Wednesday 25 May 2022

சிறை

 வானை அடைத்துப் பறந்தது மாபெரும் காகம். காகத்தை நோக்கி நிமிர்ந்த என் எண்ணம் முழுவதும் அதனால் உறிஞ்சப்பட்டிருந்தது. அது காலமற்ற வெளியா வெளியற்ற காலமா என்பதை என் பிரக்ஞை உணரவில்லை. நான் உடலா மனமா எண்ணமா இருப்பா ஏதுமின்மையா என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. ஆனால் கடற்கரையில் பதிந்த காலடிச்சுவடென என் பிரக்ஞை எங்கிருந்து நகர்கிறதோ அங்கெல்லாம் தன் தடத்தை பதித்துக் கொண்டே வந்தது.‌ எல்லாமும் இற்றுப்போகும் ஒரு நிலைக்கென நான் எப்போதும் ஏக்கம் கொண்டிருக்கிறேன். அதுதான் அப்போதெனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததா? பறக்கும் காகத்தின் சிறகு வழியே காற்றென வீசுகிறது ஒளி. எத்தனை வண்ணங்கள் அவ்வொளிக்கு. காக்கையின் சிறகுகள் எந்நிறத்தையும் உள்ளனுமதிக்காத கருமை என்று எண்ணியிருந்தது எவ்வளவு பெரிய தவறு! அது ஒவ்வொரு நிறத்தையும் ஒளிரச் செய்து கொண்டிருந்தது. நான் ஒளியை உண்டு கொண்டிருக்கிறேன். வண்ண வண்ண ஒளிகள். எவ்வளவு காலமெனத் தெரியவில்லை. என் உடலில் ஆடை இருந்ததா என் உடலே இருந்ததா என்றெல்லாம் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் ஓரிடத்தில் இல்லை என்பது மட்டும் வெட்ட ஓங்கிய கொலைவாளென விரைத்திருக்கும் பளபளப்பான காக்கையின் சிறகின் வழியே அறிய முடிந்தது. எனக்கு வியர்க்கவில்லை. குளிரவில்லை. நாற்றமோ மணமோ நாசியில் ஏறவில்லை.‌ ஒலியோ ஒலியின்மையோ என் செவிகளில் இல்லை. இன்னதென எண்ணிக் கொண்டிருக்கும்போதே இன்னொன்றென மாறிவிடும் வண்ணங்களன்றி என் கண்களில் காட்சிகளும் இல்லை. ஆனால் நான் இருந்தேன்.‌என்னை நான் மிகத்தெளிவாக உணர்ந்தேன். நான் இருப்பதால்தான் இந்த இன்னதென விளக்கிவிட முடியாத பறத்தல் எனக்கு அச்சத்தை தருகிறது. சிறிய வீட்டில் பெரிதாகத் தெரிந்த பொருள் பெரிய வீட்டில் சிறிதாகவும் அசிங்கமாகவும் தெரிவதுபோல என் சின்னப் பிரக்ஞை அந்தப் பெரும் பிரக்ஞையுடன் முரண்டு கொண்டிருக்கிறதா?


என் பதற்றங்கள் என்னிடமிருந்தன.‌என் ரகசிய ஏக்கங்கள் அப்போதுமெனக்கு கிளர்ச்சி அளித்துக் கொண்டிருந்தன.‌‌ என் பயங்கள்‌‌ என்னை வதைக்கத் தவறில்லை.‌ ஆனாலும் நான் இருந்தேன். நான் இருப்பதை‌ உணர உணர மண்ணிலும் இறங்கிக் கொண்டிருந்தேன். வானம் காகத்தால் மூடப்பட்டிருந்தது. உச்சி வெயிலில் கிரகணம் நிகழ்ந்தது போல‌ சூழல் ஒளி கொண்டிருந்தது. மனிதர்கள் கண்ணுக்குத் தெரியத் தொடங்கினர். காற்றென வீசியது அக்காகத்தின் பெருமூச்சு. வெட்டவெளியில் படர்ந்த நிழலென அக்காகத்தின் கருவிழிகளை நான் கண்டேன். அக்காகம் அங்கிருக்கிறது என்ற எண்ணமே எனக்கு அச்சத்தையும் ஆறுதலையும் தந்து கொண்டிருக்கிறது. நான் என் பிரக்ஞையை மீட்டுக் கொண்டு கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அது ஒரு கல்லூரி வளாகம் போலத் தெரிந்தது. வெகுகாலத்துக்கு முன்பு நான் அங்கே படித்திருக்கிறேன் அல்லது எதிர்காலத்தில் படிக்கவிருக்கிறேன். எதிர்பட்டவர்கள் அனைவரையும் நான் அறிந்திருந்தேன். அறிந்திருத்தல் என்றால் பெயரையோ நபரையோ அறிந்திருப்பதல்ல. அவர்களுடைய ஆழம் என் கண்களுக்குத் தெரிந்தது. அதுவே என்னை அச்சுறுத்தியது. இந்த அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்த கணத்திலேயே ஒரு பெண் ஓடிவந்து என்னை அறைந்தாள். நான் அங்கு ஆடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறேன் என்பது அவள் அறைந்தபிறகே எனக்கு உரைத்தது. நான் குன்றிப்போனேன். ஆனால் என் உடலை எனக்கு‌ மறைக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நான் ஆடையில்லாமல் இருப்பது சரியென்றும் எனக்கும் தோன்றியது. ஆனால் அத்தோன்றல் என் அவமான உணர்வை அகற்றிவிடவில்லை. வெளித்தோற்றத்துக்கு கல்லூரி போலத் தெரிந்த அவ்விடம் தொடர்ந்து தன் முகத்தை மாற்றிக் கொண்டே வந்தது. மண்சுவர் கொண்ட ஒரு குடிசையில் பிரசவக் கவிச்சியுடன் ஒரு குழந்தை கிடக்கிறது. தெளிந்த நீரோடும் வாய்க்காலில் சேமையிலையில் நீர்சேந்திக் குடிக்கிறான் ஒரு சிறுவன். இன்னும் முடிக்கப்படாத தார்ச்சாலையின் மணத்தை நுகர்ந்தபடி சைக்கிளில் செல்கிறான் மற்றொருவன். வெள்ளைச் சீருடை வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருக்க மிட்டாய் தின்கிறாள் ஒரு சிறுமி. பம்புசெட் அறையில் இருந்து முனகல்கள் கேட்கின்றன. வாழைத்தோப்புகளில் தவளைகள் குதிக்கின்றன. ஈரம் சொட்டும் தலையுடன் கோலமிடுகின்றனர் தாவணி அணிந்த பெண்கள். கைகளை உதட்டுக்கு நேரே குவித்து கண்மூடி கடவுளை வணங்குகிறாள் ஒருத்தி. மூக்கைத் துளைக்கிறது துளசியின் மணம். விந்தின் நாற்றம் சூழ நாக்கு வெளித்தள்ளி கயிற்றில் தொங்கிக் கிடக்கிறான் ஒரு ஆள். சிறுவனொருவனை அழுதுகொண்டே புணர்கிறான் நூறு கிலோ எடை கொண்ட மற்றொருவன். கோவில் மறைவில் விபூதி பூசி விட்டு முத்தமிட்டு ஓடுகிறாள் ஒருத்தி. சோற்றை உருட்டி விழுங்குகிறாள் ஒரு கிழவி. கண்விழித்துப் படித்துக் கொண்டிருப்பவன் கழிவறைக்கு எழுந்து ஓடுகிறான். புகையும் அடுப்புக்கு எதிரே அமர்ந்து கொண்டிருப்பவளின்‌ முதுகு நனைந்து போயிருக்கிறது. எழுதிக் களைத்தவர் கைகளில் நெட்டி முறிக்கிறார். முதன் முறை புணர்ந்த ஆண்குறியில் ரத்தம் வழிகிறது. ரசமட்டம் வைத்து சுவற்றின் நேர் பார்க்கிறார் கொத்தனார். பரவசத்துடன் காதல் கவிதை எழுதிக் கொண்டிருந்தவன் எழுதி முடித்த பரபரப்பில் சுயமைதுனம் செய்து கொள்கிறான். அடுத்தவன் மனைவியை வெறியுடன் புணர்கிறான். தத்துவ நூல்களை ஆழ்ந்து படிக்கிறான். முழுதாக தன்னை நிர்வாணப்படுத்திக்கொண்டு விஷம் குடிக்கிறாள். தூங்க இயலாமல் தவிக்கிறான். காலையில் எழுந்து சோம்பல் முறித்தவர் மாரடைத்து விழுகிறார். நெடி கொண்ட வேப்பங்குச்சியால் சுளீரென‌ கையில் அடிவிழுகிறது. நீலத் தாவணி அணிந்த பள்ளி மாணவியின் காலில் விழுந்து அழுகிறார் மனைவியை இழந்த கண்ணாடி அணிந்த ஆசிரியர். புறக்கழுத்தில் வெட்டிய அரிவாளை உருவ முடியாமல் வெட்டப்பட்டவனின் உடல் நீர் நிரம்பிய குடம்போலத் தள்ளாட அங்கேயே விட்டுவிட்டு ஓடுகிறான். யாருமில்லாத வகுப்பில் இரண்டு மாணவர்கள் கஞ்சா இழுக்கின்றனர். மறுநாள் திருமணத்துக்கென விடிய விடிய தாம்பூலப்பை போடுகின்றனர். குழந்தையின் முகத்தில் வேறொருவனின் சாயலைக்கண்ட தகப்பன் பிரசவ அறையைவிட்டு பிணம்போல வெளியேறுகிறான். ஒரே மூச்சில் ஒரு பியர் பாட்டிலை குடிக்கிறாள். மறுநாள் வேலை போய்விடும் என்று தெரிந்தவன் அன்றிரவு முழுக்க ஒரு வேலையை முடித்து நல்ல பேர் வாங்கப் போராடி அது இயலாததால் தூக்கம் அழுத்தும் காலை நான்கு மணிக்கு எச்சில் ஒழுக இனிய சிரிப்புடன் உறங்கும் மகளின் முகம் நினைவிலிருக்க மணிக்கட்டை அறுத்துக் கொள்கிறான்.


பேருந்து நிலையத்தில் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து பிச்சை கேட்கிறார் முதியவர். ஆர்டர் பண்ணிய பிரியாணி வருவதற்கென நாக்கில் எச்சில் ஊறக் காத்திருக்கிறான். மாதவிடாய் தொடங்காத பெண்ணை அறுப்பு முடிந்த வயலில் கிடத்திப்புணர்கிறார் அவள் தாத்தா வயதுடைய தலைநரைத்தவர். கொளுத்தும் வெயிலில் கம்மங்கூழ் வாங்கிக் குடிக்கிறான். செருப்பை கழற்றிவிட்டு சாப்பிடத் தொடங்குகிறான். இரவு முடியுமிடத்தை பார்ப்பதற்காக கண்விழித்து அமர்ந்திருக்கான். குறுஞ்செய்திகள் அனுப்பி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். வானத்துக்கு அந்தப் பக்கம் போய்விடுகிறான். அலுவலக கணினி முன்னே அமர்ந்து கொண்டு வாழ்க்கையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான்.‌ பற்களை கடிக்கிறாள். ஒரே பைக்கில் சென்ற நான்கு நண்பர்களில் இரண்டு பேர் லாரிக்கு அடியில் செல்ல அதில் ஒருவன் தலை நசுங்குவதைப் பார்த்து ஒருவன் சிரிக்கிறான் மற்றொருவன் வாந்தி எடுக்கிறான். கழிவறையில் அமர்ந்து குறிக்குள் விரல் வைத்து நோண்டும் தோல்வியைச் பார்த்தவள் வாயில் ஒழுகும் எச்சிலை துடைத்துக் கொள்கிறாள். பற்குச்சியை வாயில் வைத்திருக்கும் வீங்கிய கண்களுடன் கண்ணாடியை பார்க்கிறான். கால் நொடித்து பக்கத்தில் நடந்த பெண்ணின் பெரிய முலையில் விழுந்தவனுக்கு செருப்படி விழுகிறது. மூத்த எழுத்தாளர் கடைசி காலத்தில் கவனிக்க ஆளின்றி தனிமையில் குடித்து செத்துக் கிடக்கிறார். வேலை முடித்து வந்து ஆசையாய் தூக்கிய குழந்தை வியர்வை நாற்றத்தால் இறங்கிக் கொள்கிறது.


யூடியூப் பார்த்து நடனம் கற்றுக் கொள்கிறாள். இடையளவு குறையவில்லை என ஏங்கி அழுகிறான். மீண்டும் பால் பொங்கிவிட்டதற்காக தன்னையே கடிந்து கொள்கிறான். மூங்கில் கூடையில் பீங்கான் பொம்மைகளின் தலைச்சுமை அழுத்த மயங்கி விழுகிறாள். மீண்டும் ஆத்திரத்தில் அலைபேசியை உடைக்கிறான். காலை மலர்ந்த செம்பருத்தி பூ ஒரு பெருமூச்சுடன் இரவுக்குள் விழுகிறது. புட்டத்தின் அருகிலிருக்கும் தன் புன்னை நக்குகிறது ஒரு நாய். தன் தனிமையை நினைத்து அன்றும் அழுகிறது சூரியன். உலகின் அத்தனை கடல்களும் பொங்குகின்றன. பிரபஞ்சம் என் பிரக்ஞைக்குள் மூழ்கிச் சிறைபடுகிறது. நான் கண் விழிக்கிறேன். என்னுள் ஒரு பிரபஞ்சம் சிறைபட்டிருப்பதே தெரியாமல் என் துக்கங்களை எடுத்து அணிந்து கொள்கிறேன். 


2 comments:

  1. பிரம்மாண்டம்...
    புன்னை(புண்ணை) நக்குகிறது.
    எது சரி?

    ReplyDelete