Tuesday 19 September 2017

நாயகிகள் நாயகர்கள் என் முதல் சிறுகதை தொகுப்பு

அறுந்துவிழும் நுண்திரைகள்

நாயகிகள் நாயகர்கள் சிறுகதை தொகுப்பின் முன்னுரையிலிருந்து சில வரிகள்

தொடர்ச்சியாக சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் "பிறன்" என விலக்கி வைத்திருந்தவர்களை கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாக வேண்டிய அவசியத்தை கொண்டு வந்திருக்கின்றன. இந்த சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலனங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாததே.

அவற்றை பதிவு செய்வதன் வழியாகவே கடந்து செல்ல முடியும் என்ற தீர்மானமான நம்பிக்கையை இலக்கியம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வாமையை உருவாக்குகிறவற்றை புரிந்து கொண்டாலன்றி சற்றேனும் நியாய உணர்வு கொண்ட மனிதன் நிம்மதியாக வாழ்ந்து விட முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டியிருக்கிறது.

வெகு தூரத்தில் இருந்து மட்டும் ஒவ்வாமைகளும் விலக்கங்களும் நம்மை வந்தடைவதில்லை. தொடர்ந்து நம்மை நாம் வெளிப்படுத்திக் கொண்டேஇருக்கிறோம். தொடர்ச்சியாக நமக்கு இடையேயான நுண்திரைகள் அறுபட்டு விழுந்தவண்ணமே உள்ளன. அறிந்தவர்களையே இன்னும் கொஞ்சம் கூடுதலாய் அறிய நேர்வதால் ஏற்படும் நிலையின்மை இத்தனை நாள் அறிந்தவர்கள் என எண்ணி இருந்தவர்கள் வேறொருவறென மாறி நிற்பதைக் காண்கையில் அடையும் துணுக்குறல் என ஒவ்வொரு கணமும் அறிந்த ஒரு மனிதன் ஒரு மனிதன் மட்டுமல்ல என்பதை தொடர்ந்து உணர்ந்து கொண்டே இருக்கிறோம். இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகளில் அறுபட்டு விழுவது அந்த நுண்திரை மட்டும்தான். அத்தகைய நுண்ணியவற்றை சொல்வதே இன்றைய நாளில் சிறுகதையின் பங்களிப்பென இருக்க இயலும். இத்தொகுப்பில் உள்ள கதைகள் அதையே செய்கின்றன.

நாயகிகளை நாயகர்களை வளர்த்தெடுத்த என் அண்ணன் கௌதமனுக்கு அன்புடன் இந்நூலினை சமர்ப்பிக்கிறேன்


நூலினை வாங்க


https://www.nhm.in/shop/9789386737137.html

No comments:

Post a Comment