Sunday 27 August 2017

அயோத்திதாசர் ஒரு அறிமுக உரை!!

நண்பர்களுடனான ஒரு மாலை உரையாடலை பதிவு செய்தது மட்டுமே இது. அமேரிக்கா தேர்தல் முறை பற்றிய தகவல் மட்டும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. மற்றபடி ஒரு முறையான உரையாற்றும் எண்ணத்தோடு தொடங்காததாலும் என்னுடைய சட்டைப்பையில் கிடந்த அலைபேசி இவ்வுரையை பதிவு செய்ததாலும் திறந்தவெளி உரை என்பதாலும் ஒலிப்பதிவின் தரம் குறைவாகவே இருக்கும். எனினும் என்னை என் குரல் வழியாக நண்பர்கள் அறிய வழி வகுக்கும் என்பதால் இதை வலையேற்றுகிறேன்.

அயோத்திதாசர் அறிமுக உரை

Tuesday 15 August 2017

ஆசிரியர் சொல்

ஒளிர்நிழல் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகப்போகின்றன. இந்த நாவலின் முதல் வாசகரான மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி நாவலை வாசித்து மெய்ப்பு பார்த்த ஹரன் பிரசன்னா மற்றும் பேராசிரியர் டி.தருமராஜ் ஆகியோர் மட்டுமே நாவல் குறித்து தங்கள் பார்வையை விரிவாக என்னுடன் பகிர்ந்து கொண்டனர். வாசிப்பதற்கு மெல்லிய சவாலை அளிக்கும் படைப்பு என்பதால் ஓரளவு இலக்கிய வாசிப்பு உடைய நண்பர்களிடம் இருந்தே எதிர்வினையை எதிர்பார்த்தேன். பின்னர் அவர்களுக்கும் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும் போல என மிதப்பாக எண்ணிக் கொண்டேன். நாட்கள் நகர்ந்த போது "படித்துக் கொண்டிருக்கிறேன்" மற்றும் "புரியவில்லை" என்ற இரு பதில்களே நண்பர்களிடம் இருந்து அதிகம் வந்தன(நான் கேட்காவிட்டாலும்😊).

ஆசிரியரின் இந்த நீண்ட விமர்சனம் நானடைந்த பேறு. அதேநேரம் எல்லா விமர்சனங்களுமே வாசகர்களை நோக்கியதே. ஆகையால் ஒளிர்நிழல் வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு இந்த விமர்சனம் ஒரு புரிதலை அளிக்கும். வாசகனாக எனக்கும் இந்த விமர்சனம் எனக்கு அத்தகைய புரிதலை அளிக்கிறது.

http://www.jeyamohan.in/101425#.WZJ9PcvA7qA

Tuesday 8 August 2017

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை

ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதை வெளியில் இருந்து சொல்லப்படும் போது ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். அதன் தோற்றத்தையும் வீழ்ச்சியையும் சரியான வார்த்தைகளில் படம் பிடித்து நிறைவோ துயரோ வேண்டிய அளவு உணர்ச்சிகளை ஊட்டலாம். ஆனால் ஒரு பழைய ஓட்டு வீட்டின் கதையை அவ்வீடு புதிதாக இருந்த போது அங்கு வளர்ந்த ஒருவனின் சொற்களில் அதுவும் அவ்வீட்டுக்குள் இருந்தே வெளிவரும் அவன் சொற்களில் கேட்பது சற்றே சங்கடம் தருவதாக இருக்கலாம். வெளியே அடர்த்தியாக மழை பெய்கிறது. இவ்வீடு ஒரு கிழ நாயைப் போல மழைக்கு அஞ்சி நெளிகிறது. இதை உங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பவன் அவ்வீட்டுக்குள் கிடந்த நெளிகிறான். உங்கள் கட்டிடங்களை அவை கட்டிடங்கள் என்ற உணர்வு எழும் முன் இடித்துவிடுங்கள் என்பது அவன் சொல்லும் போதனையாக இருக்கலாம். ஏனெனில் அவன் இப்போது ஒரு கட்டிடத்தில் இருக்கிறான். அவன் இந்த கட்டிடத்துக்கு எப்போது வந்தான் எனத் தெரியவில்லை. ஆனால் அவன் வீட்டை விட்டே சென்றிருந்தான். திரும்பி வருகையில் அந்த வீட்டில் கொஞ்சம் வீடும் அவன் அம்மாவில் கொஞ்சம் அம்மாவும் அவன் மனைவியில் கொஞ்சம் மனைவியும் எஞ்சி இருப்பார்கள் என அவனுக்கொரு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஆதாரமாய் அந்த வீட்டைத் தவிர வேறெதையும் அவன் செல்லும் போது விட்டுச் செல்லவில்லை. அவன் அந்த வீட்டுக்கு திரும்பி வந்தது ஊரில் யாருக்குமே தெரியவில்லை. ஊரை விட்டு இப்போது அவன் வீடு தள்ளியிருக்கிறது. அவன் வீட்டுக்கு அருகில் இருந்த எந்த வீட்டிலும் இப்போது ஆட்கள் இல்லை. மேலு‌ம் அவை வீடாகவும் இருக்கவில்லை. இடிந்து நைந்து வரப்போகும் பெருமழையில் கரையக் காத்திருந்தன. இவன் வீடு அப்படியில்லை. சிக்கலான நோய்கள் கொண்டவனைப் போல அவன் வீடு மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அது வீடாக இருந்த நாட்கள் அவன் நினைவுக்கு வருகின்றன.

எல்லாவற்றையும் துல்லியமாக நினைவுகூர அவன் விரும்பவில்லை. அவனால் அது முடியவும் இல்லை. அவன் விரும்பினால் இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருக்கலாம் என்பதைப் போலவே அவன் விரும்பினால் பல நினைவுகளை அவ்வீடு குறித்து மீட்டெடுக்க முடியும்.

அவன் அம்மா அவ்வளவு சந்தோஷமாக சாப்பாடு பரிமாறிய தினம் அவனுக்கு ஞாபகம் வந்தது. அது இந்த வீடு கட்டி முடித்து பால் காய்ச்சப்பட்ட தினம். அவள் முகத்தில் அன்றிருந்த சீற்றமும் பெருமிதமும் இன்று நினைத்தாலும் மனம் பொங்க வைக்கின்றன. அடுத்த நாளில் எந்த வெற்றியும் இருந்ததாக அவள் நம்பவில்லை. சிறு அலட்சியங்களை அவமானங்கள் என்றும் எண்ணியது அதே செறிவுடன் நடக்காதது தோல்வி என்றும் அவள் கற்பனை செய்தாள். எந்நேரமும் தொடுக்கப்பட்ட அம்பு போலவே இருந்தாள். அந்த வீடும் அப்படித்தான் இருந்தது. அதுவரை அவன் அம்மாவின் உடலில் தெரிந்த தயக்கம் இல்லாமல் ஆவதை அவன் கண்டான். திண்ணையில் நின்று அனைத்திற்கும் தீர்க்கமாக பதில் சொன்னாள். அப்பாவை "இங்க வாங்க" என சத்தமாக அழைத்தாள். சாலையில் நடந்து செல்கிறவர்களை அலட்சியம் மின்னும் விழிகளால் பார்த்தாள். தன் மதிப்பை யாரேனும் குறைக்க வேண்டும் என்ற ஆசை அவளிடம் எப்போதும் இருந்தது. அதன் வழியே அவர்களை பற்றிப் படர்ந்து படம் விரிக்க நினைக்கும் அவளுடைய ஆவலை அனைவரும் அஞ்சினர்.

அப்பா அந்த வீட்டுக்கு வந்த பிறகு எந்நேரமும் இருக்கும் பதற்றம் குறைந்தவர் ஆனார். செய்தித்தாள்களை விரித்துப் பிடித்து அரைமணி நேரத்திற்கும் மேலாக வாசிக்கும் அப்பாவை பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மாவை அடிப்பதோ கெட்டவார்த்தைகளில் திட்டுவதோ கிடையாது. வீட்டுக்கு வரும் யாரையும் எதையும் உண்ண வைக்காமல் அனுப்புவதில்லை அவர். சத்தமாக சிரிக்கிறார் கூர்மையாக அனைத்தையும் கவனிக்கிறார்.

அவன் மாறிப்போகவே செய்தான். முதலில் வீட்டருகில் யாரும் இல்லாதது வருத்தம் தருவதாய் இருந்தது. ஆனால் அவன் வீட்டுக்கு அடுத்து விரியும் திடலில் தான் பசங்கள் விளையாட வருகிறார்கள். அதனால் இயல்பாகவே அவன் எல்லா விளையாட்டிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். விளையாட்டுச் சாமான்கள் எல்லாமும் அந்த வீட்டிலேயே வைத்துச் செல்லப்பட்டன. அவன் வீட்டுக்கு அருகில் சில வீடுகளும் கட்டப்பட்டன. இருந்தும் அவன் வீட்டின் தனிமை அப்படியே அசைக்கப்படாமல் இருந்தது. அந்த வீட்டில் தான் ரம்யா சித்தி ஒருமுறை பாத்திரம் கழுவ வந்தவள் வீட்டுக்குள் டி.வி பார்த்துக் கொண்டிருந்தவனை பிடித்து உடலோடு அணைத்து உதடுகளில் இறுக்கமாக முத்தமிட்ட பின் அழுது கொண்டே ஓடினாள். செல்வி அக்காவுக்கு அந்த வீட்டில் தான் குழந்தை பிறந்தது. சுமதியை முதன்முறையாக அவன் முத்தமிட்டதும் அங்குதான். நண்பர்களுடன் இணைந்தமர்ந்து கைகள் நடுங்க முதன்முறையாக மது அருத்தியதும் அங்குதான்.

வெளியூருக்கு படிக்கச் சென்ற போது அந்த வீட்டை மட்டுமே மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டான். நண்பர்களின் வீடுகளை பார்க்கும் போதெல்லாம் தன் வீட்டுடன் அதை ஒப்பிட்டு பெருமையோ சிறுமையோ அடைந்தான். படித்து முடித்த பின் காயத்ரியை கூட்டிவந்தபோது அவன் எவ்வளவோ மறுத்தும் அவள் அவனை தன்னுடன் முதன்முறை இணைத்துக் கொண்டதும் இந்த கூடத்தில் தான். அவளை மணமுடித்ததில் அப்பாவுக்கு வருத்தம் இருந்தது. மாரடைப்பில் இறந்து போனார். அதன்பிறகும் அவன் வீடு நன்றாகவே இருந்தது. காயத்ரியின் உறவினர்கள் அம்மாவின் உறவினர்கள் அவனுடைய மகன் மகள் என வீடு எந்நேரமும் சத்தமாகவே இருந்தது. அவனும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு வந்துவிடும் வேலையிலேயே இருந்தான். அவனுக்கு எங்கோ ஒரு மூலையில் சலிப்பு தட்டியிருக்க வேண்டும். காயத்ரியை தவிர்க்கத் தொடங்கினான். அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் யாருடனும் பேசாமல் ஆனான். குழந்தைகளை கொஞ்சுவதும் குறைந்து போனது. சரியாக வேலைக்குச் செல்வதில்லை. குடும்பம் நொடிக்கத் தொடங்கியது. எப்போதேனும் அவளைக்கூடும் போது அவளுடைய குழி விழுந்த கன்னங்களையும் சுள்ளி போன்று மாறியிருந்த கைகளையும் கண்டு வெறி கொண்டு அடிக்கத் தொடங்கினான். அவள் கைகளை முகத்துக்கு நேரே நீட்டிக் கொண்டு அழுவது மேலு‌ம் வெறுப்பைக் கொடுத்தது.

குழந்தைகள் உண்ணாமல் மெலிந்து கொண்டே வந்தன. அதை நினைத்தும் எரிச்சல் கொண்டான். அவன் எதை நினைத்து எரிந்தாலும் காயத்ரியை அணைத்துக் கொண்டான். குழந்தைகள் பார்க்கவே அவள் கெஞ்சுவதையும் பொருட்படுத்தாமல் உள்ளே இழுத்துச் சென்றான். கொஞ்ச நேரத்தில் அழுதபடி ஓடிவரும் அம்மாவுக்காக குழந்தைகள் காத்திருக்கத் தொடங்கின. ஒரு இறந்த குழந்தையை ஈன்றாள்.

மகனுக்கு மார்புச்சளி முற்றி வைத்தியம் பார்க்க பணமில்லாமல் ஆனபோது அவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். பிச்சை எடுத்தான். ஓரினச்சேர்க்கை மூலம் அவனுக்கு கொஞ்ச நாள் பணம் கிடைத்தது.

"என் பிறப்புக்கு முந்தைய கணத்தை என்னால் ஊடுருவிப் பார்க்க முடிகிறது. எனக்கு அம்மா இருந்தாள். எனக்கு இரு அழகான குழந்தைகளும் ஒரு அற்புதமான மனைவியும் இருந்தார்கள். எங்களுக்கு அழகான ஒரு ஓட்டு வீடு இருந்தது. நாங்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாய் வாழ்ந்தோம்" என அவன் தன் பூர்வ ஜென்ம நினைவுகளாய் தன் குடும்பத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். கண்கள் வெளித்தள்ளிய அந்த எலும்புருவுக்கு அப்படியொரு வாழ்க்கை இருந்திருக்கும் என யாரும் நம்பவில்லை.

அவன் மெல்ல மெல்ல அந்த வாழ்க்கைக்கு பழகிக் கொண்டான். கண்டதை தின்றும் கண்ட இடத்தில் உறங்கியும் அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவன் உடலும் தேறியது. அவனுக்கு பெண்களும் எளிதாக கிடைத்தனர். எல்லா ஆறுகளிலும் மூழ்கி எழுந்தான். அவன் ஊர் என்ற போதம் இல்லாமலேயே அவன் ஊர் ஆற்றில் முழுகி எழுந்தான். எப்போதும் போராடி நீந்தும் அவன் உடல் அவ்வாற்றில் எளிதாக நீந்தியது. அவன் ஊரும் வீடும் அவனுக்கு நினைவுக்கு வந்தன. அதுவரை உடலில் இருந்த சமநிலையும் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் காணாமல் ஆனது. நோயுற்றவன் போல அவன் முகம் இருண்டது. அவன் வீட்டை அவன் அடைந்த போது இருட்டிவிட்டிருந்தது.

வீட்டுக்கு கதவுகள் இல்லை. எறும்புகள் வீடு முழுக்க மண் அரித்து வைத்திருந்தன. பொருட்கள் என அவ்வீட்டில் ஏதுமில்லாதது அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அடுத்த நிமிடமே பயம் வந்து மனதைக் கவ்வியத். பல கட்டுவிரியன் பாம்புகள் அவனைச் சுற்றி நெளிந்து கொண்டிருந்தன. அவனளவு நீளமும் அவன் கையளவு கனமும் கொண்ட நிறைய பாம்புகள்.

சமையற்கட்டின் மேல் பிணைந்து கிடந்த பாம்புகளை அகற்றிவிட்டு அக்கட்டையின் மேல் படுத்துக் கொண்டான். அவனுடைய துணிப்பையில் இருந்த கம்பளியை எடுத்துப் போர்த்திக் கொண்டான். பின்னர் அப்பையில் இருந்த எல்லா உடைகளையும் எடுத்துப் போர்த்திக் கொண்டான். நன்றாக மழை பெய்யத் தொடங்கியது. அந்த குளிரை அனுபவித்தபடியே கிடந்தான். அவன் படுத்திருந்த மேடையின் மழை ஒழுகவில்லை.

மனம் எப்போதும் அஞ்சித் தயங்கும் அந்தப்புள்ளியை இந்த உடற்சுகநிலை அசைபோடத் தொடங்கியது. ஒருவேளை அவன் காயத்ரியை வெறுக்காமல் இருந்திருந்தால். அம்மாவையும் குழந்தைகளையும் பிரியாமல் இருந்திருந்தால். போர்த்தி மூடி தூங்கும் அவனை அவள் மகள் ஒவ்வொரு போர்வையாக இழுத்து எழுப்புகிறாள். அவன் மகன் அவன் மேல் ஏறிக்குதிக்கிறான். குளித்த ஈரம் சொட்டும் தலையுடன் உடைமாற்றும் காயத்ரியின் உடல் மணம் மனதை கிளரச் செய்கிறது. அம்மா ஒருக்கி வைத்திருக்கும் பூஜை அறையினுள் நன்றாக குளித்து உடையணிந்தபடியே போய் அவனும் காயத்ரியும் பிள்ளைகளும் போய் நிற்கின்றனர். அவள் அவர்கள் நால்வருக்கும் விபூதி பூசி விடுகிறாள். கணவனை நினைத்து கலங்கும் அவள் கண்களை துடைத்துவிட்டு அணைத்தபடி அழைத்துச் செல்கிறாள் காயத்ரி. பாட்டி அழுவதற்கான காரணத்தை கேட்கும் குழந்தைகளை திசைமாற்றி அவன் வேறு பக்கம் அழைத்துச் செல்கிறான். அவன் கண்களும் பனிக்கின்றன.

ஆனால் அதை அவன் துடைத்த போது அவனை எழுப்ப ஆள் இல்லை. மழையில் நனைந்த பாம்புகள் உடற்சூடு தேடி ஊர்ந்து கொண்டிருந்தன. அந்த வீடு மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தது. பாம்புகள் உடற்சூட்டினை கண்டு கொண்டன. அவற்றை அணைத்துக் கொண்டான். கடைசியாக அடித்த மின்னலில் அந்த வீட்டின் சிவப்பான ஓடுகள் கண்ணுக்குத் தெரிகின்றன.

மையல் - சிறுகதை

"ச்சூப்ரைச்சர்" என்று மெல்ல மாலினி சொல்வது கனவுக்குள் கேட்டது. உடல் மெல்ல உசுப்பப்பட்ட போது மீண்டும் அதே குரல் "ச்சூப்ரைச்சர்". இம்முறை மேலு‌ம் நெருக்கமாக. திறந்து கிடந்த அறைக்கதவில் கால் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்த என் கனுக்கால்களை மாலினியின் கைகள் அசைத்துக் கொண்டிருந்தன. திடுக்கிட்டுப் போய் எழுந்தமர்ந்தேன். உடல் இந்த உலகத்துக்கு வர சற்று நேரம் பிடித்தது.

விடியும் போது அவ்வளவு அழகான பெண்ணை நெருக்கத்தில் பார்ப்பது அபாயமானதே. மாலினி சிரித்துக் கொண்டிருந்தாள். புலன்கள் மேல் எண்ணங்கள் படிந்து மெல்ல மெல்ல மணிகண்டனாக அதனினும் மெல்ல ஒரு நிறுவன ஊழியனாக மாறிக் கொண்டிருந்தேன். நிறுவனங்கள் கொடுக்கும் அறைகளில் தங்குவது எந்நேரமும் அவ்விடத்தோடு தொடர்புடையவன் என்ற எண்ணத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மாலினியையும் அப்படி தொடர்புபடுத்தித் தான் புரிந்து கொண்டிருக்கிறேனா? அவள் விளையாட்டாக அழைக்கும் "ச்சூப்ரைச்சரில்" கூட ஏதோ நினைவூட்டல் உள்ளதா? அவள் என்னுடன் பழகுவதே அந்த நினைவூட்டலுக்கான சலுகைகளைப் பெறத்தானா? மாலினியின் முகம் சலிப்படைந்தது. அச்சலிப்பினை போக்க கேட்கப்பட வேண்டிய கேள்விகள் என் வாயில் வர நான் இன்னும் தோய வேண்டும். குழிபறித்துக் கொண்டு கீழிறங்க வேண்டும். அவள் நெருக்கத்துக்கென அதைச் செய்யலாம் தவறே கிடையாது.

முகத்தில் ஆச்சரியத்தைக் கொண்டு வந்த பிறகு "ஏய்...என்ன..." என குழப்பமாக நிறுத்தி "நீ...." என இழுத்து பின்னர் முகம் மலர்ந்து "இங்க ஏம்ப்பா வந்த" என குழைந்து இழுத்தேன். மாலினி மேலும் பிரகாசம் கொண்டுவிட்டாள். குளித்தவுடன் உடை மாற்றி அப்படியே வந்திருக்கிறாள். தோள்களின் ஈரத்தை சுடிதார் காட்டியது. என் அறை ஜன்னலின் வழியே அடித்த இளவெயில் அவள் உதட்டுக்கும் நாசிக்கும் இடையேயும் கழுத்திலும் இலைநுனிச் சொட்டுகள் போல வியர்க்க வைத்திருந்தது.

"ஓய் இன்னா..." என அவள் அதட்டிய போது மீண்டு வந்தேன்.

"இன்னிக்கு எனக்கு ஆஂப்" என்றாள்.

"அதுக்கு" என்றேன் மெலிதாக சிரித்தபடி.

"ஒன்னும் இல்ல" என்றபடியே வெட்டித்திரும்ப முனைந்தாள். அவள் கைகளை பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

"மாலி" என்றேன். திரும்பி மட்டும் நின்றாள்.

"சரி எங்க போகலாம்" என்றேன்.

சட்டென கண்ணில் மின்னிய ஆர்வத்தை அணைத்துக் கொண்டு "நா அத கேக்க ஒன்னும் வரல" என்றாள் குழந்தைத்தனமாக. மனதில் வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டேன்.

தன்னை குழந்தையென கற்பனை செய்து கொள்ளும் தன்மையை நிறைய பெண்களிடம் பார்க்க முடிகிறது. அவர்களின் ஊசலாட்டங்களை கத்தரித்து "நீ ஒரு பெண். நிச்சயம் குழந்தை கிடையாது" சொல்ல வேண்டும் என எண்ணினேன். ஆனால் மாலினி இப்போது அந்த குழந்தைத்தனத்துக்கு அங்கீகாரம் எதிர்பார்க்கிறாள்.

"பின்ன எதுக்கு வந்தியாம்" என்றேன்.

"சும்மா வந்தேன்" என்றாள் இப்போது இளம் பெண் போல.

மாலினி தயவுசெய்து நிதர்சனத்தை புரிந்து கொள். நீ முப்பதை நெருங்கிக் கொண்டிருப்பவள். ஏற்கனவே ஒருவனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவள். இப்போது உன் குடும்பத்துக்கு சோறு போடவே இங்கு வந்துள்ளாய். இந்த அதீத நாடகங்களை எதற்காக யாருக்காக புனைந்து நடிக்கிறாய் என்று இம்முறையும் என் மனதிடமே அவளிடம் கேட்பது போல் கேட்டுக் கொண்டேன்.

"சும்மா பைக்ல அவுட்டிங் போலாம்" என்றேன்.

ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு வெளியேறினாள். மாலினி இரண்டு வருடங்களாக அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்கிறாள். நான் ஒரு வருடத்துக்கு முன் அந்த நகரில் இருக்கும் ஸ்டோர்களுக்கு மேற்பார்வையாளனாக நியமிக்கப்பட்டேன். ஒரே ஊர் என்பதால் மாலினியிடம் இயல்பாகவே நன்றாக பழகிவிட்டேன்.

பள்ளி நாட்களில் நீல நிற தாவணி அணிந்தபடி எங்கள் வீட்டை கடந்து செல்லும் போது அவளைப் பார்த்திருக்கிறேன். அவளுடைய அப்பா கடை நடத்தி வந்தார். நான் கல்லூரிக்கென விடுதியில் தங்கியிருந்த போது விடுமுறைக்கு வரும் போது அம்மா ஊரில் நடந்தவற்றை சொல்லும். மாலினி பிரசன்னாவை காதலித்ததும் எனக்கு அப்போது தான் தெரிந்தது. பிரசன்னா ஏதோவொரு வகையில் எங்களுக்கு தூரத்து உறவு. அந்த ஊர் முழுக்கவே எங்களுக்கு சொந்தக்காரர்கள் தான். மாலினியின் தாத்தாவிடம் பிரசன்னாவின் அப்பா வெகுநாட்களாக வேலை பார்த்திருக்கிறார். ஆனால் மகன்கள் யாரையும் அவர் வேலை செய்யும் பக்கம் வரவிட்டதில்லை. பிரசன்னாவையும் பார்த்திருக்கிறேன். ஒரு வித தாழ்வான பாவனை அவனிடம் எப்போதுமே இருக்கும். என்னினும் மூத்தவன் என்றாலும் அப்படி பேசமாட்டான்.ஆனால் அவன் தொழிற்பயிற்சி முடித்ததும் என்ன நடந்ததோ ஆளே மாறிவிட்டான் என அம்மா அங்கலாய்த்தது.

அவன் குறித்து அம்மா சொன்ன அனைத்தும் எனக்குள் ஒவ்வாமையை உருவாக்கியது. நேரில் ஒருமுறை பார்த்த போது அவனில் வெளிப்படும் பணிவு முற்றிலும் மறைந்திருந்தது.

"என்னடா பண்ற இப்போ" என்றான்.

அவனுக்கு நான் உடனடியாக அளிக்கும் பதில் என்னை தாழ்த்தி நிறுத்தும் என்ற நிதானம் கோபப்படுவதற்கு முன்பே வந்துவிட்டதால் அமைதியாக இருந்தேன். அவனை எப்படியேனும் தாழ்த்திவிட வேண்டுமென மனம் பரபரத்தது. அந்த எண்ணமே முகத்தில் ஒரு செயற்கையான மிடுக்கை வரவழைத்தது. குரலை தாழ்த்திக் கொண்டு "ம்?" என்றேன்.

அவன் மொத்த தன்னம்பிக்கையும் தளர்ந்து போய் ஒரு நொடி தன்வயம் இழப்பதைக் கண்டேன். மீண்டும் அதே கேள்வியை அவன் கேட்கக்கூடாது என எண்ணினேன்.

"அப்பாம்மால்லாம் நல்லாருக்காங்களா" என்றான்.

"ம்ம்" என்றேன் சற்றே பல் தெரியாதவாறு உதட்டை விரித்தபடி. ஒரு நொடி கூட நிற்காமல் நகர்ந்து சென்றான். மாலினியை அவன் காதலித்து கைவிட்டதாக அம்மா சொன்னது அவளை பார்த்த நொடி எப்படி ஞாபகம் வந்தது என வியந்தேன். மிக ஆழத்தில் அந்த தகவல் என்னுள் இருந்து கொண்டிருந்ததா? அதன்பிறகே அவள் என்னுடன் நெருங்கிப் பழகுவதற்கு இந்த தகவல் தெரிந்ததால் என்னுள் உருவாகியிருந்த நெகிழ்வு அல்லது எதிர்பார்ப்பே காரணம்  என உணர்ந்து கொண்டேன். மாலினி அதைத்தவிர அனைத்தையும் என்னிடம் சொன்னாள். தன்னை இன்னொருத்தியாக என்னிடம் கட்டமைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதை மறைக்க முயன்றதே இயல்பாக அதைச் சொல்ல வைத்தது.

"உனக்குத் தெரியுந்தான மணி?" என்றுதான் முதலில் கேட்டாள்.

"என்ன தெரியுமா?" என்றேன்.

"பிரசன்னா" என்றாள். முதல் முறையாக ஒரு காதல் தோல்வி கதையை கேட்கும் மகிழ்ச்சி என்னுள் படர்ந்தது.

"அவனுக்கு என்ன" என்றேன். அந்த உணவு விடுதியில் பெரும்பாலும் ஆட்கள் இல்லை.

"அவந்தான் என்ட்ட சொன்னான் என் மேல ஆசயாயிருக்குன்னு" என்று அவள் சொன்னபோது சங்கடமான ஒரு உணர்வு மனதில் துளிர்த்தது. அதைச் சொல்லும் போது அவள் கண்களில் வந்து சென்ற ஒளி அச்சுறுத்துவதாய் இருந்தது.

"நா முடியாதுன்னு தான் சொன்னேன். அவந்தான் என்னென்னமோ சொல்லி என்ன குழப்பினான். எனக்கும் அவன பிடிச்சு தான் இருந்தது" என்று மாலினி சொல்லிய போது சட்டென ஒரு தனிமையுணர்வு தாக்கியது. என்னை நிமிர்ந்து பார்த்ததும் அவள் விழிகள் கூர்மை கொண்டன. மிக நிதானமாக சொல்லெடுக்கத் தொடங்கிவிட்டாள். நான் ஒரு ஆங்காரத்தை என்னுள் உணர்ந்தேன். என்னிடம் அவள் சொல்லாமல் தவிர்க்க நினைப்பது எது? இந்த தோல்விக்குப் பின்னும் அவள் எதை பூட்டி வைத்துக் கொள்ள விழைகிறாள்? இல்லை என்னை துன்புறுத்தும் என எண்ணுகிறாளா? எது என்னை துன்புறுத்தும்?

"கொஞ்ச கொஞ்சமா என்னைய அவாய்ட் பண்ண ஆரம்பிச்சான்" என அவள் சொன்னபோதே அக்கதைக்கு நான் மீண்டு வந்தேன்.

"அவனோட ஸ்டேட்டஸ் எங்கையோ போயிட்டு" என்று அவள் சொன்னது என்னை அவமானப்படுத்துவது போல் இருந்தது. அதன்பிறகு அக்கதையில் நான் ஆர்வம் கொள்ளவில்லை. தன் அந்தரங்கம் தெரிந்த ஒருவன் அருகில் இருப்பது அவளுக்கு நம்பிக்கையை கொடுத்தது. அவளுடன் வெளியே சுற்றத் தொடங்கியது அதன்பிறகு தான். அவளுடைய "பெண்மைக்கு" அவ்வப்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்து சொல்வாள். எனக்கு அது ஒவ்வாமையையே கொடுக்கும்.

மாலினி நன்றாகவே தயாராகி விட்டிருந்தாள். இருபுறமும் பொட்டல் விரியும் தூரம் வரை ஊரை விட்டு வந்திருந்தோம். இப்போதெல்லாம் அவள் பிரசன்னா குறித்து பேசுவதே இல்லை. அவன் குறித்த அவளது எண்ணங்கள் மட்டுமே நான் உள்நுழைவதற்கான இடைவெளி.

ஒரு ரோட்டோர கடையில் வண்டியை நிறுத்தியபின் "அதுக்கப்புறம் நீ என்ன பண்ணினே?" என ஏதோ அப்போது விட்ட பேச்சு போல கேட்டேன்.

அவளும் எதார்த்தமாக சொல்லத் தொடங்கினாள்.

"அவனோட க்ளோஸா இருக்க ட்ரை பண்ணினேன் மணி. ஆனா ஒன்னும் வேலைக்கு ஆகல. அவன் வெலக ஆரம்பிச்சுட்டான்" என்றாள்.

"ஒன்னுமே வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்த பெறகு தான் நேரா அவங்க வீட்டுக்கே போயிட்டேன்" என்றாள். அதை ஒரு டீயில் பிஸ்கட் நனைத்தபடி அவள் சொன்னது என் மனதை அதிரச் செய்தது.

"அவன் ஏதோ ப்ராஜக்ட் விஷயமா பூனே போயிருந்தான். அவங்க அம்மா அப்பாட்ட விஷயத்தை சொன்னேன். அவங்க திருச்சில இருந்தாங்க. பிரசன்னா வர்ற வரைக்கும் இங்க தான் இருப்பேன்னு சொல்லிட்டேன். அவன்ட்டயும் பேச முடியல. அந்த ஒரு வாரம் உண்மையிலேயே நரகம் தான் மணி. போலீஸ் கேஸ்னு போக பயப்பட்ற பேமிலி. என்ன அசிங்க அசிங்கமா திட்டினாங்க. பிரசன்னாவோட அப்பா ஒரு நாள் நைட் என் பக்கத்துல வந்து படுத்து ப்ரெஸ்ட்ட தடவினாரு. அதையும் வெளில சொல்ல முடியல. பிரசன்னா ஊர்லேர்ந்து வந்ததுமே என்ன ஓங்கி அறஞ்சான். நான் ஒன்னுமே பேசல வந்துட்டேன்" என்றாள்.

நான் எச்சில் கூட்டி விழுங்கினேன். அவள் இவற்றை இவ்வளவு சாதாரணமாக சொல்வாள் என நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு சாதாரணமாக சொல்லக்கூடியது உண்மையாகவே இருக்க இயலும். பிரசன்னாவின் மீது எனக்கு வந்தது கோபமா பொறாமையா என்று தெரியவில்லை. மாலினி அதன்பிறகு என்னிடம் விளையாட்டுத்தனமாக பேசுவதில்லை. அவளை காதலிக்கிறோமோ என்று கூட தோன்றியது.

அடுத்தவாரம் ஊருக்கு வந்த போது ரயிலில் பிரசன்னாவைப் பார்த்தேன்.

"தம்பி நல்லாருக்கியாப்பா" என்று என் தோளை தொட்டான். அவன் முகத்தில் எதிர்ப்புணர்வோ பதற்றமோ வெறுப்போ இல்லை. மிகுந்த நிதானத்துடன் இருந்தான்.

"வீட்ல எல்லாம் நல்லாருக்காங்களா" என்றான்.

புன்னகைத்தபடியே தலையசைத்தேன். தூரத்தில் பட்டுப்புடவை அணிந்திருந்த ஒரு அழகான பெண்ணை சுட்டிக்காட்டி அவள் தன் மனைவியென்றும் துணை ஆட்சியரின் மகள் என்றும் சொல்லிவிட்டு அவளை நோக்கிச் சென்றான்.

நான் மாலினியை அழைத்து அவளை தீவிரமாக காதலிப்பதாகச் சொன்னேன்.