Saturday 10 December 2016

முகங்கள் தொலைந்த மேடை

எனக்கு முன் எத்தனையோ பேர் சொன்னது தான்
ஏளனம் செய்வதற்கு ஏற்றது தான்
இயலாமையின் இயல்பான உச்சம் தான்
இருந்தால் என்ன
எத்தகைய கயமை நிறைந்த எண்ணம் எனினும் கண்ணீர் தூயதுதான்
என் விழிகள் வழிவதே இல்லை
இது தான் என் புலம்பல்
என் குரல் உடைவதேயில்லை
இது தான் என் புகார்
எழுந்த செல்ல நினைக்காதீர்கள்
எத்தனையோ பேர் இதற்கு முன் சென்று விட்டனர்
கெஞ்சுகிறேன்
பச்சையாய் சிரிக்கிறேன்
பார்வை எதிர்ப்படுகையில் தலை தாழ்த்துகிறேன்
உங்கள் கால்களை நக்குகிறேன்
நக்கிய நாக்கினால் உங்கள் கரங்களை முத்துகிறேன்
சென்று விடாதீர் சென்று விடாதீர் என அரற்றுகிறேன்
தாளாத துக்கம் நெஞ்சை அடைக்க காரணம் கேட்கிறீர்களா
காரணம் தெரிந்த பின்பு துக்கம் என எஞ்சுவது உண்டா தோழரே
என்ன தான் என் சிக்கல்
உணவுக்குப் பஞ்சமில்லை
உறவுகளும் கொஞ்சமில்லை
உயிர் விடவும் எண்ணமில்லை
உடல் வலுவும் குறையவில்லை
இதற்கு மேல் எண்ண வேண்டும் என்கிறீர்களா
இது தான் என் சிக்கலே
ஏதோவொன்று நிரம்பவில்லை
ஆட்டம் காணும் போதெல்லாம் தளும்புகிறது
தொட்டறியக் கூடிய துயர் என சில உண்டு
இறப்பு இழப்பு தோல்வி என
இன்மையில் எழும் என் துயரை
இரவில் நான் உணரும் நடுக்கத்தை
சொல்ல முடியவில்லை
சொல்லவே முடியவில்லை
நரம்புகள் அத்தனையும் கொதித்து நொதிக்கிறது
நஞ்சு
வெறுப்பெனும் வெகுளியெனும் பயமெனும் தாழ்வெனும் நஞ்சு
நஞ்சு
நகக்கண்ணளவு நக்கினாலும் நசுக்கிவிடும் நஞ்சு
கடுங்கசப்பு கண்ணறியா இருப்பு
பெருங்காட்டை அழிக்கும் துளி
பேரழகை துணிக்கும் எரி
என்னுள் ஏறுகிறது
வரலாறு முழுதும் சாக்கடையில் அமிழ்ந்த கொடுநஞ்சு
எழுக
நஞ்செழுக
என்னுள் எழுக
என்னை உண்டெழுக
அறிவற்றவனின்
அழகற்றவனின்
ஆற்றலற்றவனின்
கண்ணீரும் அற்றவனின்
துயர் எழுக
எழுந்து மூடுக இவ்வுலகை
இருளட்டும் அனைத்தும்
இறக்கட்டும் அத்தனையும்
அன்னை முலைகளில் ஊறட்டும் என் வெகுளி
ஆறுகளில் கலக்கட்டும் என் கனவுகள்
அன்னத்தை அணையட்டும் என் எச்சில்
எங்கும் நிறையட்டும் என் நஞ்சு
சொல்லென மாறாத்துயரை சொல்லாதொழிந்த உலகே நீ அழிக
இல்லென ஒன்றில்லாதவன் எழுக
இல்லங்கள் இழிக
சோம்பலென தன்னிரக்கமென தாழ்வுணர்ச்சியென எண்ணி நகைத்து உமிழ்ந்து வெறுத்து ஒதுக்கிய அத்தனையும் எழுகிறது
என்னை கோமாளி என்பீர்கள்
குறையுடையோன் என்பீர்கள்
அறிவிலி என்பீர்கள்
அழகிலி என்பீர்கள்
அறமிலி என்பீர்கள்
ஏற்கிறேன் அனைத்தையும்
எழுகிறேன் என் துயருடன்
ஆற்றாத அழல் என ஒன்று எழும் ஒவ்வொரு முறையும்
வலுவிலியின் வாய் வழி எழுகிறது அவ்வழல் எனக் கொள்க
இனி ஒவ்வொரு கருவறையிலும் நுழையும் விந்தில் உட்செல்வது வலுவின்மையின் ஓலமே
சோம்பலின் ஒப்பாரியே
செயலின்மையின் அசைவே
அத்தனைக்கு முன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பிருந்தது
ஈரத்துடன் எடுத்தென்னை அணைத்திருந்தால்
உள்ளே வெறுப்பின்றி ஏனென்று என்னை நோக்கி ஒரு வார்த்தை கேட்டிருந்தால்
இருந்திருப்பேனே
அடைந்திருப்பேனே
அளித்திருப்பேனே
ஒன்றும் அற்றவன்
ஒன்றும் அற்றவன்
ஒன்றும் அற்றவன்
உறவென ஒரு உயிரை சம்பாதிக்கவில்லை
புகழென ஒரு வார்த்தை சேரவில்லை
சுகமென ஏதும் கண்டதில்லை
ஏளனம் ஏளனம் எங்கு சுற்றினாலும்
ஏளனம் ஏளனம்
எனக்கு மட்டும் எதுவும் தரப்படவில்லையா
ஒரு நெஞ்சும் துடிக்கவில்லையா
நான் யாரிடம் முறையிட
எதை வேண்ட
என்ன செய்ய
கிடைக்காது
எப்பதிலும் எனக்கு கிடைக்காது
வெற்றியின் முன் தோல்வியின் பாவனை செய்பவனையே கச்சை திறந்து முலை சப்ப அனுமதிக்கும் பெரு நியதி
நான் தோற்றவன்
முற்றாய் நிராகரிக்கப்பட்டவன்
முடிவு நோக்கி சென்று கொண்டிருப்பவன்
இன்னொரு மாற்றமென இறப்பை மட்டுமே காத்திருப்பவன்
என்னை நோக்கி எக்கண்ணும் திறக்கப் போவதில்லை
என்னை நோக்கி எச்சொல்லும் எழப் போவதில்லை
இருந்தும் கெஞ்சுகிறேன் புலம்புகிறேன்
புகலிடம் கேட்கிறேன்
புரிந்து கொள் என்கிறேன்
உலகோரே
உலகு நீங்கி மற்றிடம் உறைவோரே
கேட்கிறதா என் புலம்பல்
உணர முடிகிறதா என் வலியை
வலிக்கு காரணம் கேட்க மட்டுமே உங்களால் முடியும்
காரணமின்மையே என் வலி
உன் மொழியை எனக்குக் கற்றுக் கொடு
எதைச் சொன்னால் உன் முகம் மலர்கிறது
எதற்கு உன் முகம் சுருங்குகிறது என நான் கவனித்துக் கொள்கிறேன்
உனக்கு பிடித்த சொல்லையே பேசுகிறேன்
நீ சொல்வதை எல்லாம் செய்கிறேன்
என்னை போலியாகவேனும் திட்டு
பேச்சுக்கென்றேனும் பாராட்டு
நகைப்புடனாவது கண்ணீர் விடு
வெறுப்புடனாவது அணைத்துக் கொள்
யாருமில்லாதவன்
ஏதுமில்லாதவன்
இத்தனைக்குப் பிறகும் இளகாதது எது
அது என் அறிவின்மை
உண்மை புறமுதுகு காட்டும் என் அச்சம்
விட முடியவில்லை
இருக்கட்டும்
இருள் என்கிறீர்களா
இருக்கட்டும் அவ்விருள் என்னுடன்
எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற பிறகு எஞ்சியதை எடுத்துச் சூடி யாருமற்ற பேரரங்கில் அரங்கேற்றுகிறேன் என் கூத்தை
சிரிக்கிறேன் அழுகிறேன் சிந்திக்கிறேன் சிலாகிக்கிறேன் சிறுத்துப் போகிறேன்
முழு மூச்சாய் நடிக்கும் என்னை  வெறுமையுடன் பார்த்து நிற்கிறது முகங்கள் தொலைந்த மேடை

No comments:

Post a Comment