Friday 24 February 2017

கோவில் பிரசாதமும் கொழுக்கட்டையும்

மஹா சிவ ராத்திரிக்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது சென்ற வாரம் தான் எனக்குத் தெரிய வந்தது. மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி அது. அதுவு‌ம் வார இறுதியில் விடுமுறை கூடுதல் திருப்தியைத் தரும் தானே. ஏனெனில் வெளியூரில் இருந்து வந்து வேலை பார்க்கும் பலர் சனிக்கிழமை விடுப்பெடுப்பார்கள். குறைந்த மனிதர்கள் மட்டுமே இருக்கும் அலுவலகம் எப்படியோ அன்று விடுப்பெடுக்காதவர்களிடம் ஒரு அணுக்கத்தைக் கொண்டு வந்து விடுகிறது. என் நெருங்கிய நண்பனான ராஜ்பிரதாப் என்னுடன் நண்பனானதும் அது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான். 2008-ஆம் ஆண்டு நாங்கள் கல்லூரியில் சேர்ந்த சில மாதங்களில் கடுமையான மழை. கிட்டத்தட்ட கல்லூரிக்கு கால வரையறையன்றி விடுப்பளிக்கப்பட்டது. தஞசை திருவாரூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு. ஆகவே என் ஊருக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டிருந்தது. பிரதாப் நான் படியிறங்கிச் செல்லும் போது கண்ணில் படும் அறையில் தங்கி இருந்தான். அவன் அப்போது வைத்திருந்த அலைபேசி Nokia 2626. விலை குறைந்தவற்றில் இணைய வசதியும் FM கேட்கும் வசதியும் உடைய அலைபேசி அது. எந்நேரமும் காதில் ஏர்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டபடி இருப்பான். பல விடுதி அறைகள் காலியாக இருக்கும் அந்நாட்களில் பிரதாப் மிக நெருங்கிய நண்பனாகிவிட்டான்.

என் நண்பர்களில் அதிக சிடுசிடுப்பு கொண்ட ரொம்ப நல்ல பையன் பிரதாப். அது போன்ற நட்புக்காக அல்லது பரிமாறுதல்களுக்காக ஆட்கள் அதிகமில்லாத சனிக்கிழமை அலுவலகம் எனக்குப் பிடித்தமானது. நாலு நாலரைக்கெல்லாம் விழிப்பு தட்டி இன்னும் பத்து நிமிடத்தில் எழுந்து விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் கண் மூடி குற்றவுணர்வுடன் வழக்கம் போல் ஆறரைக்கு எழுந்தேன். ஆறு தூர்வாரும் பணி நடைபெற்றதால் மதியம் வரை அதை வேடிக்கைப் பார்ப்பதிலேயே நகர்ந்து விட்டது. அதன் பிறகு மதிய உணவு. அம்மாவுக்கு கோவிலுக்கு புறப்படுவதற்கு சில உதவிகள். ஆனால் என்னையும் அம்மா அழைப்பார் என்றொரு எரிச்சல் ஓரத்தில் இருந்தபடியே இருந்தது. அழைக்கவும் செய்தார்.

"கோவிலுக்குப் போயிட்டு வந்துடுவுமா" என்றார்.

அண்ணனும் அப்பாவும் கிளம்பமாட்டார்கள். நானும் முரண்டினால் அம்மாவிடமிருந்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் குத்தல் பேச்சுகளை வாங்க வேண்டி வரும். ஆகவே முடிந்த அளவுக்கு முகத்தை மலர்வுடன் வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

பேச்சோடு பேச்சாக "நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் இரும்மா. மொபைல எடுத்துக்க. முடிஞ்சதும் கால் பண்ணு. நான் வந்து கூட்டிட்டு வர்றேன்" என முடிந்தவரை மழுப்பலாக அங்கு இருக்கமாட்டேன் என்பதை தெரிவித்தேன். அம்மாவும் அந்நேரம் அவ்வளவு "உஷாராக" இல்லாததால் சரி என்று சொல்லி விட்டார். நயனவரதேஸ்வரர் என்ற அறுநூறு ஆண்டு கால பழமை வாய்ந்த ஒரு சிவன் கோவில் தக்களூர் நுழையும் வழியில் கொரடாச்சேரி கமலாபுரம் சாலையில் உள்ளது. நாங்கள் அங்கு செல்லவில்லை. விடையுரம் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றோம். பக்கம் தான். அரை கிலோமீட்டர். இதுவு‌ம் பழைய கோவில் தான். ஆனால் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு பாழடைந்து கிடந்தது. எங்கள் ஊரின் ஆஸ்தான மருத்துவரான கிருஷ்ணமூர்த்தி டாக்டர் அந்த கோவிலை எடுத்துக் கட்டினார். கோவிலுடைய பழமை முழுதாக காணமற்போனது வருத்தத்துக்கு உரியதே எனினும் எடுத்து செய்யாமல் இருந்திருந்தால் அந்த கோவிலே இல்லாமல் ஆகியிருக்கும்.

கோவிலைச் சுற்றி சிமெண்ட் தளம் போடப்பட்டிருக்கும். கோவிலில் நுழையும் போது பெண்கள் சுற்றி அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தனர். பெண்கள் கூடியிருக்கும் இடம் பெரும்பாலும் வண்ணங்களால் நிறைந்திருக்கிறது. அது போல சம்மணம் போட்டு ஆண்களால் அப்படி இயல்பாக அமர முடியாது. மூடிய அறையினுள் சீட்டு விளையாடும் போது நாங்கள் அப்படி அமர்வோம் அல்லது நண்பர்கள் மது அருந்தும் போது அப்படி அமர்வார்கள். சற்று நேரத்திற்குள்ளேயே அப்படியே படுத்துவிடுவார்கள். அந்த வண்ணமயமான சம்மண வட்டத்தை பெண்களால் மட்டுமே உருவாக்க முடிகிறது.

அந்த மாலையின் மன மலர்விற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அளவுக்கதிகமான பிள்ளைகள். அந்த கோவிலுக்கு பின்புறம் இருக்கும் அரசுப் பள்ளியில் தான் அண்ணன் வேலை பார்க்கிறான். ஆகவே அந்தப் பள்ளியின் பயல்கள் என்னையும் "சார் சார்" என்பார்கள். சில விவரமானதுகள் "தம்பி சார்" என்றோ "சார் தம்பி" என்றோ அழைக்கும். சிறு பிள்ளைகளுக்கு சினிமா நடிகனுக்கும் கழை கூத்தாடிக்கும் பிறகு அறிமுகமாகும் முக்கியமான பிம்பம் பள்ளி ஆசிரியர். ஆகவே அவர்கள் அந்த ஆசிரியனை வெறும் முகத்துடன் மட்டுமின்றி உடை அவன் பயன்படுத்தும் பொருட்களுடன் இணைத்தே நினைவில் வைத்திருப்பார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளித் தலைமையாசிரியராக இருந்த சுப்ரமணியம் வெள்ளைச் சட்டை போட்டு வந்தால் சாந்தமாக இருப்பார் என்றும் சந்தன நிற சட்டை அணிந்திருந்தால் அடி பின்னி எடுத்து விடுவார் என்றும் ஒரு பிரபலமான நம்பிக்கை எங்கள் பள்ளியில் இருந்தது. அண்ணன் உடைகளை நான் அணிந்து செல்வதாலும் அவனுடைய இரு சக்கர வாகனத்தில் நானும் செல்வதாலும் அவர்கள் பெரும்பாலும் குழம்பி விடுகின்றனர். இத்தனைக்கும் எங்கள் இருவரின் முகமும் ஒட்டவே ஒட்டாது.

மகேஸ்வரனும் அவன் தங்கையும் வழக்கத்துக்கு மாறாக அன்று நல்ல உடை அணிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தனர். நாங்கள் கோவிலுக்கு போன போது மணி ஆறைத் தொட்டது. பிரதோஷம் என்பதால் நந்திக்கு அர்ச்சனை நடந்தது. பூஜைகள் தொடங்க ஏழைத் தாண்டும் என்றனர். எனக்கும் ஏனோ உடனே கிளம்ப மனமில்லை. சுற்றுப் பிரகாரத்தில் அமர்ந்து விட்டேன். அம்மா நந்தியாவட்டையும் செம்பருத்தியும் கலந்து மாலை கட்டித் தொடங்கினார். மஞ்சள் அரளியோடு சிகப்பு அரளி கலந்த மாலையை மேலு‌ம் சிலர் கட்டினர். குரு சந்நிதிக்கு எதிரே பிள்ளைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. உச்சியில் ஒரு நட்சத்திரம். இருட்டியிருந்தாலும் வானத்தில் நீலம் எஞ்சி இருந்தது. நான் அமர்ந்திருந்த தளத்தில் சூடு குறைந்திருக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து கூச்சலிட்டு ஓடுவது போலத்தான் தெரிந்தது. ஆற்றுச் சுழியை நோக்கி நகர்ந்தால் நாமும் சுழல்வோமே அது போல அந்த குரு சந்நிதிக்கு எதிரே ஒரு சுழல் உருவாகியது போல சுற்றி இருந்த பிள்ளைகள் எல்லாம் அங்கே ஓடி குதித்துக் கொண்டிருந்தனர். நெருங்க நெருங்க விசை கூடுவது போல தூரத்தில் நடந்து வரும் பிள்ளைகள் சுழலை நெருங்கியதும் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். பெரும்பாலும் ஓடிப்பிடித்து தான் விளையாடினர்.ஆனால் தப்பிக்கும் போது ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளின் உடல் லாவகமாக வளைகிறது. ஒருத்தியை துரத்தி பிடிக்க முடியாததை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒருவன் கூச்சலிடத் தொடங்கினான். ஓடியவள் திரும்பி வந்து சமாதானப்படுத்தினாள்.ஓரிடத்தில் சினிமா நடந்தது. ஒரு பெண்பிள்ளையும் இரண்டு பசங்களும் சேர்ந்து அவர்கள் உயரத்தில் பாதி இருக்கும் சிவப்பு டிஷர்ட் அணிந்த சிறுவனைத் தாக்குகிறார்கள். அவனும் பயங்கரமான முக பாவனைகளுடன் துள்ளி விழுகிறான். பின்னர் "சோம்பியாக" மாறி எல்லோரையும் கடிக்க வருகிறான். மீண்டும் அடித்து வீழ்த்தப்படுகிறான். அந்த பெண் சுருண்டு விழுந்து கிடக்கும் அவன் காலை எத்துகிறாள். மற்றொருவன் அவன் தலையை உதைக்கிறான். அவன் கால் மண் கதாநாயகனின் எண்ணெய் அப்பிய தலையில் படுகிறது. இன்னொருவன் அவனை இழுத்து ஒதுக்கிப் போடுகிறான். மீண்டும் சோம்பி எழுந்து விட்டது. அவர்களை விட சிறிய பிள்ளைகள் அவர்களை துரத்துகின்றன.

மற்றொரு புறம் இரு கைகளையும் விரித்து சுற்றி அதனால் மயங்கி மயங்கி விழுந்தனர் மேலு‌ம் சிலர். ஒரு சிகப்பு நிற நாய் பாசத்துடன் தலையை என்னை நோக்கி நீட்டியது. "நீ ஒருத்தன் தான் நைனா கம்முன்னு ஒக்காந்துக்கீர. நம்மளாண்ட வம்பேதும் வெச்சிக்க மாட்டேன்னு நெனிக்கிறேன்" என்பது போன்ற பாவனை அதற்கு. சிவாச்சாரியார்கள் ஏழெட்டு பேர் ஒரு டெம்போ டிராவலரில் இருந்து இறங்கினர். பெருமாள் கோவில் பட்டாச்சார்யார்கள் ஒல்லியாகவும் சிவாச்சாரியார்கள் குண்டாகவும் இருப்பதாக எனக்குத் தோன்றும். தமிழ் நிலத்தில் சைவம் தழைத்தோங்குகிறது போல. ஆனால் இந்த சிவாச்சாரியார்களிடம் ஒரு விலக்கம் தோன்றியது. ஏனெனில் எல்லோரும் உடல் பூசியவர்கள் என்றாலும் யாருமே கருப்பாக இல்லை.

குமார் அண்ணன் தான் எங்கள் கோவில் அர்ச்சகர். அது மட்டுமல்லாமல் இன்னும் பல கோவில்களில் அவர் ஒருவரே பூஜை செய்து வருகிறார். பிடிவாதமாக இருப்பவர். திருமணம் செய்து கொள்ளவில்லை இன்னும். சிறியதும் பெரிதுமாக எங்கள் சுற்றுவட்டாரத்தில் கோவில்கள் ஓரளவு நல்ல நிலையில் இருப்பதற்கு முழுக்காரணம் குமார் அண்ணன் தான்.

முதல் கால பூஜை ஏழு மணிக்குத் துவங்கியது. மஞ்சள் சந்தனம் பால் தேன்கலந்த பஞ்சாமிர்தம் தயிர் திருநீறு என லிங்கத்துக்கு அபிஷேகம் நடந்தது. நயனவரதேஸ்வரர் ஆலயத்தை விட சிறியதெனினும் சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் லிங்கம் பெரிது. அம்மன் சிற்பம் இக்கோவிலில் தான் கலையாக இருக்கும். பெரும்பாலும் சிறிய பிள்ளைகளை முன்னே அமர வைத்திருந்தனர். அவை சிறிது நேரத்துக்கெல்லாம் ஆர்வம் இழந்துவிட்டன. ஒரு இரண்டு வயது பொடிசு எழுந்து நடந்து நந்தியை நெருங்கிவிட்டது. நான் நந்தி மீது கால் வைத்து வழுக்கி விழுந்து விடப் போகிறது என எண்ணிய போதே அது அம்மாவின் பக்கம் திரும்பிவிட்டது. அதன் அம்மாவை அப்போது தான் கவனித்தேன். இப்பொடிசு அவர் வயிற்றில் இருக்கும் போது அவரைப் பார்த்திருக்கிறேன். சற்று கருமையாகத் தெரிவார் அப்போது. இப்போது முகம் சற்றே மாறியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அங்குள்ளவர்களை கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருந்தது. குமார் அண்ணனிடம் கூட சற்று முதுமை தெரிகிறது.

அபிஷேகம் முடிந்து அலங்காரத்துக்கென இருந்த நேரத்தில் மீண்டும் வெளியே வந்தேன். சிறுசுகள் அப்போதும் விளையாடிக் கொண்டிருந்தன. சில பொடிசுகள் உட்கார்ந்த இடத்திலேயே தூங்கின. நான்கு கால் நண்பன் வாலாட்டியபடி மீண்டும் பக்கத்தில் வந்தான். சிவன் சந்நிதி நோக்கி நேராக நின்றிருந்த கூட்டம் அம்மன் சந்நிதிக்கு அர்ச்சகர் நகர்ந்த போது கூட்டல் குறியின் கிடைக்கோடு போல வளைந்து திரும்பியது. சில பெண்களின் பார்வை மேலே விழுவதையும் நம் பார்வை அவர்கள் மேல் விழுவதையும் வழக்கம் போல் தவிர்க்க முடிவதில்லை.

யாரோ ஒருவர் என் கையில் தேங்காயும் பழமும் கொடுத்தார். அம்மாவுக்கு பரம திருப்தி. ஒரு விதத்தில் எனக்கும் தான். லிங்கத்தை இறுதியாக திரும்பிப் பார்த்த பின் வெளியேறினேன். அம்மா எனக்கும் சேர்த்து பிரசாதத்துடன் வெளியே வந்தார். செருப்பினுள் கால் நுழைத்த போது ஜில்லென்றிருந்தது. மூன்று மணி நேரம் பனியில் கிடந்ததால் வண்டியிலும் ஈரம் படிந்திருந்தது. கோவில் பிரசாதமும் கொழுக்கட்டையும் சாப்பிட்டுவிட்டு தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். தூக்கம் கண்ணைச் செருகிறது.

"ஈஸ்வரா என்றபடி படுக்க வேண்டியது தான்."

Thursday 23 February 2017

தேனுலகு - 2

சீறல் ஒலி தொடர்ந்து கேட்டது. நேரம் ஆக ஆக அவ்வொலி வலுத்தே வந்தது. முல்லை அதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு சமயம் ஒலி திடீரென நின்று போகும். இனி பயமில்லை என ஆசுவாசமடைவாள் முல்லை. மீண்டும் அச்சத்தத்தை கேட்டுவிடும் போது மனதை ஒரு பயம் கவ்விப் பிடிக்கும். காட்சிகள் மங்கலாகவேத் தெரிந்தன. அவளால் கண்களையும் திறக்க முடியவில்லை. எழுந்து ஓட நினைத்தாலும் கால்களை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு உடல் வலுவற்றுப் போயிருந்தது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் ஒரு அடி வைப்பதற்குள் உடலின் மொத்த எடையும் பாதங்களுக்கு இறங்கியது போல கால்கள் வலித்தன. சீறல் ஒலி மேலு‌ம் வலுத்திருந்தது. சேறு நொதிக்கும் ஒரு குளம் போல ஏதோ அவளுக்கு கண்ணில் பட்டது. சேறல்ல. அது தேன். தேன் என்று தெரிந்ததுமே உடலில் ஒரு இனிமையும் பரபரப்பும் எழுவதை முல்லை உணர்ந்தாள். தேன் குளத்தின் வாய் இன்னும் திறக்கவில்லை. அதனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். தேன் குளம் மெல்ல மெல்ல விரியத் தொடங்கியது. முல்லை மேலு‌ம் ஆர்வத்துடன் குனிந்து நோக்கினாள். குளம் விரிய விரிய தன்னுள்ளும் ஒரு பதற்றம் தொற்றுவதை முல்லையால் உணர முடிந்தது. தன் புறங்கையில் திடீரென ஒரு வெப்ப மாறுபாட்டை உணர்ந்தாள். சூடான எச்சில் கைகளில் வழிந்திருந்தது. திடுக்கிட்டு கண் விழித்தாள். தலையணையில் எச்சிலைத் துடைத்துவிட்டு புத்திசாலித்தனமாக தலையணையைத் திருப்பிப் போட்டாள். மீண்டும் ஏதோ யோசித்தவளாய் பக்கத்தில் குறட்டை விட்டபடி தூங்கிக் கொண்டிருந்த அப்பாவின் தலையணையை மெல்ல உருவி தன் தலையணையை அவருக்கு அண்டை கொடுத்தாள்.

கவிதா அறைக்குள் நுழைந்த போது அறையில் வெப்பம் ஏறுவதாக முல்லை உணர்ந்தாள். ஞாயிற்றுக்கிழமை கூட ஆறுமணிக்கெல்லாம் குளித்து வந்து "எழுந்திருங்க ரெண்டு பேரும்" என ஈரத்தலையை பிண்ணியபடியே எழுப்புகிறவளை முல்லையால் மன்னிக்கவே முடிந்ததில்லை.

"நான் ஏம்ப்பா உன்ன மாதிரி மொந்த வாழப்பழமாட்டம் இருக்கேன். போப்பா. அம்மாவப் பாரு எவ்வளவு அழகா இருக்கான்னு" என சரவணனைக் கடிந்து கொள்வாள்.

அவளை மடியில் தூக்கி அமர்த்திக் கொண்டு கவிதாவின் காதில் விழுவது போல "முல்லிக்குட்டி நாமெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்கடா. உங்கம்மா மாதிரி எப்பவும் எரிஞ்சு எரிஞ்சு விழறவங்கல்லாம் அப்படித்தான் வெளுத்துப் போய் நோஞ்சானா இருப்பாங்கா" என அவன் சொல்லும் போது இருவரில் ஒருவருக்கு அடி விழுவது உறுதி.

"ஏய் எழுந்திருங்கன்னா" என மீண்டும் அதட்டுகிறவளிடமிருந்து யாருக்கு அடி கிடைக்கப் போகிறது என முல்லை யோசிக்கத் தொடங்கினாள். நன்றாக உறங்கும் போது குப்புறப் படுத்துக் கொண்டு அடிப்பதற்கு வசதியாக புட்டத்தை காட்டியபடி கிடப்பாள். ஆனால் இன்று விழிப்பு தட்டிவிட்டதால் மல்லாந்து படுத்திருந்தாள். மேலும் நம்பகத் தன்மையை கூட்டுவதற்காக உட்சிவப்பு தெரிவது போல மேலுதடு லேசாக தூக்கி இருப்பது போலவும் இடது உள்ளங்கையை பாதி மூடிய நிலையிலும் வைத்திருந்தாள். ஆகவே அடி நிச்சயம் சரவணனுக்குத்தான் என முடிவு செய்து கொண்டாள். அதோடு அவனும் புட்டத்தில் அடி வாங்கினால் எப்படி இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே சுளீரென சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் "யம்மோ" என அலறி எழுந்தபடி ஒரு கையால் புட்டத்தை தேய்த்துக் கொண்டு மறுகையால் முகத்தை சுளித்தபடி தலையை சொறிந்தபடி "எழுப்புனா எந்திரிக்க மாட்டனா. சும்மா அடிச்சிட்டே இருக்காத கவி" என்றவனை பார்ப்பதற்கு முல்லைக்கு பரிதாபமாக இருந்தது. எவ்வளவு முயன்றும் முடியாமல் "ம்க்கும்" என சிரித்துவிட்டாள்.

"அச்சச்சோ பாப்பாக்கு வலிச்சிடுச்சு போல" என கவிதா அவன் தலையைக் கோதினாள். போர்வையை கோபமாக உதறி பல் துலக்கப் போனவனை "ஏய் சரோ" என்ற கவிதாவின் சத்தமான குரல் நிறுத்தியது. தலையணையை உதறியவள் "யு ஆர் நாட் அ சைல்ட் சரோ" என சூடாக முறைத்தாள்.

சற்று நேரம் குழம்பி நின்றவன் "ஏய் இல்ல இல்ல. இது என்னோட பில்லோ இல்ல. என்னது மெரூன் கலர்" என பதறினான். முல்லைக்கு பயம் கொடுத்தது.

"மாட்டிவிட்டுட்டியேப்பா" என்பது போல சரவணனைப் பார்த்தாள்.

"உன்ட்ட எத்தன தடவ சொல்றதுடி" என்றவள் "போய் பிரஷ் பண்ணு" என திரும்பி நடந்தாள்.

"அப்பு அப்பு சரோப்பு சரோப்பு" என சரவணனின் பின்னே ஓடியவள் அவன் மேல் தொற்றி ஏறினாள். "சரோ அவள எறக்கி விடு" என்று அவள் இறங்கிய வேகத்தில் கவிதாவின் குரல் வந்தது.

"முல்லை வாக் பை யுவர்செல்ப்" என்றவன் அவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

"சரிப்பா" என வாய்பொத்தி சிரிப்பை அடக்கியவள் கவிதாவின் குரல் வந்த திசை நோக்கி பழிப்பு காட்டினாள்.

"அப்பு எனக்கொரு கனவு வந்துச்சு" என்றவளை சரவணன் ஆச்சரியமாகப் பார்த்தான். அவள் கனவுகள் அத்தனையிலும் ஏதோவொன்று இடம் மாறியிருக்கும். கவிதா அவளை அணைத்துத் தூக்குவது போல ஒருமுறை கூட அவள் கனவு கண்டதில்லை. அவள் பார்க்கும் படங்களின் மிகப் பயங்கரமான வில்லன் கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் கவிதாவாக உருமாறியிருக்கும். பல நாட்கள் கனவு கண்டு கொண்டே சிரிப்பாள். அந்நேரம் கவிதா அவளை அடித்தால் கூட அவளுக்கு வலிப்பதில்லை. ஆனால் மனிதர்களற்ற இக்கனவு சரவணனை திகைக்கச் செய்தது.

ஒழுகிச் சொட்டும் ஒரு துளி தேன். ஒவ்வொரு துளியும் தேனென்றான கனவு. தேன் மறைந்த உலகு. திமிறி வெளியேறக் காத்திருக்கிறது தேன். தேனைப் பிறப்பிக்கும் கருமலை. தேனாக எழுந்த பொன்மலை. மலையில் இருந்து உருகி வழியும் தேனோடை. தேனாறு. தேனருவி. தேன்கடல். தேனுலகு.

"அங்க போலாமாப்பா" என்றாள் முல்லைக்குட்டி.

"எப்படிம்மா" என்றான் சரவணன்.

"ரொம்ப சிம்பிள். என்ன நம்பி என் கூட வா" என்று அவனைக் கூப்பிட குரலில் முல்லை மட்டும் இருந்ததாக அவனால் நம்ப முடியவில்லை.

Saturday 18 February 2017

வெண்ணிற இரவுகளும் எஞ்சும் இருளும் - ஒரு பயணக் கட்டுரை



மூன்றரை மணிக்கு எழ வேண்டும் என்ற கவலையில் மூணு மணிக்கே விழிப்பு தட்டிவிட்டது. உலகின் பயங்கரமான மனிதர்களையும் பெருந்துயர் மிக்க மனிதர்களையும் என் கற்பனையில் நான் சந்திக்கும் தருணங்கள் இந்த அதிகாலைகள். ஒருவேளை இந்த தருணங்களை சுருக்கிக் கொண்டால் அந்த நாள் நலமுடன் நகருமென்பது ஒரு எண்ணம் மட்டுமே. இன்றும் மூன்று முதல் மூன்று நாற்பது வரை புரண்டு கொண்டே கிடந்தேன். வாட்ஸ்அப்பில் யாரிடம் இருந்தெல்லாம் செய்தி வந்திருக்கும் முகநூலில் யாரெல்லாம் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருப்பார்கள் மாமலர் தவிர்த்து ஜெ வெப்சைட்டில் என்னவெல்லாம் இடம்பெற்றிருக்கும் என இனிதாகத் தொடங்கி எதிர்காலத்தில் என்னவாகப் போகிறேன் தேய்ந்திருக்கிறோமா கூராகி இருக்கிறோமா எப்போது சாவோம் இப்போது ஏன் இருந்து தொலைய வேண்டும் என்பது வரை போதையான எண்ணங்கள் நீளும்.
"மணி மூணே முக்காலாச்சு எளுந்திரி" என அம்மா எழுப்பிய போது உண்மையில் மணி மூன்று நாற்பது தான். இதே அம்மா நான் அலுவலகம் கிளம்பும் போது ஏழே முக்காலை இரக்கமே இல்லாமல் "ஏள்ற தான ஆவுது. ஏன் பறக்கிற" என்று சொல்லும். வீடு கட்டி வரும் பிப்ரவரி அல்லது பெப்ருவரி இருபத்திரண்டாம் தேதியோடு இரண்டாண்டு ஆகப் போகிறது. ஜிம்மிதான் எங்கள் வீட்டின் சின்ன பையன் என்ற எண்ணத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடு மாற்றிவிட்டது. பெரிய சைஸ் குழந்தை போல அந்த வீடு தான் இப்போது எங்களுக்கு சின்ன பிள்ளை. மூத்தவன் ஜிம்மிக்கும் வீட்டுக்கும் ஆகாது போல. மார்போனைட் பதித்த தரையும்  அதை லைசால் போட்டுக் கழுவுவதும் அதிலேயே படுத்திருக்கும் ஜிம்மிக்கு ஒத்துக் கொள்ளாமல் அடிக்கடி புண் வந்து விடும். வீடு கட்டுவதற்கு முந்தைய ஒரு வேண்டுதல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதனால் என்ன ஆனாலும் எல்லோருமாக புறப்பட்டு விட வேண்டும் என்று வழக்கம் போல் அம்மா முடிவெடுத்துவிட்டார். நேற்று மாலை அரசியல் சூழ்நிலை ஏற்படுத்திய பரபரப்பால் மீண்டும் பயணத்தை தள்ளிப் போட்டு விட வாய்ப்பிருந்தது. மாலை திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் வர ஒரு சில பேருந்துகளே நேற்று இயங்கின. ஆனால் இரவு நிலைமை சீராகிவிட்டது.
எல்லோரும் குளித்து முடித்து நாலரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம். ஜூலியின் நுண்ணுணர்வு வியப்பேற்படுத்தக் கூடியது. எல்லோரும் எழுந்ததுமே இன்று வீட்டில் தன் மகனுடன் தனியே தான் இருக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டு வீட்டை விட்டு தள்ளிப் போய் படுத்துக் கொண்டது. அதன் மகன் ஜிம்மியும் அறிந்திருப்பான்.சிறிய நூல் என்பதால் கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் டிஸ்கவரி பேலஸ் வெளியிட்டிருக்கும் தாஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை எடுத்துக் கொண்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு நட்சத்திரங்களைப் பார்த்தேன். இரவுகளை விட புலர்கையிலேயே நட்சத்திரங்கள் அழகாக உள்ளன. வெண்ணவாசல் பாலத்தின் குறுக்கே காவல் துறை பொலேரோ நின்றது. பேட்ரல் வண்டி அல்ல. ஒருவேளை நேற்றைய அரசியல் பதற்றத்தால் அந்த வண்டி அங்கு நின்றிருக்கலாம். கொரடாச்சேரி திருவாரூர் மாவட்டத்தில் சற்றே பதற்றமான ஊர் தான். பேருந்து நிறுத்தத்தில் செய்தித்தாள்களை பிரித்துக் கொண்டிருந்தனர். என் எல்லா விடியல் பயணங்களிலுமே இந்தச் செயலை பார்ப்பதாலோ என்னவோ மனம் அதை மிக விரும்பியது.
போடி செல்லும் பேருந்தில் ஏறினோம். "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது" பாடல் ஒலிக்கத் தொடங்கியது பேருந்தில். வெண்ணிற இரவுகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதி இருந்தார். தாஸ்தோவ்ஸ்கி குறித்து எனக்குள் இருந்த சித்திரமே முன்னுரையாக இருந்தது. தாஸ்தோஸ்கியின் குற்றமும் தண்டனையும் ஆங்கிலப் பிரதியை வாசித்திருக்கிறேன். ஆனால் அதை நல்ல வாசிப்பு என சொல்ல முடியாது. ஆழ்ந்து படிக்க வேண்டிய நூலை ஏனோதானோ என்று வாசித்து விட்டதாக எனக்கொரு குற்றவுணர்வுண்டு. ஆகவே வெண்ணிற இரவுகளே நான் வாசிக்கும் தாஸ்தோவ்ஸ்கியின் முதல் நூல் என்று சொல்வதில் தவறேதுமில்லை. ராஸ்கால்நிகாபின் மற்றொரு வடிவமே வெண்ணிற இரவுகளின் நாயகனும். பீட்டர்ஸுபர்கின் இருளான ஒரு தெருவில் வாழ்பவன். வீடுகளுடன் நட்பாகப் பழகக்கூடியவன் என்ற சித்திரம் ஒரு விவரிக்க இயலாத உவகையை உள்ளே நிறைத்தது. பொதுவாக ஒரு பெரு நகரின் மாளிகை என்பதும் பகட்டுக்கும் செறுக்குக்குமான அடையாளம். அதே நேரம் அது ஒரு கலை வடிவமும் கூட. பகட்டு ஆணவம் செறுக்கு என அனைத்துமே மனிதர்களுடையது. அனைத்திற்கும் மேல் அந்த வீடு தனியே நிற்கிறது. அதன் தனிமையை கதை சொல்லி நிரப்புகிறான். சிகப்பில் இருந்து மஞ்சள் வண்ணம் மாற்றப்பட்டதால் வீட்டிற்கு எழும் வருத்தத்தை கதை சொல்லியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒட்டு மொத்தமாக அந்நகரை நேசிக்கும் அவனால் குறிப்பிட்ட ஒரு மனிதனை நேசிக்க முடியவில்லை. கோடைக்காலத்தில் பீட்டர்ஸ்பர்க் தனித்து விடப்படுவதை நினைத்து வருந்துகிறான். எனக்கு தீபாவளிக்கு ஊருக்கு வர முடியாது சென்னையில் வசிக்கும் நண்பர்களின் நினைவெழுந்தது.
தனியே அழுதபடி நிற்கும் நாஸ்தென்காவை மனம் குதூகலித்து இருக்கும் ஒரு இரவில் சந்திக்கிறான். அடுத்த மூன்று இரவுகள் அவளுடன் பேசுகிறான். அவ்வளவு தான் நாவல் முடிந்து விடுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே தாஸ்தோவ்ஸ்கியால் நம்மை நெடுந்தூரம் இழுத்துச் சென்று விட முடிகிறது. குறிப்பாக கனவுலக வாசியாக தன்னை சொல்லிக் கொள்ளும் கதை சொல்லி நாஸ்தென்காவிடம் தன்னைப் பற்றிச் சொல்லும் கணங்கள். தாஸ்தோவ்ஸ்கி எழுந்து வரும் கணங்கள் அவை. கதை சொல்லி தன் கனவுகளை நாஸ்தென்காவிடம் சொல்கிறான். நாஸ்தென்கா தன் வாழ்க்கையைக் கதை சொல்லியிடம் சொல்கிறாள். பெண்ணிடம் பேசியறியாத ஒருவனின் படபடப்புடனும் பரவசத்துடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் கதை சொல்லி. உருக்குலைந்து போன மனிதர்களால் புனையப்பட்ட உலகு தஸ்தோவ்ஸ்கியினுடையது. கதை சொல்லியும் அதில் ஒருவனே. அதீதமான கூச்சமும் கருணையும் நிறைந்தவன். நாஸ்தென்காவின் காதல் கதையைக் கேட்கிறான். அவளால் ஈர்க்கப்படுகிறான். சகோதர அன்பு நட்பு என அந்த ஈர்ப்பினை நாஸ்தென்கா கடக்கும் இடங்கள் சொல்ல முடியாத தவிப்பினை உருவாக்குகின்றன. இறுதியில் நாஸ்தென்காவை கதை சொல்லி பிரியும் இடம் ஆழமான வறட்சியை மனதில் உண்டு பண்ணி விடுகிறது. ஆனால் அந்த வறட்சியை தொடக்கம் முதலே கதை சொல்லியின் வாயிலாக உருவாகி இருப்பதால் ஒரு பெண்ணின் மனதை அதற்கே உரிய தயக்கங்களுடனும் குழப்பங்களுடனும் எடுத்துரைப்பதால் நாவலின் இறுதி கணங்கள் தாங்கிக் கொள்ளக்கூடியவையாகவே உள்ளன. இருந்தும் நாஸ்தென்கா கதை சொல்லிக்கு எழுதும் கடிதம் உச்சமாக மீள முடியாத சிடுக்கொன்றினை போட்டுவிடுகிறது. அந்த சிடுக்கு இந்த நாவலை மறக்க முடியாததாக சங்கடத்துடன் எண்ணிக் கொள்வதாக மாற்றிவிடுகிறது. வெண்ணிற இரவுகள் ஒரு இனிய துயராக மனதில் நீடிக்கும் என நினைக்கிறேன்.
நம்முடைய வாசிப்புச் சூழலையும் சமூகச் சூழலையும் பார்க்கும் போது தாஸ்தோவ்ஸ்கி மீண்டும் வாசிக்கப்படுவார் என்றே தோன்றுகிறது. வாசிக்கப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.
பேருந்து தஞ்சையைத் தான் தாண்டி இருந்தது. ஒருவர் தஞ்சை தாண்டும் போது திடுமென இறங்கி ஓடினார். அவர் மணி பர்ஸை தஞ்சாவூரில் தொலைத்து விட்டதாகவும் தொலைத்தவருடைய அண்ணன் வெளிநாடு செல்வதாகவும் அண்ணன் தம்பிக்காக பேருந்தில் அழுதபடியே தொழுகை செய்ததாகவும் இறங்கும் போது அவருடைய அலைபேசி கீழே விழுந்துவிட்டதாகவும் அவரொரு இஸ்லாமியர் எனவும் என் அண்ணன் சொன்னான். சில நொடிகளில் இவனால் எவ்வளவு விஷயங்களை கவனிக்க முடிகிறது என வியப்பு ஏற்பட்டது. அவதானக் கலைஞரை கவனகன் என தமிழால் அழைக்கிறார்கள் போல.
நான் சென்று இறங்கும் பேருந்து நிலையங்களில் என்னை குறைவாக முகம் சுழிக்க வைப்பது திருச்சி ஜங்ஷன் தான். பெரும்பாலும் சுத்தமாக இருக்கும். இம்முறை பேருந்து நிலையத்தின் கூரையை செப்பனிட்டு அழகு படுத்தி இருந்தனர். தேநீர் அருந்திவிட்டு சத்திரம் வழியாக மண்ணச்சநல்லூர். அங்கு தான் கோவில் இருக்கிறது. காவிரி ஆற்றை பாலத்தின் வழியே கடக்கும் போது எப்போதும் ஏற்படும் ஒரு மனவெழுச்சி ஏற்பட்டது. மண்ணச்சநல்லூருக்கு முன்பாகவே இறங்க வேண்டிய இடம் வந்தது. அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சாமி திருக்கோவிலுக்கு அருகே ஒரேயொரு வெற்றிலைப் பாக்கு கடை மட்டுமே உள்ளது.
சமூக வலைதளங்களில் "ட்ரெண்ட்" என ஒன்றிருப்பது போல சமூகத்துக்கென ஒரு டிரெண்ட உண்டு. அதைத் தீர்மானிப்பது மத்தியத் தர வர்க்கமே. உயர் வகுப்பினரின் சுவை தனித்துவமானது விலையுயர்ந்தது. அது போல பணமற்றவர்களின் சுவையையும் சமூகம் பேசாது. மத்திய தரத்தினருக்கு ஏற்றது போல சமூகம் தன்னை நடித்துக் கொள்வதாக எனக்குத் தோன்றும். ஒரேயொரு ஆறுதல் இந்த மத்திய தரத்தினரின் "பேண்ட் வித்" அதிகம் என்பது தான். இன்றைய இந்திய மத்தியத்தர வர்க்கத்தினரின் டிரெண்ட் வீடு கட்டுவது. வீடு வியாபாரம் போன்றவை நிச்சயமற்ற தன்மை கொண்டவை. ஆகவே எவ்வளவு அடர் கருப்பு சட்டை அணிந்தவருக்கும் உள்ளூர ஒரு கிலி இருக்கவே செய்யும். அந்த நம்பிக்கையை சரியாகவே பயன்படுத்திக் கொள்கிறது இந்த கோவில். செதுக்கப்படாத லிங்கம் உடைய கோவில் என்கிறார்கள். லிங்கமும் சற்று ஏடாகூடமாக இருப்பதால் அவர்கள் சொல்வதை நம்பலாம். துவாரபாலகர்களை எங்கிருந்தோ பெயர்த்துக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். பத்திலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்குள் உருவான கோவிலாக இருக்கலாம்.( தமிழக கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் நல்ல நூல்களை நண்பர்களிடம் பரிந்துரைக்க வேண்டுகிறேன்). அங்கிருக்கும் வெண்ணி மரத்தின் அடியில் இருந்து மண் எடுத்துத் தருகிறார்கள். வீடோ வியாபாரமோ வெற்றி அடைந்த பிறகு வீடோ வியாபார நிறுவனமோ இருக்கும் இடத்தின் மண்ணை கொண்டு வந்து போட்டு விட்டு வேண்டுதலை முடிக்க வேண்டும் என்பது அங்குள்ள நம்பிக்கை. நாங்கள் முடிக்கவே சென்றிருந்தோம். முடிக்கும் போது மூவாயிரம் காணிக்கை தர வேண்டும் என்பது விதி!!!விதி!!!!!
அண்ணன் உச்சகட்ட எதிர்ப்பினை காட்டிய பிறகு வழக்கம் போல் அம்மா சொன்னது தான் நடந்தது. ஆனால் மூவாயிரம் கொடுத்ததற்காக இப்போதும் அம்மாவை அவன் மன்னிக்கவில்லை. எனக்கு என்ன லாபம் என்றால் அபிஷேகம் முடிந்த பிறகு கோவிலை பதினாறு முறை வலம் வரச் சொன்னார்கள். அவ்வளவு தூரம் நடந்து வெகு நாளாயிற்று. "வெற்றி" பெற்றவர்கள் என அங்குள்ள அர்ச்சகர் எங்களுடையதையும் சேர்த்து எட்டு குடும்பங்களைச் சொன்னார். ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் வெற்றிபெற அதாவது வீடு வாங்கவோ நிலம் வாங்கவோ வியாபாரம் தொடங்கவோ வந்திருந்தனர். "வெற்றி" பெற்றவர்கள் அவர்களுக்கு பிரசாதம் அளிக்க வேண்டுமாம். இந்த ஒரு ஏற்பாடு நிறைவளிப்பதாக இருந்தது. ஒரு செயலை முடித்தவர்கள் திருப்தியுடன் அந்த செயலைத் தொடங்கவிருப்பவர்களிடம் அன்னம் அளிப்பது என்னுள் உவகையை நிறைத்தது.
போனி டெயில் கட்டிய ஒரு பெண். சட்டை சுடிதார் இரண்டிலும் சேர்க்க முடியாத ஒரு உடை அணிந்திருந்தாள். வழக்கம் போல் அவள் என்னை அடிக்கடி திரும்பிப் பார்த்ததாக கற்பனை செய்து கொண்டேன். ஒரு விஷயம் தெளிவடைந்தபடியே வருகிறது. ஒரு குழந்தையின் கண்களால் தான் நான் பெண்களைப் பார்க்கிறேன் போல. ஏனெனில் கண் காது மூக்கு என தனித்தனியே அழகாக இருந்ததாக எனக்கு சொல்லத் தெரியவில்லை. மனதில் மலர்வேற்படுத்தும் ஒரு முகம். அவ்வளவு தான். கோவிலை விட்டு வெளியே வந்த போது அவளுடைய "பெரிய" குடும்பம் ஒரு சிவப்பு நிற ஆல்டோவில் புறப்பட்டது. பெரியம்மா வீட்டிலிருந்து புறப்படும் போது சிறு வயதில் எழும் ஒரு மெல்லிய நமைச்சல் உள்ளுக்குள் தோன்றியது.
திரும்பும் போது பேருந்து ஸ்ரீரங்கம் வழியே வந்தது. கோபுரத்தை மட்டும் பார்க்கவே நேரமிருந்தது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. கோவிலில் கிடைத்த வெண் பொங்கலும் சக்கரை பொங்கலும் போதுமானதாக இருக்கவில்லை. சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு பேருந்தில் ஏறினோம். வாட்ஸ்அப் உரையாடலில் தஞ்சை வரும் முன்னே அலைபேசியில் சார்ஜ் தீர்ந்தது. அப்போது தான் உணர்ந்தேன். வீட்டில் நால்வரும் இணைந்து வெளியே சென்றால் என்னுள் ஒரு முனையில் கசப்பு ஊறிக் கொண்டே இருக்கும். அது இந்தப் பயணத்தில் சுத்தமாக இல்லாமல் இருந்தது. வீட்டில் ஜிம்மியும் ஜூலியும் ஆவலுடன் வரவேற்றனர். வீட்டு முன்னே இருக்கும் சீனி கொய்யா மரத்தில் பத்துக்கும் மேல் காய்களைப் பறித்துத் தின்றுவிட்டேன்.
நெடுநாளைக்கு பின் ஏற்படும் அனுபவமாக பொழுது மங்கும் சமயத்தில் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சைக்கிளில் இன்று பயணிக்க நேர்ந்தது. கண் ஆயின்மெண்டை காலுக்கு போட்டால் பித்தவெடிப்பு சரியாகும் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை எனினும் அம்மா கேட்டதற்காக வாங்கச் சென்றேன். அந்த மென் இருளும் குளிரும் திடீரென நான் அதிகமாக வெறுக்கும் என் ஊரை விரும்பச் செய்து விட்டது. சற்று தூரத்திற்கு எந்த பெட்ரோல் வாகனமும் என்னை கடக்காத போது அந்த இருட்பயணம் மனதை என்னவோ செய்து விட்டது. அது வேறெங்கும் சாத்தியமே இல்லை. எல்லா விளக்குகளும் அணைந்த பின் நான் அந்த இருட்டில் சென்றால் பத்து வயது குறைந்துவிட்டதாகக் கூட உணர்ந்து விட முடியும் போல.
வீட்டிற்கு திரும்பிய போது அண்ணன் ஏதோ பேப்பரை பார்த்து விட்டு "கரண்டி ஆம்லெட்" போட்டுக் கொடுத்தான். அண்ணனும் அம்மாவும் சமீப காலங்களில் இது போன்ற பயிற்சிகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். அடுத்து ஏதோ கறி தோசை செய்யப் போகிறானாம். நலலா இருந்தா சரி. சாதாரண ஆம்லெட்டுக்கும் கரண்டி ஆம்லெட்டுக்கும் சுவை வேறுபாடு இல்லையெனினும் இரண்டு முட்டைகளில் ஏழெட்டு ஆம்லெட் போட்டு விட முடிகிறது.
வெண்ணிற இரவுகளோடு என்னுடைய மிகச்சிறிய சைக்கிள் பயணத்தை நினைத்துக் கொள்கிறேன். இருளை  உறக்கத்துடன் மௌனத்துடன் நிராசைகளுடன் மட்டுமே இணைத்து கற்பனை செய்திருந்த மனம் இப்போது இருளை வேறொன்றாகப் பார்க்கிறது. நாஸ்தென்காவை அந்தக் கதை சொல்லி ஒரு முறை கூட பகலில் பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் நாஸ்தென்கா இறந்து போயிருப்பாள். நூற்றியறுபது ஆண்டுகள் கழித்து என்னைப் போட்டு குடைந்து கொண்டிருக்க மாட்டார்கள் இருவரும். இரவென்பது இரவு மட்டுமல்ல.

Sunday 12 February 2017

மரணம் - ஒரு உரையாடல்



பொழுதுபோக்கு எழுத்துக்களின் முக்கியமான பங்களிப்பென்பது அவற்றால் ஒரு குறிப்பிட்ட நேர்மறையான மனநிலையை கட்டமைக்க முடியும் என்பதே. பொன்னியின் செல்வனில் ராஜராஜன் எங்கேனும் மது அருந்தினான் என்றோ யாரையேனும் கொல்ல ஆணையிட்டான் என்றோ எக்குறிப்பும் வராது. ஐந்து பகுதிகளாக வெளிவந்த அந்த நூலில் மிகப்பெரிய யுத்தம் கூட சித்தரிக்கப்பட்டிருக்காது. யுத்தத்தின் ரணங்களோ வன்முறைகளோ அந்த படைப்பில் தென்படாது. ஏறத்தாழ அதில் வரும் ராஜராஜனை எண்பதுகளின் தமிழ் வாத்தியாருக்கு உடைய குணங்கள் கொண்டவனாக பொருத்திக் கொள்ள முடியும். கேளிக்கை எழுத்துக்களில் அது அவசியமும் கூட. ஏனெனில் அவை பெரும் வாசகப் பரப்பை சென்றடைகின்றன. ஆகவே யாருடைய முகமும் சுளித்து விடாதபடி அவை இருக்க முடியும். கொலையைக் கூட வலிக்காமாலேயே செய்வார்கள். ஆனால் சமூகத்தின் மனநிலை கட்டமைப்பதில் அவற்றின் பங்களிப்பு மறுக்க முடியாதது.
தமிழில் பின் நவீனத்துவ போக்குகளின் பரவலாக்கத்திற்கு முன் பொன்னியின் செல்வன் மன்னன் மகள் வேங்கையின் மைந்தன் போன்ற படைப்புகள் அளவுக்கு ஒரு அரசாட்சியை ஒரு படை நகர்வை ஒரு அரசியல் சூழ்ச்சியை ஒரு பேரரசை ஒரு பேரரசனை தீவிர இலக்கிய படைப்புகள் சித்தரித்ததில்லை. கனவு லட்சியம் போன்றவற்றை இந்த கற்பனாவாத தன்மை கொண்ட படைப்புகளே மனதில் விதைக்கின்றன.  இப்படைப்புகளில் இருந்து முன்னகர்ந்தே தீவிரமான வாசிப்புக்கு வருகிறோம்.


டான் பிரவுனின் inferno-வும் வணிக கேளிக்கை எழுத்து வகையினதே. ஒரு புராதான நம்பிக்கை ஒரு அதிநவீன அறிவியல் பாய்ச்சல் பல விடுகதைகள். டான் பிரவுனின் ரெசிபி இதுதான். Inferno இந்த இலக்கணங்கள் கொண்ட படைப்பு தான் எனினும் அது எழுப்பும் ஒரு கேள்வி என்னை நிம்மதி இழக்கச் செய்தது. அக்கதையின் மையம் என்பது உலகின் மக்கள் தொகை கணக்கற்ற விகிதத்தில் பரவுவதால் அதனைத் தடுக்க வில்லன்(வழக்கம் போல் ஒரு விதத்தில் ஹீரோ) ஒரு மருத்துவ வழிமுறையைக் கண்டுபிடிக்கிறான் என்பது தான். அதை உலக சுகாதார நிறுவனத் தலைவருடன் பகிர்ந்து கொள்ளும் போது "என் பாட்டி இன்னும் சில நாட்கள் உயிருடன் இருக்கட்டும் என்ற ஒருவனின் எண்ணத்தால் மருத்துவ வசதி தேவைப்படும் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர்"என்ற ஒரு வசனம் வரும். மால்தூஸ் தொடங்கி பிறப்பு விகிதம் அதிர்ச்சியூட்டும் விதத்தில் பெருகியிருப்பதை அவன் விளக்கும் போது மனதில் மெல்லிய ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். அது பல வருடங்களுக்கு முன்பு. அதற்கு நண்பர் விஷ்ணு பிரகாஷ் மூலம் இன்று விடை கிடைத்ததாக நம்புவதால் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

செங்கல் கான்கிரீட்டை சிமெண்ட் கான்கிரீட்டாக மாற்றுவதற்காக மொட்டை மாடியில் இருந்த ஒரு பில்லரை உடைத்த போது அப்பாவிற்கு இடது கை கட்டை விரலில் சுத்தியல் விழுந்து கட்டு போட்டிருக்கிறது. இன்று ஞாயிற்றுகிழமை என்பதாலும் அப்பாவிற்கு கையில் அடிபட்டிருப்பதாலும் வீட்டு வேலைகளை நான் செய்ய வேண்டியிருந்தது. காலை எட்டரை மணிக்கு தோழி மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி "தீமையும் மானுடமும்" என்ற பெயரில் என் கட்டுரை jeyamohan.in-ல் வெளிவந்திருப்பதாக எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலை பார்த்த போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சற்று நேரத்தில் ஷாகுல் அழைத்து வாழ்த்தினார். அரிசி அரைக்க மில்லுக்கு சென்றது அம்மாவுடன் ஆஞ்சநேயர் கோவில் அப்பாவுக்கு மீண்டும் கட்டுப்போட மருத்துவமனை கோழிக்கறி வாங்க மீண்டும் வீட்டு வேலை செய்யவென மதியம் வரை நாள் விரைவாக ஓடிவிட்டது. மதியம் இரண்டரை மணிக்கு விஷ்ணு பிரகாஷ் அழைத்தார்.

பிரகாஷ் அனைத்தையும் கூர்ந்து கவனிப்பவர் என்பதை விஷ்ணுபுரம் விருது விழா குறித்த அவரது பதிவினை வாசித்தால் அறிய முடியும். பேச்சில் இருக்கும் அதே நிதானம் வெளிப்படுகிறது அவர் எழுத்திலும். நான் படபடவென பேசுபவன். அவர் எனக்கும் சேர்த்து இடைவெளிவிட்டு நிதானமாக உரையாடுபவர். சாதி குறித்து சிறிய கிராமங்களின் உருவாக்கம் குறித்து விஷ்ணுபுரம் விருது விழாவில் நிறைய பகிர்ந்து கொண்டார். என் கட்டுரை குறித்து சொல்லவே அழைத்திருக்கிறார். நான் அனைத்தையும் தொகுத்து சிந்திப்பதாக சொன்னார்.

தற்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் ஆரோக்கிய நிகேதனம் குறித்து பேச்சு நகர்ந்தது. பிரகாஷ் முன்னரே ஆரோக்கிய நிகேதனத்தை வாசித்திருக்கிறார். என்னுடைய தோழியும் சக வாசகருமான கிறிஸ்டி ஆரோக்கிய நிகேதனம் படித்த பின் அவர் எழுதிய பதிவு jeyamohan.in-ல் வெளியாகியது. நான் படித்து முடிக்கும் வரை அவர் பதிவினை வாசிக்கக் கூடாது என ஒரு கட்டளை. இருந்தும் ஆர்வக் கோளாறில் அவர் எழுதியதன் முதல் வரியை வாசித்துவிட்டேன்.
"ஆரோக்கிய நிகேதனம் வாசித்தவர்கள் மகிழ்ச்சியாக மரணிக்கலாம்."

மாமங்கலையின் மலை என்ற நீண்ட பயணக் கட்டுரையின் தொடக்கமாக ஜெவும் மரணத்தைப் பற்றி சொல்லி இருந்தார். பிரகாஷும் ஆரோக்கிய நிகேதனம் மரணம் குறித்த ஒரு நாவல் என்பதை நாவலில் வரும் ஒரு தொன்மத்தின் வழி சொன்னார். கடவுள் பிறப்பு மற்றும் இறப்பிற்கான தேவதைகளைப் படைத்தார். இறப்பின் தேவதைப் பெயர் ரிபு. அவளுக்கு வருத்தம். பிறப்பு எல்லா இல்லங்களிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். ஆகவே அவளை அனைவரும் விரும்பி ஏற்பார்கள். இறப்பை யாரும் கோரிப் பெற விரும்பமாட்டார்கள். ஆகவே நான் வெறுக்கப்படுவேன் என்கிறாள் ரிபு. கடவுள் சொல்கிறார் மரணத்தை விடுதலையென மனிதர்கள் கோரிப் பெரும் நிலை மண்ணில் உருவாகும். நீ விரும்பப்படுவாய் என. மரணத்தை ஒரு விடுதலையாகக் காண்பதை பிரகாஷ் பல வழிகளில் வார்த்தைகளில் சொன்னார். அதில் என்னை மிகவும் ஈர்த்த சொல் "மரணிக்க தயார்படுத்திக் கொள்ளல்" என்பது.

மேலை மருத்துவம் மரணத்தை ஒத்திப் போட தவிர்க்க மரணத்தை அறைகூவுவதையே திரும்பத் திரும்ப முயல்கிறது. மரணத்தில் இருந்து மீள்வதை ஒரு பெரிய வெற்றியாகவே கொள்கிறது. எதுவரை? என்ற கேள்வியின் முன் அஞ்சித் தயங்குகிறது. ஆனால் நம் மரபு ஆற்றுவதை மட்டுமல்ல அமைந்து இறப்பதையும் அறமென்றே வகுக்கிறது. இறப்பை எண்ணிப் பார்க்கச் சொல்கிறது. வெண்முரசு வாசிப்பவர்களுக்குத் தெரியும் அதில் தொடர்ச்சியாக பல கானேகல்கள் இடம்பெற்றிருக்கும். தேவாபி , சத்யவதி , அம்பிகை , அம்பாலிகை , பாண்டு , குந்தி என நீளும் கானேகல் விதுரர் , திருதராஷ்டிரர் , பாண்டவர்கள் என தொடரப் போகிறது. இவர்களில் சிலர் தவிர பிற அனைவரும் எதையும் ஆற்றாமல் வாழ்விலிருந்து தப்பிக்க காடமைந்தவர்கள் அல்ல. கடமைகள் முடிந்தபின் ஒவ்வொன்றாக உதிர்த்துக் கடந்து செல்பவர்கள்.

இச்சிந்தனை என்னை பெரும் ஆசுவாசத்திற்கு உள்ளாக்கியது. இன்னும் சில வருடங்களிலோ சில மாதங்களிலோ என் பெற்றோரின் முதுமையை எதிர் கொள்ளப் போகிறேன். அவர்களுடைய தேவையை நான் முழுதுணர்ந்தவன் அல்ல. ஆனால் இயல்பாகவே அவர்கள் மனம் அமைய விரும்புவதை என்னால் காண முடிகிறது. கிராமங்களில் இயல்பாக ஒரு சொலவடையைக் கேட்க முடியும்.
"கட்டைக்கு கால் நீட்டப் போற வயசுல உனக்கு எதுக்கு இந்த ஆட்டம்" என்பார்கள். சொல்பவருக்கோ சொல்லப்படுபவருக்கோ அறுபது வயது கூட ஆகி இருக்கிறது. மிக வயதானவர்களிடம் பெரும்பாலும் இறப்பைப் பற்றியே பேசுவார்கள். அவர்களும் அவ்வுரையாடலில் ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்பதை நான் பார்த்திருக்கிறேன். முதுமையை ஒரு விடுபடலாக கொண்டாட்டமாக மாற்றிக் கொண்ட பலரை என்னால் இப்போது நினைவு கூர முடிகிறது. புரையேறி சிரிக்க வைக்கும் பல கெட்ட வார்த்தைகளை வசவுகளை அவர்களிடமிருந்து கேட்க முடியும். ஆனால் அவர்களை விட பத்து பதினைந்து வயது இளையவர்கள் அவர்களிடம் ஒரு அமைதி இன்மையை உருவாக்குவார்கள். காரணம் எங்களைப் போன்ற சிறுவர்களை அவர்கள் "கெடுத்து" விடுவார்களாம். ஆனால் கிராமத்தில் இருந்தாலும் தனித்தே வாழும் என் பெற்றோரின் முதுமை என்னை சற்றே பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது. நகரத்தினர் முதுமை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பது மேலும் குழப்பத்தை அளிக்கிறது. உடல் வலு இல்லாத முதியவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள எல்லோராலும் முடியாது. மேலும் தனிமையே அவர்களை மேலும் சோர்ந்து போனவர்களாக உற்சாகம் குன்றியவர்களாக மாற்றி விடாதா?
முதியவர்களிடம் ஒரு குணத்தை அவதானித்திருக்கிறேன். தங்கள் பங்களிப்பென ஏதேனும் தன் பிள்ளைகளின் வாழ்வில் இருக்க வேண்டுமென விழைவார்கள். மேலும் மேலும் வெறியுடன் அவர்களை வாழ்வுடன் பிணைக்க வைக்க நினைப்பது அவர்கள் மீதான புறக்கணிப்பே. மெல்ல மெல்ல வாழ்க்கைப்பாடுகளில் இருந்து அவர்களை விலக்கி வாழ்வின் கொண்டாட்டத்தை மட்டுமே அவர்களுக்கு கொடுப்பதே முதுமைக்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதையாக இருக்க இயலும். இருந்தும் அதுவும் கத்தியின் மேல் நடக்கும் பயணமே. ஏனெனில் நம்மைத் தூக்கி வளர்த்த ஆணவம் அவர்களிடம் உண்டு. அதனை உடைத்தால் வாழ்வென அவர்களிடம் எதுவுமே எஞ்சாது. மெல்ல அதனைக் கரைப்பதே சரி.

சிறிய விஷயங்களில் இருக்கும் அழகை ரசிப்பவர்களாக மெல்லியவற்றை மட்டுமே ரசிப்பவர்களாக மரணத்தைக் கூட சலிப்போடு அல்லாமல் நிறைவோடு ஏற்றுக் கொள்பவர்களாக நாம் யார் கையில் தவழ்ந்தோமோ யார் முலையை உறிஞ்சி வளர்ந்தோமோ யார் மடியில் படுத்து கதை கேட்டேமோ யார் தோளில் அமர்ந்து உலகைக் கண்டோமோ அவர்களை மாற்றவது நம் கடன். முதுமையில் இருந்து யாரும் தப்பப் போவதில்லை. இப்படி ஒரு கலாச்சாரத்தை நம்மால் கடைபிடிக்க முடியுமெனில் அடைந்தவற்றை உதிர்க்க முடியுமெனில் மால்தூஸையும் மக்கள் தொகை பெருக்கத்தையும் கூட வெற்றிகரமாக எதிர்கொண்டு விட முடியும் என்றே தோன்றுகிறது.

வாழ்வை முடிவற்று அனுபவிக்க வேண்டிய ஒரு நுகர்வுப் பண்டமாக உருவகிப்பதே வளங்கள் சுரண்டப்பட்ட இன்றைய உலகின் மிகப்பெரிய அற மீறல். காலணிய நாடுகளில் மேற்கத்திய சிந்தனைகள் வலுவாக ஊன்றி அச்சிந்தனைகள் தம் சுவடுகளை இந்த நூற்றாண்டில் இழக்கத் தொடங்கி இருக்கின்றன. நுகர்வுக்கு எதிரான குரலும் மேற்கில் ஒலிக்கவே செய்கிறது. ஆனால் நாம் அதைக் காதில் வாங்குவதில்லை. வெறியுடன் நுகர்வதை ஒரு கலச்சாரமாகவே மாற்றிக் கொண்டுள்ளோம். நகர்புற இந்தியாவின் மத்தியத் தர குடும்பங்களில் முதுமையைக் கையாள்வதில் உருவாகி இருக்கும் சிக்கலுக்கு இந்த நுகர்வு மனநிலையும் ஒரு காரணம். நுகர்ந்து நுகர்ந்து அடையப் போவது ஏதுமில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்வது நல்லது. ஏனெனில் நுகர்வில் ஊறிய ஒரு தலைமுறை முதுமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதீத நுகர்வை தீங்கென்று கூட எண்ணத் தெரியாத தலைமுறையாக இருக்கிறது என் தலைமுறை.
வாழ்வை முடிவற்றதாக காணும் அபத்தத்தை குறைத்து அர்த்தமுடையதாக அடைவதோடு அதை விட வேண்டியதையும் எண்ணிக் கொள்வதாக அமைத்துக் கொள்வதே சரி. குறளுரையில் ஜெயமோகன் வானவன் மாதவி குறித்துச் சொல்லி இருந்தார். நாட்கள் எண்ணி வழங்கப்பட்ட ஒரு வாழ்வை வாழ்ந்தவர். அவருக்குத் தெரிந்தே இருந்தது தனக்கு காலம் குறைவென. அதனாலேயே நம்முடைய விரிந்த வாழ்வைக் கொண்டும் செய்ய முடியாத பணிகளைச் செய்து விட்டு முப்பத்தெட்டு வயதில் நிறைவுடன் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார் அந்த சகோதரி. முழுமையான வாழ்வு நிச்சயம் வாழும் நாட்களில் இல்லை. வாழ்விடம் இருந்து பெற்றதிலும் திருப்பி அளிப்பதிலுமே இருக்கிறது என்பதே வானவன் மாதவி போன்ற மகத்தானவர்கள் நம்மிடம் சொல்லி விட்டுச் செல்லும் செய்தி போலும்.