Friday 30 December 2022

2022ல் வாசித்த நூல்கள்

1.உச்சவழு - ஜெயமோகன்

2.வெண்கடல் - ஜெயமோகன்

3.குமரித்துறைவி - ஜெயமோகன்

4.பிரதமன் - ஜெயமோகன்

5.ஆனையில்லா - ஜெயமோகன்

6.ஐந்து நெருப்பு - ஜெயமோகன்

7.உண்மைகள் பொய்கள் கற்பனைகள் - அரிசங்கர்

8.பத்து லட்சம் காலடிகள் - ஜெயமோகன்

9.எழுகதிர் - ஜெயமோகன்

10.தங்கப்புத்தகம் - ஜெயமோகன்

11.ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன்

12.முதுநாவல் - ஜெயமோகன்

13.தேவி - ஜெயமோகன்

14.வான்நெசவு - ஜெயமோகன்

15.மலை பூத்தபோது - ஜெயமோகன்

16.பொலிவதும் கலைவதும் - ஜெயமோகன்

17.இரு கலைஞர்கள் - ஜெயமோகன்

18.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

19.ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர்(தமிழில் - கோ.கமலக்கண்ணன்)

20.துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்

21.மண்டியிடுங்கள் தந்தையே - எஸ்.ராமகிருஷ்ணன்

22.நான் கண்ட மகாத்மா - தி.சு‌.அவினாசிலிங்கம்

23. வயலட் ஜன்னல் - உமா மகேஸ்வரி

24.எண்கோண மனிதன் - யுவன் சந்திரசேகர்

25.இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை - டி.தருமராஜ்

26. வேங்கைச்சவாரி - விவேக் ஷன்பேக் மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) 

27.மிளகு - இரா.முருகன்

28.வ.உ.சியும் காந்தியும் -ஆ.இரா.வெங்கடாசலபதி

29.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா

30.தலைப்பில்லாதவை - யுவன் சந்திரசேகர்

31.வானம் முழுவதும் - ராஜேந்திர யாதவ் (தமிழில் - மு.ஞானம்)

32.டிப் டிப் டிப் - ஆனந்த்குமார்

33.சுந்தர ராமசாமி தேர்ந்தெடுத்த கட்டுரைகள் - தொகுப்பு - ச.தில்லைநாயகம்

34.ராஜன் மகள் - பா.வெங்கடேசன்

35.கடலில் எறிந்தவை - யுவன் சந்திரசேகர்

36.துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

37.கையறு - கோ.புண்ணியவான்

38.பஷீரிஸ்ட் - கீரனூர் ஜாகிர்ராஜா

39.தீர்த்த யாத்திரை - எம்.கோபாலகிருஷ்ணன்

40.மனநோயின் மொழி - டேவிட் கூப்பர் - (மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன்)

41.விருந்து - கே.என்.செந்தில்

42.The Glass Palace - Amitav Ghosh

43.யதி: தத்துவத்தில் கனிதல்

44.நித்ய கன்னி - தகழி சிவசங்கரப்பிள்ளை (மொழிபெயர்ப்பு - யூமா வாசுகி)

45.வடக்கேமுறி அலிமா - கீரனூர் ஜாகிர்ராஜா

46.கானுறை வேங்கை - கே.உல்லாஸ் கரந்த் (மொழிபெயர்ப்பு - சு.தியோடர் பாஸ்கரன்)

47.வெயில் பறந்தது - மதார் (மறுவாசிப்பு)

48.மத்தி - ச.துரை (மறுவாசிப்பு)

49.நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் - இசை(மறு வாசிப்பு)

50.ப்ராளம்ஸ்கி விடுதி - டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் (தமிழில் - லதா அருணாச்சலம்)

51.தேய்பிறை இரவுகளின் கதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா

52.அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா

53.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - கே.கே பிள்ளை

54.ஃப்ரான்ஸிஸ் இட்டிக்கோரா - ட்டி‌.டி.ராமகிருஷ்ணன் (தமிழில் - குறிஞ்சிவேலன்)

55.ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு பாகம் ஒன்று - வின்சென்ட் ஏ ஸ்மித் - தமிழில் - தி.வெ.குப்புசாமி

56.யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி

57.இயற்கையை அறிதல் - எமர்சன் (தமிழில் - ஜெயமோகன்)

58.உடைந்து எழும் நறுமணம் - இசை

59.நலமறிதல் - ஜெயமோகன்

60. எனது சிறைவாசம் - ஶ்ரீ அரவிந்தர்

61.திருநங்கையர் சமூக வரைவியல் - பத்மபாரதி

62.தடுக்கை - அண்டனூர் சுரா

63.கதாரசனை - கீரனூர் ஜாகிர்ராஜா

64.கருணாகரத் தொண்டைமான் - குடவாயில் பாலசுப்ரமணியன்

65.தேசத்துரோகி - ஷோபாசக்தி

66.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு - ஷோபாசக்தி

67.ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு பாகம் இரண்டு - வின்சென்ட் ஓ ஸ்மித்

68.கண்டிவீரன் - ஷோபாசக்தி (மறுவாசிப்பு)

69.முமீன் - ஷோபாசக்தி

70.கதாநாயகி - ஜெயமோகன்

71.மற்றவர்களின் சிலுவை - தொகுப்பாசிரியர் - தி.மரிய தனராஜ்

72.நொய்யல் - தேவிபாரதி

73.வருகைக்கான ஆயத்தங்கள் - இதயா ஏசுராஜ்

74.நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர் பத்மபாரதி (மறு வாசிப்பு)

75.நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி

76.வண்ணநிலவன் சிறுகதைகள் - 2011வரையிலான முழுத்தொகுப்பு 

77.இயக்கம் - குட்டிரேவதி

78.மீன்காரத்தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா

79.மீன்குகைவாசிகள் - கீரனூர் ஜாகிர்ராஜா

80.குட்டிச்சுவர் கலைஞன் - கீரனூர் ஜாகிர்ராஜா

81.அபிநவ கதைகள் - செல்வகேசவராய முதலியார்

82.அறிவு - நாராயணகுரு(உரை:நித்ய சைதன்ய யதி: தமிழில் - எம்.கோபாலகிருஷ்ணன்)

83.சங்காயம்- ச.துரை

84.உயிரின் யாத்திரை - எம்.வி.வெங்கட்ராம்

85.தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம்

Wednesday 25 May 2022

சிறை

 வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ அங்கெல்லாம் தன் தடத்தை பதித்துக் கொண்டே வந்தது.‌ எல்லாமும் இற்றுப்போகும் ஒரு நிலைக்கென நான் எப்போதும் ஏக்கம் கொண்டிருக்கிறேன். அதுதான் அப்போதெனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததா? பறக்கும் காகத்தின் சிறகு வழியே காற்றென வீசுகிறது ஒளி. எத்தனை வண்ணங்கள் அவ்வொளிக்கு. காக்கையின் சிறகுகள் எந்நிறத்தையும் உள்ளனுமதிக்காத கருமை என்று எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய தவறு! அது ஒவ்வொரு நிறத்தையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நான் ஒளியை உண்டு கொண்டிருக்கிறேன். வண்ண வண்ண ஒளிகள். எவ்வளவு காலமெனத் தெரியவில்லை. என் உடலில் ஆடை இருந்ததா என் உடலே இருந்ததா என்றெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஓரிடத்தில் இல்லை என்பது மட்டும் வெட்ட ஓங்கிய கொலைவாளென விரைத்திருக்கும் பளபளப்பான காக்கையின் சிறகின் வழியே அறிய முடிந்தது. எனக்கு வியர்க்கவில்லை. குளிரவில்லை. நாற்றமோ மணமோ நாசியில் ஏறவில்லை.‌ ஒலியோ ஒலியின்மையோ என் செவிகளில் இல்லை. இன்னதென எண்ணிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்றென மாறிவிடும் வண்ணங்களன்றி என் கண்களில் காட்சிகளும் இல்லை. ஆனால் நான் இருந்தேன்.‌என்னை நான் மிகத்தெளிவாக உணர்ந்தேன். நான் இருப்பதால்தான் இந்த இன்னதென விளக்கிவிட முடியாத பறத்தல் எனக்கு அச்சத்தை தருகிறது. சிறிய வீட்டில் பெரிதாகத் தெரிந்த பொருள் பெரிய வீட்டில் சிறிதாகவும் அசிங்கமாகவும் தெரிவதுபோல என் சின்னப் பிரக்ஞை அந்தப் பெரும் பிரக்ஞையுடன் முரண்டு கொண்டிருக்கிறதா?


என் பதற்றங்கள் என்னிடமிருந்தன.‌என் ரகசிய ஏக்கங்கள் அப்போதுமெனக்கு கிளர்ச்சி அளித்துக் கொண்டிருந்தன.‌‌ என் பயங்கள்‌‌ என்னை வதைக்கத் தவறில்லை.‌ ஆனாலும் நான் இருந்தேன். நான் இருப்பதை‌ உணர உணர மண்ணிலும் இறங்கிக் கொண்டிருந்தேன். வானம் காகத்தால் மூடப்பட்டிருந்தது. உச்சி வெயிலில் கிரகணம் நிகழ்ந்தது போல‌ சூழல் ஒளி கொண்டிருந்தது. மனிதர்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கினர். காற்றென வீசியது அக்காகத்தின் பெருமூச்சு. வெட்டவெளியில் படர்ந்த நிழலென அக்காகத்தின் கருவிழிகளை நான் கண்டேன். அக்காகம் அங்கிருக்கிறது என்ற எண்ணமே எனக்கு அச்சத்தையும் ஆறுதலையும் தந்து கொண்டிருக்கிறது. நான் என் பிரக்ஞையை மீட்டுக் கொண்டு கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அது ஒரு கல்லூரி வளாகம் போலத் தெரிந்தது. வெகுகாலத்துக்கு முன்பு நான் அங்கே படித்திருக்கிறேன் அல்லது எதிர்காலத்தில் படிக்கவிருக்கிறேன். எதிர்பட்டவர்கள் அனைவரையும் நான் அறிந்திருந்தேன். அறிந்திருத்தல் என்றால் பெயரையோ நபரையோ அறிந்திருப்பதல்ல. அவர்களுடைய ஆழம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதுவே என்னை அச்சுறுத்தியது. இந்த அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்திலேயே ஒரு பெண் ஓடிவந்து என்னை அறைந்தாள். நான் அங்கு ஆடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறேன் என்பது அவள் அறைந்தபிறகே எனக்கு உரைத்தது. நான் குன்றிப்போனேன். ஆனால் என் உடலை எனக்கு‌ மறைக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நான் ஆடையில்லாமல் இருப்பது சரியென்றும் எனக்கும் தோன்றியது. ஆனால் அத்தோன்றல் என் அவமான உணர்வை அகற்றிவிடவில்லை. வெளித்தோற்றத்துக்கு கல்லூரி போலத் தெரிந்த அவ்விடம் தொடர்ந்து தன் முகத்தை மாற்றிக் கொண்டே வந்தது. மண்சுவர் கொண்ட ஒரு குடிசையில் பிரசவக் கவிச்சியுடன் ஒரு குழந்தை கிடக்கிறது. தெளிந்த நீரோடும் வாய்க்காலில் சேமையிலையில் நீர்சேந்திக் குடிக்கிறான் ஒரு சிறுவன். இன்னும் முடிக்கப்படாத தார்ச்சாலையின் மணத்தை நுகர்ந்தபடி சைக்கிளில் செல்கிறான் மற்றொருவன். வெள்ளைச் சீருடை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருக்க மிட்டாய் தின்கிறாள் ஒரு சிறுமி. பம்புசெட் அறையில் இருந்து முனகல்கள் கேட்கின்றன. வாழைத்தோப்புகளில் தவளைகள் குதிக்கின்றன. ஈரம் சொட்டும் தலையுடன் கோலமிடுகின்றனர் தாவணி அணிந்த பெண்கள். கைகளை உதட்டுக்கு நேரே குவித்து கண்மூடி கடவுளை வணங்குகிறாள் ஒருத்தி. மூக்கைத் துளைக்கிறது துளசியின் மணம். விந்தின் நாற்றம் சூழ நாக்கு வெளித்தள்ளி கயிற்றில் தொங்கிக் கிடக்கிறான் ஒரு ஆள். சிறுவனொருவனை அழுதுகொண்டே புணர்கிறான் நூறு கிலோ எடை கொண்ட மற்றொருவன். கோவில் மறைவில் விபூதி பூசி விட்டு முத்தமிட்டு ஓடுகிறாள் ஒருத்தி. சோற்றை உருட்டி விழுங்குகிறாள் ஒரு கிழவி. கண்விழித்துப் படித்துக் கொண்டிருப்பவன் கழிவறைக்கு எழுந்து ஓடுகிறான். புகையும் அடுப்புக்கு எதிரே அமர்ந்து கொண்டிருப்பவளின்‌ முதுகு நனைந்து போயிருக்கிறது. எழுதிக் களைத்தவர் கைகளில் நெட்டி முறிக்கிறார். முதன் முறை புணர்ந்த ஆண்குறியில் ரத்தம் வழிகிறது. ரசமட்டம் வைத்து சுவற்றின் நேர் பார்க்கிறார் கொத்தனார். பரவசத்துடன் காதல் கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் எழுதி முடித்த பரபரப்பில் சுயமைதுனம் செய்து கொள்கிறான். அடுத்தவன் மனைவியை வெறியுடன் புணர்கிறான். தத்துவ நூல்களை ஆழ்ந்து படிக்கிறான். முழுதாக தன்னை நிர்வாணப்படுத்திக்கொண்டு விஷம் குடிக்கிறாள். தூங்க இயலாமல் தவிக்கிறான். காலையில் எழுந்து சோம்பல் முறித்தவர் மாரடைத்து விழுகிறார். நெடி கொண்ட வேப்பங்குச்சியால் சுளீரென‌ கையில் அடிவிழுகிறது. நீலத் தாவணி அணிந்த பள்ளி மாணவியின் காலில் விழுந்து அழுகிறார் மனைவியை இழந்த கண்ணாடி அணிந்த ஆசிரியர். புறக்கழுத்தில் வெட்டிய அரிவாளை உருவ முடியாமல் வெட்டப்பட்டவனின் உடல் நீர் நிரம்பிய குடம்போலத் தள்ளாட அங்கேயே விட்டுவிட்டு ஓடுகிறான். யாருமில்லாத வகுப்பில் இரண்டு மாணவர்கள் கஞ்சா இழுக்கின்றனர். மறுநாள் திருமணத்துக்கென விடிய விடிய தாம்பூலப்பை போடுகின்றனர். குழந்தையின் முகத்தில் வேறொருவனின் சாயலைக்கண்ட தகப்பன் பிரசவ அறையைவிட்டு பிணம்போல வெளியேறுகிறான். ஒரே மூச்சில் ஒரு பியர் பாட்டிலை குடிக்கிறாள். மறுநாள் வேலை போய்விடும் என்று தெரிந்தவன் அன்றிரவு முழுக்க ஒரு வேலையை முடித்து நல்ல பேர் வாங்கப் போராடி அது இயலாததால் தூக்கம் அழுத்தும் காலை நான்கு மணிக்கு எச்சில் ஒழுக இனிய சிரிப்புடன் உறங்கும் மகளின் முகம் நினைவிலிருக்க மணிக்கட்டை அறுத்துக் கொள்கிறான்.


பேருந்து நிலையத்தில் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து பிச்சை கேட்கிறார் முதியவர். ஆர்டர் பண்ணிய பிரியாணி வருவதற்கென நாக்கில் எச்சில் ஊறக் காத்திருக்கிறான். மாதவிடாய் தொடங்காத பெண்ணை அறுப்பு முடிந்த வயலில் கிடத்திப்புணர்கிறார் அவள் தாத்தா வயதுடைய தலைநரைத்தவர். கொளுத்தும் வெயிலில் கம்மங்கூழ் வாங்கிக் குடிக்கிறான். செருப்பை கழற்றிவிட்டு சாப்பிடத் தொடங்குகிறான். இரவு முடியுமிடத்தை பார்ப்பதற்காக கண்விழித்து அமர்ந்திருக்கான். குறுஞ்செய்திகள் அனுப்பி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். வானத்துக்கு அந்தப் பக்கம் போய்விடுகிறான். அலுவலக கணினி முன்னே அமர்ந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான்.‌ பற்களை கடிக்கிறாள். ஒரே பைக்கில் சென்ற நான்கு நண்பர்களில் இரண்டு பேர் லாரிக்கு அடியில் செல்ல அதில் ஒருவன் தலை நசுங்குவதைப் பார்த்து ஒருவன் சிரிக்கிறான் மற்றொருவன் வாந்தி எடுக்கிறான். கழிவறையில் அமர்ந்து குறிக்குள் விரல் வைத்து நோண்டும் தோல்வியைச் பார்த்தவள் வாயில் ஒழுகும் எச்சிலை துடைத்துக் கொள்கிறாள். பற்குச்சியை வாயில் வைத்திருக்கும் வீங்கிய கண்களுடன் கண்ணாடியை பார்க்கிறான். கால் நொடித்து பக்கத்தில் நடந்த பெண்ணின் பெரிய முலையில் விழுந்தவனுக்கு செருப்படி விழுகிறது. மூத்த எழுத்தாளர் கடைசி காலத்தில் கவனிக்க ஆளின்றி தனிமையில் குடித்து செத்துக் கிடக்கிறார். வேலை முடித்து வந்து ஆசையாய் தூக்கிய குழந்தை வியர்வை நாற்றத்தால் இறங்கிக் கொள்கிறது.


யூடியூப் பார்த்து நடனம் கற்றுக் கொள்கிறாள். இடையளவு குறையவில்லை என ஏங்கி அழுகிறான். மீண்டும் பால் பொங்கிவிட்டதற்காக தன்னையே கடிந்து கொள்கிறான். மூங்கில் கூடையில் பீங்கான் பொம்மைகளின் தலைச்சுமை அழுத்த மயங்கி விழுகிறாள். மீண்டும் ஆத்திரத்தில் அலைபேசியை உடைக்கிறான். காலை மலர்ந்த செம்பருத்தி பூ ஒரு பெருமூச்சுடன் இரவுக்குள் விழுகிறது. புட்டத்தின் அருகிலிருக்கும் தன் புன்னை நக்குகிறது ஒரு நாய். தன் தனிமையை நினைத்து அன்றும் அழுகிறது சூரியன். உலகின் அத்தனை கடல்களும் பொங்குகின்றன. பிரபஞ்சம் என் பிரக்ஞைக்குள் மூழ்கிச் சிறைபடுகிறது. நான் கண் விழிக்கிறேன். என்னுள் ஒரு பிரபஞ்சம் சிறைபட்டிருப்பதே தெரியாமல் என் துக்கங்களை எடுத்து அணிந்து கொள்கிறேன். 


Thursday 5 May 2022

சரிவு

'அவன எதுக்கு உள்ளாற இழுத்து உடணும்' என்று சொன்னபடியே அம்மா என் கையைப் பற்றினாள். வாஞ்சை கூடிய பிடி. நான் அப்படியே நின்றுவிட நினைத்தேன். 


ஆனால் கண்ணாடியில் முகம் பார்த்தபடி சட்டை போட்டுக் கொண்டிருந்த அப்பா 'விடுடி அவன' என்றார். அம்மா பிடியை விடாமல் கண்ணாடிக்குள்ளிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தாள். கோபம் ஏறிய அப்பாவின் முகம் அம்மாவைப் பார்த்தது. அம்மா கையை விட்டுவிட்டாள்.‌ எனக்கு ஏமாற்றமாக இருந்தது. முன்பு போல‌ இல்லாமல் அப்பாவுடன் வெளியே செல்லும் விருப்பம் எனக்கு குறைந்து கொண்டே வந்தது. எதிர்விகிதத்தில் அவருக்கு என்னை உடனழைத்துக் கொண்டு செல்லும் விருப்பம் கூடிக்கூடி வந்தது.


'எவனோ ரெண்டாம் பங்காளி மூணாம் பங்காளி கல்யாணம் எழவுக்கெல்லாம் கூட்டிட்டு போனிய...இப்ப கோர்ட் ஸ்டேஷன்னு கூட்டிப்போய் அவனக் கெடுக்கணுமாக்கும்' என்று வாதம் புரியும் தொனியில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டே அம்மா கேட்டாள். அவளால் சீராக மடிக்கப்பட்டிருந்த மயில்கழுத்து நிறப் புடவையை பிரித்து அதன் மென்மையில் கையோட்டிக் கொண்டிருந்தேன்.


'ஆம்பளன்னா ஊர்ல என்ன நடக்குதுன்னெல்லாம் தெரியணும்டி... சும்மா வீட்லயே பொத்தி வச்சு மடப்பயலா போறதுக்கா' என்று சொன்னபடியே என் கையிலிருந்த புடவையை வாங்கி கட்டிலில் வீசினார்.‌ அது களைந்து விழுந்தது.


சிவப்பு ஓடுகள் புழுதியால் மூடப்பட்ட ஒரு ஓட்டுக் கட்டிடம்தான் காவல் நிலையம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.‌ டிவிஎஸ் பிப்டியை வாசலில் நிறுத்திவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு அப்பா உள்ளே நுழைந்தார்.


தன் முன்னே அழுது கொண்டிருந்த ஒரு கருநிறப் பெண்ணிடம் ஏதோ கடுமையாகப் பேசிக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் அப்பாவைப் பார்த்ததும் புன்னகையுடன் தலையை அசைத்து 'வாங்க சார்' என்று வரவேற்றார். திரும்பும் போது அவர் தலையிலிருந்த பெரிய கொண்டையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது.‌ ஆனால் அதைவிட பயம் அதிகமாக மனதைக் கவ்விப் பிடித்திருந்ததாலோ என்னவோ நான் சிரிக்கவில்லை.


அப்பா அந்த கருநிறப்பெண்ணை கடுமையாகப் பார்த்தபடியே உதவி ஆய்வாளருக்கு எதிரே அமர்ந்தார்.


'பையனா?' என்று என்னைப் பார்த்துவிட்டு அப்பாவை கேட்டார்.‌ அப்பா ஆமோதிப்பாக தலையசைத்தார்.


நான் அப்போதுதான் அந்தப் பெண்ணிடமிருந்து சற்று தூரம் தள்ளி தமிழ் மாமா நிற்பதை கவனித்தேன்.‌ அவர் முகத்தில் அழுத கண்ணீர் கோடுகள் காய்ந்திருந்ததை பார்க்க ஒருவித ஒவ்வாமை எழுந்தது.‌ அழும் ஆண்கள் பலகீனமானவர்கள் என்று அந்த வயதில் நம்பியிருந்தேன். தமிழ் மாமாவுக்கு அருகிலேயே எனக்கு பெயர் தெரியாத என் ஊர்க்காரர்கள் சிலர் நின்றிருந்தனர்.‌‌ அவர்களுடைய உடல்மொழி மாமாவை அடிப்பது போல இருந்தது.‌ நான் மேலும் பயந்து போனேன்.


'இப்ப என்னடா சொல்ற நீ?' என்று சட்டென எழுந்து மாமாவை நோக்கிச் சென்றார் அப்பா. மாமா பயந்து பின்வாங்கினார்.


'சார் வக்கீல் வர்ற டைம். இவள நான் இங்க கூட்டிட்டு வந்ததுக்கே அந்த ஆளு என்னைய கொடைவான். ஒழுங்கா கேட்டு வைங்க' என்று உதவி ஆய்வாளர் சலிப்புடன் சொன்னார்.


அப்பா மாமாவை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடைக்கு வந்தார்.


'உட்காரு' என நாற்காலியை மாமாவிடம் காட்டினார்.


அவர் அமர்ந்ததும் 'தமிளு இவெல்லாம் நமக்கு ஒத்துவரமாட்டா. ஒரே ஜாதிதான். அதுக்குன்னு வந்தாருகுடி அதுவும் அவ அப்பன் கூலி வேலைக்குப் போறவன். இவல்லாம் நமக்கு ஒத்து வருமா சொல்லு' என்று தணிவாகச் சொன்னார்.


என்னைப் பார்த்து 'நீ அங்க போயி நில்லு' என்றார்.


நான் என் காதுகளை அவர்களிடம் விட்டுவிட்டு சற்று தள்ளி நகர்ந்தேன்.


அப்பா மேலும் தணிந்த குரலில் சொன்னார்.


'வயசுல இப்படி கை நெனைக்குறது சகஜம்தான். அதுக்குன்னு கல்யாணம் வரைக்கும் போகமுடியுமா சொல்லு'


'இல்லண்ணே அவ என்ன நம்புறா' என்று மாமாவின் குரல் மேலும் தணிவாக ஒலித்தது. தமிழ் மாமா அப்பாவின் அத்தை மகன்தான் என்றாலும் அப்பாவை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். ஊரில் அவர் வயதை ஒத்த பலரும் அண்ணன் என்று மரியாதையாக அழைப்பவரை அத்தான் என்றோ மச்சான் என்றோ அழைக்க அவருக்கு கூச்சமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


'என்ன லவ் பண்றியாக்கும்' அப்பாவின் இளக்காரமான குரல் எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. தமிழ் மாமாவின் உடலில் ஒரு குன்றல் உருவானது.‌ அந்தக் குன்றலால் அவரை மேலும் வெறுத்தேன். 


'இங்கபாரு.‌ அவ ஏற்கனவே ரெண்டு தடவ புள்ள அழிச்சிருக்கா. அதுக்கு சாட்சியெல்லாம் ரெடி பண்ணியாச்சு. உன்னைய பின்னாடி ஏதாவது மெரட்டுவான்னு பயந்தேன்னா புள்ள அழிச்ச கேஸ்ல அவள உள்ளத்தூக்கி போட்றலாம். அவ மெரட்டலுக்கு எல்லாம் பயந்துறாத என்ன' என்று மாமாவின் தோளில் தட்டினார்.


அப்பா ஏதோ தவறாகச் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் மாமாவின் முகம் அப்பா சொல்வதை ஏற்றுக் கொள்வது தெரிந்தது. அந்த ஏற்பினை உணர்ந்து கொண்டவராக அப்பா மேலும் சொன்னார்.‌ அவர் குரல் இன்னும் தணிந்தது. 


'வயசுல இப்படித்தான் எவளோட நாத்தமாவது புடிக்கும். ஆனா காலத்துக்கும் அந்த நாத்தத்தோட வாழ முடியுமா சொல்லு.‌ அவளப்பாரு கரிக்கட்ட மாதிரி இருக்கா. நடந்து போனான்னா பேண்டுட்டு இருக்கிறவன் கூட எந்திரிக்க மாட்டான்.‌ இவளோட காலம்பூரா ஓட்டப்போறியா'


அப்பா மெல்ல மெல்ல மாமாவை ஜெயித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மாமாவின் முகம் சற்று தெளிந்திருந்தது. 


'உள்ளபோறப்ப அவளும் அவ அம்மாவும் என்னென்னவோ மாய்மாலமெல்லாம் காட்டுவாளுங்க,கால்ல வந்து விழுவாளுங்க,நெஞ்சுல அடிச்சிகிட்டு அழுவுவாளுங்க,சாபங்கொடுப்பாளுக,மெரட்டுவாளுக...ஆனா நீ சொல்ல வேண்டியது 'எனக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல' இதையே திரும்பத் திரும்ப சொல்லு'  


தமிழ் மாமா அப்போது அப்பா அவரிடம் ஒரு கத்தியை கொடுத்து அந்த கருநிறப் பெண்ணின் தலையை வெட்டச் சொல்லி இருந்தால்கூட செய்திருப்பார் என்று தோன்றுகிறது. அவளைக் கைவிட அவர் சம்மதித்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.


மாமாவை வெளியில் நிறுத்திவிட்டு அப்பா என்னை அழைத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குள் போனார். அப்பெண்ணின் அம்மாவும் - அவளும் அட்டைக் கருப்பு - வக்கீலும் வந்திருந்தனர்.


வக்கீல் அப்பாவைப் பார்த்து சிரித்தார்.


'என்ன சண்முகம் மச்சானுக்கு ஓத வேண்டியதெல்லாம் ஓதிட்டீங்களா' என சற்று கசப்பு தொனிக்க கேட்டார்.


'தேவல்லாத பேச்செல்லாம் எதுக்கு தம்பி. படிச்சு வக்கீலாகி நம்மாளுக கேஸெல்லாம் முடிச்சு வைப்பேன்னு பாத்தா நீ இப்படி ப்ரோக்கர் வேல பாத்துட்டு திரியுற. நான் ஏதும் உன்ன கேட்டனா' 


வக்கீலின் முகத்தில் அந்த எதிர்பாராத அடி பதற்றத்தை உருவாக்குவது தெரிந்தது. அவர் குரலில் இணக்கம் குறைந்து மீண்டும் வக்கீலானார்.


'மேடம் நீங்க பையன உள்ள வரச்சொல்லுங்க. அவஞ்சொல்லட்டும் இந்தப் பொண்ண லவ் பண்ணினா இல்லையான்னு' 


அப்பா சற்று கோபமாக இடைமறித்தார். 


'பையனெல்லாம் வரசொல்ல முடியாது'


எனக்கு அப்பா ஏன் அப்படிச் சொன்னார் எனப் புரியவில்லை.‌ நான் அந்தக் கருநிறப்பெண்ணைப் பார்த்தேன். கழுத்து எலும்பின் மேல் ஒரு மெல்லிய தங்கச் சங்கிலி. குளத்தின் நடுவே கிடக்கும் பழுத்த இலை போல அவ்வளவு அழகாக இருந்தது அந்தச் சங்கிலி. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் அழகியாகிக் கொண்டிருந்தாள். மாமாவின் அழகும் அவளிடம் சேர்ந்தது போலிருந்தது. சோகமே உருவென நின்று கொண்டிருந்தவளுக்கு உள்ளே எங்கோ ஒரு மூலையில் ஒருத்தி சற்று சலிப்புடன் இந்த அரசாங்க சூதுகளை கவனித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கதையால் நனைக்கப்பட்ட பெண் எப்படி இருந்தாலும் அழகியாகிவிடுகிறாள். இப்போது அவள் உடல் என் மனதில் பதிந்த கதையின் முக்கிய அங்கமாகி இருந்தது. அப்பா ஏன் பதறுகிறார் எனப் புரிந்தது.


வக்கீலுக்கும் அப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிக் கொண்டிருந்தது. என்ன செய்து அவள் தமிழ் மாமாவை சம்மதிக்க வைக்கப் போகிறாள் என்பதை மட்டும் என்னால் ஊகிக்க முடியவில்லை. அப்பா சொன்னது போல அவள் அழவோ காலில் விழவோ போவதில்லை என்று நன்றாகவேத் தெரிந்தது. அதை அப்பாவும் உணர்ந்தவராக வெளியே ஓடினார். விரைவாக நடப்பவரெனினும் அவரிடம் ஒரு நிதானம் எப்போதுமிருக்கும்.‌ அந்த நிதானத்தை அவர் இழந்திருந்தார்.


கடைவாசலிலேயே உட்கார்ந்திருந்த தமிழ் மாமாவிடம் விரைவாகச் சென்றார்.‌‌ அவர் எழுவதற்குள்ளாகவே 'அந்தத் தேவிடியா கண்ண மட்டும் பாத்திராத' என்று முகத்துக்கு நேரே விரலை நீட்டி எச்சரித்தார். மாமா உள்ளே வந்தபோது மொத்த காவல் நிலையமும் அமைதியாக இருந்தது. மாமா உதவி ஆய்வாளரைப் பார்த்து 'மேடம் இவள எனக்கு தெரியும்.‌ஊர்க்காரப் பொண்ணு. ஆனா அவசொல்ற‌ மாதிரி நான் அவள லவ்வெல்லாம் பண்ணல. இனிமே இதுமாதிரி என்ன‌ இவ டார்ச்சர் பண்ணாம நீங்கதான் கண்டிச்சு விடணும்' என தமிழ் மாமா திக்கித் திணறி சொன்னார்.


அனைவருக்கும் அது பொய்யென்று தெரிந்தது. அப்படி ஒரு வெளிப்படையான ஆனால் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒரு பொய் சொல்லப்படும்போது சூழலில் ஒரு மௌனம் உருவாவதை பலமுறை கவனித்து இருக்கிறேன்.‌ சமீபத்தில் கூட அதாவது நேற்று தமிழ் மாமா இறந்தவன்று நான் இரங்கல் கூட்டத்தில் என்ன பேசினேன்? வேதாரண்யத்தில் இரால் பண்ணையில் பங்குதாரராகி லட்ச லட்சமாக சம்பாதித்து சூப்பர் மார்க்கெட் பால்பூத் ஐஸ்க்ரீம் பார்லர் என ஏகப்பட்ட தொழில்கள் செய்து வளர்ச்சி அடைந்து ஊரெல்லாம் காசு கொடுத்து காதலிகளை உருவாக்கிக் கொண்டு அவர்கள் கொடுத்த சீக்கில் செத்துப்போனவர் தமிழ் மாமா. ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அவரைப்பற்றி உழைப்பால் உயர்ந்த உத்தமர் மனிதநேயம் மிக்கவர்  என்றெல்லாம் நான் பேசியபோது அக்கூற்றுகளில் இருந்த பாதி பொய்மைக்கே கூட்டம் அமைதியானதே! ஆனால் அன்று காவல் நிலையத்தில் அந்த அமைதியை அக்கருநிறப்பெண் வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டாள் என்று தோன்றுகிறது. ஒரு மெல்லிய மூக்குறிஞ்சல் கைகளை தழைத்துவிட்டதால் கண்ணாடி வளையல்கள் முட்டிக்கொள்ளும் ஒலி அவள் புடவையின் சரசரப்பு. இவற்றால் தாக்குண்டு தமிழ் மாமா முகத்தை நிமிர்த்திய போது அவள் கூந்தலில் இருந்து விழுந்த மஞ்சள் ரோஜா. தமிழ் மாமா அழுதுகொண்டே அவள் காலில் போய்விழ இவ்வளவு போதுமானதாக இருந்தது.‌ அப்பா என் மணிக்கட்டு வலிக்கும்படி கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு யார் முகத்தையும் பார்க்காமல் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினார். 


அப்பா அதன்பிறகு சரிந்து கொண்டே இருந்தார்.‌ அவரிடமிருந்த மிடுக்கும் அலட்சிய பாவனையும் காணாமல் போனது. நானுமே அவருடன் சேர்ந்து சரிந்து கொண்டிருந்தே‌ன் என்று எட்டு வருடங்கள் கழித்து ஒரு உதவாத பொறியியல் கல்லூரிச் சான்றிதழுடன் தமிழ் மாமாவிடம் ஏதாவது வேலை வாங்கித் தரும்படி அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு போய் நின்றபோதுதான் எனக்குத் தெரிந்தது.


அன்று நானும் அப்பாவும் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்பாகவே அம்மாவுக்கு அவளுக்கே உரித்தான பிரத்யேக வழிகளின் மூலம் காவல் நிலையத்தில் நிகழ்ந்தவை தெரிந்துவிட்டன. தனக்கே பதினோரு வயது மகள் இருக்கிறாள் எனினும் பொதுவாக காதலின் வெற்றி பெண்களுக்கு அளிக்கக்கூடிய உற்சாகத்துடன்,அந்த உற்சாகத்தை கவலையென மாற்றிக் கொண்ட தொனியில் 'என்ன அவ கால்ல போய் விழுந்துட்டானாமா' என்று கேட்டாள். 


இன்னும் வாசலிலேயே நின்று கொண்டிருந்த அப்பா 'அறைஞ்சு பல்லப் பேத்துருவேன். நாடுமாறி முண்ட...என்ன கொழுப்பெடுத்து திரியுறா' என்று அம்மாவை ஓங்கி அறைந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். இதுபோல அடிவாங்கும் சமயத்தில் எல்லாம் உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அநீதியும் இழைக்கப்பட்டவள் போல அம்மா என்னை பார்ப்பாள். நானும் கரைந்து அழுதுவிடுவேன். ஆனால் அன்று அம்மா அடிவாங்கியது எனக்கு திருப்தியாக இருந்தது.‌‌ சாய்மானத்துக்கு என என் முகத்தை ஏறிட்டவள் அதிலிருந்து திருப்தியைக் கண்டு சற்று நடுங்கிப்போனாள். 


நான் நடுக்கத்தை கூட்டும் படி 'அவர்தான் கோவமா இருக்காருன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏம்மா வெவஸ்தகெட்டத்தனமா பேசுற?' என்று சொல்லி உள்ளே போனேன். அப்பா களைத்துப்போட்ட மயில்கழுத்து நிறச்சேலை மடித்து வைக்கப்பட்டிருந்தது. நான் சரியத் தொடங்கியது மிகச் சரியாக அந்த தருணத்தில் இருந்துதான்.

Monday 25 April 2022

வெஸ்டிபியூல் - கதை

 டபுள் பஸ்ஸின் நடுவில் நானும் பார்த்திபனும் போய் நின்று கொண்டோம். பேருந்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்கும் கருப்புநிற ரப்பர் அசைவது எனக்குப் பிடித்திருந்தது. பார்த்திபனைப் பார்த்து சிரித்தேன்.


பேருந்தின் இணைப்பை சைகையால் சுட்டி  'வெஸ்டிபியூல்' என்றான்.


'என்னது?' பார்த்திபனுடைய ஆங்கில உச்சரிப்பு அவ்வளவு சுத்தமானது என்பதாலேயே பெரும்பாலும் அவன் பயன்படுத்தும் வார்த்தைகளை திரும்ப கேட்டுக் கொள்வேன். எனக்காக நிறுத்தி மறுபடியும் 'வெஸ்டிபியூல்' என்றான்.


நான் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டவனாக 'இது பழைய வேர்ட் டா. மாளிகையின் உள்பகுதிக்கும் நுழைவுக்கும் இடைப்பட்ட இடம்.' 


இரண்டாம் பகுதியை ஆங்கிலத்தில் சொன்னான். இரண்டு அறைகளும் விசாலமான கூடமும் கொண்ட வீடுகளையே மாளிகை என்று அன்று நினைத்துக் கொண்டிருந்த - இன்று அப்படி நினைக்க முடியவில்லை. ஏனெனில் இருபது வருடங்களுக்கு வங்கிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து நானே அப்படி ஒரு 'மாளிகை'யை கட்டிவிட்டேன் - எனக்கு அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. 


மேலும் விளக்கினான். ஆனால் அந்த விளக்கம் சற்று அதீதமெனப்பட்டது.


'பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா தன்னை மன்னராட்சியில் இருத்திக் கொள்வதா ஜனநாயகம் பக்கம் நகர்வதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்தது. அதற்கு முன்புவரை அரசாங்கத்தை அணுக முடியாமல் இருந்த சாமானியர்கள் அரசாங்கம் தனக்குள் அதாவது தனது கட்டிடங்களுக்குள் - அரசாங்கம் என்பது பிரம்மாண்டமான கட்டிடங்கள் தானே (பின்னாட்களில் நான் இக்கூற்றை சற்று விரிவுபடுத்தி ஆன்மீகம் என்பது கலைநயம் மிக்க கட்டிடம் என்றும் குடும்பம் என்பது அன்புமிக்க கட்டிடம் என்றும் சொல்லி சில நண்பர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறேன்) - அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதேநேரம் தன்னை முழுதாக இக்கட்டிடங்கள் திறந்துகாட்டிவிடக்கூடாது. பிரம்மாண்டமான நுழைவாயிலுக்கும் உள்ளடங்கிய பூட்டப்பட்ட அறைகளுக்கும் இடையே இருக்கும் காத்திருக்கும் பகுதிதான் வெஸ்டிபியூல் என்று அழைக்கப்பட்டது' என்று சொல்லி நிறுத்தினான்.


சூரனூர் என்ற கிராமத்துக்குச் செல்லும் பேருந்தில் இரண்டு பேர் இப்படி பேசி வருவது வித்தியாசமாக எடுத்துக் கொள்ளப்படாததற்கு காரணம் சூரனூருக்கு முன்பிருந்த எங்களுடைய பொறியியல் கல்லுாரிதான். முதலில் இப்படி ஆங்கிலத்தில் பேசுகிறவனையும் அதை கேட்டுக் கொண்டிருப்பவையும் ஊர்க்காரர்கள் மிகுந்த மரியாதையுடனும் அச்சத்துடனும் பார்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆங்கிலமும் இளப்பத்துக்கு ஆளாக்கக்கூடிய மொழிதான் என்று‌ தெரிய - அதாவது நான் சுந்தர ராமசாமியின் ரத்னாபாயின் ஆங்கிலம் கதையை வாசிக்க - இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தன. ஆனால் அன்று தீராத தாழ்வுமனப்பான்மையிலும் பயத்திலும் உழன்று கொண்டிருந்த எனக்கு (இன்றும் இந்த சமாச்சாரங்கள் முழுதாக மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று சொல்ல முடியாது) குறைந்தபட்சம் குறைவான அறிவு கொண்ட கிராமத்து ஆட்கள் எங்களை பிரம்மிப்புடன் பார்ப்பது பிடித்திருந்தது. இன்று யோசிக்கும்போது கல்லுாரி நாட்களில் நானொரு 'கிராமத்தானாக' இருந்துவிடக்கூடாது என்ற அதீத ஜாக்கிரதை உணர்ச்சி என்னிடம் இருந்தது என்று தோன்றுகிறது. நான் கல்லூரியில் பழகும் நண்பர்களில் கூட என்னைப்போல் தமிழ் மீடியத்தில் படித்தவர்களோ என் ஜாதி ஆட்களோ குறைவு. இன்று யதேழ்ச்சியாக அப்படி அமைந்தது என்று சொல்லி நான் என்னை சமாதானம் செய்து கொள்ளலாம் தான். ஆனால் நமக்குப் பிடித்ததை தேர்வு செய்வதில் பெரும்பங்கு வகிப்பது நம்முடைய தன்னலம்தான் என்பதை உணராதவனா நான்? பார்த்திபனுடன் என்னை நெருக்கி வைத்துக் கொண்டதற்கும் அவனுடைய ஆங்கில அறிவும் அதேநேரம் அவ்வளவு லட்சணமாக இல்லாத முகமும் தானே காரணம். போதும். முழுத்தூய்மை ஒன்றை உள்ளே கற்பனை செய்துகொண்டு அந்த நிலையில் நீடிக்க முடியவில்லையே என்று மாயச்சாட்டையொன்றெடுத்து என்னை நானே ரத்தம் வர அடித்துக் கொள்வது எனக்கும் பிடித்த பொழுதுபோக்கு தான்.


பேருந்தை விட்டு இறங்கினோம். கண்கள் உணர்வதற்கு முன்னே  கூர்மையான உணர்வுகளை - விரும்பத்தக்கவையும் தகாதவையுமான இரண்டையும் - நமக்கு காட்டிவிடும் இன்னொரு உறுப்பு உடலில் இருக்கும் எனத் தோன்றுகிறது. கடுமையான விலகலையும் ஒவ்வாமையையும் உணர்ந்த பிறகே எதிரே அப்பா நிற்பது கண்ணுக்குத் தெரிந்தது. எப்படி பார்த்து ஒரு நொடி முடிவதற்கு முன்பாகவே சிமெண்ட் கரை மங்கலாக்கிய கால்களும் சுருட்டு நாற்றமடிக்கும் ஒட்டிக் குழிவிழுந்த கன்னங்களும் மெலிந்த உடலும் நரைத்து மண்டிய தாடியும் நினைவுக்கு வருகின்றன என்று ஒரு பக்கம் வியப்பாக இருந்தது. நாற்பது வயதில் இன்றிருக்கும் தோற்றத்தின் முதல் படியில் காலெடுத்து வைத்த அப்பா அடுத்த இரண்டு வருடங்களில் இறுதிப்படியை எட்டிவிட்டார். இரண்டாம்முறை வாசித்தால் இன்னொரு‌ பொருள் தரும் தரமான இலக்கிய படைப்பு போல இரண்டு சந்திப்புகளுக்கு இடையில் இன்னும் சீரழிந்திருக்கும் அப்பாவை மேலும் கூர்ந்து நோக்கினாலே கண்டுபிடிக்க முடியும்.


'சிகரெட் மட்டுமில்லடா ஓவரா மேட்டர் பண்ணினாகூட அம்பது வயசுலயே ஒடம்பு டொக்கு விழுந்துடும்' என்று கிட்டத்தட்ட அப்பா இன்றிருக்கும் தோற்றத்தில் அன்றிந்த கணித ஆசிரியர் தமிழ்வாணனைப் பற்றிய அரிய கண்டுபிடிப்பு ஒன்றைச் சொன்ன பரணிதரன் வேறு ஞாபகத்துக்கு வந்து இந்த மனிதரின் உடல் தோற்றத்துடன் அம்மாவையும் பிணைக்கிறான். இத்தனை ஒவ்வாமைகள் இவருடன் பேசத்தொடங்கும் எங்கு போய் அழுந்துகின்றன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அவருடன் பேசும் சொற்களில் அந்த அழுத்தத்தின் விசையும் தெரியும்.


பார்த்திபன் அருகில் இருப்பதை உணர்ந்தவர் என்னைக் கண்டதும் விளிம்புகள் சுருங்கி புன்னகையாக மாறவிருந்த உதட்டினை பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டார். அந்த அளவாவது இங்கிதத்துடன் நடந்து கொண்டாரே என எனக்கு ஆறுதலாக இருந்தது. அவர் இறந்தால் - எனக்கிருந்த இறப்புகள் பற்றிய முன்னறிவு கொஞ்சமான மருத்துவ அறிவு இவற்றைக் கொண்டு அவர் அந்த நாளில் இருந்து மூன்று வருடங்களில் இறந்து விடுவார் என்று கணித்திருந்தேன். மாறாக அடுத்த இரண்டு வருடங்கள் நான்கு மாதங்களில் இறந்தார் - நினைத்து வருந்த வேண்டிய பட்டியலில் இந்த இங்கிதத்தையும் அந்த கணம் சேர்த்தேன். ஆனால் உடனடியாக அந்த தருணத்தை பட்டியலில் இருந்து நீக்க நேர்ந்தது. அருகில் நின்றிருந்த ராமலிங்கம் 'என்னா கதிரவா அப்பா நிக்கிறது தெரியலையாக்கும்' என குற்றம்சாட்டும் தொனியுடன் அருகே வந்துவிட்டார். நடக்க விரும்பாதது நடந்தால் எப்படி பெரும்பாலானவர்கள் உறைந்து நிற்பார்களோ நானும் அப்படி நின்றேன். ஆனால் அதற்குள்ளாக பார்த்திபன் அப்பாவிடம் கையை நீட்டிவிட்டான்.


'அங்கிள் நீங்க கதிரோட அப்பாவா?' 


ஒரு கணம் ஆசுவாசமாக இருந்தாலும் அடுத்த நொடியே அவன் குரலில் ஏதும் இளக்காரம் இருந்ததா எனத் தேடத் தொடங்கியது மனம். ஆனால் அப்பாவைவிட விகாரமாயிருந்த அப்பாவின் சினேகிதர் ராமலிங்கத்துக்கு பார்த்திபனின் அழைப்பு திருச்சியின் ஜுன் மாத உச்சி வெயிலில் கூட குளிர்ச்சியை அளித்திருக்கும். நகரத்திலிருப்பவர்கள் என ராமலிங்கம் பார்த்திருக்க வாய்ப்பிருக்கும் அத்தனை பேருமே அரசாங்க ஊழியர்கள். அரசாங்க ஊழியர் என்றால் கிராமங்களில் இன்றுமே ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது எனில் இருபது வருடங்களுக்கு முந்தைய நிலையை கற்பனை செய்து கொள்ளுங்கள். ராமலிங்கம் அரசாங்கமே தன்னிடம் பேசியதாக நினைத்து மகிழ்ந்து போனார். சற்றுநேரத்துக்கு முன் அப்பாவை நான் விலக்குவதை கண்டுபிடித்த அவரது கூர்மையை எண்ணி ஆங்காரமடைந்த மனம் அவர் தற்போது மகிழ்ந்ததை எண்ணி ஆசுவாசம் கொண்டது.


அப்பாவைவிட இந்த ராமலிங்கத்தைத்தான் நான் அதிகமும் வெறுக்கிறேன் என்று புரிந்தது.‌ எங்கு படித்தேன் அல்லது யார் சொல்லி கேட்டேன் என நினைவில் இல்லை. ஆனால் சாரம் இதுதான். நாம் ஒருவரை வெறுத்தால் அவருடைய உற்ற நண்பரை இரண்டு மடங்கு வெறுப்போம். ராமலிங்கத்துக்கு இது அப்படியே பொருந்தும். ராமலிங்கம் அப்பாவின் பால்ய சினேகிதர். 


அப்பா 'நான் உயிரோடு இருக்கிறதுக்கே அவன்தான் காரணம்' என சில சமயம் நன்றியுடனும் சில சமயம் கசப்புடனும் சொல்வார். என் அப்பாவின் கடந்த காலத்துக்கு தன்னை ஜவாப்தாரியாக வரித்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.


நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு 'அப்பாவ விட்றாத தம்பி அவர நல்லா பாத்துக்க' என்றெல்லாம் அம்மாவின் முன்னிலையிலேயே ராமலிங்கம் அடிக்கடி சொல்வார்.


'சிறு வயதில் காதலித்த எவளையோ நினைத்து இருபது வருடங்களாக குடித்தே சீரழிகிறவனை‌ எங்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறவனை என்ன எழவுக்குடா நான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று அவரிடம் மானசீகமாக கேட்பேன். அந்த மானசீகத்தின் வெப்பம் உயரத் தொடங்கியது தெரிந்தோ என்னவோ அப்படிச் சொல்வதை ராமலிங்கம் குறைத்துக் கொண்டார். ஆனால் அப்பாவை திறமை இல்லாதவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் திறன் வாய்ந்தவர் என்பதற்கு ராமலிங்கமே சாட்சி. உண்மையான திறமைசாலிகளுக்கு மட்டுமே அவர்கள் மேல் அபாரமான பக்தி கொண்டவர்கள் கிடைப்பார்கள் என்பது இந்த நாற்பது சொச்ச வருட வாழ்வில் நான் உணர்ந்திருக்கும் உண்மை. இன்றுவரை அப்படி என் மேல் பக்தி செலுத்த யாரும் கிடைக்கவில்லையே!


சிறு வயதிலேயே அப்பா அம்மா இருவரும் இறந்துவிட கட்டிட வேலைகளுக்கு போகத் தொடங்கி கொத்தனாராகி மேஸ்திரியானவர். அவரை 'நாட்டு இஞ்ஜினீர்' என்றும் ஊரில் அழைப்பார்கள். ஊரில் பெரும்பாலான வீடுகளை கட்டியவர் அப்பாதான். அன்றும் வீடு கட்ட அவரை அழைக்க ஆட்கள் வீடு தேடி வந்தபடிதான் இருந்தனர். ஆனால் அவர் தன்ன மிகுந்த பிரயாசைப்பட்டு சீரழித்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவர் சீரழிவு தொடங்க காதல் தோல்வி ஒரு சாக்காக இருந்தது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர் அளவுக்கு திறன் வாய்ந்தவர்கள் எங்கள் ஜாதியிலேயே ஊரில் கிடையாது. எந்தச் சூழலிலும் யாரிடமும் கைகட்டி நின்றதும் கிடையாது. நான் ஒழுங்காகப் படிக்கவும் அவர் கண்டிப்புதான் - யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது ஒருமுறை கூட அவர் என்னை கை ஓங்கியது கிடையாது - காரணமாக இருந்தது. ஆனால் அப்பா ஏன் இப்படி தன்னை சீரழித்துக் கொண்டார்? இதையெல்லாம் இன்று சாவகாசமாக உட்கார்ந்து யோசிக்கும்போது நன்றாக இருக்கிறது தான். அப்பா இன்று யாரோ ஒரு மனிதராக மாறிவிட்டார்.‌ ஒருவேளை இன்னும் சில வருஷங்கள் கழித்து அவர் இறந்திருந்தால் இவ்வளவு கருணையோடு அவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த தினத்தில் இந்த காருண்யமெல்லாம் எதுவும் மனதில் இல்லை.


'எதுக்கு வந்தீங்க?' என்ற கேள்வியை அப்பா ராமலிங்கம் இருவரும் மட்டுமல்ல பார்த்திபனும் எதிர்பார்த்திருக்க மாட்டான். அவர்கள் திகைத்துப் போய் நின்று கொண்டிருக்கும்போதே நான் என் கல்லூரி விடுதியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். தூரம் சென்ற பிறகு திரும்பி பார்த்த போது அப்பாவும் ராமலிங்கமும் ஒரு வெஸ்டிபியூல் பேருந்தில் ஏறினர். உறுதியற்ற அதன் மையப்பகுதி பாம்பு போல அசைவது அவ்வளவு தூரத்திலிருந்தே நன்றாகத் தெரிந்தது. திடீரென ஒரு பிரம்மை தோன்றியது. அந்த வெஸ்டிபியூலில் நானும் அவரும் எதிரெதிரே நின்று கொண்டிருந்தோம்.


Wednesday 23 March 2022

சுகஜீவனம் - குறுங்கதை



இன்னும் நாற்பத்தைந்து வயதுகூட ஆகவில்லை தான் அடிபட்டிருப்பதோ காலில்தான் பொதுப்படுக்கை இல்லாத புண்ணியத்தால் மருத்துவமனையில் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் தனி அறையில்தான் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றாலும் இந்த நிலையில் அவர் உடலுறவுக்கு அழைப்பது கமலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி மட்டுந்தான். வெறுப்போ அருவருப்போ இல்லை. எப்படி இருக்கும்! பத்து நாட்களாக அடிவயிற்றில் கைபோட்டுத் தடவுகிறவரை தட்டிவிட்டுக் கொண்டுதானே இருந்தாள். காலையில் அந்த முகத்திலிருக்கும் முறைப்பு சிறு குழந்தையை ஞாபகப்படுத்தும். அந்த சமயத்தில் மனமிளகக்கூடச் செய்வாள். ஆனால் இரவில் அவருக்கு முன்னே பதினான்கு வயது மகனும் பன்னிரண்டு வயது மகளும் பக்கத்து அறையில் தூங்குவது நினைவுக்கு வந்துவிடும். ரோஷினி கூட புரிந்து கொண்டுவிடுவாள். ஆனால் பிரதாப்பை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. அவன் தன்னையும் அவரையும் அப்படி கற்பனை செய்வதைக்கூட அவளால் கற்பனை செய்ய இயலவில்லை. அவளுக்கு மட்டும் விருப்பமில்லையா என்ன! பிள்ளைகள் விடுமுறைக்கு சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது ஐந்தாறு முறைகூட கூடியிருக்கிறார்கள். ஆனால் உடலில் அசதியையும் வலியையும் கடந்த உற்சாகம் கூடிவிட்டிருக்கும். நீலகண்டன் ஒரு வாரத்துக்கு சிரித்துக் கொண்டிருப்பார். கமலா சிடுசிடுக்கும்போது அந்த குழந்தை முறைப்புகூட முகத்திலிருக்காது. இந்த ஊரடங்கு காலத்தில் பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்ததால் உடலுறவுக்கான வாய்ப்பு அருகிப்போனது. நீலகண்டனும் அடிக்கடி முறைத்துக் கொள்கிறார்.


முன்புபோல அலுவலகத்தில் இருந்து மதியம் சாப்பிட வரும்போது நிகழும் அவசரக்கூடல்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர் அலுவலகத்தில் இருந்து ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் அரைமணி நேரந்தான் மதிய இடைவேளை. 'வரேன்' என்ற செய்தியுடன் ஒரு முத்த எமோஜியை வாட்ஸ்அப்பில் அனுப்புவார். அதுதான் சமிக்ஞை! கமலாவுக்கு வேண்டும் போலிருந்தால் அவர் புறப்படுவதற்கு முன்னதாகவே 'வாங்க' என செய்தி அனுப்பி விடுவாள். அவர் புறப்படும்போதே கமலா ப்ளவுஸை தளர்த்தி தயாராகி விடுவாள். உள்ளே நுழைந்ததுமே கதவடைத்து உதட்டைக் கவ்வி இழுத்துச் சென்று விடுவாள். ஏற்கனவே தளர்வான உள்ளாடைகளை நீலகண்டன் எளிதாக அகற்றி விடுவார். கமலா நைட்டியை கழற்றுவதில்லை. ஆனால் நீலகண்டனுக்கு அவர் முழுக்க நிர்வாணமானால்தான் பிடிக்கும். கமலாவின் நைட்டியையும் முலைகளுக்கு மேல் வரை தூக்கிவிட்டால் போயிற்று! சில சமயங்களில் இருபது நிமிடங்கள் இயங்கியும் நீலகண்டன் தளரமாட்டார். அதுபோன்ற சமயங்களில் அவர் அலைபேசியில் அவருக்குப் பிடித்த சில நடிகைகளின் - தினம் ஒரு சிகரெட் குடிப்பதற்கான அனுமதி போல ஜூலியா ஆன், ரேஷ்மா, ஸ்வாதி நாயுடு என மூன்று நடிகைகளில் படங்களை மட்டும் பார்க்க கமலா அனுமதித்து இருக்கிறாள் - படங்களை கமலா ஓடவிடுவாள். கண்களைமூடி இயங்கித்தளரும் போது அவர் கற்பனையில் உதித்தது ஜுலியாவா,ரேஷ்மாவா,ஸ்வாதியா அல்லது தானே தானா என்று கமலாவுக்கு குழப்பமாக இருக்கும். சில சமயங்களில் இரவில் இரண்டு மூன்று முறை கூடிவிட்டு மதியத்தில் அரைமணி நேரம் இயங்கியும் கூட விந்து வெளிப்படாது. அதுபோன்ற சமயங்களில் ஆழமாகக் கமறி உள் தொண்டையில் இருந்து சளியை இழுத்து கமலாவின் குறியில் துப்புவார். ஒரு சில முறை விந்து வராமல் புறப்பட்டபோது இந்த உத்தியை கடைபிடிக்கச் சொல்லி அவரை அறிவுறித்தியது சாட்சாத் கமலாவேதான்! மதியம் அவர் வருவதற்கு முன்பே கமலா பாதாமும் குங்கமப்பூவும் கலந்த பாலை கொதிக்க வைத்து எடுத்து வைத்துவிடுவாள். மற்ற நாட்களிலானால் மதிய உணவுக்குப்பிறகு அதை பருகக் கொடுப்பாள். உடலுறவு கொள்ளும் நாட்களில் அதுதான் உணவே! இயங்கித்தளர்ந்து கிடப்பவரை சற்றுநேரம் அணைத்திருந்துவிட்டு எழுந்து சென்று தொடைகளில் விந்து வழியாமல் டிஷ்யூவால் துடைத்துக் கொண்டு கைகளைக் கழுவி பாலினை எடுத்துவந்து அவரை மடியில் சாய்த்துக் கொண்டு ஊட்டுவாள். கடைசி வாய்ப் பாலை மட்டும் அவள் உறிஞ்சி அவர் வாய்க்குள் துப்புவாள். அந்த எச்சில் பாலுக்காகத்தானே நீலகண்டன் அவருக்குப் பிடிக்காத பசும்பாலைக் குடிக்கிறார்! மூன்று மணி வரையிலும் கமலா குளிக்கமாட்டாள். தொடைகளில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பான விந்து மொடமொடப்பாக மாறும்வரை அதைக்காய விடுவாள். நீலகண்டன் மாலையில் நண்பர்களுடன் டீ குடிக்கச் செல்லும்போது ஒரு வடைக்கு பதிலாக இரண்டோ மூன்றோ  சாப்பிட்டார் என்றால் அவர் வீட்டில் சாப்பிடவில்லை என்று கண்டறிந்துவிடும் நண்பர் ஒருவர் அவருக்கிருந்தார்! சாப்பிடாமல் போகும் நாட்கள் வாரத்துக்கு மூன்றைத்தாண்டவே கமலா அதிகபட்சம் வாரம் இரண்டு முறைதான் என்று கட்டளையிட்டால். கட்டளையை அடிக்கடி அவளே மீறவும் செய்வாள். வேலியை மேயும் பயிர்!


இந்த சந்தோஷங்களையெல்லாம் இந்த ஊரடங்கு கெடுத்துவிட்டது. இவர் தடவுவதால் ஏறும் உடல் உஷ்ணம் வேறு தலைவலியாகத் தங்கி விடுகிறது. கமலாவின் தனிமைப்பொழுதுகளும் எந்நேரமும் வீட்டிலிருக்கும் கணவனாலும் பிள்ளைகளாலும் திருடப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் குறிக்க வரும் பாலச்சந்திரனையும் நிம்மதியாக ரசிக்க முடிவதில்லை! நீலகண்டனும் சற்று மாறித்தான் போயிருக்கிறார். இந்த விரும்பத்தகாத மாற்றம் தந்த குழப்பத்தில்தானே வண்டியில் இருந்து விழுந்து ஆஸ்பத்திரியில் கிடக்கிறார்! ஆகவே அதற்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்வு அழுத்தவே கமலா ஒத்துக்கொண்டாள்.


ஆனால் ஒத்துக்கொண்ட பிறகே நடைமுறை சிக்கல்கள் உரைத்தன. நீலகண்டன் கீழும் அவள் மேலுமாக இருந்தாக வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இணைந்ததில்லை. 'ட'வை திருப்பிப் போட்டது போல கமலாவை வளைத்து கட்டிலில் கையூன்றச் சொல்லி பின்னிருந்து இயங்கி இருக்கிறார். அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு  கமலா மேலே உட்கார்ந்தும் இயங்கி இருக்கிறாள். ஆனால் அவர் படுத்திருக்க கமலா மேலேறி அமர்ந்ததில்லை. வேறு வழியில்லை! எப்படியாவது அவரை சூடேற்றி கொஞ்ச நேரத்தில் விந்து வெளிப்பட வைத்து தளர்த்திவிட வேண்டும் என்று மட்டும் நினைத்தாள். திடீர் யோசனையாக படங்களில் பார்த்தது போல 'நான் வேணும்னா வாயில பண்ணவா' என்று கேட்ட கமலாவை நீலகண்டன் வலி தெரியும் முகத்துடன் பார்த்தார். கமலாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன.


அன்று புடவை கட்டி வந்திருந்தாள். நல்லவேளையாக சுடிதார் போடவில்லை என்று தோன்றிய ஆசுவாசம் உடனே மறைந்தது. புடவை என்றால் புடவையையும் ஜட்டியையும் மட்டும் கழட்டிவிட்டு அவர்மீது ஏறிப்படுத்துவிட்டு எழுந்து கொள்ளலாம். ஆனால் நீலகண்டனுக்கு அவள் முலைகள் வேண்டும். மணமான புதிதில்கூட அதன்மீது இவ்வளவு பித்தில்லை. மகன் பிறந்த உடல் செழிப்பேறிய பிறகு ஒரு நிமிடம் தனியாக அவள் கிடைத்தாலும் ப்ளஸை இழுத்துவிட்டு காம்பை உறிஞ்சுவார். அதோடு இந்த புது நிலையில் நீலகண்டனின் குறி விறைப்படைய தாமதமானது. பாவாடையை மட்டும் அணிந்து கொண்டு விறைப்படைய அவள் உதவ வேண்டியிருந்தது. அடைந்ததும் கவனமாக மேலே ஏறி அமர்ந்தால் மீண்டும் சுருங்கி விடுகிறது. ஒரு வழியாக துளையில் திணித்து அமர்ந்தாள்.


'என்னடி அப்படியே இருக்க மூவ் பண்ணு' என்றார்.


'மூவ் பண்ணா வெளில' வருது என்று அப்பாவியாகச் சொன்னாள். நீலகண்டன் படுத்தவாக்கிலேயே இடுப்பை சற்று உயர்த்தினார். ரயில் நகர்வது போல மெல்லத் தொடங்கி வேகமெடுத்தாள் கமலா. கீழிருந்த கமலாவின் முகமும் தற்போது மேலிருக்கும் கமலாவின் முகமும் ஒன்றல்ல என்று அவருக்குத் தோன்றியது. முலைகள் குலுங்கி முட்டிக்கொள்ள இடக்கையை தலை வழியே பின்னுக்கு கொண்டு சென்று வலப்பக்கம் சரிந்து கிடக்கும் கூந்தலை பிடித்திருப்பவளை அவருக்குப் பிடித்திருந்தது. ஜூலியாவையோ ரேஷ்மாவையோ நாயுடுவையோ கற்பனை செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தனர். இல்லை இல்லை இயங்கியவளின் கீழே கிடந்தார். அந்த இரவினால் டிஸ்சார்ஜ் ஒருவாரம் தள்ளிப் போனதைத் தவிர வேறு பிரச்சினை இல்லை.


ஆனால் பத்துநாள் கழித்து நீலகண்டனின் அலைபேசிக்கு அவர்கள் ஆஸ்பத்திரியில் இயங்கிய வீடியோ வந்தது.


அவர் ரிப்ளையாக 'டேய் மயிரு நல்ல கேமராவில் எடுத்தா என்ன? எம்பொண்டாட்டியோட இருக்கிறத எனக்கே அனுப்புறியா நீ? நம்பர் கண்டுபிடிச்சியே. நான் சைபர் க்ரைம்ல வேலை பாக்குறத கேக்கலயோ. ஓத்தா டேய் இந்த வாய்ஸ்நோட் கேட்டதும் நீ என்ன ப்ளாக் பண்ணுவ. நீ ப்ளாக் பண்ணினாலும் உன்ன குண்டாக்க தூக்கிட்டு போவ ஆறு மணி நேரத்துல போலீஸ் வரும்' என்று அனுப்பினார்.


இருபது வினாடிக்குள் அந்த வீடியோ இருவர் இன்பாக்ஸில் இருந்தும் அழிக்கப்பட்டது. அழுதுகொண்டே தான் ஒரு ஏழைக்குடும்பத்து பையன் என்றும் தன்னை விட்டுவிடும்படியும் செய்தி வந்தது. 


ஊரடங்கு முடிந்து பிள்ளைகள் வெளியூர் போயிருந்தனர். காபியை அவர் கையில் கொடுத்துவிட்டு 'அதென்னங்க சைபர் க்ரைம்' என்று அருகில் அமர்ந்தாள் கமலா. 'யாருக்கு 'தெரியும் ஒரு படத்துல பார்த்தேன்' என்று சொல்லிவிட்டு எழுந்தவர் அந்த வீடியோ நினைவுக்கு வர அவளை இழுத்துக் கொண்டு அறைக்குள் போய் 'மேல ஏறுடி' என்றார். மறக்காமல் அதைப் பதிவும் செய்து கொண்டார். கையில் வெண்ணெய் போல இந்த வீடியோ இருக்க ஜூலியா ஸ்வாதி போன்ற நெய்கள் எதற்கு!


PC

https://theallahabadmuseum.com/events-item/women-in-indian-art/

Monday 21 March 2022

வினோதம்

தாழப்பறந்த காகம் தன் கையிலிருந்த குச்சி ஐஸை பிடுங்கிச் சென்றதை நம்பவே முடியாமல் நின்றிருந்தான். எப்போதும் ஒன்றுக்கு மூன்றுமுறை எண்ணி சீடை கொடுக்கும் ரோட்டு ஆத்தா அன்று 'வெச்சுக்கய்யா' என்று ஒரு காரச்சீடை அதிகமாகக் கொடுத்தது. எல்லா திங்கட்கிழமையிலும் நீண்ட நேரமாக நிற்க வைத்து பேசியறுக்கும் தலைமையாசிரியர் அன்று ஏனோ சீக்கிரமாக தன் உரையை முடித்துக் கொண்டார். சிரிப்பு களையாமல் பாடமெடுக்கும் மைதிலி டீச்சர் சிடுசிடுப்போடு வந்து போனார். பதினோறு மணிக்கு அடித்த 'இன்ரோல் பெல்' பதினொன்னேகாலை கடந்தும் மீண்டும் அடிக்கப்படாமல் இருந்தது. கணக்குப் பாடமெடுக்கும் சிவசங்கரன் அன்று வகுப்பில் நடனமாடிக் காட்டினார்‌. அமீர்ஜான் சார் அவர் மகளையும் அவன் படிக்கும் நான்காம் வகுப்பில் சேர்க்க அழைத்து வந்திருந்தார். மதிய உணவில் அன்று இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. அதன்பிறகான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மேஜிக் நிகழ்ச்சிகள் நடந்தன. டியூப்லைட்டை ஒருத்தர் கடித்துத் தின்றார். குச்சியை ஒருத்தர் பூங்கொத்தாக்கினார். அதிலிருந்து ஒரு புறாவை பறக்க வைத்தார். சீராக வெட்டப்பட்ட தலை ஒன்று மேசையில் அமர்ந்து பேசியது. அது அவன் பெயரை சரியாகச் சொல்லி அழைத்தது. 'காக்காய் ஐஸை பிடிங்கிப் போனதற்காக அழுகிறாயா அருண்' என்று நாடகத்தனமாக அக்குரல் கேட்டது‌. அது புவனேஸ்வரி அக்காவுடைய குரல் போலிருந்ததால் அவனுக்கு நிஜமாகவே அழுகை வந்தது. மதியம் எங்கோ சென்றிருந்த கண்டிப்பான தலைமை ஆசிரியர் - அஞ்சாவது சார் - மூன்றரை மணி போல் வெள்ளைச்சட்டை முழுக்க ரத்தம் நனைத்திருக்க பள்ளிக்கு தூக்கி வரப்பட்டார். கொஞ்ச நேரத்திலேயே ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டார் என்று சொல்லி நான்கரை மணிக்கு பள்ளியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை என்பதால் கேபிள் டிவியில் அருணுக்குப் பிடித்த அப்போது வெளியான விஜயகாந்த் நடித்த நரசிம்மா போட்டிருந்தார்கள். அன்று குடித்துவிட்டிருந்த அப்பா சீக்கிரமே உறங்கிப்போனார். இவற்றுக்கு எல்லாம் அடுத்து நடந்ததாலோ என்னவோ அவனுக்கு முன் பிறந்து ஒரு‌ வயதில் இறந்து போன அவனுடைய அக்கா காலச்சுழற்சியில் எங்கெங்கு எல்லாமோ அலைகழிந்து அன்று அவனருகில் வந்து நின்றதும் அவனருகிலேயே படுத்துக் கொண்டதும் விடிவதற்குள் எழுந்து சென்றதும் அவனுக்கு வினோதமாகத் தெரியவில்லை. ஆனாலும் அவன் அக்காவோடு புதைக்கப்பட்ட ஒரு தங்க அரைஞாண் கயிறை இன்றும் அவன் பத்திரமாக வைத்திருக்கிறான்.