

எனதன்புக்குரிய சகோதரா

ஆம். சகோதரன் தான். தூரத்து உறவுப் பெண்ணான ராகினி எனக்குத் தங்கை முறை. இளவயதில் பிறரிடமிருந்து என்னை விலக்கி வைத்த என் பேருருவமே அவளை நெருங்க வைத்தது. மூன்று வயது அவளுக்கு இருக்கையில் ஒரு முறை என் மடி மீது அவளை தூக்கி வைத்துக் கொண்டேன். முதலில் திமிர நினைத்தவள் என் பிடியின் இறுக்கம் தெரிந்ததும் அடங்கி அமைந்து விட்டாள். அதன்பின் என்னுடனிருப்பதை விரும்புவாள். குறிப்பாக என் கைகளுக்குள். அதேநேரம் ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு என் புறங்கையை அடித்துக் கொண்டே இருப்பாள். முதலில் அது விளையாட்டாகத் தோன்றினாலும் அவள் மென்மையாகவே அடித்தாலும் தொடர்ந்து ஒரே இடத்தில் அடிப்பதால் வலிக்கும். பற்களை கடித்துக் கொள்ளும் அளவிற்கு வலி மிகும் போதும் அவளிடம் இன்முகம் காட்டவே விரும்புவேன். ஏனெனில் ராகினியுடன் பேசுவதை நான் அவ்வளவு விரும்பினேன். திக்கலும் உத்வேகமுமாக அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருப்பதற்காக அந்த கட்டற்றத் தன்மை தொடர வேண்டும் என்பதற்காகவே ஒரு முறை கூட அவளிடம் அதைக் கூறியதில்லை இப்போது ராகினி வளர்ந்துவிட்டாள். இப்போதும் என் கைகளைத் தொடமால் ஐந்து நிமிடம் கூட என்னிடம் அவளால் பேச முடியாது. சகோதரா நீயும் ராகினியையே எனக்கு நினைவுறுத்துகிறாய். பல நேரங்களில் உன்னை வியப்புடன் மட்டுமே என்னால் நோக்க முடிகிறது. நீ உனக்கென்று எதையுமே கொள்வதில்லை. உன் உரிமையென யாரையும் நினைத்ததில்லை. உன் அகமகிழ்வுக்காக நீ பிறருடன் பழகுவதில்லை. ஒரு மனிதன் இன்னொருவனிடம் எவ்வளவு அதிகமாக எதிர்பார்க்கலாம் என்பதற்கு உன்னிடம் எதிர்பார்ப்பவர்களே சான்று. எவ்வளவு குறைவாக எதிர்பார்க்கலாம் என்பதற்கு நீயே சான்று. உன்னை புகழவில்லை  என் அன்பார்ந்த இளையவனே! இவ்வரிகளை படித்துக் கொண்டிருக்கும் போதே நீ என் கருத்தை வெறுக்கத் தொடங்குவாய். ஆனால் என் மீதான உன் அன்பை அக்கருத்து துளியும் பாதிக்காது. தோளில் கை போட்டபடி இறுக்கி அணைத்தபடி ஒருவரை மறுக்க உன்னால் முடிகிறது. என்னால் அது முடியவில்லை இளையவனே.

இளையவனே இள வயதிலிருந்தே என் உருவத்தாலோ என்னவோ நான் எதையும் எளிதாக விட்டுக் கொடுத்து விடுவேன் என பிறர் எண்ணுகிறார்கள். அப்படி பிறர் எண்ணுவதாலேயே நான் நிறைய விட்டுக் கொடுத்தேன். என் இடத்தை எங்கும் கோரிப் பெற்றதில்லை. அப்படிக் கோராதவன் என்பதைத் தாண்டி பிறரிடம் எதையும்   எதிர்பார்ப்பதையும் நான் குறைத்துக் கொண்டேன். ஆனால் உன்னைக் கண்டபின்னே நான் எவ்வளவு சிறியவன் எனத் தெரிந்தது. பிறர் உனக்கொரு பொருட்டே அல்ல. இளையவனே நீ எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் படிக்கும் போது நான் எவ்வளவு புண்பட்டேனோ அதைவிட நூறு மடங்கு அவற்றை எழுதும் போது நீ புண்பட்டிருப்பாய் என்றே எண்ணத் தோன்றுகிறது. உன் எதிர்பார்ப்புகளும் விழைவுகளும் தூயவை. எக்கணத்திலும் சறுக்கிவிடாதவன் நீ. அந்த சறுக்கலின்மையே நீ எங்களை தண்டிக்கும் ஆயுதம். அதையும் விட்டுவிடு என்றே உன்னிடம் நாங்கள் கோருவோம் இளையவனே. உலகையே உனக்கெதிராக நிறைத்திக் கொள்பவன் நீ. ஒவ்வொரு மகத்துவத்திலும் உறையும் இருளையே நோக்கக் கற்றவனிடம் எதிர்நிற்க எங்களிடம் தைரியம் இல்லை நண்பனே.

அளவுக்கதிகமாக புகழ்வதாகத் தோன்றுகிறதா? இருக்கலாம். அதீத திருப்தியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருப்பவர்கள் மீதான உன் வெறுப்பே உன்னை என்னிடம் நெருங்க வைத்தது என எண்ணுகிறேன். தன்னைப் பற்றிய உயர்வுணர்ச்சி கொண்டவனிடத்தில் மட்டுமே முட்டாள்தனமான நிறைவான உணர்வு உருவாகும் என்பது உன் எண்ணம். முடிவின்மையை ஒவ்வொரு நொடியும் புறக்கணிப்பவர்களை தன்னை குறித்து மட்டுமே சிந்திப்பவர்களை நீ வெறுப்பாய். நான் அத்தகையவர்களை விரும்புவதுமில்லை வெறுப்பதுமில்லை. நான் அப்படி திருப்தி கொண்டு விடாதவன் என உணர்ந்தவன் நீ ஒருவனே. "நீ தேவையில்லாதவற்றை பேசுவதில்லை" என ஒரு முறை சொன்னாய் அல்லவா? அந்நொடியே நான் உனக்கு நண்பனாகிவிட்டேன். ஏனெனில் பிறர் அனைவருமே எனக்கு பேசவே தெரியாது என்றே நினைத்திருந்தனர்.

குடும்பம் என்ற அமைப்பு இக்காலத்தில் தேவையற்றது என நீ சொல்கிறாய். உன்னை பதினைந்து வயது முதல் பார்த்தவன் என்பதால் இவ்விஷயத்தில் உன் மீது என் மதிப்பு பன்மடங்கு உயர்கிறது. ஏனெனில் தான் ஒருவனே இதுவரை உலகில் பிறந்திறந்த பல்லாயிரம் கோடிகளில் வித்தியாசமானவன் என்ற மடத்தனமான எண்ணம் விடலைப் பருவத்தில் ஏற்படுவது சகஜமே. எனவே வித்தியாசமான அனைத்தையும் ஏற்றுக் கொள்வோம். இந்த குடும்பம் தேவையில்லை என்ற எண்ணமும் அப்படிப்பட ஒன்றே.ஆனால் பதினைந்து ஆண்டுகளாகியும் நீ இன்னமும் மாறவில்லை. உன்னைப் பொறுத்தவரை இன்னமும் குடும்பம் அவசியமற்ற ஒரு அமைப்பாகவே இருக்கிறது. திருமணத்தை முறையற்ற விபச்சாரம் என்றும் காதல் திருமணத்தை முறைப்படுத்தப்பட்ட விபச்சாரம் என்றுதான் இன்னமும் எண்ணம் கொண்டிருக்கிறாய். இளையவனே நாற்பது கிலோமீட்டர் சைக்கிள் பந்தயம் வைத்துக் கொண்டோம் நினைவிருக்கிறதா? நீ அப்போது மெலிந்தவன். அடிக்கடி உனக்கு ஜலதோஷமும் மூச்சிளைப்பும் ஏற்படும். நான் பேருடல் கொண்டவன் எனினும் களைப்படையாதவன். தஞ்சை பெரிய கோவில் வரை பந்தயம் வைத்திருந்தோம். எனக்கு அரைமணி நேரம் முன்பு சென்று கோவிலில் அமர்ந்திருந்தாய். வெண்ணாற்றில் நீந்திய போதும் அப்படித்தான். உன்னுடன் விவாதித்து ஒரு முறை கூட நான் வென்றதில்லை. திருப்தி அடைந்ததில்லை. "சரி நான் ஒத்துக் கொள்கிறேன்" என நீ முடித்தாலும் என் எண்ணங்களை துளியும் பொருட்படுத்தி இருக்கமாட்டாய் என நான் நன்கறிவேன். முதலில் எனக்கு முன்பே நீ நிறைய அறிந்து வைத்திருப்பதால் தான் உன்னிடம் நான் பாடம் கேட்பவனாகவே இருப்பதாக நினைத்தேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நீ அறிவதை பல தளங்களில் இணைத்துக் கொள்வதே உன்னுடைய தருக்கங்களை மறுக்க முடியாததாக மாற்றுகிறது என உணர்ந்தேன். உன்னை பலமுறை நீ தோற்கடித்த பின்புதான் எங்களிடம் பேசவே தொடங்குகிறாய் என்பதை பின்னர் உணர்ந்தேன். உன்னை பகுதி பகுதியாக பிரித்துப் புரிந்து கொள்ள தொடங்கியிருந்த போது அனைத்தையும் அலட்சியத்துடன் நோக்கும் விழிகளை உன்னிடம் கண்டேன். இளையவனே உன்னை முற்றாக வெறுத்த தருணம் அது. அதன்பிறகு நீ என்னிடமிருந்து விலகி விட்டாய். உன்னிடமிருக்கும் பெண் தனமான ஒரே குணம் இந்த நுண்மை தான். உன்னை பிறன் லேசாக புறக்கணித்தாலோ வெறுத்தாலோ முற்றாக விலகிவிடுவாய். உன் எண்ணம் கூட அவர்கள் மனதில் எழாதவாறு முற்றாகத் தொலைந்து போவாய். அப்படி நீ விலகும் போது ஒரு முறையும் நீ கடன்பட்டவனாக இருப்பதில்லை.

சகோதரா என்னிடமிருந்தும் அப்படித்தான் விலகினாய். எனக்கு நீ பொருளியல் ரீதியாக உதவியதில்லை. எனக்கு வேலை கிடைத்ததிலோ என் வாழ்க்கை துணையை அமைத்துக் கொண்டதிலோ உனக்கு எந்தப் பங்கும் இல்லை. இருந்தும் உன்னை எண்ணும் போது குற்றவுணர்வு மட்டுமே மனதினுள் நிறைகிறது. நீ தனித்தவனாக இருப்பதால் என்னையும் என் போன்றவர்களையும் ஏதும் சொல்ல உனக்கு உரிமை இருப்பதாக எண்ணுகிறேன். சகோதரா நீ ஒரு கூரிய படைக்கலம். மேலும் மேலும் உன்னை கூர்மையாக்கிக் கொண்டே செல்லும் படைக்கலம் நீ. உன்னை நான் தாங்க இயலாது. ஆம் அழிவை மட்டுமே நீ விரும்புகிறாய். உனக்கு குடும்பம் தேவையில்லை. காதல் தேவையில்லை. நீ பொக்கிஷமென எதையும் பூட்டி வைப்பதில்லை என்பதாலேயே பிறன் பொக்கிஷம் என எண்ணும் அனைத்தையும் உடைத்து வீச எண்ணுகிறாய். இளையவனே இது எதிலுமே கொண்டு போய் சேர்க்காது. எதற்கும் பொருள் இல்லாமல் இருக்கலாம். அடிப்படை விசைகளாலும் சுயநலத்தாலும் இயக்கப்படும் விலங்குகளாகவே நாங்கள் இருக்கலாம். அப்படியே இருந்து விட்டுப் போகிறேன். எவ்வளவு கீழ்மையுடன் என்றாலும் நான் இருக்கிறேன் என்ற எண்ணமே எனக்கொரு திருப்தியை அளிக்கிறது. தன்னுடன் என்னை இணைத்துக் கொண்டு உடல் குறித்த என் அச்சங்களை அகற்றி என் விழிகளை தெளிவித்தவள் என் கண்ணெட்டும் தூரத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். நாளை அவளே இறந்தாலும் நான் இருக்கிறேன் என்ற திருப்தியை மறைக்கவே அவள் இறந்ததற்காக வருந்துவேன் என்றே எண்ணுகிறேன். என் இரு வயது மகன் அவள் அருகே உறங்குகிறான். தீர்மானமாக சொல்கிறேன் அவன் இறந்தால் என்னுள் முதலில் இன்பமே எழும் என எண்ணுகிறேன். ஏனெனில் எனக்கும் அவளுக்கும் இடையே விழுந்த விரிசல் அவன். புணர்ந்த பின் அவள் என்னிடம் அன்னையெனவே நடந்து கொள்வாள். அன்னையென மாறி அவளென்னை அணைப்பதே அவ்வுறவை முழுமை அடையச் செய்தது. இப்போது அந்த அன்னை அகன்றுவிட்டாள். இருந்தும் என் குருதியாய் இம்மண்ணில் நீடிக்கப் போகிறவன் என்னை மட்டுமே நம்பி மண் நுழைந்தவன் என்றெல்லாம் சொல்லி அவன் மீது அன்பை பெருக்கிக் கொள்கிறேன். என் புணர்விச்சை குறையும் போது அவனை நான் சார்ந்திருக்க நேரும் போது அவன் என்னை வெறுக்கத் தொடங்கிவிடுவான் என்பதில் ஐயமில்லை. இருந்தும் நான் அவனை விரும்புகிறேன். அவனுக்கு தீங்கேதும் நேருமெனில் என் ஆற்றலின் இறுதித்துளி எஞ்சியிருக்கும் வரை அத்தீங்கினை களையவே முயல்வேன். இவ்வளவு அதீத உணர்ச்சிகளை பொய்யென்றும் கயமை என்றும் நீ ஒதுக்கி விடுவாய். ஆனால் உனக்குத் தெரியாது நான் அதீத உணர்ச்சிகளுக்கு ஆட்படத் தொடங்கியதே உன்னிடம் பழகத் தொடங்கிய பிறகு தான். கறாராக அனைத்தையும் அளந்து அளந்து பார்ப்பவனாகவே நான் இருந்தேன். அதுதான் உச்ச நாகரீகம் என்றும் எண்ணியிருந்தேன். அந்த சமநிலைக்கு மேலே ஒரு சமன்குலைவு உண்டென எனக்கு உணர்த்தியவன் நீதான்.

எது எப்படியாயினும் நீ ஆண். நானும் ஆணே. இடைவெளியின்றி உன் சிந்தையை என்னால் தொடர முடிந்தாலும் ஆணின் உள்ளுறையும் தனிமையைப் போக்க ஒரு பெண்ணால் தான் முடியும். உன் தேவதை விபச்சாரி ஆயினும் கற்புக்கரசி ஆயினும் உனக்கு ஒன்றே. அவள் வர நானும் காத்திருக்கிறேன். இந்நொடி என்னைக் கீழானவனாக மிக மிகக் கீழானவனாக உணர்கிறேன் இளையவனே. இதை உன்னிடம் சொல்லாமல் இக்கடித்தை முடித்தால் நான் மேலு‌ம் இழிந்தவன் ஆவேன். ஆம் உன் தோலற்ற கேள்விகளை எதிர் கொண்டுவிட்ட திருப்தியோ என்னவோ தெரியவில்லை என் உடல் என் மனைவியையே நோக்கிக் கொண்டிருக்கிறது. என் ஒவ்வொரு வெற்றியும் அவளைப் புணர்வதிலேயே முடிவதை நான் வெறுக்கிறேன். இருந்தும் என்னால் என்னை தடுக்க முடியவில்லை. இருவரும் என்னை மன்னித்து விடுங்கள்.

அன்புடன்

சுரேஷ்

சுரேஷ்

உன் கடிதம் கண்டேன். ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்னில் நிகழவில்லை. எவ்வித உணர்வு மேலிடல்களுக்கும் நான் ஆளாகவில்லை. உன்மேல் ஆழமான ஒரு கசப்பே எழுந்தது. ஆம் தொடக்கம் முதலே உன் மேலிருந்த எனக்கு நானே சொல்லிக் கொள்ள மறுத்த கசப்பு. உன் தருக்கங்கள் எப்போதுமே பாசமாய் வளர்க்கப்பட்டதால் துள்ளும் நாய் குட்டியினது போன்றதே. உரிமையாளர் சற்றே குரலுயர்த்தினால் அடங்கி விடுவாய். அதனால் உன் மேல் எழுந்த கசப்பு. உன் அடங்கிய தன்மை சோர்வான விழிகள் அனைத்தையும் இப்போது எண்ணுகையில் குமட்டுகிறது.

வாழ்நாள் புணர்விற்கான பரஸ்பர உரிமம் பெற்ற உன் இணையை எனக்கு பதில் எழுதிய பின் புணர்ந்ததாக எழுதியிருந்தாய். நண்பா நன்றாக யோசித்துப் பார். உனக்கு அவளைப் புணரும் எண்ணம் எனக்கு பதில் எழுதுவதற்கு முன்னரே உருவாகியிருக்க வேண்டும். அதனால்தான் இப்படியொரு உற்சாகமான கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறாய் வீட்டுப்பாடம் முடித்தால் விளையாட அனுமதி கிடைக்கும் என எண்ணும் குழந்தையைப் போல். உன்னைப்பற்றி நான் எத்தகைய மனச்சித்திரம் கொண்டிருக்கிறேன் என நீ ஏற்கனவே முடிவு செய்து கொண்டு அந்த மனச்சித்திரத்தை தாழ்த்துவதன் வழியாக அச்சித்திரத்தை விட நீ உயர்ந்தவன் என என்னை நம்ப வைக்க முயல்கிறாய் என் பரிதாபத்துக்குரிய தோழனே. நீ யார் உன் மனவீச்சு என்ன உன் தகுதி என்ன உன்னால் எவ்வளவு தூரம் சிந்திக்க முடியும் எல்லையுணர்ந்த நாயென உன் சித்தம் எங்கே குரைக்கும் எங்கே தயங்கும் என நான் அறியமாட்டேனா என் அன்புக்குரியவனே.

உன் கீழ்மைகளை நீயே ஒத்துக் கொள்வதால் அது இல்லையென ஆகிவிடுவதில்லை. நீயும் என்னை சோர்வுறச் செய்யத் தொடங்கிவிட்டாய். இவ்வுலகில் அற்பத்தனங்களே அதிகம். அதை அறிந்த பின்னும் அதில் நீந்துபவனை எந்த வகையில் சேர்ப்பது. உன் இழிந்த கனவுகளை உன் மகனின் சிந்தையிலும் உன் இறந்த காலத் தவிப்புகளை உன் மனைவியின் குறியிலும் செலுத்துவாய். உன் வாழ்நாள் முழுக்க நீ செலவிடப் போவது இவ்விரு உயர் லட்சியங்களை அடையவே. நண்பா உன் தேவைகள் மிக மிக எளிது. ஒரு காலத்தில் அது உயர்ந்ததாக இருந்ததாக உன் மனம் கற்பனை செய்கிறது. என்றும் நீ எளியவனே. நீ கண்ட பெருந்தவறுகளின் அன்றாடத் தன்மையை உணர்ந்திருந்தால் அதனை நீயும் இழைக்க வாய்ப்பிருக்கிறது என எண்ணியிருந்தால் கண்கள் விரிய அதிர்ச்சி அடைந்தவனைப் போல் நடித்திருக்க மாட்டாய். ஆம் வெங்கலப் பாத்திரத்தை சிமெண்ட் தரையில் போட்டு இழுப்பது போல் அடி தொண்டையில் அழும் குழந்தையை நான் பிறர் அறியவே வெறுப்பேன். அவ்வெறுப்பு என் முகத்தில் பிரதிபலிக்கவும் செய்யும். ஆனால் நீ பெண்களைப் போல் அந்த வெறுப்பிற்கு ஒப்பனையிட்டு அதனை ஒரு இனிய சலிப்பாக மாற்ற நினைப்பாய். நண்பா உன் மனைவியிடம் கேட்டுப்பார். எந்நேரமும் ஒரு உறுப்பு போல  அவளையே சார்ந்திருக்கும் அந்தக் குழந்தையை ஒரு முறையேனும் வெறுத்ததில்லையா என. வெறுத்ததில்லை என அவள் சொன்னால் நீ உன் அந்தரங்களை அவளிடம் பகிராமல் இருப்பது நல்லது.

முதலில் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். வெகு நாட்களாக எனக்கு நானே பேசிக் கொண்டிருந்து சலித்து விட்டது. அதனால்தான் உன்னிடம் பேசுகிறேன். சலிப்பிற்கு காரணம் இதுதான் நண்பா. கோட்டுருவம் மட்டும் தெரியும் இருளில் கனமான ஒரு உருவம் நமக்கு மிக அருகே மூச்சு விட்டுக் கொண்டு சுற்றி வந்தால் எவ்வளவு அசௌகரியமாக இருக்கும். என்னுடன் ஒரு இருப்பு அப்படி சுற்றி வந்தபடியே இருக்கிறது. அந்த இருப்பினை நீ ஊகித்திருப்பாய். அவை என் எண்ணங்கள் தான். தொடக்கத்தில் கிளர்ச்சி அளிக்கும் எதுவும் போகப் போக வெறுப்பினை அளிப்பதோடு அவை வெறுப்பளித்தாலும் கைவிட முடியாதபடி ஆகிவிடும் என நான் முன்னரே அறிவேன். ஆனால் அது அறிதலுக்கும் பொருந்தும் என இப்போதே உணர்கிறேன் நண்பா.

எனக்கு பெண்களின் மீது ஆழ்ந்த வெறுப்பு ஏற்படும் அதே காரணத்திற்காகவே அவர்களைப் பிடிக்கும். வயது ஏற ஏற சந்திக்கும் ஆண்களும் அத்தகையவர்களாகவே இருக்கின்றனர். அது என்னவெனில் ஒரு பெண் தன்னுடைய இறந்த காலத்தை விட கொடியது இன்னொருவருக்கு இருக்கவே முடியாது என எண்ணிக் கொள்வாள். அவள் மனதைக் கொண்டே  திரும்பத் திரும்ப உருவாக்கிய தருக்கங்களின் மூலம் அதை ஆழமாக நிறுவியும் வைத்திருப்பாள். உதாரணமாக பத்து வருடங்களுக்கு முன்பு இச்சையினாலோ அல்லது எதேழ்ச்சியாகவோ ஒரு ஆணின் கை அவளைப் பற்றி இருக்கும். முதலில் ஒரு சமகாலத் தன்மையுடைய அறிவினால் தூண்டப்பட்ட பெண் மனம் அது ஒரு எதேழ்ச்சியான தொடுகை என எண்ணிக் கொள்ளும். பிற்பாடு அதனை தன் அழகு அவன் மனதில் ஏற்படுத்திய சலனத்தால் அத்தொடுகை நிகழ்ந்ததாக எக்களிக்கும். பின்னர் தன் அழகை பாதுகாப்பதை அதன் வழியாக தன் கற்பை பாதுகாப்பதையே பெண்ணாக பிறந்ததால் ஒவ்வொரு நொடியும் அதிசிரத்தையோடு செய்து வருவதை அவள் மணம் வகுத்துக் கொள்ளும். தோளில் வெளித்தெரியும் உள்ளாடையை சுட்டிக்காட்டியவனும் சறுக்கி விடாமல் தாங்கிக் கொண்டவனும் மழையிரவில் வீட்டில் விட்டுச் சென்றவனும் இயல்பாகப் பாரட்டியவனும் சிரித்தவனும் தன் "கற்பை" சூரையாட நினைப்பதாக பெண் கற்பனை செய்வாள். உலகிலேயே அதிக ஆபத்துகளை கடந்த பெண்ணாக தன்னை சித்தரித்துக் கொள்வதில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். ஆண்களும் இப்போது அப்படியே நடந்து கொள்கிறார்கள். முப்பது கடந்த ஒவ்வொரு ஆணிடமும் தன்னுடைய திறனும் வீரமும் தியாகமாக வெளிப்பட்டதை சொல்லும் முட்டாள்தனமான ஒரு கதை இருக்கும். தங்கையை "கரை" சேர்த்தது பெற்றோருக்கு சிகிச்சை அளித்தது காதலை "தியாகம்" செய்தது என்ற வகையில். இது போன்ற குப்பை கதைகள் தன்னளவில் எவ்வளவு பொய்மையும் சுய ஏமாற்றும் வெற்றுப் பெருமிதமும் கொண்டிருந்தாலும் அவற்றில் இருக்கும் ஒரு நன்மை அவை கண்ணீரை வரவழைத்து விடுகிறன்றன என்பதே. விந்தினைப் போலவே கண்ணீரும் வெளிப்படும் காரணமும் இடமும் எதுவாக இருப்பினும் வெளிப்படுகையில் வெளிப்படுத்துபவரிடமிருந்து ஒரு எடை இறங்கும். நண்பனே என் சிக்கல் இதுவே. அப்படி என்னை நினைத்து கரைந்தழ என்னால் முடியவில்லை. நானும் சுற்றிச் சுற்றித் தேடியும் உலகில் உள்ள அனைவரைப் போலவே எனக்கும் ஒரு அயோக்கியத்தனமான கடந்த காலமே உள்ளது. அதை நினைத்து நான் அழுதால் அது மேலு‌ம் அயோக்கியத்தனமாகவேத் தெரியும். ஒரு விதத்தில் இது சுமக்க முடியாததாய் இருக்கிறது. பெண் பெற்றுக் கொண்ட விந்து போல இந்த எண்ணம் பெருத்துக் கொண்டே வருகிறது. பிரசவம் தான் என்றெனத் தெரியவில்லை.

நீ பலமுறை மறுத்ததையே திரும்பவும் சொல்கிறேன். சொல்லப்படுவதல்ல சொல்பவனின் தகுதியே எனக்கு முக்கியம். ஐந்து நிமிடம் சமூக வலைச்செயலிகளை ஆய்ந்தாலே சாக்கடையில் நொதித்து ஆவியெழும் மலம் போல அறவுரைகளை கேட்க முடியும். அதில் புண்ணியமில்லை. ஏனெனில் எதிர் பாலினத்திடம் அறிவுரை பெற விரும்புகிறவர்கள் கூறுபவரின் ஆடையைக் களைவதில் அறத்தின் முழுமையை காண விழைவிகிறார்கள். ஒரே பாலினமெனில் பெரும்பாலும் மூத்திரமாக வெளியேறும் மதுவில் அறத்தினை முடித்துக் கொள்கிறார்கள். உண்மையில் வார்த்தைகளின் பொருளில் ஆறுதல் கொள்பவனுக்கு சொல்பவன் தேவையே இல்லை. எனவே என் பிரசவ சிக்கலுக்கு உன்னிடம் நான் தீர்வு கேட்கப் போவதில்லை. ஏனெனில் தீர்வு சொல்லும் அளவுக்கு நீ தகுதியானவன் கிடையாது.

அன்பு சற்று குறைவுடன்

சுரேஷ்

நான் என்றும் மறந்துவிட முடியாத என் பிரியத்துக்குரிய பேரன்புத் தோழனே

என் கடிதத்திற்கு நீ பதில் எழுதவில்லை. அது மட்டும் போதும் நண்பா எனக்கு. உண்மையில் இன்பமும் துன்பமும் ஊசலில் அலைவுறும் இரும்புக் குண்டின் இரு எல்லைகள் மட்டுமே. என்னை முற்றறிந்தவனே. நீ காண முடியாத பரிணாமம் ஏதேனும் என்னில் இருக்க முடியுமா? எட்வினாவை நீ அறிவாய் தானே? நம்முடன் படித்தவர்களில் உன் ஒருவனிடம் மட்டுமே இக்கேள்வியை நான் கேட்க முடியும். நான் பெண்களை துல்லியமாகப் புறக்கணிப்பவன். என் துல்லியமே பெண்ணை என் மனம் அனல் நாடிச் செல்லும் சருகென எவ்வளவு விரும்புகிறது என்பதற்கு சான்று. ஆனால் நீ அப்படி அல்ல. எட்வினாவின் அழகினை ஈடிபஸ் காம்ளெக்ஸ் முதல் டார்வின் மார்க்ஸ் ஏன் கிறிஸ்து புத்தன் வரைச் சென்று நான் மறுத்தேன். நண்பா உண்மையில் திட்டவட்டமாக மறுப்பவர்கள் மன்றாடுகிறார்கள். நான் இவ்வளவு தான். என்னளவிற்கு நீ இது குறித்து அறியவில்லை என்பதாலேயே நான் சொல்வது தான் சரியாக இருக்கும். சரியாக  இருந்தாக வேண்டும். அதனால் ஒத்துக்கொள். நீ ஒத்துக்கொள்ளாவிட்டால் உலகை இதுவரை இயக்கிய ஒரு பெருவிசையை நீ மறுக்கிறாய் என்பது வரை எதிர் தரப்பை இழுக்கிறார்கள். உண்மையில் அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு ஒப்புதலை ஆமோதிப்பை ஒரு வியப்பை. இப்போது அதை தெளிவாகவே உணர்கிறேன் சுரேஷ். அனைவரும் என்னை ஏற்றுக் கொண்டு விட்டனர். எட்வினாவை நான் மட்டுமே பொருட்படுத்தாதவன் என ஒரு பொது எண்ணம் நம் வட்டத்தில் உருவானது. ஆனால் நீ மிக இயல்பாக அதைக் கடந்து சென்றாய். ஏனெனில் நீ உண்மையில் அவளைப் பொருட்படுத்தவில்லை. நண்பா அவள் குறித்துப் பேசுவதே என்னை மந்தையில் ஒருவனாக்கும் என்பது என்னை அவமதித்தது. என்னை அதிகமாக வருத்தியது அவளும் உன்னைப் போல இங்கு இல்லவே இல்லை. மானின் விழிகளில் தெரிவது மிரட்சி என்கிறார்கள். ஆனால் மான் தன்னை உண்ணும் சிங்கத்தையும் சலிப்புடன் தான் பார்க்கிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அழும் குழந்தையை சமாதானம் செய்யும் அன்னையின் சலிப்பு. பல ஆண்களின் அழுகை கண்ட விபச்சாரியின் சலிப்பு. எட்வினாவின் கண்களில் எனக்குத் தெரிந்தது அச்சலிப்பு தான். உன்னை என்னுள் நான் வெறுப்பதற்கும் காரணம் அடிக்கடி உன் முகம் ஒரு ஆதி கிழவியின் விழிகளை சூடிக் கொள்கிறது. அறிந்து சலித்த விழிகள். நீயும் அவளும் பசப்புகிறீர்கள் என எண்ணினேன். ரோலர் கோஸ்டரில் அலறிக் களிக்கும் சிறுவர்களை சலிப்புடன் நோக்கும் அதை இயக்குபவன் போல நீங்கள் உலகை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நடிக்கிறீர்கள் என்றே எண்ணினேன். உங்களுடைய தாகமும் விருப்பமும் குறைவு. அதனால் எழும் சோர்வு உங்கள் உடலிலும் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது என எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவ்வெண்ணம் பொய்யாகும். வெகு நாட்கள் கழித்தே உணர்ந்தேன் உன்னையும் எட்வினாவையும் நான் பிரித்து நினைத்துப் பார்த்ததே இல்லை என. வெறுங்காலில் பாம்பை மிதித்தவன் போல சட்டென என் சித்தம் உதறி விலகி கூர்மை கொண்டது. முதலில் அவள். எட்வினா என்ற பெயர்தான் அவளுக்கான முதல் கவர்ச்சியை அளிக்கிறது. மவுண்ட்பேட்டனின் மனைவியின் பெயர் தானே அது. பெயருக்கு நிச்சயம் வரலாறுண்டு. ஈ.வே.ரா எங்கள் ஊர்க்காரர்கள் பலருக்கு பெயரிட்டிருக்கிறார். ஸ்டாலின் சீசர் மார்க்ஸ் நியூட்டன் என நீளும் அந்தப்பட்டியல். கிளியோபாட்ரா அப்படி இடப்பட்ட ஒரு பெயர். மிகச் சாதாரணமான குடும்பத்து பெண் தான் அவர். எப்போதும் பழைய புடவைதான். ஆனால் அவரிடம் ஒரு தோரணை வெளிப்படும். நம்மால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியாத தோரணை. அதை அவருக்கு அப்பெயர் தான் அளித்திருக்க வேண்டும். நாம் எவ்வளவோ கற்றறிந்தாலும் ஆழ்ந்து ஆழ்ந்து சென்றாலும் நம் பெயர் சொல்லி அழைக்கப்பட்டால் அத்தனை ஆழத்தையும் ஒரு எம்பலில் கடந்து வந்து குதித்து விடுவோம். எட்வினாவுக்கும் அவள் பெயர் பொருள் பட்டிருக்கும். அதன்பின் ஒளி ஊடுருவும் கருப்புத் துணி போல பளபளக்கும் அடர்த்தியான கருங்கூந்தல். மென் சேற்றுத் தடத்தில் காற்று வருடிச் செல்வது போல மென்மையான நெற்றியில் அலையடித்துச் செல்கிறது இருட்கூந்தல். மென்மை. ஊதுவதற்கு முந்தைய பலூனின் சருமம். கையில் ஊற்றப்படும் எண்ணெய் தேன்பரப்பு மணல் கலக்கப்படாத சிமெண்ட் ஈரமான கடற்கரை மணல் உலராத கோழி முட்டை நாய்குட்டியின் புறங்காது. எட்வினாவுக்கு முன் நான் அறிந்த மென்மைகள் இவையே. வெளுத்துப் போகாத அவள் பொன்னிறத்தில் வெளிப்படும் மென்மை. தொட்டால் அழிந்து போய்விடும் புதிதாய் வரையப்பட்ட ஓவியம் அவள் என எண்ணியபோது நான் சிரித்துக் கொண்டிருந்தேன். கழுத்தை நொடித்து அவள் பேசுவதில்லை. முக பாவனைகளைக் கூட அடிக்கடி மாற்றிக் கொள்வதில்லை. ஐயனார் சிலைகளில் உறைந்திருக்கும் ஒரு விரிவிழி நோக்கு. பிடிச்சதை கூட அதிகம் இல்லாத தேகம். தேகம் குறித்த உள்ளுணர்வற்ற நடை. திமிறித் தெரியாத சிறு முலைகள். அவளை வர்ணித்துக் கொண்டிருக்கிறேனா? அழித்து விடவே நினைத்தேன். இருக்கட்டும் என விட்டு விடுகிறேன். நான் சொல்ல வந்தது இதுதான். அப்படி இருப்பவளை ஊதிப்பருத்து எதையாவது தின்று கொண்டு சத்தமாக சிரிக்கும் உன்னுடன் நான் ஏன் ஒப்பிடுகிறேன்? ஆம் உங்களிருவரையும் ஒப்பிட முடிகிறது. அவளைப் போலவே நீயும் மறுதலிக்க கற்றிருக்கிறாய். ஆனால் இன்றுவரை நீ என்னைத் தாண்டி நான் ஊகிக்க முடியாதவற்றை செய்ததில்லை. செயலில் மட்டுமல்ல என்னைத் தாண்டி யோசித்தது கூட கிடையாது. உன் போன்றவர்களின் தகுதி அவ்வளவு தான். அவள் தகுதியும் அவ்வளவு தான் என நான் நன்கறிவேன். இருந்தும் என் மனம் இயல்பாகவே அவளை நோக்கி உந்தப்பட்டது. ஆளுக்கொரு பக்கம் விளையாட்டுக் களத்தை வனைந்து கொண்டிருந்தோம். நண்பா எதார்த்தத்தை எதிர் கொள்பவன் எந்தப் பெண்ணாலும் ஈர்க்கப்படுவதில்லை. என்னுடைய நொய்மைகளை வெளிக்காட்டாமல் நானும் அந்த ஆட்டத்தை தொடர்ந்து ஆடினேன். அவள் அத்தனை கூறியவள் என்பதை நான் ஊகித்திருக்கவில்லை நண்பா. அவள் கோரியது என் ஆணவத்தை. ஒரு வார்த்தையும் அவளிடம் நான் பேசியதில்லை. இருந்தும் தெளிவாக உணர்ந்தேன். என் விழிகள் அவளைப் பின் தொடர வேண்டுமென என் சித்தம் அவளை சுற்றி வர வேண்டுமென என் சொற்கள் அவளை குளிர்விக்க வேண்டுமென அவள் விரும்பினாள். சுருக்கமாக எட்வினாவின் எதிர்பார்ப்பு ஒரு உபாசகன். ஆவணம் நிறைந்த உபாசகன். உபாசனையும் ஆணவமும் பொருந்தவே முடியாதல்லவா? ஒரு பெண் எப்போதும் ஆணிடம் அதிகபட்சத்தை மட்டுமே கோருகிறாள். இங்கு நாடு கடவுள் அன்பு என இங்கு நடக்கும் அத்தனை பேரங்களையும் உருவாக்கியது பெண்ணின் பேர மனமே.

நான் பேரத்திற்கு ஒப்பவில்லை நண்பா. சட்டென விலக நினைத்தேன். விலகியும் விட்டேன். அதன் பிறகே அறிந்தேன் என் மனம் பதற்றம் கொள்வதை. அந்த பதற்றத்திற்கு காரணத்தை உணர்ந்த போதே முடிவு செய்தேன் நண்பா இனி ஒரு பெண்ணிடமும் நெருங்கக் கூடாதென. ஒரு ஆணின் பிரிவு பெண்ணிடத்தில் எந்த சலனத்தையும் உருவாக்குவதில்லை. அவளுள் சலனத்தை ஏற்படுத்த நான் விழைந்திருக்கிறேன். முதல் முறையாக முற்றாகத் தோற்ற தருணம் நண்பா அது. ஆம் நண்பா என் அறைகூவலை நான் திரும்ப எடுத்துக் கொள்ளப் போவதில்லை. மிக எளிமையான ஒரு உண்மையைச் சுற்றி வலுவான குறியையும் தேர்ந்த முலைகளையும் விரும்புகிறவர்கள் சொல்பவற்றை எதிர்த்தடிக்க விரும்புகிறேன். என் எதிரே நிற்கும் பெண் எனக்கு வெறும் உடல் மட்டுமே. ஏனெனில் பெண்ணும் ஆணை வெறும் உடலாகவே காண்கிறாள். உள்ளாடைக்குள் மறைந்திருக்கும் உறுப்பை அவள் மனம் கண்டடைந்து விட்டால் அந்நொடி முதல் ஆணை அவள் அறிவாகவும் பண்பாகவும் வீரமாகவும் காண்பதாக வேசி நாடகம் போடத் தொடங்குவாள். ஆம் நண்பா கரவற்ற எளிமையாளனை பெண்ணால் விரும்ப முடியாது. மிக நுணுக்கமாக புத்திசாலித்தனமாக புனிதமானதாக அந்த நாடகத்தை மாற்றுவாள். எப்படி கடவுளர்கள் கன்னிகளைப் புணர்ந்து தெய்வ மகன்களை உருவாக்குகிறார்களோ அப்படி தன் புணர்விச்சையை புனிதப்படுத்துகிறாள் பெண். ஆண் நிகழ்த்தும் நாடகம் அதனினும் கீழ்த்தரமானது. பெண்ணாவது தன் ஆழ் மனதுடன் ஒரு உரையாடலையாவது நிகழ்த்துவாள். ஆணுக்கு அதுவும் கிடையாது. அவன் நேரடியாகவே இந்த பேத்தல்களையும் புரட்டல்களையும் அறிவான். இருந்தும் முதல் முறை புணரும் வரை அந்த நாடகத்தை ஆண் நீட்டிப்பான்.

பெண்ணுடைய கீழ்மையான நாடகங்கள் உச்சத்தை அடைவது அந்த முதற்புணர்விற்கு பிறகு தான். இது ஒரு ஊகம் தான். முதற்புணர்வில் எல்லாப் பெண்களும் அடைவது ஏமாற்றமாகவே இருக்கும். ஏனெனில் அவளுள் செயல்படுவது முடிவிலியின் பேர மனம். அந்த ஏமாற்றத்தை தவிர்க்க தன் அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள பெண் சூடும் மிக மிக அசிங்கமான பாவனை கற்புக்கரசி. ' என்னை ஒருவன் புணர்ந்து விட்டான். என் வாழ்வை அவனோடு பிணைத்துக் கொண்டு விட்டேன். இனி மற்றொரு குறியை நான் அனுமதித்தால் என் வாழ்வில் சமூகச் சிக்கல்களும் பொருளாதாரச் சிக்கல்களும் உளவியல் சிக்கல்களும் ஏற்படும்' என்ற எளிய உண்மையை சுவற்றில் துப்பிய எச்சிலை கையால் தேய்த்து தேய்த்து சுவர் முழுக்க பரவ விடும் குழந்தை போல் விழையும் ஒரு ஆணுக்கு உணர்த்த இவர்களிடம் எழும் நடிப்பு இருக்கிறதே அனைத்து வேசைத்தனங்களையும் மிஞ்சிவிடும்.

எனக்கு பெண் வேறு விதமாக பொருள்பட்டாள் நண்பா. இளவயது முதலே எவ்வயதினரானாலும்  ஆண்களை எதிர்கொள்ள நான் தயங்கியதே கிடையாது. ஏனென்றால் பெரும்பாலான ஆண்கள் உன் போன்ற மடப்பயல்களே. ஆனால் பெண் அப்படியல்ல. பெண்ணில் ஏமாளியோ மடச்சியோ இருக்கவே முடியாது என்பதே என் முதல் எண்ணம். அப்படித்தான் பெண்ணை நான் அணுகினேன். குனிந்தால் தெரியும் முலைக்காகவோ நுகர்ந்தால் எழும் தோல் வாசனைக்காகவோ அல்ல. பெண்ணின அருகிருப்பது எனக்கு ஒரு முழுமை உணர்வை அளித்தது. இன்று உணர்கிறேன் நண்பா. அத்தனை பெண்ணும் என்னை விட்டு விலகியதற்கான காரணத்தை. என் விழிகளில் மின்னியது முழுமைக்கான எதிர்பார்ப்பு. இருப்பையே முழுமையென உணர்பவனின் முகத்தில் பெண்ணால் குறியை காண முடியாது. முதலில் என்னைக் குறித்து தாழ்வுணர்ச்சியே கொண்டிருந்தேன். அதன்பிறகு பெண்ணை காணும் என் விழிகளில் விழைவே இருந்ததில்லை என இப்போது உணர்கிறேன். இரு கை விரித்து தூக்கிக் கொள்ளச் சொல்லும் குழந்தையின் விழிகள் அவை. ஒரு கணம் விலகினாலும் உடனே சோர்ந்து விடும் விழிகள் அவை. நம் சமூகமும் பெண்குறியை பாதுகாப்பதிலேயே தன் பெரும் ஆற்றலை வீணாக்குகிறது. சமூகத்தை எதிர் கொள்ளும் எப்பெண்ணும் ஆண்கள் அனைவரும் தன்னை புணர விரும்புகிறார்கள் என்றே எண்ணுவாள். குறிப்பாக நம் தேசமளவிற்கு முட்டாள் பெண்களை வேறெந்த தேசத்திலும் காணவே முடியாது நண்பா. ஆணைப்போல சட்டை போடுவதே பெண்ணியம் என எண்ணும் பெண்களே இங்கு அதிகம். ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கச் சாலைக்கு மழை பெய்யும் போது தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு ஓடி விடுவோம் அல்லவா. நம் பெண்களும் அது போலத் தான். குடும்பத்திலிருந்து கண்ணை மூடிக் கொண்டு சற்று நேரம் ஓடி கணவனை அடைந்து விடுகிறார்கள். அதன்பின் தான் அடைய நினைத்ததை எல்லாம் தன் குறியில் பிறந்தது அடைந்து விடும் என்ற பேராசையுடன் மாமிசத்தைப் பார்த்து வாயூறி நிற்கும் நாய் போல் குழந்தையைப் பார்க்கிறார்கள். இதில் நகைப்புக்குரியது என்னவெனில் இந்த சுயநல வெறிக்கு இவர்கள் சூட்டும் பெயர் அன்பு.

ஆம் நண்பா. பெண்ணுக்கான என் வரையறைத் தெளிவானது. உடலை விட மேம்பட்ட ஒன்று ஆணிடமோ பெண்ணிடமோ கிடையாது. நான் மறுதலிக்கப் போவது அவ்வுடலைத்தான். பெண் எனக்கு வெறுமொரு உடல் மட்டுமே. ஆனால் அதையும் புறக்கணிக்கையில் அவள் ஒன்றும் இல்லாமல் ஆவாள். அப்போது தான் தன் உடலுக்கு வெளியே ஒரு உலகு இருப்பதே பெண்ணுக்கு தெரியும்.அதிலும் நிலவுடமைச் சமூகத்தின் கூறுகளால் பாதுகாக்கப்பட்டு முதலாளித்துவ சமூகத்தின் அத்தனை நன்மையையும் அடையும் பெண்ணின் நிலை அயோக்கியத்தனமானது. ஒன்று அவள் குடும்பத்தை விட வேண்டும் அல்லது சுதந்திரத்தை விட வேண்டும். பெண் இவ்விரண்டையும் இறுகப் பற்றியிருப்பதால் ஆண் இரண்டையும் இழக்க வேண்டி இருக்கிறது.

மீண்டும் எழுதுகிறேன்

அன்புடன்

சுரேஷ்

சுரேஷ் நீ என்னைவிட அறிவுடையவன் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் என்னை நீ நிந்தித்து விடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு முறையும் உன்னிடம் ஒரு வித பணிவுடனும் பயத்துடனும் நடந்து கொண்டேன். அப்பணிவையும் பயத்தையும் நீ பொருளற்றதாக்குகிறாய். உன்னை வெறுத்தோ உன் மீது இரக்கம் கொண்டோ இதை நான் சொல்லவில்லை நண்பா. உன்னை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இளவயதில் அனைவருக்கும் பிடித்தவர்களாக நம்மால் இருக்க முடியும் என நம்புகிறோம். அந்த நம்பிக்கை அழியத் தொடங்கும் போது தான் நண்பா நாம் நிதர்சனம் நோக்கி நகர்கிறோம். உண்மையில் யாரேனும் ஒருவராவது நம்மை முழுதாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஏக்கம் மட்டுமே இறுதியில் எஞ்சுகிறது. அப்படி உன்னை ஏற்றுக் கொண்டவன் நான். அவ்விதத்தில் நீ அதிர்ஷ்டம் செய்தவன். உன் மனம் பிசகியிருக்கிறது சுரேஷ். தொடக்கத்தில் உன்னுள் உலர்ந்த சருகுகளைக் கொண்டு மெல்ல மெல்ல மனதை பற்ற வைத்துக் கொண்டிருந்தாய். நெருப்பை விட கவர்ச்சியான ஒரு பொருள் உலகில் இருக்க முடியாது. அந்தப் பற்ற வைத்தலின் சுய வதையின் கவர்ச்சி உன்னை பிடித்துக் கொண்டு விட்டது. உன் நெருப்பின் வெப்பம் ஏறிவிட்டது. அது எல்லையற்று பெருகுகிறது நண்பா. யாரையும் எப்படியும் பேச உனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறாய். உன்னை நோக்கி ஒரு விழி திரும்பினால் மீண்டும் தன்னிரக்கத்துக்குள் புகுந்து கொண்டு வசைபாடத் தொடங்கி விடுகிறாய். சுரேஷ் இப்போது என் மனம் தவிக்கிறது. இவ்வெழுத்துக்களை அழித்து விடவே எண்ணுகிறேன். இவற்றை படிக்கும் கணத்தில் தீப்பட்ட புழு போல் உன் அகம் ஒடுங்கிச் சுருங்கும். அதை இப்போதே நான் காண்கிறேன். இருந்தும் என் பலம் முழுவதையும் திரட்டி இவற்றை சொல்கிறேன் நண்பா. வெளியே வந்து விடு. வேலை செய். ஒளிந்து கொள்ளாதே. உன் நெருப்பு ஒரு நாள் முழுதாக வெளிப்படும் என் தோழனே. அதுவரை ஏதாவது ஆற்றிக் கொண்டிரு. தீராத குற்றவுணர்வில் மற்றவர்களை தள்ளிவிட்டு இறப்பது எவ்விதத்திலும் பெருந்தியாகம் இல்லை நண்பா. இதனை உன் காலில் விழுந்து நான் கேட்பதாக எண்ணிக் கொள். எனக்காக கருணை காட்டு நண்பா. தயவுசெய்.

உன் அன்பினை மட்டும் எதிர்பார்க்கும்

சுரேஷ்

சுரேஷ்

பணம். நாகரிக வளர்ச்சியின் உச்சமென பணத்தைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அதன்பிறகு நம் நாகரிகம் வளரவே இல்லை. ஆணின் குறி நீளத்தை அளவிடும் கோல் பணம் தான். ஏனெனில் பணம் தூலமானது. பணத்தை வைத்திருப்பவன் அது யார் கைக்கும் எட்டாத தூரத்தில் இருக்குமாறு மூடி வைத்து விட்டு உலகை நோக்கி கண்ணீர் சிந்தலாம். பசியோடு இருப்பவனுக்கு மலம் கழித்து ஊட்டலாம். தொண்டை அடைத்தால் நம் கண்ணீரை அவனுக்கு பருகத் தரலாம். நம் சிறுநீரால் அவனை குளிப்பாட்டலாம். ஆனால் பணத்தை இழந்து விட மட்டும் கூடாது. உன் போன்ற மத்தியத்தரத்தினர் பிள்ளைகள் வளர்வதையும் வங்கியில் பணம் பெருகுவதையும் ஒரே விழியால் தான் நோக்குகிறீர்கள். பணம் இருப்பவனுக்கு உலகம் கொடுக்கும் மரியாதை வேறு. அதனை சம்பாதிக்க வியாபாரம் செய்பவர்கள் நேர்மையானவர்கள். ஏனெனில் அவன் இச்சையும் நோக்கமும் வெளிப்படையானதே. தன் தேவையை தெளிவாகவே சொல்கிறான். ஆனால் அதிக பணத்தையும் அதிகாரத்தையும் சம்பாதிக்கும் இச்சையுடன் நாய் போல நீண்ட நேரம் புத்தகத்தைப் புணர்ந்து ஒரு வேலைக்குச் சென்று அதன் வழியே மக்களுக்கு "நல்லது" செய்ய நினைக்கும் அயோக்கியர்களின் கும்பலில் ஒருவன் எனக்கு புத்தி சொல்கிறான்.

தேவடியாப் பயலே யாருக்குடா புத்தி சொல்ற. நண்பா நான் நிதானத்துடன் தான் இருக்கிறேன். உன்னை ஏன் இப்படி அழைத்தேன்? உன் அன்னையை தேவடியா என்றேன். அதற்கு அர்த்தமென்ன. நீ உன் தந்தை உன் அன்னையை புணர்ந்ததால்  பிறக்கவில்லை என்பது தானே. இவ்வார்த்தை ஒரு குறியீடு போல. அதைச் சொல்வதானால் யாரும் கோபப்படுவதில்லை. மாறாக மகிழ்வார்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு மகனும் உள்ளூர அவன் தந்தையை வெறுப்பான். அவனுக்கு அந்த வலுவற்ற தந்தையை விட மேலான ஒரு தந்தை இருப்பதற்கான வாய்ப்பு மகிழ்ச்சியைத் தானே அளிக்க வேண்டும். நீ இப்போது மகிழ்கிறாயா என் பிரியமுள்ள தோழனே. அந்த மகிழ்ச்சியை கோபமெனவும் உன் நண்பன் மீது கொண்ட ஆழ்ந்த வருத்தமெனவும் மாற்றிக் கொள்ளப் போகிறாயா? அது உன் விருப்பம்.

நண்பா எனக்காக வருந்தினால் என் வங்கிக் கணக்கில் நான் வேண்டிய போதெல்லாம் வேண்டிய தொகையை செலுத்த உன்னால் முடியவேண்டும். அவ்வளவு பணமுடையவனே என் மீது கருணை காட்ட வேண்டும். உனக்கு அவ்வளவு தகுதி இல்லை. இப்போது உன் மனதில் எழும் வருத்தத்தை உருக்கமாக உன் மனைவியிடம் வெளிப்படுத்தி ஒரு உணர்ச்சிகரமான புணர்வில் ஈடுபட்டு படுத்துக்கொள். என்னை வழி நடத்துவது போன்ற உன் தகுதிக்கு மீறிய செயலிலெல்லாம் இறங்க நினைக்காதே.

அன்புடன்

சுரேஷ்

அன்புள்ள நண்பா

முந்தைய கடிதம் உன்னை பாதித்து விடக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டு இதனை எழுதுகிறேன் நண்பா. மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட முடிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். என்னால் அது முடியவில்லை என்பதே இத்தனை கடிதங்கள் வழியாக நான் அறிந்து கொண்டது. என்னை மன்னித்து விடு சுரேஷ். ஒருவேளை இந்த பெயர் ஒற்றுமை தான் என்னை இப்படி உன்னிடம் புலம்ப வைக்கிறதோ? சில சமயங்களில் நாம் இருவரும் ஒருவரே என்றுகூட எண்ணியதுண்டு. இதுவரை உலகு எந்தத் தீங்கையும் எனக்கு அளித்ததில்லை. என்னால் பொருந்திப் போக முடியவில்லை. அது என் தவறு தான். இன்று நான் முற்றாக கைவிடப்பட்டவன். அந்நிலையை உருவாக்கியது என் ஆணவம். அவசியம் இல்லாத இடங்களில் துளியும் தளர்த்திக் கொள்ளாத ஆணவம். இருந்தும் என்னால் இந்நிலையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீ சொன்னது தான் சரி. நான் தினமு‌ம் சாப்பிடுகிறேன். மலம் கழிக்கிறேன். தூங்குகிறேன். இது போதும் நண்பா. இப்படியே காலத்தை நகர்த்திச் சென்று விடுகிறேன். சோறு கிடைக்கும் வரை சாப்பிட வேண்டும். யாராலும் கொல்லப்படாதவரை உயிரோடிருக்க வேண்டும். இதைத்தான் முதல் கடித்ததில் உன்னிடம் சொன்னேன். ஆனால் அப்போது என் மனம் முழுக்க ஏளனமும் வெறுப்பும் தான் இருந்தது. இன்று ஒரு இனிமையான ஏக்கம் நிறைந்துள்ளது. ஏன் கொஞ்சம் முயன்றால் அழுதுவிடக்கூட என்னால் முடியுமென நினைக்கிறேன். இருந்தும் வலிந்து அழுகையை வரவழைக்க விரும்பவில்லை. உடல் நலத்தை கவனித்துக் கொள். உன் மகனையும் மனைவியையும் கேட்டதாகச் சொல். எப்போதாவது இப்படி ஒருவன் இவ்வுலகில் இருக்கிறான் என எண்ணிக் கொள் நண்பா.

நன்றியுடன்

சுரேஷ்