Wednesday 29 August 2018

காலூன்றுதலின் கசப்புகள் - கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை முன்வைத்து

நவீனத் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்தல் குறித்த வலுவான பிரக்ஞை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழ்ந்து விடுகிறது. புதுமைப்பித்தனின் துன்பக்கேணி தேயிலைத் தோட்டம் அமைப்பதற்கென இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. ந.பிச்சமூர்த்தி சி.சு.செல்லப்பா ஆகியோரின் சில கதைகளில்  வடக்கில் இருந்து  தொழில் செய்ய வரும் நாடோடிகள்  பற்றிய குறிப்புகள் வந்துபோகும். அதன்பிறகு இரண்டாம் உலகப்போர் இந்திய தேசிய ராணுவம் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய சித்திரங்களை மலேசியா ஜப்பான் இந்தோனேஷியா பர்மா ஆகிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் வழியே  ப.சிங்காரம் தனது நாவல்களில் காண்பிக்கிறார். மலேசியா தோட்டத் தொழிலாளர்கள் குறித்த பதிவுகளை சீ.முத்துசாமி எழுத்துக்களில் காண்கிறோம். தமிழின் இத்தகைய புலம்பெயர் எழுத்துக்களில் உள்ள ஒற்றுமை "பொருள்வயின் பிரிதலே". அதீத வறுமை அல்லது தொழில் வாய்ப்புகளைத் தேடிச் சென்ற தமிழர்கள் குறித்த சித்திரமாகவே இவை இருக்கின்றன. அதிலும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது தமிழில் புலம்பெயர் இலக்கியப் பதிவுகள் சொற்பமானவை. அப்பதிவுகளும் பெரும்பாலும் வறுமை வாழ்வியல் இடர்கள் அடையாளச் சிக்கல்கள் போன்றவற்றை பேசும் ஒரே தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

கலாமோகனின் நிஷ்டை தொகுப்பு போரினால் வலுக்கட்டாயமாக புலப்பெயர்வை நிகழ்த்திக் கொண்ட ஒரு தன்னிலையைத் தன்னுள் கொண்ட தொகுப்பு. இத்தொகுப்பில் தொடர்பே இல்லாததாகத் தென்படும் கதைகளை ஒரு புள்ளியில் நிறுத்தி புரிந்து கொள்ள கதை சொல்லியின் தன்னிலை குறித்த அவதானிப்பு அவசியமாகிறது. இத்தொகுப்பின் தனித்துவமும் இந்த போரினால் சிதறுண்ட தன்னிலை தான் என்பது என் அவதானிப்பு. இந்த பிரத்யேக தன்னிலை குறித்து பேசுவதற்கு முன் புலம்பெயர் இலக்கியத்தின் தேவை என்ன என்று நம்மை கேட்டுக் கொள்ளலாம். நம்முடைய உடல், புறச்சூழலை அவதானித்து அதற்கேற்றார் போல தன்னை தகவமைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலம் குறைவானது. அக்காலத்தை ஒப்பிட நினைவுச்சேகரங்களை படிமங்களை தன்னுள் சுமந்தலையும் மனம் தொடர்பற்ற ஒரு பண்பாட்டுச் சூழலில் தன்னை பொறுத்திக் கொள்வது அவ்வளவு எளிதாக நடந்தேறி விடுவதல்ல. பொருள்வயின் பிரிதல் என்று வரும்போது நம் நினைவுச் சேகரத்துக்கும் நமக்கும் ஒரு உணர்ச்சிகரமான பிணைப்பை நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. அதன் தொடர்ச்சியை நம்மால் நினைவுப் பகிர்தலாக புகைப்படங்களாக கதை சொல்லலாக தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. தக்கவைத்தல் தொடர்ச்சியை அளித்தல் என்பவை தான் புலம்பெயர் இலக்கியத்தின் முதன்மையான தேவைகள். தக்கவைக்கவும் தொடர்ச்சியை அளிக்கவும் ஒரு மனிதன் அஞ்சுகிறான் அதனைச் செய்ய விலக்கம் கொள்கிறான் எனில் என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டால் அக்கேள்வியின் முன் கலாமோகனின் இச்சிறுகதை தொகுப்பை கொண்டு வந்து நிறுத்தலாம்.போரினால் புலம்பெயர நேர்ந்த படைப்பாளி கலாமோகன். பொருள்வயின் பிரிதலுக்கும் போரினால் பிரிவதற்குமான இடைவெளியே கலாமோகனின் இத்தொகுப்பை முக்கியமானதாக மாற்றுகிறது. பொருள்தேடுவதற்கென்று பிரியும் போது நினைவுகள் துயரை மட்டுமே அளிக்கின்றன. ஆனால் போரினால் புலம்பெயர நேர்கிறவன் துயரை விட அச்சத்தையும் மன விலக்கத்தையுமே மிகுதியாகக் கொண்டுள்ளான். அந்த அச்சமும் விலக்கமும் கசப்பாக புனைவில் வெளிப்படுகிறது. தேசங்கள் அற்றவனாக சரியான உறவு நிலைகள் அமையாதவனாக கதை சொல்லி தன்னை தகவமைத்துக் கொள்கிறான். அதனால் உண்டான கசப்புகள் பல கதைகளில் தெறிக்கின்றன.

/"சுத்தங்கள் சொற்பமாகவும் அசுத்தங்கள் அதிகமாகவும் உள்ள இந்த உலகிலே, கண்கள் சந்தேகங்களை மட்டுமே வலைவீசி அள்ளப் படைக்கப்பட்டுள்ளன. இந்த உலகில் தேசமும், தேசங்களும் அற்ற ஒருவனாக நான். தேசமற்ற இந்த உலகிலிலே எனது ஆத்மாவிலிருந்து கசியும் நறுமணம் ஒரு சிலரது நாசித்துவாரங்களிலாவது அர்த்தங்களைக் கொண்டு சேர்க்கின்றனவே. இதனால்லவா தேசங்கள் அற்றவனாகவும், நாஷனலிற்றிகள் இல்லாதவனாகவும் இருப்பதையிட்டு எனக்குள் ஓர் அகந்தை அவ்வப்போது தலை நீட்டுகின்றது" /என்று ஓரிடத்தில் வெளிப்படும் கதை சொல்லியின் வார்த்தைகளை இத்தொகுப்பு நமக்கு அளிக்கும் தரிசனமாகவே கொள்ள முடியும்.

மழை என்ற ஒரு கதை நீங்கலாக மற்ற அனைத்துக் கதைகளும் பிரான்ஸில் தான் நிகழ்கின்றன. கலாமோகனுடைய மொழி ஒரு வகையான அகவய உரையாடல் தன்மை கொண்டது. மொழியில் ஒரு மெல்லிய இழையாக ஓடும் கவித்துவம் உரையாடல்களில் அபாரமாக வெளிப்படுகிறது. இரா நிஷ்டை போன்ற கதைகளில் வெளிப்படும் கசப்பான அங்கதத்தை கலாமோகனின் மொழி ரசிக்கும்படியாக மாற்றியிருக்கிறது. பைபிள் வசனங்களை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள கனி என்ற அங்கதக் கதை இவ்வகையில் இத்தொகுப்பின் சிறந்த கதை எனலாம்.

கதை சொல்லிக்கும் அவன் தோழிக்கும் நடைபெறும் உரையாடலாக பல கதைகள் இருக்கின்றன. அவ்வுரையாடலை நேரடியாக அகத்தைப் பேசுவதாக அமைத்திருக்கிறார் கலாமோகன். கனி என்ற கதை நீங்கலாக இத்தொகுப்பின் மற்ற எந்தக் கதையிலும் கதை சொல்லிக்கு மணவாழ்வு அமையவில்லை. அவன் எழுத்தை சிலாகிக்கும் தோழிகளாகவும் (நிழல்,ஈரம்) அவன் மனதை ஆற்றுப்படுத்தும் விபச்சாரிகளாகவும்(கோடை) பெண்கள் இக்கதைகளில் வந்து செல்கின்றன. தொகுப்பின் பல கதைகள் இத்தகைய அகவயத் தன்மை கொண்டவையே. ஆனால் அவற்றை வெறும் பாலுணர்வுத் தன்மை கொண்டவையாக இல்லாமல் கதை சொல்லியின் சிதறுண்ட மனதை வெளிப்படுத்துகிறவையாக அமைத்திருப்பது இவ்வகைக் கதைகளின் சிறப்பு எனலாம்.  அவ்வகை கதைகளில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள நிழல் என்ற சிறுகதை ஒரு உச்சம். தான் எழுதியதை யாரும் படிக்கும் முன்பே கிழித்து எரித்து விடுவதில் மகிழ்ச்சி கொள்ளும் கதை சொல்லியை அறைக்கு உள்ளேயும் அவனிடம் கதைகளை பெற்றுச் செல்வதற்காக வந்திருக்கும் அவனது தோழியை அறைக்கு வெளியேயும் நிறுத்திக் கொண்டு அவர்களுக்கு இடையேயான உரையாடல்களை இக்கதையில் ஆசிரியர் அமைத்திருக்கிறார். ஆண் பெண் உறவில் இடையே முளைத்து நிற்கும் பல்வேறு நிழல்களை முன் வைக்கும் கதையாக இதை வாசிக்கலாம்.

/“நீ எனக்காக எழுதியவைகளைக் கிழித்துச் சாம்பலாக்கியிருப்பாய் என்பது எனக்குத் தெரியும். எழுத்தைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. உன்னோடு பேசுவதற்காக மட்டுமே வந்துள்ளேன். நீ உள்ளேதானியிருக்கிறாய் தயவு செய்து கதவைத்திற நான் உன்னைக் கோபிக்க மாட்டேன்.”

சிகரட் தட்டில் கருகிச் சாம்பலாகிக் கிடந்த தாள்களை மேசையில் கொட்டி விட்டு “நான் உள்ளேயில்லை” என்று மெதுமையான குரலில் சிரமப்பட்டுப் பதிலளிக்கிறேன்.

"நீ உள்ளேயில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். கதவை மட்டும் திற"

“நான் உள்ளேயில்லை கதவைத்திறக்க என்னிடம் திறப்பும் இல்லை. நான் எவ்வாறு உள்ளேயில்லையோ நீயும் அதுபோல வெளியேயில்லை. இதனை ஒத்துக் கொண்டு போய் விடு"/

இப்படித் தொடங்கும் உரையாடல்

/“நீ கனவு காண்கிறாய்”

"என்ன நீ மட்டுமில்லையா? உனது கனவுகள் தம்மை வாழட்டும் என்ற புனித நோக்குடன் தான் நான் இங்கு வந்துள்ளேன்"

“வேண்டாம். எனது கனவுகளையும் எரிப்பதாக முடிவெடுத்துள்ளேன்”

"கனவுகளை எரித்து விடாதே! அவைகள் மட்டும்தான் எஞ்சியுள்ளன"

"எனது கனவுகள் மிகவும் கொடூரமானவை. எனவேதான் அவைகளை எரிக்கத் துணிந்தேன்”/ என்கிற இடத்தை உரையாடலின் வழியே அடைந்திருப்பதுதான் இக்கதையை முக்கியமானதாக மாற்றுகிறது.

தன்னிலை சிதைந்தவனின் உறவுநிலைகளை உருவாக்கிக் கொள்வதற்கான எத்தனங்களை சித்தரிக்கும் கதைகள் என்று இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளை வகுத்துவிட முடியும். அதனைத் தாண்டிய சில கதைகளும் இத்தொகுப்பில் இருக்கவே செய்கின்றன. உருக்கம் அத்தகைய கதைகளில் ஒன்று. தனக்கு பாத்திரங்கள் கழுவும் வேலையைத் தந்து தன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்ளும் பத்திரோனை (முதலாளி) சிலாகித்துக் கொண்டே இருக்கும் ஒரு கள்ளமற்ற கதை சொல்லியை இக்கதையில் ஆசிரியர் உருவாக்குகிறார். அவனுக்கு நடைபெறும் அநீதிகளைக் கூட உணர முடியாத கதை சொல்லியாக முதல் பார்வையில் அவன் நமக்குத் தெரிகிறான். ஆனால் மறுவாசிப்பின் போது கதை சொல்லிக்கும் கதை சொல்லியால் அடையான்கள்(அல்ஜீரியர்கள்) என்று அழைக்கப்படும் கறுப்பு ஊழியர்களுக்குமான வேறுபாட்டை சிந்திக்கும் போது இக்கதை வேறு தளத்தில் திறந்து கொள்கிறது. கதை சொல்லி விசுவாசமாக மட்டுமே இருக்கத் தெரிந்தவன். ஊரிலிருக்கும் குடும்பத்துக்கு ஒழுங்காக பணம் அனுப்புகிறவன். ஆனால் அவன் வேலை செய்யும் உணவகத்தில் செஃப் ஆக இருக்கும் அல்ஜீரியனும் இவனுடன் வேலை செய்யும் பிரஞ்சுகாரன் பத்ரிக்கும் அத்தகையவர்கள் அல்ல. அவர்கள் முதலாளியை எதிர்க்கக் துணிந்தவர்கள். பத்ரிக்கை வேலையை விட்டு நிறுத்தியதால் தொழிற்சங்கம் தொடங்கி வேலை நிறுத்தம் செய்து மீண்டும் அவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். சம்பள உயர்வும் பெறுகிறார்கள். ஆனால் இறுதிவரை கதை சொல்லியால் முதலாளி ஏன் அல்ஜீரியர்களுக்கு பணிந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தவொரு ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடும் எடுக்காமல் வெறுமனே குடும்பத்தை காப்பாற்ற எண்ணும் எளிமையான கதை சொல்லியின் பார்வையில் சொல்லி இருப்பது இக்கதையை முக்கியமானதாக மாற்றுகிறது. இக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேச்சு வழக்குத் தமிழ் கதைக்கு அபாரமான உண்மைத் தன்மையை அளிக்கிறது.

மூன்று நகரங்களின் கதையும் போரினால் புலம்பெயர்ந்து வாழ்வதால் ஏற்படக்கூடிய சிக்கல்களை புறவயமாக பேச முயல்கிறது.

கண்ணாடிப் பெட்டியிலிருந்து தன்னையே விற்றுக் கொள்ளும் விபச்சாரிகளும் "உயிருடன் இருந்திருந்தால் என் மகனுக்கு உன் வயதிருக்கும்" என்று சொல்லும் விபச்சாரிகளும் இவர் கதைகளில் விரவிக் கிடக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது போரினால் தலைகீழாக மாறிப்போன சூழலால் தாக்குண்ட மனிதனின் கதைகளை இவை இருக்கின்றன. அத்தகையவனின் கசப்புகளும் விலக்கங்களும் சில இடங்களில் கவித்துவமாகவும் சில இடங்களில் அங்கதமாகவும் சில இடங்களில் எதார்த்தமாகவும் வெளிப்படுகின்றன. அதேநேரம் கதை சொல்லி மெல்ல மெல்ல மாற்றம் கண்டுவிட்ட வாழ்க்கைக்குள் தன்னை பொறுத்திக் கொண்டதையும் தனக்கே உரிய வகையில் ஒரு எதார்த்தத்தை உருவாக்கி அதற்குள் வாழப் பழகிக் கொண்டதையும் இக்கதைகளில் நாம் காண்கிறோம்.

தமிழில் தனித்துவம் கொண்ட ஒரு சில சிறுகதை தொகுப்புகளில் ஒன்றென நிஷ்டையை நிச்சயம் சொல்லலாம்.

Saturday 25 August 2018

ஏன் இலக்கியம்?

ஏன் இலக்கியம் வாசிக்கிறீங்க?இலக்கியம் இல்லாமல் மக்கள் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறாரகள்.அரசு நடந்து கொண்டுதானே்இருக்கறது. அறிவியல் அறிஞர்கள் கண்டுபடிப்புகளை நிகழ்த்தி கொண்டுதானே இருக்கிறார்கள்.போர் நடந்து கொண்டுதானே இருக்கிறது.வண்புணர்வு நடந்து கொண்டு தானே இருக்கறது.அணு ஆயுத பதட்டம் இருந்து கொண்டதானே இருக்கறது.மக்கள் பசியில் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்.இவற்றுக்கெல்லாம் இலக்கியம் எந்த வகையில் தேவை.உலகம் இருக்க இருக்க பண்பாட்டு ரீதியாக,உறவு ரீதியாக,சுற்றுசூழல் மனித நேயம் ரீதியாக மோசமான இடத்திற்கு தானே நகர்ந்து கொண்டு இருக்கறது?

நவீன்

அன்புள்ள நவீன்

இலக்கியம் என்பது மாற்றத்துக்கான கருவி என்று நான் எண்ணவில்லை. ஒரு வயலினிஸ்ட் வாசிக்கும் போது நாம் அந்த இசைத்துணுக்கை ரசிக்கிறோம். நம் நினைவுச் சேகரத்தில் எங்கோ சென்று அவ்விசை தங்குகிறது. நம் வாழ்வின் ஏதோவொரு தருணத்தில் அந்த இசைத்துணுக்கை நினைவு மீட்டுகிறோம் அல்லது ஒரேயடியாக மறந்து விடுகிறோம். இதனால் ஏற்பட்ட பயன் என்ன? அந்த இசையைக் கேட்கும் போது நம்முள் இருக்கும் எது அவ்விசையுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொண்டது? பிடித்த  உணவு ஏன் நம் நாவில் எச்சில் ஊறச்செய்கிறது? எவ்வளவு அழகான பெண்களை நாம் தினமும் பார்த்தும் ஏன் ஒரு வகையான உடல் அமைப்பும் முக அமைப்பும் கொண்ட சில பெண்களால் ஏடாகூடமாக ஈர்க்கப்படுகிறோம். (பெண்களுக்கும் இது பொருந்தும்)

இக்கேள்விகளுக்கு நீங்கள் யதார்த்த தளத்தில் பதில் தேடலாம். உணவின் ருசிக்கும் தரத்துக்குமான அளவுகோலை எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்புக்கும் சந்ததி உருவாக்கத்துக்குமான தொடர்பை நீங்கள் முயன்று தேடி அடையலாம். எந்தவொரு ரசனையையும் மேன்மையான உணர்வையும் கறாரான யதார்த்த தளத்தில் வைத்து புரிந்து கொள்ள முடியும். மார்க்ஸிய சட்டக ஆய்வுகளை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் இது விளங்கும். மார்க்ஸியம் கலை இலக்கியத்தை சமூகத்தின் "மேற்கட்டுமானம்" என்கிறது. அதாவது பொருளாதார தன்னிறைவு கொண்ட முதலாளிகளுக்காக கலை உருவாக்கப்பட்டது என்பது மார்க்ஸியத்தின் நம்பிக்கை. அத்தகைய முதலாளித்துவ கட்டுமானத்தை வீழ்த்துவதற்காகவே நவீனக்கலை பயன்பட வேண்டும் என்ற நம்பிக்கையை மார்க்ஸியம் ஆழமாக சூழலில் விதைத்து விட்டது. அதாவது மார்க்ஸியம் கலையையே முதலாளிகளுக்கு விலை போகும் கலை முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கும் கலை என்று பிரித்து கொண்டது. அவ்வகையில் சமூக அக்கறை இல்லாமல் எழுதப்படும் எதையும் மார்க்ஸியம் கலையாக ஏற்காது. நீங்கள் இலக்கியத்தால் உலகை மாற்றிவிட முடியுமா என்று கேட்பது கூட அதனால் தான். இலக்கியம் சமூக மாற்றக் கருவியாக இருந்தே ஆக வேண்டும் என்பது மார்க்ஸிய சித்தாந்தத்தின் எதிர்பார்ப்பு மட்டுமே.

நான் எழுதியும் வாசித்தும் அறிந்த ஒன்று இருக்கிறது. எந்தவொரு கோட்பாட்டின் மானுடம் பற்றிய கனவை விட ஒரு எழுத்தாளனுக்கு இருக்கும் சமூகம் பற்றிய கனவு சமூகத்தின் செல்திசையை தீர்மானிக்கும் கனவு பெரிது. சாதி அமைப்பு மிக இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த ஒரு சமுதாயத்தில் எழுதப்பட்ட கதை புதுமைப்பித்தனின் "நாசகார கும்பல்". இன்று அக்கதை சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு பின் வந்த சி.சு.செல்லப்பா ஒரு பிராமணருக்கும் நாயக்கருக்குமான தோன்றிய ஆழமான நட்பை தன்னுடைய "பெண்டிழந்தான்" கதையில் சித்தரிக்கிறார். அக்கதையில் அந்த பிராமணர் நண்பரின் வீட்டில் சாப்பிடாமல் அதே ஊரில் இருக்கும் இன்னொரு பிராமணரின் வீட்டில் சாப்பிடுகிறார். இன்று உற்ற நண்பனாகிவிட்ட ஒருவன் சாதி காரணமாக நம் வீட்டில் சாப்பிட முடியாது என்று சொன்னால் நம்மால் அதை ஏற்க முடியுமா சொல்லுங்கள்?

இதை ஏன் சொல்கிறேன் என்றால்  பெண்டிழந்தான் நாசகார கும்பலுக்கு பிந்தி எழுதப்பட்ட கதை. ஆனால் புதுமைப்பித்தனால் சாதி அமைப்பை அன்றே இயல்பானதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடும்ப அமைப்பை என்னால் இயல்பானதாக ஏற்க முடியவில்லை என்று சொல்கிறவர்கள் இன்று அதிகரித்து இருக்கிறார்கள். இலக்கியம் சமூகத்தில் நிகழ்த்தும் மாற்றம் அகவயமானதே. இன்று நாம் மூடத்தனங்கள் என்று வெறுத்து ஒதுக்கும் பல விஷயங்களின் அநீதியை உலகிற்கு எடுத்துக் காண்பிப்பதாக இலக்கியம் இருந்திருக்கிறது.

இன்று திருநங்கைகள்  ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்றவர்கள் மீதான அருவருப்பு குறைந்திருக்கிறது. என்னிடம் அப்படி ஓரினச்சேர்க்கையில் இருக்கும் ஒரு நபர் தன் எண்ணங்களை அலைபேசியில் இப்போது பகிர்ந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார். இலக்கியம் வாசிக்கிறவன் தன்னை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையை அவருக்குள் விதைத்தது எது? முகம் தெரியாத ஒருவனிடம் தன் அந்தரங்கத்தை தன் அடையாளத்தைக் கூட மறைத்துக் கொள்ளாமல் ஏன் அவர் பகிர்ந்து கொள்கிறார்? அது என் மீதான நம்பிக்கை இல்லை. இலக்கியம் சார்ந்த ஒருவன் தன் அகவெளிக்கான மரியாதையை வழங்குவான் என்ற நம்பிக்கை அது.  சமூகத்தின் பொது புத்தியில் இருந்து இவன் சற்று விலகியிருப்பான் நம்மை புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை. இலக்கியம் மீண்டும் மீண்டும் இந்த நம்பிக்கையைத்தான் சமூகத்தில் விதைக்கிறது.

ஒரு வகையில் சமூகத்தை உரையாடச் செய்கிறது. படைப்புகள் எதிர்வினைகள் விமர்சனங்கள் குழுச்சண்டைகள் வாக்குவாதங்கள் என்று இவற்றின் வழியாகவே சமூகமாக நாம் பேசிக்கொள்கிறோம். உரையாடல் அற்ற சமூகம் ஆபத்தானதும் கூட. ஒரு அரசாங்கம் இறுக்கமடையும் போது அங்கு முதலில் அமைதியாக்கப்படுவது கலைஞன் தான். ஏனெனில் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் அரசாங்கமே மக்களை அமைதியாக இருக்கச் சொல்லும். தனிமனிதர்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் சமூகமாக அமைதியாக இருப்பது விளைவிக்கும் ஊறுகளை ஏற்கனவே வரலாற்றில் கண்டிருக்கிறோம். ஒரு வகையில் இலக்கியம் சமூகத்தை சத்தம் போட வைக்கிறது.

இலக்கியம் உருவாக்கும் சொல்லக்கூடிய மாற்றங்களே இவை.அனைத்திற்கும் மேலாக மற்றொன்று உண்டு. இவற்றைத்தாண்டி தேடலுடைய மனிதர்களுடன் மிக அந்தரங்கமாக உரையாட இலக்கியத்தால் முடியும்.  வார்த்தைகளாக மாற்றிக் கொள்ளாத பல கேள்விகள் நம்மிடம் இருக்கும். அக்கேள்விகள் மீது இலக்கியம் ஒளிபாய்ச்சுகிறது. நம்முடைய மன அந்தரங்கத்தை சமூக மனதின் அந்தரங்கத்துடன் இணைக்கிறது. நம்முடைய வாழ்வில் எதிர்படும் சிக்கல்களை ஒரு பெரிய பரப்பில் நிறுத்தி ஆராய வைக்கிறது. ஏனெனில் பல்வேறு வகைப்பட்ட மனிதர்களாக நாம் இலக்கியத்தில் வாழ்கிறோம். நான் வாசிப்பதும் எழுதுவதும் இப்படி வேறுவேறு மனிதர்களாக வாழ்ந்து பார்க்கவே.

Thursday 16 August 2018

போர்முரசு

பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வேதியியலில் எப்படியும் தேரமாட்டேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததனால் கமலாயக் கரையில் இருக்கும் வினாயகா டியூஷன் சென்டரில் சேர்ந்தேன். டியூஷன் ஆசிரியர் செந்தில்குமார் வேதியியல் நன்றாக சொல்லிக் கொடுப்பார். சிக்கல் என்னவெனில் காலையில் ஆறு மணிக்கு டியூஷன் தொடங்கும். என் வீட்டிலிருந்து டியூஷன் சென்டர் பதினாறு கிலோமீட்டர். முதல் சில வாரங்கள் அப்பா தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸெல் ஹெவி டியூட்டியில் அழைத்து வந்து விட்டார். அது எனக்கு சரியாகப்படவில்லை. சைக்கிளில் சென்று கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆரம்பத்தில் நேரமாகிவிடக்கூடாது என்று ரொம்பவும் பயந்து ஐந்து மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவேன். ஐந்து மணிக்கு நீருற்றிய வடிவத சாதமும் ஒரு டம்ளர் பாலும் ஆகாரங்கள். நாட்கள் செல்லச் செல்ல ஐந்து மணி ஐந்து முப்பதானது. டியூஷனின் இறுதி நாட்களில் பதினாறு கிலோமீட்டரைக் கடக்க எனக்கு பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களே தேவைப்பட்டன. நாகப்பட்டினம் செல்லும் ஒரு அரசுப் பேருந்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு சைக்கிள் ஓட்டுவேன். காலையில் கோலமிட வாசலுக்கு வரும் பெண்கள் அணிந்திருக்கும் உடை மலர் என அனைத்தும் தனித்தனியே நினைவிருக்கும். எந்த மூலையிலிருந்து எந்த நாய் எழுந்து வந்து குரைக்கும் என்பதெல்லாம் தெரியத் தொடங்கியது.

டியூஷனில் சென்று நிற்கும் போது களைப்போ மூச்சிரைப்போ துளியும் இருக்காது. மாறாக மனதில் நிறைவும் தன்னம்பிக்கையும் பெருகி இருக்கும். ஐந்து மணி காலை உணவுக்குப் பின் மதியம் ஒன்றரைக்கு அம்மன் உணவகத்தில் ஐந்து ரூபாயாக்கு குஸ்கா. அதுவும் காசு கொடுத்தவுடன் எல்லாம் கிடைக்காது. ஏற்கனவே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவரின் பின்னே வரிசையில் நிற்க வேண்டும். சில சமயம் நான்காவது ஐந்தாவது ஆளாகவெல்லாம் நின்றிருக்கிறேன். அதன்பிறகு மீண்டும் பதினாறு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தபிறகு தான் சாப்பாடு. அதையும் பொறுமையில்லாமல் அள்ளிக் கொட்டிக் கொண்டு பள்ளியில் கொடுக்கப்பட்டிருக்கும் சில்லறை வேலைகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் லேண்ட்லைன் போனில் சாட் செய்யத் தொடங்கிவிடுவேன் (ஆம் லேண்ட் லைன் தான். அப்போது ரிலையன்ஸில் ஒரு வில்ஃபோன் குறைந்த விலைக்கு கொடுத்தனர். அதில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு கட்டணமில்லை. அந்த போன் வசதி உடைய நண்பர்கள் சிலருடனும் அலைபேசி வைத்திருந்த சிலருடனும் உரையாடுவேன்) அந்த தொலைபேசியில் display light(திரையொளி?) இல்லாததால் வீட்டில் விளக்கணைக்கப்பட்டு எல்லோரும் தூங்கிய பிறகும் கூட கண்ணை இடுக்கிக் கொண்டு சாட் செய்து கொண்டிருப்பேன். பதினோரு மணிக்கு மேலாகிவிடும் உறங்க. மீண்டும் நான்கு நான்கரைக்கு எழுந்து அதே பயணம். இதுவரையிலான வாழ்நாளில் மிகச்சிறப்பான நாட்கள் என அவற்றைத்தான் சொல்வேன். மிக அதிகமாகப் பேசி மிக அதிகமாக சிரித்த நாட்கள் அவை. அத்தகைய தீவிரம் அதன்பின்பு அமையவில்லை. ஒருவகையில் அத்தகைய கூர்மையான மனநிலை அப்போது அமையவில்லை எனில் வாசித்திருக்கவும் மாட்டேன். ஜெயகாந்தனின் ரிஷிமூலம் படித்து மனவிரக்தியடைந்து சாப்பாடு இரங்காமல் கிடந்ததும் பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும் படித்ததும் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்ததும் அப்போது தான். உள்ளம் கூர்மையடையும் பல விஷயங்களில் முழுமையாகவே நிறைந்திருக்க முடிகிறது.

போரும் அத்தகையதொரு நிகழ்வு தான். வன்முறை சீரழிவு என்று நம்முடைய அறிவு  எவ்வளவு ஒதுக்கினாலும் போர் குறித்து உளக்கூர்மை கொண்டவர்களால் எண்ணாமல் இருக்க முடியாது. உங்கள் நண்பர் குழாமில் மிகக்கூர்மையான மனிதரைக்குறித்து எண்ணிப்பாருங்கள். அவர் சமூக அக்கறை உடையவராயின் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் குறித்துப் பேசுவார். விளையாட்டார்வம் உடையவராயின் ஒரு அணி மற்றொரு அணியை எவ்வாறு வென்றதென பரவசத்துடன் விவரிப்பார். அழிவை விரும்பும் சாமான்ய மனநிலை குறித்து நான் சொல்லவில்லை. உண்மையில் உள்ளத்தில் தினமும் போட்டியையும் வெற்றியையும் நிகழ்த்திப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி சொல்கிறேன். 

வெண்முரசில் இது போர்த்தருணம். பெருநாவல்களை வாசிக்கும் தன்னம்பிக்கையை எனக்கு அளித்த படைப்பு போரும் வாழ்வும். உச்சியில் பொருத்தப்பட்ட ஒரு இரக்கவுணர்வற்ற கேமரா போல அந்த நாவல் போர் நகர்வுகளையும் இடப்பெயர்வுகளையும் விவரித்துச் சென்றது போர் குறித்த மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சித்தரிப்பாக எனக்குப்பட்டது. ஆனால் போரும் வாழ்வும் உட்பட பெரும்பாலான போர் விவரிப்பு நாவல்களில் நான் உணர்ந்த குறை ஒன்றுண்டு. பிரம்மாண்டமாக போரை சித்தரிக்கும் படைப்புகள் தனிமனித உணர்வுகளை நீர்த்துபோக விட்டுவிடுகின்றன. தனிமனிதக் கண்கள் வழியாக நிகழும் போர்களில் பெரும் படைநகர்வின் கணம் ஏறுவதில்லை.

வெண்முரசின் பதினெட்டாவது நாவலான செந்நா வேங்கையில் அரவானின் சுயபலியுடன் போர் தொடங்குகிறது. (செந்நா வேங்கை அத்தியாயம் 76 ஆகஸ்டு 15   https://www.jeyamohan.in/111744#.W3Y_SXPhU0M). மூன்று நாட்களாக தொடர்ந்து வாசித்த போது உணர்ந்ததைச் சொல்லியே ஆகவேண்டும் என்பதால் தான் இப்பதிவு. போர்ச்சித்திரம் இந்த நாவலில் அபாரமாக உருப்பெறத் தொடங்கி இருக்கிறது. உத்தரன்,ஸ்வேதன்,சங்கன், ஜயத்ரதன் என்று தனித்தனியாக போர் நிகழ்வதாக எண்ணச்செய்யும் அதேநேரத்தில் இரு படைகளும் நெருங்கச் சென்று சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும் இப்பகுதி மிகச்சிறப்பாக சொல்கிறது.இதுவரை வெண்முரசு வாசித்திராத ஆனால் போர்ச்சித்தரிப்புகளை வாசிப்பதில் ஆர்வமிருக்கும் நண்பர்கள் இப்பகுதியை நேரடியாகவே வாசிக்கலாம். 

வெண்முரசு குறித்து தமிழ் இலக்கியச்சூழலில் விவாதங்கள் பெரிதாக இல்லை. பெரிய விவாதங்கள் ஏன் நிகழவில்லை என்று கேட்டால் ஏதாவது சில்லறை அரசியல் காரணங்களையும் "மூல மகாபாரதம் போல இல்லை" என்று சில்லறை ஆச்சாரக்காரணங்களையுமே சொல்கின்றனர். ஆனால் வெண்முரசு தொடர்ச்சியாக பலரால் படிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. தீவிர இலக்கிய விமர்சனங்கள் நம் தமிழ் இலக்கியப் படைப்புகளை இன்னும் சக்கையாகப் பிழியும் போது தமிழ் வாசகன் வாசிக்க எஞ்சப் போவது மிகக் கொஞ்சம் தான். அந்தக் கொஞ்சத்தில் வெண்முரசு பெரும் இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதில் ஒரு "இளம் வாசகனாக" எனக்கு எந்த சந்தேகங்களும் இல்லை. நண்பர்களை இந்தப் போர் சித்தரிப்பு வழியாக வெண்முரசுக்குள் அழைக்கிறேன்.