Sunday 25 December 2016

சில கவிதைகள்

கவிதைகள் குறித்தும் கவிஞன் குறித்தும் எப்போதுமே எழுச்சிமிக்க ஒரு பார்வை எனக்குண்டு. எப்படியாயினும் நாம் அனைவரும் "உச்சி மீது வானிடிந்து" என்று தொடங்கியவர்கள் தானே. ஆகவே சிறந்த கவிதைகளுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரும் மரியாதை நான் சிறந்தவை என எண்ணுபவற்றை பகிர்ந்து கொள்வது. மிகப்பெரிய அவமதிப்பு என்பது நான் எழுதியவற்றை பகிர்ந்து கொள்வது. இப்பதிவு அவமதிப்பே!

மறைதுயர்

இன்றிரவு உதிரப் போகும் உன் கண்ணீர் துளிகளில் கலந்திருக்கிறது என் உப்பும்

எவ்வளவு தனித்தவள் நீ!

ஒளித்து வைக்கப்படும் உன் ஒவ்வொரு துயரும்

தூங்கிய குழந்தையை தொலைத்தப் பெற்றவள் என

என்னை நிலைகொள்ளாமல் அடிக்கிறது

அறிவாயா நீ

உன் சிரிப்பின் ஒவ்வொரு முத்துக்கும் நான் மூழ்கும் ஆழங்களை

-----

வெளியேற்றல்

களீரெனும் அச்சிரிப்பில் மறைந்திருக்கும் உன் அழுகை

அறிந்தவன் நான் மட்டும்

இறுமாப்பு கொள்கிறேன்

அச்சிரிப்பு உச்சிக்கேறி வெளியேறும் கண்ணீர்

கண்ணீரில் கலந்து விடுகிறது

உன் துயரும்

அது கடந்த சமனும்

மீண்டும் தலை குனிகிறேன்

-----

பை

அவர்களின் பை அடக்கமானது

மாட்டிக் கொண்டு போய் விடலாம்

அது பிறரின் முகத்தில் இடிப்பதோ

மாட்டியிருப்பவர் வலுவை கூட்டிக் காண்பிப்பதோ அவர்களுக்குத் தெரியாது

பின் படிக்கு முந்தைய இருக்கை இடுக்கில் சொறுகி இருக்கும் என் பை அப்படியல்ல

அது பிறரைக் கீறும்

எடுத்துக் கொண்டு இறங்க நேரமாகும்

முன் செல்பவரை எனக்குத் தெரிவது போல் இடிக்கும்

ஆனால்

அது உருவாக்கும் அத்தனை அசௌகரியங்களும்

அனைவருக்கும் தெரிந்தே இருக்கும்

------

வினா-அடி-வினா

அடி

என்னடா

நீ அழகல்ல

சரி

கோபமில்லை?

கோபம் தான்

ஆனால் நீங்கள் அழகு

மலர்கொத்துகள் தான் உனக்கு விருப்பமா?

இல்லை ஒரு மலரின் ஒவ்வொரு இதழும்

என்ன?

உனக்குள் இருக்கும் நீங்கள்

என்ன?

அடர் இருளின் துளி வெளிச்சமென குளித்த ஈரம் சொட்டும் உன் கூந்தல் நுனிகள்

ம்

பனியின் வெள்ளை படர்ந்த உதட்டுச் சுருக்கங்கள்

ம்ம்

உடைக்கும் உடையின்மைக்கும் இடையே மின்னும் தோள்

ப்ச்

பழிப்பு காட்டுகையில் பார்க்கக் கிடைக்கும் உள் உதட்டுச் சிவப்பு

டேய்

கழுத்தில் மின்னும் வியர்வை

ம்ஹும்

கண்களில் எரியும் தீ

எப்போது

கவலை மறைக்கும் புன்னகை

இல்லவே இல்லை

சிறுமியென மூக்குறிஞ்சல்கள்

போடா

வெட்கமில்லா பெருஞ்சிரிப்பு

அடிப்பேன்

விரைந்து வெளியேறும் திக்கல் பேச்சு

ம்ஹ்ம்

வியந்து நோக்கும் விரிந்த விழிகளும் திறந்த சிறு வாயும்

அய்யோ

அணுக்கத்தில் தெரியும் உடற்புள்ளிகள்

வேண்டாம்

மேலும் அணுகையில் எழும் உடல் மணம்

போதும்

ஏன்

போதும்

ஏன்

போதும்

சரி

சரியா?

சரிதான்

------

இரு முத்தங்கள்

இவ்விள மஞ்சள் வெயிலுடன்

என்னை எழுப்புகின்றன

இரு முத்தங்கள்

ஒன்று உன் கனிவின் முத்தம்

மற்றொன்றென் கனவின் முத்தம்

------

சட்டென

அவள் குரலில் என்னதான் இருக்கிறது

விரைந்து செல்லும் பேருந்துக்கு

தலைசாய்க்கும் அரளிச்செடி

ஆக்கிவிடுகிறது என்னை

------

முடிக்காமலிருத்தல்

முழுதாக உண்ணப்படாமல் சேர்த்து வைக்கப்படுகின்றன

அவளின் ஒவ்வொரு சொற்களும்

புதுப்பொருளை

வருடி வருடி மகிழும் பிஞ்சு போல

எடுத்துவிட்டு

எடுத்துவிட்டு

திரும்ப வைக்கிறது

சிந்தை

அவள் சொற்களை

------

பாவனித்தல்

சென்று கொண்டிருக்கும் பேருந்தில்

காதடைக்கும் குளிர்காற்றை சுவாசித்தபடி

வாசித்துக் கொண்டிருக்கிறேன்

அடுத்த நிறுத்தத்தில் அவள் ஏறப் போகும்

பதற்றத்தை மறைக்க

-

Saturday 10 December 2016

முகங்கள் தொலைந்த மேடை

எனக்கு முன் எத்தனையோ பேர் சொன்னது தான்
ஏளனம் செய்வதற்கு ஏற்றது தான்
இயலாமையின் இயல்பான உச்சம் தான்
இருந்தால் என்ன
எத்தகைய கயமை நிறைந்த எண்ணம் எனினும் கண்ணீர் தூயதுதான்
என் விழிகள் வழிவதே இல்லை
இது தான் என் புலம்பல்
என் குரல் உடைவதேயில்லை
இது தான் என் புகார்
எழுந்த செல்ல நினைக்காதீர்கள்
எத்தனையோ பேர் இதற்கு முன் சென்று விட்டனர்
கெஞ்சுகிறேன்
பச்சையாய் சிரிக்கிறேன்
பார்வை எதிர்ப்படுகையில் தலை தாழ்த்துகிறேன்
உங்கள் கால்களை நக்குகிறேன்
நக்கிய நாக்கினால் உங்கள் கரங்களை முத்துகிறேன்
சென்று விடாதீர் சென்று விடாதீர் என அரற்றுகிறேன்
தாளாத துக்கம் நெஞ்சை அடைக்க காரணம் கேட்கிறீர்களா
காரணம் தெரிந்த பின்பு துக்கம் என எஞ்சுவது உண்டா தோழரே
என்ன தான் என் சிக்கல்
உணவுக்குப் பஞ்சமில்லை
உறவுகளும் கொஞ்சமில்லை
உயிர் விடவும் எண்ணமில்லை
உடல் வலுவும் குறையவில்லை
இதற்கு மேல் எண்ண வேண்டும் என்கிறீர்களா
இது தான் என் சிக்கலே
ஏதோவொன்று நிரம்பவில்லை
ஆட்டம் காணும் போதெல்லாம் தளும்புகிறது
தொட்டறியக் கூடிய துயர் என சில உண்டு
இறப்பு இழப்பு தோல்வி என
இன்மையில் எழும் என் துயரை
இரவில் நான் உணரும் நடுக்கத்தை
சொல்ல முடியவில்லை
சொல்லவே முடியவில்லை
நரம்புகள் அத்தனையும் கொதித்து நொதிக்கிறது
நஞ்சு
வெறுப்பெனும் வெகுளியெனும் பயமெனும் தாழ்வெனும் நஞ்சு
நஞ்சு
நகக்கண்ணளவு நக்கினாலும் நசுக்கிவிடும் நஞ்சு
கடுங்கசப்பு கண்ணறியா இருப்பு
பெருங்காட்டை அழிக்கும் துளி
பேரழகை துணிக்கும் எரி
என்னுள் ஏறுகிறது
வரலாறு முழுதும் சாக்கடையில் அமிழ்ந்த கொடுநஞ்சு
எழுக
நஞ்செழுக
என்னுள் எழுக
என்னை உண்டெழுக
அறிவற்றவனின்
அழகற்றவனின்
ஆற்றலற்றவனின்
கண்ணீரும் அற்றவனின்
துயர் எழுக
எழுந்து மூடுக இவ்வுலகை
இருளட்டும் அனைத்தும்
இறக்கட்டும் அத்தனையும்
அன்னை முலைகளில் ஊறட்டும் என் வெகுளி
ஆறுகளில் கலக்கட்டும் என் கனவுகள்
அன்னத்தை அணையட்டும் என் எச்சில்
எங்கும் நிறையட்டும் என் நஞ்சு
சொல்லென மாறாத்துயரை சொல்லாதொழிந்த உலகே நீ அழிக
இல்லென ஒன்றில்லாதவன் எழுக
இல்லங்கள் இழிக
சோம்பலென தன்னிரக்கமென தாழ்வுணர்ச்சியென எண்ணி நகைத்து உமிழ்ந்து வெறுத்து ஒதுக்கிய அத்தனையும் எழுகிறது
என்னை கோமாளி என்பீர்கள்
குறையுடையோன் என்பீர்கள்
அறிவிலி என்பீர்கள்
அழகிலி என்பீர்கள்
அறமிலி என்பீர்கள்
ஏற்கிறேன் அனைத்தையும்
எழுகிறேன் என் துயருடன்
ஆற்றாத அழல் என ஒன்று எழும் ஒவ்வொரு முறையும்
வலுவிலியின் வாய் வழி எழுகிறது அவ்வழல் எனக் கொள்க
இனி ஒவ்வொரு கருவறையிலும் நுழையும் விந்தில் உட்செல்வது வலுவின்மையின் ஓலமே
சோம்பலின் ஒப்பாரியே
செயலின்மையின் அசைவே
அத்தனைக்கு முன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பிருந்தது
ஈரத்துடன் எடுத்தென்னை அணைத்திருந்தால்
உள்ளே வெறுப்பின்றி ஏனென்று என்னை நோக்கி ஒரு வார்த்தை கேட்டிருந்தால்
இருந்திருப்பேனே
அடைந்திருப்பேனே
அளித்திருப்பேனே
ஒன்றும் அற்றவன்
ஒன்றும் அற்றவன்
ஒன்றும் அற்றவன்
உறவென ஒரு உயிரை சம்பாதிக்கவில்லை
புகழென ஒரு வார்த்தை சேரவில்லை
சுகமென ஏதும் கண்டதில்லை
ஏளனம் ஏளனம் எங்கு சுற்றினாலும்
ஏளனம் ஏளனம்
எனக்கு மட்டும் எதுவும் தரப்படவில்லையா
ஒரு நெஞ்சும் துடிக்கவில்லையா
நான் யாரிடம் முறையிட
எதை வேண்ட
என்ன செய்ய
கிடைக்காது
எப்பதிலும் எனக்கு கிடைக்காது
வெற்றியின் முன் தோல்வியின் பாவனை செய்பவனையே கச்சை திறந்து முலை சப்ப அனுமதிக்கும் பெரு நியதி
நான் தோற்றவன்
முற்றாய் நிராகரிக்கப்பட்டவன்
முடிவு நோக்கி சென்று கொண்டிருப்பவன்
இன்னொரு மாற்றமென இறப்பை மட்டுமே காத்திருப்பவன்
என்னை நோக்கி எக்கண்ணும் திறக்கப் போவதில்லை
என்னை நோக்கி எச்சொல்லும் எழப் போவதில்லை
இருந்தும் கெஞ்சுகிறேன் புலம்புகிறேன்
புகலிடம் கேட்கிறேன்
புரிந்து கொள் என்கிறேன்
உலகோரே
உலகு நீங்கி மற்றிடம் உறைவோரே
கேட்கிறதா என் புலம்பல்
உணர முடிகிறதா என் வலியை
வலிக்கு காரணம் கேட்க மட்டுமே உங்களால் முடியும்
காரணமின்மையே என் வலி
உன் மொழியை எனக்குக் கற்றுக் கொடு
எதைச் சொன்னால் உன் முகம் மலர்கிறது
எதற்கு உன் முகம் சுருங்குகிறது என நான் கவனித்துக் கொள்கிறேன்
உனக்கு பிடித்த சொல்லையே பேசுகிறேன்
நீ சொல்வதை எல்லாம் செய்கிறேன்
என்னை போலியாகவேனும் திட்டு
பேச்சுக்கென்றேனும் பாராட்டு
நகைப்புடனாவது கண்ணீர் விடு
வெறுப்புடனாவது அணைத்துக் கொள்
யாருமில்லாதவன்
ஏதுமில்லாதவன்
இத்தனைக்குப் பிறகும் இளகாதது எது
அது என் அறிவின்மை
உண்மை புறமுதுகு காட்டும் என் அச்சம்
விட முடியவில்லை
இருக்கட்டும்
இருள் என்கிறீர்களா
இருக்கட்டும் அவ்விருள் என்னுடன்
எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற பிறகு எஞ்சியதை எடுத்துச் சூடி யாருமற்ற பேரரங்கில் அரங்கேற்றுகிறேன் என் கூத்தை
சிரிக்கிறேன் அழுகிறேன் சிந்திக்கிறேன் சிலாகிக்கிறேன் சிறுத்துப் போகிறேன்
முழு மூச்சாய் நடிக்கும் என்னை  வெறுமையுடன் பார்த்து நிற்கிறது முகங்கள் தொலைந்த மேடை

Sunday 4 December 2016

அன்னா கரீனினா - வாசிப்பு

அசோகமித்திரனின் தண்ணீர்,கரைந்த நிழல்கள் மற்றும் இன்று ஆகிய படைப்புகளை படித்த போது ஒரு எண்ணம் எழுந்தது. அவர் தொடர்ச்சியாக தன் படைப்புகளில் இடைவெளியை "பெருக்கிக்" கொண்டே செல்கிறார் என. தண்ணீர் ஒரு தெருவின் தண்ணீர் பிரச்சினையையும் அதன் வழியாக ஈரம் குறைந்து போன ஒரு வாழ்க்கையையும் சொல்லும். இருந்தும் அக்கதை ஜமுனாவை சுற்றி தான் நடக்கும். கரைந்த நிழல்கள் ஒரு படம் கை விடப்படுகிறது என்பதை ஒரு மையம் போல வைத்துக் கொண்டு அடையாளமற்ற பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை சுற்றி பயணிக்கும். இன்று நாவலை இன்று வரை ஒரு நாவலென்றே ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவிற்கு அது எந்த மையமும் இல்லாமல் சுழன்று செல்லும். அதுபோலவே டால்ஸ்டாயிடமும் அவர் படைப்புகளின் கால வரிசையைக் கொண்டு ஒரு "பரிணாம" வளர்ச்சியை காண முடிகிறது. அவர் சாயலை பிரதிபலிக்கும் போரும் வாழ்வும் நாவலின் பீயர் அன்னா கரீனினாவின் லெவின் புத்துயிர்ப்பு நாவலின் நெஹ்லூதவ் ஆகியோரிடம் அதனை காண முடிகிறது. பீயரை ஒரு கள்ளமற்ற பெருங்கோபம் கொண்ட மனிதனாக எளிதில் மனமிரங்கி விடுபவனாக சித்தரித்திருப்பார். லெவின் கறாரான பண்ணையார் லௌகீகன் அதே நேரம் அந்த வாழ்க்கையில் இருந்தே தன் மீட்சியை நோக்கிச் செல்பவன். ஆனால் நெஹ்லூதவ் முழுமையாக தன்னை சீரழித்துக் கொண்டவன். அதிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரு கடுமையான பயணத்தை மேற்கொள்பவன்.

பேராசிரியர் நா.தர்மராஜன் மொழிபெயர்ப்பில் பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கும் டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலை வாசித்தேன். ஒழுக்க மதிப்பீடுகள் காலத்துக்கு காலம் மாறுபடுபவை. இந்த நாவலின் சுருக்கமான பதிப்பு 1947-ல் வெளிவந்த போது தமிழறிஞர் இரா.தேசிகன் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். மேலும் எஸ்.நாகராஜன் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையும் நாவலின் முன் இணைப்பாக இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. பல வருட கால இடைவெளிகளுக்கு இடையே எழுதப்பட்டுள்ள இந்த இரு கட்டுரைகளுமே அன்னா கரீனினாவை ஒழுக்கத்தை முன்னிறுத்தும் ஒரு நாவலாகவே பார்க்கின்றன. ஒரு புறம் வழி தவறிய அன்னா-விரான்ஸ்கி. மறுபுறம் ஒழுக்கத்துடன் வாழும் லெவின்-கிட்டி. ஒழுக்கம் தவறிய ஒரு பெண்ணை தூற்றாமல் டால்ஸ்டாய் கருணையுடன் அணுகி இருக்கிறார் என்கிற ரீதியிலேயே இந்த நாவல் நம் சூழலில் அணுகப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. ஒரு எளிமையான ஒழுக்க விதியை முன் வைக்க எழுநூறு பக்கங்களை கடந்து விரியும் ஒரு நாவல் எதற்கு?

மாறியிருக்கும் சூழலில் இந்நாவலின் பொறுத்தப்பாடுகள்  வேறு மாதிரியானவை என்றே எண்ணத் தோன்றுகிறது. சகோதரன் மனைவி டாலியுடன் சகோதரன் ஆப்லான்ஸ்கிக்கு ஏற்பட்ட ஒரு பிணக்கை சரி செய்தவற்காக பீட்டர்ஸ்பர்கில் இருந்து மாஸ்கோ வருகிறாள் அன்னா. ஒன்பது வயது மகனுக்கு தாய் அன்னா. டாலியின் சகோதரி கிட்டி யாரைமணம் புரிவது என்ற குழப்பத்தில் இருக்கிறாள். இள வயதில் இருந்து தன்னுடன் பழகிய லெவின் அல்லது ராணுவ அதிகாரி விரான்ஸ்கி என அவள் முன் இரு வாய்ப்புகள் உள்ளன. அவள் லெவினை மறுதலிக்கிறாள். விரான்ஸ்கியை தேர்ந்தெடுக்கலாம் எனும் எண்ணி இருக்கும் போது அன்னாவால் அவன்  ஈர்க்கப்பட்டு விடுகிறான். அன்னா விரான்ஸ்கியால் தனக்குப் பிறந்த பெண் குழந்தையுடன் அவள் கணவன் கரீனினை விட்டுப் பிரிகிறாள். காதல் வண்ணமிழக்கும் போது எதார்த்தம் வதைக்க அவள் இறந்து விடுகிறாள். லெவின் தன் ஆன்மீக மீட்சியை நோக்கிப் பயணிக்கும் அதே நேர‌ம் ஒரு மகிழ்ச்சியும் பொறுப்பும் உள்ள கணவனாகவும் தன் வாழ்க்கையைத் தொடர்கிறான் என்பதைச் சொல்லி நாவல் முடிகிறது. ஆனால் இது அன்னாவின் சீரழிவைச் சொல்லும் நாவலென என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

டால்ஸ்டாயிடம் என் வாசிப்பில் நான் காணும் ஒரு அம்சம் அவருடைய புனைவுகளில் மிக முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்திவிடும் மாற்றங்களை சுருக்கமாக சொல்லிவிட்டு கடந்து விடுவார். உதாரணமாக மாஸ்லவாவை மீட்டுக் கொண்டு வர நெஹ்லூதவ் பாடுபடுவதாகவே புத்துயிர்ப்பின் கதையோட்டம் இருக்கும். ஆனால் மாஸ்லவாவின் வாழ்வின் மோசமான நாட்களை ஒரே அத்தியாயத்தில் மிக விரைவாகச் சொல்லி கடந்து விடுவார். அது போலவே விரான்ஸ்கி அன்னாவால் கவரப்படும் இடத்தில் வெளிப்படும் அடர்த்தியான மௌனம். பீட்டர்ஸ்பர்கில் இருந்து மஸ்கோவிற்கு விரான்ஸ்கியின் அம்மாவுடன் பேசியபடியே ரயில் நிலையம் வருகிறாள் அன்னா. கதாப்பாத்திரங்கள் குறித்து சொல்லும் ஒரு சில வார்த்தைகளின் வழியாகவே அவர்களைப் பற்றிய ஒரு மனச்சித்திரத்தை டால்ஸ்டாய் உருவாக்கி விடுகிறார். அன்னா பேசும் சில வார்த்தைகளே அவளுடைய மேன்மையான குணங்களை சொல்லி விடுகின்றன.

ரயில் நிலையத்தில் "என்னிடம் இருந்த எல்லா கதைகளையும் சொல்லி விட்டேன்" என விரான்ஸ்கியின் அம்மாவிடம் சொல்வதும் "உங்கள் அம்மா அவர் மகனைப் பற்றியும் நான் என் மகனைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தோம்" எனச் சொல்லும் இடங்களுமே பிறரிடமிருந்து அவளை வேறுபடுத்துகின்றன. அவள் டாலியை சமாதானப்படுத்துவதிலும் அவளுடைய மேன்மைகளே வெளிப்படுகின்றன. கிட்டியை முதன் முதலில் அன்னா சந்திக்கும் இடத்தை மிக நுண்மையாக சித்தரித்திருப்பார் டால்ஸ்டாய். குழந்தைகள் அவளை சூழ்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். மனதளவில் அவளை அன்னை அன்னை என நினைவுறுத்திக் கொண்டே இருக்கின்றன குழந்தைகள். விரான்ஸ்கியைப் பற்றி பேச்சு திரும்பும் போது இயல்பாகவே ஒரு சம்பவத்தை தனக்கே உரியதென அன்னா எண்ணிக் கொள்கிறாள். கரீனின் உடைய தோற்றம் கிட்டிக்கு நினைவுக்கு வரும். குழந்தைகளை நோக்கி வரும் அன்னா தடுமாறி கீழே விழுந்து விடுவாள். இந்த ஒரு காட்சியில் அவள் உணரும் தடுமாற்றமே அவளை ரயிலில் விழ வைக்கிறது. அது அப்படியே முடியும் என்பது தீர்மானிக்கப்பட்டது போல.

விரான்ஸ்கியை நடன அரங்கில் அன்னா கவர்வதை கிட்டி தான் பார்த்து நிற்கிறாள். ஏமாற்றப்பட்டவளாக கையறு நிலையில் எதுவுமே ஆற்ற முடியாதவளாய் தனித்து நின்று நோயுருபவளை மீட்பதற்காக டால்ஸ்டாய் அவளை ஜெர்மனிக்கு அனுப்பி விடுகிறார். கிட்டதட்ட அதே மனநிலையில் இருக்கும் லெவினை அவன் கிராமத்திற்கு. லெவினின் அறிமுகமும் போரும் வாழ்வும் நாவலில் பீயரின் அறிமுகம் போலவே இருக்கிறது. மூடிய அறையில் அனுமதி இன்றி கதவைத் திறந்து கொண்டு நுழைகிறான். தன் அண்ணனுடைய நிலைக்காக வருந்துகிறான். ஆப்லான்ஸ்கியுடன் வேட்டைக்குச் செல்கிறான். கடுமையான உழைப்பின் வழியாக தன்னை மறைக்க முயல்கிறான். அன்னா மீண்டும் பீட்டர்ஸ்பர்கிற்கு திரும்பும் போது பனிப்புயல் நடுவே விரான்ஸ்கியை சந்திக்கிறாள். மனதில் எழும் சஞ்சலங்களுக்கு பனியை டால்ஸ்டாய் படிமம் ஆக்குவதை புத்துயிர்ப்பு நாவலிலும் காண முடியும். ஒருவேளை பனியை இரக்கமற்ற பேரழகாக எண்ணலாம். நெஹ்லூதவ் மாஸ்லவாவை நோக்கி நகரும் அந்த சூழலிலும் பனி ஆறு உருகுவதே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அன்னா விரான்ஸ்கியை நோக்கி உந்தப்பட்டு அவனால் கருத்தரிக்கிறாள்.

லெவின் கிட்டியின் வாழ்வில் ஆன்மீக ரீதியாக மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் லெவின் கிட்டியை இழந்ததை மறப்பதற்காகவே அவ்வளவு போராடுகிறான் என்று கிண்டல் செய்வதைப் போலவே மீண்டும் கிட்டியை சந்திக்கும் போது அவனுக்கு ஒவ்வொன்றும் தித்திப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதே நேரம் கிட்டி விரான்ஸ்கியை பொருட்படுத்துவதில்லை. கிட்டியை லெவின் மீண்டும் சந்திக்கும் கணங்கள் அவளிடம் எழுத்தின் மூலம் காதலை வெளிப்படுத்துவது தூங்காத இரவு கடந்து அவளை சந்திக்கச் செல்வது என கவித்துவ உச்சங்களை தொட்டிருக்கும் அத்தியாயங்களைக் கடந்து அன்னாவை வெறுக்கும் கரீனின் அவள் குழந்தை பேற்றின் போது அவள் முன் கலங்கி நிற்கும் அத்தியாயம் என இருவேறு தளங்களில் பயணிக்கும் நாவல்.

கரீனினை விவாகரத்து செய்வதற்குத் தயங்கியபடியே விரான்ஸ்கி மூலம் தனக்குப் பிறந்த மகளோடு  அவரைப் பிரிகிறாள் அன்னா. விரான்ஸ்கியும் தனக்கு கிடைக்கவிருந்த உயர்பதவிகளைத் துறந்து அன்னாவோடு பீட்டர்ஸ்பர்கை விட்டு வெளியேறுகிறான். லௌகீகத்தின் அத்தனை குளறுபடிகளோடும் அழகோடும் கிட்டியை மணந்து கொண்டு லெவின் வாழ்க்கையைத் தொடர்கிறான். பீட்டர்ஸ்பர்கில் அவமானப்படுத்தப்பட்டவளாக அன்னா விரான்ஸ்கியுடன் கிராமத்துக்கு திரும்புகிறாள்.

கிட்டியின் சகோதரி டாலி கிட்டியின் பேறு காலத்தில் அவளுடன் தங்கி இருந்த பிறகு  அன்னாவை கிராமத்தில் சந்திக்க வரும் இடம் நுண்மையானது. அன்னாவையும் பகட்டாக அங்கு அவள் வாழும் வாழ்வையும் டாலியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அன்னாவை இழந்து விட்டதாக அவள் உணர்கிறாள். விரான்ஸ்கியைத் தவிர தனக்கு யாரும் இல்லை என்ற நிதர்சனத்தை சுற்றிச் சுற்றி எதிர் கொள்கிறாள் அன்னா. எந்நேரமும் அவனை தன்னிடம் ஈர்த்து வைக்க முயல்கிறாள்.

ஒரு புறம் அன்னா மறுபுறம் லெவின் என்றே கதை பின்னப்பட்டிருக்கிறது. அன்னா லெவினை சந்திக்கும் இடத்தில் அவளை சந்திப்பது டால்ஸ்டாய் தான். என்னைப் பொறுத்தவரை நாவலின் உச்ச தருணம் அது தான். அதுவரை லெவின் மானுட உணர்வுகள் மிகுந்தவனாக நேர்மையானவனாக உருவகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்திருப்பான். அன்னா சந்திக்கும் கணத்தில் அவன் மனம் சற்றே சறுக்கும். அதனை நேரடியாக கிட்டியிடம் ஒத்துக் கொள்வதன் வழியாக மட்டுமே அவன் மீள்கிறான். கரீனினுக்கு அன்னா எவ்வளவு தேவை என்பது அன்னாவை பிரிந்த பிறகு அவருக்கு ஏற்பட்ட நிலையை ஆப்லான்ஸ்கி காண்பதில் இருந்தே சொல்லப்பட்டு விடுகிறது.

அன்னாவின் மனக்குழப்பங்கள் உச்சத்தைத் தொட அவள் டாலியை சந்திக்க வருகிறாள். ஒருவேளை அந்த சத்திப்பின் போது கிட்டி அங்கு இல்லாமல் இருந்திருந்தால் அவள் ஆணவம் சற்றுத் தளர்ந்திருக்கலாம். கிட்டியும் அன்னாவும் சந்திப்பதில் தொடங்கி அவர்கள் சந்திப்பிலேயே முடிகிறது அன்னா கரீனினா. நிறைவானவளாக கிட்டியை கண்ட பிறகு அன்னா தெருவில் காணும் ஒவ்வொன்றையும் வெறுப்புடன் காண்பது நடுக்குறச் செய்கிறது. இரவில் பனிப்புயலில் ரயில் நிலையத்தில் விரான்ஸ்கியை காணும் அன்னா அசுத்தமான ஐஸ்கிரீமை உச்சி வெயிலில் வாங்கித் திண்ணும் சிறுவர்களை வெறுப்புடன் பார்கிறாள். அவள் மனதில் சுழன்றடித்த அந்தரங்கமான குளிர் வெட்ட வெளியில் அசுத்தமாகி விட்டதாக அவள் எண்ணுகிறாளா?

ரயில் சக்கரங்களுக்கு நடுவே பாய்ந்து உயிரை விடுகிறாள் அன்னா. அதன்பிறகு லெவின் தன் ஆன்மீக மீட்சியை அடைவதுடனும் விரான்ஸ்கி ராணுவ சேவைக்கு திரும்புவதுடனும் முடிகிறது  அன்னா கரீனினா.

டால்ஸ்டாய் தன்னுடைய பாத்திரங்களை நகரங்களுக்கு வெளியே அனுப்பிக் கொண்டே இருக்கிறார். கிட்டி நகரத்தை தாண்டிச் செல்வதன் வழியாகவே வாழ்வில் ஏற்பட்ட தொய்வை போக்கிக் கொள்கிறாள். அன்னாவும் விரான்ஸ்கியிடம் கிராமத்திற்கு திரும்புவதையே வற்புறுத்துகிறாள். லெவினாலும் மாஸ்கோவை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அன்னாவின் கனவில் கையில் சுத்தியலுடன் ஒரு கிராமத்து விவசாயி வந்த வண்ணமே இருக்கிறாள்.

லெவினை அமைதியிழக்கச் செய்யும் வெஸ்லோவ்ஸ்கி காதலை வெளிப்படுத்தத் தயங்கி  தங்கள் மனதை மறைத்துக் கொள்ளும் கோஸ்னிஷேவும் வாரென்காவும் என சிதறித் தெறிக்கும் பாத்திரங்கள். ஆனால் போரும் வாழ்வும் போல ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியே மூச்சடைக்க வைக்காமல் இந்நாவல் ஒரு கதைத் தொடர்ச்சியைக் கொண்டுள்ளது.

புத்தகத்தின் இடையிடையே 1935- ஆம் ஆண்டு வெளியான அன்னா கரீனினா திரைப்படத்தின் ஸ்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது அநாவசியம் என்றே தோன்றுகிறது. கற்பனையில் உருவாகி வரும் அன்னா கரீனின் கிட்டி விரான்ஸ்கி என்ற உருவங்களைத் தொந்தரவு செய்கின்றன அந்த ஸ்டில்கள். அதனைத் தவிர்த்து விட்டுப் பார்க்கும் போது மிக உயிர்ப்பான மொழிபெயர்ப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது.