Wednesday 31 October 2018

வரையறுத்தல் - கடிதம்

அன்பின் சுரேஷ்

இன்று தேர்வறைப் பணியென்பதால் மதியமே வீடு வந்துவிட்டேன். எதிர்பார்த்திருந்தபடியே காலச்சுவடு காத்திருப்பதை தபால்பெட்டியின் இடைவெளிக்குள் காண முடிந்தது. உடன் உறையைப்பிரித்து  ’’வரையறுத்தல்’’ வாசித்தேன்.

எதிர்பாரா வேலையொன்றினால் இடையில்வாசிப்பு அறுந்துவிட்டதால், மீள முதலிலிருந்து வாசித்தேன். முடிந்ததும் ஒரு இடத்தில் எனக்கு சரியாகப்புரியாதது போல குழப்பமாக இருந்ததால் மீண்டும் அப்பகுதியை வாசித்தேன். // மீட்டிங் முடிஞ்சு எப்போ புறப்படுவீங்களாம் என்று உம்புள்ளகேட்கிறான்// இதில் எனக்கு சக்தீஸ்வரி, மாலதி- பெயர் மற்றும் உறவுக் குழப்பம் இன்னுமே இருக்கு.

கதைஅருமை. அன்று இன்று என இருகாலகட்டங்களை இணைக்கிறீர்கள். அன்று எண்ணெய் காணா பரட்டைத்தலையுடனிருந்த, சாதீய வரையறைகளால் விளிம்புக்கு தள்ளபட்ட குடும்பத்தைச்சேர்ந்த மாலதி இன்று மஞ்சள் நிறமும் செவ்வுதடுகளுமாய் அழகியாய் நீலப்புடவையில்!

பண்பாட்டு மானுடவியல் கருத்தரங்கில் உரையாற்றும் பேராசிரியை
தனசேகர் குடியானவப்பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிப்போன நிகழ்வையும் அதன்பொருட்டு எரிக்கப்படவிருந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அவ்வீடுகளிலொன்றில் அன்று வாங்கிவந்த தொலைக்காட்சிப்பெட்டியையும் கதை , பல உரையாடல்களை  கண்ணிகளாய் இணைத்துச்சொல்கிறது

மாலதியின் உரை அபாரம். // உரசல்கள் நடைபெற்றிராத நேற்றோ,உரசல்களுக்கு வாய்ப்பற்ற நாளையோ கற்பனை, இன்றின் உரசல்களை எப்படி எதிர்கொள்வது,//  

// சாதியின் பாவனைகள் அழிந்த புத்தாயிரத்தில் அதன் பங்களிப்பு, பாலுறவுக் கண்காணிப்பு என்னும் எல்லையில் நிற்பது//  இப்பத்திதான், இதுதான் இக்கதை பேசும்பொருள். அந்த உரையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

அந்த தொலைக்காட்சிப்பெட்டி ஆன்டெனாவுடன் இணைப்பது என்னும்போது அந்நிகழ்வு நடைபெறும் காலத்தை அறிய முடிகின்றது.சாணி மெழுகிய மண் தரையிலிருந்து கிண்டில் ரீடருக்கு கதை  எங்களைக்கூட்டி வருகின்றது.

சாதியை இறுதியாக மாலதி அதாவது சுரேஷ் // வரலாற்று அறிவும்,நவீனப்பெருமிதங்களும்,ஜனநாயக மாண்புமில்லாத மக்களால் ஒருவித பெருமிதத்துடன் எண்ணிக்கொள்ளப்படும்  மனப்புனைவு// என்று வரையறுப்பதும் அருமை.உண்மையில் இக்கதையில் மாலதியின் உரையில் மட்டுமே சுரேஷை அடையாளம் தெரிந்தது வேறெங்கும் உங்கள் பிரத்யேக நடை தெரியவே இல்லை. நிறைய துண்டு துண்டான  சின்ன சின்ன வாக்கியங்கள் இம்முறை இக்கதையில் இருக்கு, நாகப்பிரகாஷ் இப்படி எழுதுவார்னு நினைவு எனக்கு. இதற்கு முந்தைய உங்கள் கதையில் இப்படி இல்லை .

ரோட்டா என்பது லோட்டாவைத்தானே?

துவக்கத்தில் இரண்டாம்பத்தியில் சாமியிடம் சிறுமி மாலதி வேண்டிக்கொள்கையில் மாதேஸூக்கு ’ஜொரம்’ என்பதை நான் ’காச்சல்’ என்று மாற்றிப்படித்தபோது இன்னும் எனக்குப்பிடித்திருந்தது.

எல்லாக்கதைகளிலும் சில வரிகள் அப்படியே காட்சிகளாக மனதில் பதிஞ்சுருமில்லையா அப்படி எனக்கு இதில் // மின்சாரம் துண்டிக்கப்பட்ட அறையின் அலுமினிய விளக்கின் ஒளி பிரதிபலிக்கும் டிவித்திரையில் படுக்கச்செல்லும் அம்மாவும் அப்பாவும் தெரிவது//  I just loved this description.

எப்போதும் போல தவிர்க்கவே இயலாமல் இக்கதையிலும் நான் என்னை பொருத்திப்பார்த்துக்கொள்கிறேன். ஒரு குறிப்பிட்ட சாதியைச்சேர்ந்தவரை காதல்மணம் புரியக்கூடாதென்று எங்கள் வீட்டுப்பெண்ணை தடுத்து,   பல வன்கொடுமைகளுக்குப்பின்னர், அவசரமாக  சுயஜாதியில் அகமணம் செய்வித்த என் அப்பா அதே சாதியைச்சேர்ந்த ஒரு பெண்ணை என் தம்பி காதல் மணம் செய்துகொள்ள மகிழ்வுடன் சம்மதித்ததை இக்கதை நினைவூட்டியது.

10 ல் படிக்கையில் முதன்முதலாக வாங்கிய  சாலிடேர் டிவியையும், இதே போன்றதொரு சம்பவம் நடந்து, 2010ல் எங்களூரில் அப்பாவின் உறவினர்கள் பல குடிசைகளை கொளுத்தி இந்த ஊரில் 144 போட்டிருந்தது. அதில் குறிப்பாக ஒரு இளைஞன் பலகுடிசைகளைக் கொளுத்தியவன் பல மாதங்கள் சிறையிலிருந்துவிட்டு திரும்பியபின்னர்  அந்த ஒடுக்கபட்ட சாதிமக்கள் வாழும் தெருவிலேயே வாகனத்தில் அடிபட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தது. அன்று வீட்டுக்கு தோட்ட வேலைக்கு வந்த லச்சுமி  என்னிடம் ‘’மாசாணியாத்தாளூக்கு மொளகரைச்சது வீணாப்போகலீங்க’’ என்று சொன்னது, அவன் இன்னும் கூட தேறாமலிருப்பது இப்படி பலதை நினத்துக்கொண்டேன்.

உள்ளிருந்து திமிறிக்கொண்டுவரும் நினைவுகளைக் கட்டுப்படுத்தியபின்னர் இக்கதைக்கு வெளியிலிருந்து மீண்டும் ஒருமுறை வாசிக்கனும் சுரேஷ்.
 
மிக்க அன்புடன்
தேவி

அன்புள்ள லோகமாதேவி அவர்களுக்கு

சக்தீஸ்வரி என்ற பெயர் தவறாக அச்சாகி இருக்கிறது. அந்த கதாப்பாத்திரத்துக்கு முதலில் சக்தீஸ்வரி என்று பெயரிட்டு பின்னர் மாற்றியதால் இந்த பிசகு நிகழ்ந்திருக்கிறது.

ரோட்டா என்றுதான் திருவாரூர் பக்கம் சொல்வது.

அன்புடன்

சுரேஷ்

Friday 19 October 2018

ஒளிர்நிழல் கடிதம்

இது ஒரு எளிய வாசிப்பில் இருந்து எழும் விவரிப்பு.. ஒளிர்நிழல் என்ற பெயரை ஜெயமோகன் இணையதளத்தில் அறிந்திருந்தேன். சிரத்தை எடுத்து அது குறித்து தெரிந்து கொள்ளவில்லை. அழிசி கட்டுரைப்போட்டி, நடுவர்களின் பெயரை தெரிந்து கொண்ட போது, இப்பெயரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைவின் அடுக்குகளில் தேடி, திரும்ப ஜெயமோகனிடம் சரணடைந்தேன்.. அப்பொழுது தான் ஈர்ப்பு பற்றிய பதிவுகள் வந்தன. அதுவே நான் வாசித்த உங்களுடைய முதல் படைப்பாகவும் அமைந்தது. ஒரு வேளை ஒளிர்நிழல் வாசித்த பின், ஈர்ப்புக்கு வந்திருந்தால், இத்தனை அதிர்ச்சியும், ஆச்சரியமும் இருந்திருக்காது. உங்களிடமும் பகிர்ந்து கொண்ட பின், ஜெயமோகன் தளத்தில் தேடிய போது, நிறையப் பதிவுகள் கிடைத்தன. குறிப்பாக, எம்.ஏ.சுசிலா அவர்கள் விழாவில், பேசிய அனைவரின் உரையையும் அப்பொழுது கேட்டிருந்தேன்.அதை திரும்பவும் சமீபத்தில் கேட்ட போது, ஆழமான புரிதலும், தெளிவான கருத்தமைவும் அதில் வெளிப்பட்டதை உணர்ந்தேன்.
ஒளிர்நிழல் முதல் அத்தியாயத்திலேயே ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. புதிய வீரரின், ஃப்ர்ஸ்ட் பால் சிக்ஸர் ஏற்படுத்தும் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். இன்னும் இன்னும் அடுத்த பக்கங்களை வேகமாகப் புரட்டும் உத்வேகம் வந்தது. ஆனால், வடிவம் அத்தனை வேகத்தை ஏற்கவில்லை.நிதானமான வாசிப்பை வேண்டியது. புதிய வடிவம். சட்டென்று காட்சிகள் மாறி, கவனத்தை தலைகீழாய் மாற்றும் போது திணறுகிறது. புதிய புதிய நபர்கள் வந்து போகிறார்கள்.சுரேஷ் சொல்லும் கதையை பின் தொடர்கையில், கதை சொல்லியாக ரகு மாறுகிறார். ஒரு நாவலில் இருக்கும் இடைவெளிகள் வாசகர் நிரப்பிக் கொள்ள வேண்டியவை என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், இத்தனை பெரிய இடைவெளிகளை எல்லா வாசகராலும் நிரப்பிக் கொள்ள முடியுமா தெரியவில்லை. என்னால், சில இடைவெளிகளை நிரப்ப முடியவில்லை. அத்தியாயம் 11 க்கு அப்புறம் 21, அப்புறம் 18 என்பது என் போன்ற மறதிக்கார வாசகருக்கு ரொம்ப சிரமம்.. வாசித்து முடித்த பின், திரும்ப அத்தியாய வரிசைப்படி ஒரு முறை வாசித்த பின்னரே எனக்கு ஒரு சித்திரம் முழுமையானது. ஜெயமோகன் “ஒளிர்நிழல்” பற்றி எழுதிய பதிவை மட்டும் வாசித்தேன்.
அருணா-சக்தி யின் உறவு அப்பட்டமாக, மரபு மீறிய மனித உறவுகளின் எல்லா பரிமாணங்களையும் காட்டியது. குணா-மீனா வேறொரு தளத்தின் உறவுநிலை. சிறுவன் செல்வராஜ் பற்றிய குறிப்பு 12ம் அத்தியாயத்தில், ஒளிர்நிழல் 21 என்று வருகிறது. 15ம் அத்தியாயத்தில், ஒளிர்நிழல் 20  என்று செல்வராஜின் திருமணம் வருகிறதே.. அதற்குள்ளே ஃப்ளாஷ்பேக்கா? எனக்கு புரியவில்லை. திரும்ப 23ம் அத்தியாயத்தில், ஒளிர்நிழல் 20 என்று வருகிறதே.. அதில் செல்வராஜின் மணவாழ்க்கை. என்னால் கோர்க்க முடியவில்லை.

பின்னுரை சொல்வது போல், மனதில் எழும் நிம்மதி ஒன்று தான் போல என்பது சத்தியம். இளைய தலைமுறையின் மனசாட்சி பேசுகிறது.ஒளிர்நிழல் 6, அழகாய் கவிதை. “ முழுமை முழுமையென ஏங்குகிறதடி நெஞ்சு” அருமை…  தனித்து ஒலிக்கிறது. “எதிர் சாத்தியங்கள்” மாற்று சிந்தனை, தெளிவாய் முன்வைக்கிற கருத்துகள் ஆழமானவை. சக்தியின் உரை சொல்லும் சாதி நிலைபாடுகள் கவனிக்க வைக்கின்றன. ஆறு கிலோமீட்டர் – உச்சம் தொட்ட இடம்.
உங்களுடைய நடை என்று குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எனக்கு அது பழகவில்லை. தாவி தாவி செல்லும் போக்கு இருக்கிறது. சில இடங்களில் அழுத்தமான விவரிப்பு, தீர்க்கமான உணர்வுநிலை, சில இடங்களில் மேலோட்டமாய் கடக்கிறது. உங்கள் உதாரணங்கள் மிக துல்லியமானவையாகவும், வேறு எங்கும் எப்பொழுதும் கேட்டறியாததாகவும் இருப்பது தனிச்சிறப்பு. பாம்பு மாத்திரைகளைக் கொளுத்தியது போன்ற பனைமரங்கள், நிறைந்த கருமையில் எச்சில் துப்பியது போல,பன்றி முலைக்கொத்துகள் என விழுதுகள் தொங்கும் ஆலமரம்,பாண்டவையின் முகம் கிழவியினுடையது போல மாறி விட்டது என சொல்லிக் கொண்டே போகலாம்..
குறிப்பிட்டு சொல்ல வேண்டியது, நீங்கள் சில முக்கியமான காட்சிகளை, ஒளித்து வைக்கிறீர்கள். பொதுவாக கவனிக்கப்படவேண்டியவை என்று பட்டுரிப்பன் கட்டி வைக்கப்படும் காட்சிகள் அவை..  “அம்சவள்ளி ஏற்கனவே ஒரு இரும்புத்துண்டை அடுப்பில் வைத்தாள் என்பதும், அம்சவள்ளி நெருங்கிய போது சிரித்துக் கொண்டிருந்த அவனிடம் “யப்போ, யப்போ” என வீறிடல் எழுந்தது,” இது ஒன்று போதும். குணா –மீனா பேசியபடி நடக்கையில், சதுப்பில் மிதந்த மீனாவின் உடல் தெரியும் காட்சி அத்தகையதே.
சுயமைதுனம் செய்துவிட்டு கழிவறையில் இருந்து வெளியே வருகையில், செல்பேசியில் வரும் குறுஞ்செய்தி ஒருவனை என்ன உணரச்செய்யும் என்பது வரை நுணுக்கமாக கூறியிருக்கிறீர்கள். “மது அருந்துவதற்கு முந்தைய உத்வேகம் அது” யதார்த்தம்..சிரித்துவிட்டேன்..

என் வாசிப்பளவில், புதிய வடிவம். புத்தம்புதிய வாசிப்பனுபவம்.. நல்ல துவக்கம் உங்களுக்கு.. எத்தனையோ முன்னோடிகள் தடம் பதித்த பாதை.. உங்களுக்காய் பூவிரித்து காத்திருக்கிறது..தொடர்ந்து பயணியுங்கள்…
மனம் கனிந்த, நிறைந்த நல்வாழ்த்துகள்..

- ரஞ்சனி பாசு.
- 18.10.2018