Tuesday 17 December 2019

ஒரு நாள் கழிந்தது சிறுகதை - எதிர்வினைகள் 2

கனலியில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை

ஒரு பெண்ணின் ஆசை ஆதங்கம் இயலாமை  இவைகளை சுற்றி வருகிறது கதை.அது எவ்வாறு எரிச்சலாக பதற்றமாக கோபமாக பொறாமையாக எதிர்வனையாக வெளிப்படுகிறது என்பதும் அதை நிழலை போல தொடர்ந்து வருகிறது .

இதில் பெண் , அதுவும் ஒரு சித்தாள் , அம்மா , மனைவி , நடுத்தர வயது என்று வேறு வால்யூமை நன்றாக கூட்டி வைத்திருக்கிறார் ஆசிரியர் :)

கிழவிகளோடும் நிற்க விருப்பமில்லை , கல்லூரி பெண்களோடும் போய் சேர்ந்து நிற்க முடியாது பள்ளி தோழிகள் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ..அமுதாவும் வராமல் போய்விடுவாளோ என்னும் கைவிடப்படுதலின் தனிமை ...

அதுவே அமுதா கடைசி நிமிடத்தில் வரும் போது திடீர்  பாசமாகவும்  மேஸ்திரி அப்புறமா அழுதுகொள் என்றதின் போது ஆழ்ந்த புறக்கணிப்பாகவும் , அந்த பெரியவர் உட்கார்ந்துகொள் என்று சொல்லும்போது கருணையான அடைக்கலமாகவும் அமுதாவிடமிருந்து வெளிப்படுகிறது .

மேஸ்திரியை முன்வைத்து அமுதா அபிராமியிடம்
நிகழும் அந்த உடைவு பெண்கள் ஏன் பெண்களாக திரள முடியாது என்பதற்கான நல்ல உதாரணம் :) 

இந்த சிக்கலான தப்பிக்கவே முடியாத அழுத்தும் சூழலில் இருந்து ஒரு நுட்பமான வகையில்
வெளியேறுகிறாள் .ஒரு பெண் என்பதன் desirability யை இறுக்க பற்றிக்கொள்கிறாள்.

அவள் கோபத்தின் மூலமும் அழுகையின் மூலமும் 
அந்த சூழலில் குற்ற உணர்வு இடம்மாறி அந்த பெரியவர் அடிக்கப்படுவது அமுதாவின் redemption ஆக நிறைவேறுகிறது.

அவளுக்கு வக்காலத்து வாங்க அந்த பெரியவர் அறையப்படும் போது .. she becomes a mysterious point of both desiring / desirable object at the same time .

இவ்விரண்டும் இணைந்துகொண்ட  அந்த புள்ளியில் எழுந்து நடந்து போகும்போது உடல் சிலிர்க்கிறாள் 

மனித உறவுகளின் ஆதாரமே ஒவ்வொரு மனிதனும் மற்றொருவனால் பொருட்படுத்தப்படவேண்டும் / விரும்பப்படவேண்டும் என்ற அடிப்படை  விழைவில் இருந்து எழுவதே 

இதுவே மரியாதை , அன்பு , காதல் , நட்பு , ஆசை
என்று பல தளங்களில் வெளிப்படுகிறது .
அமுதாவின் விஷயத்தில் , அவள் சூழல் ,அது desire என்னும் தொடர்புறுதலாக மட்டுமே வெளிப்பட முடியும் என்பதாக இருக்கிறது.

கார்த்திக், சிட்னி

அன்புள்ள சுரேஷ்,
    ஒருநாள் கழிந்தது சிறுகதை அன்றாடம் வேலைக்குச் செல்லும் எல்லாப்பெண்களும் அனுபவிக்கும் சித்ரவதை. அதை எள்ளலுடனும் அங்கதத்துடனும் எழுதியிருப்பதற்கு என் பாராட்டுக்கள். ஆனால் உள்ளூற ஒரு சோகம் இழைகிறது. 
     பெண்களின் இயல்பு இதில் மிக நுணுக்கமாக சுட்டிக்காட்டப்படுவது எனக்கு மிக வியப்பைத் தருகிறது. என்னால் அவ்வியல்பை நன்றாக புரிந்துகொள்ளமுடிகிறது. 
        அங்கங்கே வரும் கெட்ட வார்த்தைகள் எனக்கு சற்று விலக்கத்தைக் கொடுத்தன. மிக கொச்சையாக அசிங்கம் பேசுவதும் நான் விரும்பாத ஒன்று. ஆனால் விளிம்புநிலை மனிதர்களின் இயல்பு இப்படிப் பேசுவதுதான் என நவீன இலக்கிய எழுத்தாளர்கள் விதிகள் வகுத்திருந்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. மிகப் பெரும் எழுத்தாளர்களே ஒன்றும் சொல்லாதபோது என்னால் என்ன செய்யமுடியும்? 
          புண்ணின் மேல் மண் கொட்டினால் வரும் எரிச்சல் மிகச்சிறந்த உவமானம். 
          அபிராமியின் பெயர் வருமிடத்தில் அமுதா என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது என நினைக்கிறேன். ஏனெனில் மனவிலக்கம் காண்பிப்பவள் அமுதாதான். அபிராமி அல்ல என்பது என் அபிப்ராயம். 
           இவ்வளவு தூரம் பெண்ணாக நடந்துகொள்பவள் ஏன் ஆணைப்போலக் குடிக்க விரும்புகிறாள் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அப்புறம் அழுதுகொள் என்ற கொத்தனாரின்மேல் வருகின்ற கோபத்தையும் தன்னைக் கண்டுகொள்ளாத கணவன்மேல்  வருகின்ற கோபத்தையும் அடக்கவோ தவிர்க்கவோ இருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. 
             எப்படியோ இத்தனை எளிமையான ஒரு சிறுகதையை நான் சுரேஷிடம் எதிர்பார்க்கவில்லை. கதை நேரடியாக இருக்கிறது. வாசகர் சிந்தித்து நிரப்புவதற்கு கற்பனை செய்வதற்கு எவ்வித இடமுமில்லை. மிக உணர்ச்சிகரமான சிறுகதை. கோபமும் எரிச்சலும் கொண்ட மனநிலை நம்மையும் அப்படியே தொற்றிக்கொள்கிறது. அதனால் அதை மீறி என்னால் வேறு எதுவும் சிந்திக்க இயலவில்லை. இது முழுக்க முழுக்க என் கருத்து. மாற்றுக்கருத்துகளும் இருக்கலாம். 
            கூடிய விரைவில் சிக்கலான களச் சிறுகதையின் எதிர்பார்ப்புடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன் கிறிஸ்டி.

No comments:

Post a Comment