Sunday 20 January 2019

சேப்பியன்ஸ் - உலகத்தின் கதை

பெருங்கதையாடல்கள் மீது பின்நவீனத்துவர்களுக்கு ஒருவித விலகலான பார்வை இருக்கும். அதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை இவ்வாறாக தொகுத்துக் கொள்ளலாம். பேரரசுகளும் ஏகாதிபத்திய அரசுகளும் பெருங்கதையாடல்கள் மீதே தங்களுடைய அடித்தளங்களை அமைத்தன. அக்கதையாடல்களை மக்களை நம்பச் செய்ததன் வழியாக அவர்களை முடிவில்லாமல் சுரண்டி சமூகத்தின் மிகச்சிறு பகுதியினர் மட்டுமே நலம்பெறும்படியான ஒரு அரசினை ஏகாதிபத்தியங்கள் அமைத்துக் கொண்டன. ஆகவே ஒவ்வொரு பெருங்கதையாடலுக்குப் பின்னும் இருப்பது சர்வதேசக் கனவல்ல சர்வாதிகாரக் கனவே என்று அத்தரப்பு வாதிடும். சர்வதேச ராஜ்ஜியத்தை முன்வைத்து இயங்கிய கிறிஸ்துவம் இஸ்லாம் போன்ற மதங்களையும் பிரிட்டிஷ் அரசு போன்ற ஏகாதிபத்தியங்களையும் இப்பெருங்கதையாடல்களுக்கு நாம் உதாரணங்களாகச் சுட்ட முடியும். பெருங்கதையாடல்கள் அதிகாரத்தை மையம் நோக்கி குவிக்கின்றன. அந்த மையத்துடன் இசைவு கொள்ளாதவர்களை அக்கதையாடலின் மையத்தில் இருப்பவர்கள் ஒடுக்கிறார்கள்.  நடைமுறை அறிவும் இத்தகைய பெருங்கதையாடல் கொண்ட மதங்களும் அரசுகளும் பெரும் அளவிலான வன்முறையை விளைவித்திருக்கின்றன என்று நமக்கு காட்டுகின்றன. அப்படியெனில் பெருங்கதையாடல்கள் இனி தேவையே இல்லையா? ஒவ்வொரு மனிதனும் அவனது வட்டாரம் சார்ந்த கதையாடல்களுடன் புழங்கி வளர்ந்தால் மட்டும் போதுமா?


இக்கோட்பாட்டின் நகைமுரணமாக நம்முடைய புற உலகின் எல்லைகள் மேலும் மேலும் பலகீனமடைகின்றன. உலகின் எப்பகுதியின் எக்கருத்தியலும் நம்மை வந்து பாதிக்கக்கூடியதாக நம்முடைய புறவுலகம் மாறியிருக்கிறது. நம் அகமும் இத்தகைய சலனங்களுக்கு ஏற்றது போல தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க நம்மைச் சூழ்ந்து நிகழ்கிறவற்றை புரிந்து கொள்ளவே நமக்கு ஒட்டுமொத்த உலகின் இயல்பு குறித்த அறிவு தேவைப்படுகிறது. நம்முடைய கேள்விகள் குழப்பங்கள் அனைத்திற்குமான பதிலை ஒரு குறுகிய எல்லையைக் கடந்து மானுடம் என்ற பெரும் எல்லையில் தேட வேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய அறிவியல் உலகம் நம்மை தள்ளியிருக்கிறது.  அப்படியெனில் நமக்கு மீண்டும் பெருங்கதையாடல்கள் தேவைப்படுமா? நம்முடைய செயல்களை குணங்களை கட்டமைப்பதில் "உலகம்" என்ற கருத்தியலுக்கு பங்கு இருக்கும் போது நாம் உலகம் என்பதை ஒற்றை கருத்தியலாக்கி சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறோமா? இந்த முரண்களை இவ்வாறாக இணைத்துப் பார்க்க முடியும்.

நேற்றின் பெருங்கதையாடல்கள் அனைத்தும் தற்செயலானவை அல்லது அக்கதையாடலை உருவாக்கிய தரப்பால் திட்டமிடப்பட்டவை. அதேநேரம் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதபாவனை கொண்டவை. பரலோக ராஜ்ஜியமோ இந்தியாவின் ஜாதிய அமைப்போ அவ்வளவு சுலபமாக கேள்விக்கு உட்படுத்தக்கூடியவையாக அவற்றின் உச்ச ஆதிக்கம் சமூகத்தில் நிலவியபோது இருக்கவில்லை.  ஆனால் இன்று உருவாகிவரும் மானுடம் என்ற கதையாடலின் கூறுகள் அனைத்துமே விமர்சனத்துக்கும் கேள்விகளுக்கும் உட்பட்டவை. உரையாடல் தன்மையும் தற்பகடித்தன்மையும் கொண்டவை.  அதேநேரம் பல்வேறு வகையான வரலாற்று அலைகளை கடந்து வந்திருக்கும், லட்சிய உத்வேகங்களின் மீது கசப்பற்ற அவநம்பிக்கை கொண்ட மனிதர்களை நோக்கி இன்றைய கதைகள் சொல்லப்படுகின்றன. கதைசொல்லியும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாதவனாகவே நம் முன்வந்து நிற்க வேண்டியிருக்கிறது. அவன் உணர்ச்சியின் பக்கம் நகர்ந்து நேற்றின் பொற்காலங்களை பற்றி பேசத்தொடங்கும்போது அவனிடம் கதை கேட்பவன் சலிப்படைகிறான். கதை கேட்பவனுக்கு பொன்னுலகங்கள் பற்றிய கனவுகளோ நேற்று "சரியாக" இருந்து இன்று சீரழிந்துவிட்ட பண்பாடுகள் குறித்தோ அக்கறை இல்லை. உலகின் தொன்னூறு சதவீத கதை கேட்பவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த அவர்களின் பாட்டான்மார்கள் கற்பனையே செய்திராத கருத்தளவில் முந்தைய காலங்களை விட மேன்மையான ஜனநாயக அரசுகளில் வாழ்பவர்கள். ஆகவே உலகின் கதையை அவனிடம் சொல்லவரும் கதைசொல்லி உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்ச்சியற்ற நிகழ்வு விவரிப்புகள் தகவல் தொகுப்புகளாக நின்றுவிடுகின்றன. மானுட அகத்துடன் உரையாடும் கதைகளாக அவற்றால் மாற இயல்வதில்லை. ஆக இன்று உலகின் கதையை சொல்லவரும் கதைசொல்லிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் உணர்ச்சியற்ற தொனியில் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவதே. அத்தகையதொரு நூலாக அறிவின் தொனியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நூலாக சேப்பியன்ஸை நாம் காணலாம்.

யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் என்ற இந்த நூல் "மனிதகுலத்தின் விரிவான வரலாறு" என்ற பின்னொட்டினை கொண்டிருந்தாலும் நான் இதையொரு கதைப்புத்தகமாகவே வாசிக்க விரும்புகிறேன். வரலாறு என்பதே ஒருவகையான கதையாடல்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்த நூலினை நான் இவ்வாறாக வாசிப்பதாகக் கொள்ளலாம். ஒரு வரலாற்று நூலினை கதை என்று சொல்வது சற்று மனவிலக்கத்தை உருவாக்கலாம். அந்த விலக்கத்துக்கு அடிப்படை காரணம் நாம் வரலாற்றினை "உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பு" என்றும் கதையை "புனையப்பட்டு ஒன்று" என்றும் நம்புவதாக இருக்கலாம். ஆனால் ஒரு சரியான வரலாற்று நூல் சம்பவங்களை அடுக்குவதாக இருக்காது. அந்த சம்பவங்களில் இருந்து வரலாற்று மனிதர்களின் முடிவுகளுக்கு சாத்தியமாக ஊகங்களை முன்வைப்பதாக இருக்கும். உதாரணமாக சோழர்களின் வரலாற்றினை எழுதிய கே.எஸ்.நீலகண்டசாஸ்த்ரி "மெய்கீர்த்திகள்" என்று அழைக்கப்படும் சோழர்களின் புகழ்பாடும் கல்வெட்டுகள் பலவற்றை பொய்கீர்த்திகள் என்கிறார். கல்வெட்டுகளில் அளவுக்கதிகமாக எழுதப்பட்டிருக்கும்  புகழ்மொழிகள் அவற்றின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகிறது என்கிறார். இது வரலாற்றாசிரியரின் ஒரு ஊகமே. இந்த ஊகம் வரலாற்றிலிருந்து பல உணர்ச்சிகரமான கற்பனைகளை செய்து கொள்வதில் இருந்து நம்மைத் தடுக்கிறது.

அதுபோல ஹராரி இந்த நூலில் அத்தகைய பல தைரியமான துடுக்கான ஊகங்களை முன்வைக்கிறார். அந்த ஊகங்களையும் முடிவுகளையும் அவர் முன்வைக்கும் விதத்திற்கு பின்னிருக்கும் வலுவான தர்க்கம் அவற்றில் பல ஊகங்களை ஏற்றுக்கொள்ளும்படியாக ஆக்குகிறது.

பின்வரும் ஒரு உதாரணத்தின் வழியே இத்தர்க்கத்தை விளக்கலாம். அதற்கு முன்பாக நூலின் கட்டமைப்பு பற்றி சொல்வது சரியாக இருக்குமென நினைக்கிறேன். ஹராரி இன்றைய நவீன யுகம் உருவாவதற்கு முந்தைய நான்கு முக்கியமான காலக்கண்ணிகளை இந்த நூலின் நான்கு பதிகளாக பிரிக்கிறார்.

அறிவுப்புரட்சி என்ற பகுதியில் சேப்பியன்ஸ் என்ற நமது சிற்றினம் எப்படி பிற குரங்கினங்களில் இருந்து வேறுபடுகிறது என்றும்(தோராயமாக கிமு70000ல் இருந்து கிமு12000 ஆண்டுகள் வரை) அவ்வேறுபாடு எவ்வாறு அவ்வளவு பெரிய வேறுபாடாக இருக்கவில்லை என்பதையும் விளக்குகிறது. வேளாண்புரட்சி(தோராயமாக கிமு12000 முதல் கிமு5000) என்ற பகுதி மனித இனம் நாடோடியாகத் திரிவதில் இருந்து விவாசாய சமூகமாக மாறுவதையும் மனிதகுல ஒருங்கிணைப்பு என்ற பகுதி மதங்களும் வணிகமும் பேரரசுகளும் சிறுசிறு பகுதிகளாக இருந்த குலங்களை ஒன்றிணைத்து அரசுகளாக்குவதையும் (கிமு 4000 முதல் கிபி 1500 வரை) விளக்குகிறது. இறுதி பகுதியான விஞ்ஞான புரட்சி (தோராயமாக கிபி 1500 முதல் இன்றுவரை) இன்றைய சமூகங்கள் நவீன அறிவியலாலும் முதலாளித்துவ வணிக முறைகளாலும் இயங்குவதை விளக்குகிறது.

உலக வரலாற்றின் இந்த புறவடிவத்தை வெவ்வேறு கதைகளின் வரலாற்று நூல்களின் வழியாக நாம் ஏற்கனவே அறிந்தே வைத்திருப்போம். ஒரு வரலாற்றாசிரியனின் பணி என்பது இந்த பெரும்போக்கான புறச்சித்திரத்தில் நுண்ணிய தகவல்களை இணைப்பதும் முரண்கள் தோன்றினால் கிடைத்திருக்கும் புதிய தகவல்களைக் கொண்டு அதைக்களைய முயல்வதும் தன்னுடைய நுண்ணறிவால் மேலும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு சித்திரத்தை உருவாக்குவதுமாகும். ஹராரி இந்த நூற்றாண்டு அளிக்கும் ஆய்வு வசதிகள் மற்றும் தன்னுடைய தர்க்கத்திறன் இரண்டையும் பயன்படுத்தி அப்பணியை இந்நூலில் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த நூல் அளிக்கும் வாசிப்பு சுவாரஸ்யம் என்பது அவர் அளித்திருக்கும் உழைப்பின் வழியே வாசகரிடம் உருவாகி வருவதே.

இப்போது நான் சொன்ன உதாரணம்.நடோடி வாழ்க்கையில் இருந்து மனித இனம் ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்து வாழத்தொடங்கியதை மனித இனத்தின் முக்கியமான மைல்கல் என்றே வரலாறு நம்மிடம் சொல்லி வந்திருக்கிறது. ஆனால் ஹராரி விவசாயப் புரட்சியை வரலாற்றின் மிகப்பெரிய மோசடி என்கிறார். நாடோடி மனிதனின் எலும்புச் சட்டகத்தை ஒப்பிடும்போது விவசாயம் செய்துவாழும் மனிதனின் எலும்புச் சட்டகம் பலகீனமடைந்ததாக தென்படுகின்றது. விவசாயச் சமூகத்தில் தங்கி வாழ்வதால் தவிர்க்கவே முடியாமல் உருவாகும் தனிச்சொத்துகளை மனிதன் மற்ற மிருகங்களிடமிருந்தும் இயற்கை சீற்றங்களில் இருந்தும் காப்பதற்காக போராடியிருக்கிறான். நாடோடி மனிதன் அத்தகைய கவலைகள் அற்றவன்.  மேலும் ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கியது நாடோடி மனிதர்களை விட விவசாய கிராமங்களில் வாழ்ந்தவர்களை அதிகமான நோய்த்தாக்குதலுக்கு உள்ளாக்கியது. நாடோடி மனிதர்களை விட அதிகநேரம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வருவாயும் பருவமாற்றங்களை ஒப்பிடும்போது மிகக்குறைவானதாகவே இருந்திருக்கிறது. இந்த சூழலை சற்று விளையாட்டாக ஹராரி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

'எல்லோரும் சொல்வதுபோல அரிசியையும் கோதுமையையும் மனிதன் தன்வயப்படுத்தவில்லை. அரிசியும் கோதுமையும் மனிதனை தன்வயப்படுத்திக்கொண்டன'



விவசாயச் சமூகத்தினால் நிகழ்ந்த ஒரேயொரு நன்மை தங்கி வாழ நேர்ந்ததால் சேப்பியன்களின் எண்ணிக்கை அதிகமானது மட்டுமே என்கிறார் ஹராரி. புவியில் ஒரு உயிரினம் வெற்றிகரமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க அதன் எண்ணிக்கையையே அடிப்படை அலகாகக் கொள்கிறோம். அந்த அலகினை மட்டும் அடிப்படையாகக் கொண்டால் அதிக அளவிலான மனிதர்களை விவசாயச் சமூகம் உற்பத்தி செய்தது உண்மையே. ஆனால் அதிக எண்ணிக்கை என்பது மட்டுமே ஒரு உயிரினம் மண்ணில் வெற்றியடைந்ததாக மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கான அடையாளமாகிவிடுமா என்ற கேள்வியை இந்நூல் எழுப்புகிறது. இதுபோன்ற தைரியமான ஊகங்கள் மற்றும் கேள்விகளால் இந்த நூல் முக்கியமானதாகிறது.

இந்நூலின் முக்கிய பங்கெளிப்பென வாழ்வு பற்றிய நம் அடிப்படை கற்பனைகளின் மீது கேள்வியே என்றுகூட சொல்லிவிடலாம். மொழி,குடும்பம்,நிதி நிறுவனங்கள்,அரசுகள்,மதம்,விஞ்ஞானம் என ஒவ்வொரு காலத்திலும் மனிதனின் வாழ்வினை வழிப்படுத்திய ஒவ்வொரு கருதுகோளின் ஆரம்ப நிலைகளின் மீதான சில தெளிவுகளை இந்த நூலில் இருந்து பெற முடிகிறது. மனிதன் நிமிர்ந்து நடப்பதுதான் குலங்களும் குடும்பங்களும் உருவாகக் காரணம் என நம்மிடம் யாரும் வந்து சொன்னால் நாம் சிரித்துக் கடக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் அறிவியலின் பதில் அப்படியானதாகவே இருக்கிறது.

விவசாயச் சமூகத்தில் இருந்து உலகம் முழுக்க பெருஞ்சமூகங்கள் உருவாகி வருவதற்கு ஹராரி மூன்று காரணங்களை சுட்டுகிறார். வணிகம்,மதம்,பேரரசு என்ற இந்த மூன்று காரணிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னியிருக்கும் விதத்தையும் அவை மனிதர்களிடையே உருவாக்கும் பரஸ்பர நம்பிக்கையும் மூன்றாவது பகுதி விளக்குகிறது. மதம் குறித்த ஹராரியின் கருத்துக்கள் மிகவும் வெளியே நின்று விலகலுடன் சொல்லப்படுகிறவை. ஓரிறை வழிபாடு, பல கடவுள் வழிபாடு, இருமை வழிபாடு என ஹராரி மதங்களை சுருக்கிக் கொள்கிறார். கிறிஸ்துவம்,இஸ்லாம் போன்ற மதங்களை ஓரிறை வழிபாட்டுக்கு ஆதாரமாக்குகிறார். புத்த மதத்தை மதத்தின் மையத்தில் கடவுளே இல்லாத மதமாக அடையாளப்படுத்துகிறார். மதம் சார்ந்த இப்பார்வை ஒற்றைப்படைத் தன்மை கொண்டதாக இருந்தாலும் மதங்களின் அரசியலை இந்த நூல் சரியாகவே பேசியிருக்கிறது. அறிவியல் புரட்சியின் காலமாக நாம் வாழும் கடைசி ஐந்து நூற்றாண்டுகள் சுட்டப்படுகின்றன. அறிவியல் புரட்சியின் மையமாக ஐரோப்பா மாறுவதையும் அதன் வழியே அதன் பண்பாடு உலகம் முழுக்க இரக்கமற்ற போர்கள்,காலணியாதிக்கம்,ஏகாதிபத்தியம் என பல வழிகளில் பரவுவதை இந்தப் பகுதி விளக்குகிறது. நவீன அறிவியலுக்கும் அதற்கு முந்தைய அறிவியலுக்குமான வேறுபாடாக ஹராரி குறிப்பிடும் அம்சம் முக்கியமானது. மதத்துடன் பிணைந்திருந்த முந்தைய அறிவுத்துறைகள் 'அறியப்பட வேண்டியவை அனைத்தும் ஏற்கனவே அறியப்பட்டுவிட்டன' என்கிற தோரணையை மேற்கொள்கின்றன. அதாவது மனிதர்களுக்கு தேவையான அறிவனைத்தும் இறைவனால் அருளப்பட்டுவிட்டது. ஒருவேளை மனிதன் ஒரு விஷயத்தை அவனது புனித நூலில் காண இயலாவிட்டால் அவ்வறிவு அவனுக்கு தேவையானதல்ல என்று இறைவன் முடிவு செய்து விட்டதாக பழமையான அறிதல் முறைகள் சொல்கின்றன. ஆனால் நவீன அறிவியல் 'நாம் அறிந்தது சொற்பமே' என்ற தொனியுடன்தான் தன் தேடலையே தொடங்குகிறது என ஹராரி வாதிடுகிறார். இவ்வாதம் ஏற்றுக்கொள்ளும்படியானதாகவே நூலில் முன்வைக்கப்படுகிறது.

ஏறத்தாழ உலகின் தோற்றத்தில் இருந்து முதலாளித்துவ வணிகம் செயல்படும் விதம்வரை ஒரு கழுகுப் பார்வையில் இந்த நூல் அளிக்கிறது. மனிதன்(சேப்பியன்ஸ்) பரிணாம வளர்ச்சி அடைந்து நாடோடியாகத் திரிந்து தங்கி வாழ்ந்து பேரரசுகளை அமைத்து இன்றைய வாழ்க்கையை நோக்கி நகர்ந்த ஒட்டுமொத்த வரலாற்றையும் இந்த நூல் பேசியிருக்கிறது. இந்நூல் பொதுச்சமூக தளத்திலும் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குவதற்கான விவாதங்களை தொடங்கி வைப்பதற்கான பல புள்ளிகளை கொண்டுள்ளது. இன்றைய உலகின் அரசியலை சமூக நகர்வுகளை தீர்மானிப்பதில் வெகுமக்கள் விருப்பங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. வெகுமக்கள் விருப்பங்களை சரிநிலைகளை பலவகையிலும் பாதிப்பதாக சேப்பியன்ஸ் அமையும். நூலாசிரியர் இஸ்ரேலியர்.  லண்டனில் கல்வி கற்றவர். எனினும் பொதுவாக மேற்கத்தியர்களுக்கே இருக்கும் "வெள்ளை மனிதனின் சிக்கல்"(white man's burden) ஹராரிக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. சொல்லப்போனால் கடந்த ஐந்து நூற்றாண்டுகளைக்கு முன்பு மேற்கு ஐரோப்பாவை எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லாத நிலப்பரப்பாகவே ஹராரி காண்கிறார். இன்றைய மனிதனின் மனதில் கட்டமைக்கப்படும் நவீன புனைவுகளையும் ஹராரி புனைவுகள் என்றே சொல்கிறார். மதம்,ஜாதி போன்ற பழமையான கருத்தாக்கங்கள் மட்டுமின்றி அரசு,நிறுவனம் போன்ற நவீன கருத்தாக்கங்களையும் புனைவுகள் என்றே ஹராரி சொல்கிறார்.

இறுதியாக மனித இனம் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறதா? மகிழ்ச்சியை எதைக்கொண்டு அளவிடுவது என்ற கேள்வியை முன்வைத்து நூல் முடிகிறது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதனின் வாழ்நாள் அதிகரித்து இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. இன்றிருக்கும் மனிதன் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு அறிவுத்துறைகளில் நாளை முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் மனிதர்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?

ஹராரியின் சொற்களில்

We are more powerful than ever before…Worse still, humans seem to be more irresponsible than ever. Self-made gods with only the laws of physics to keep us company, we are accountable to no one. - Sapiens



பிறதுறை விஷயங்களில் ஹராரி நிகழ்த்தியிருக்கும் எல்லை மீறல்கள் குறித்த விமர்சனங்கள் பரவலாக இந்த நூல் மீது வைக்கப்படுகின்றன. எனினும் ஒரு பொதுவாசகனுக்கு பல திறப்புகளை அளிக்கவல்ல நூல் இது என்பதில் சந்தேகமில்லை.

Sapiens - A brief history of humankind

3 comments:

  1. மிக அருமையான கட்டுரை. குழப்பமும். தெளிவும் இரண்டையுமே. உணர்ந்தேன். நன்றி இது போல் அவ்வப்போது. எழுதுங்கள்.

    ReplyDelete
  2. நாடோடி வாழ்க்கை வாழும் மக்களை இன்றும் கா ணத்தானே முடிகிறது. சுத்தமின்மையும், நாகரீகமின்மையையும் வறுமையும்,படிந்திருக்கும் அவர்களிடத்து
    ஆரோக்கியமும் வலிமையும்கூட குறிப்பிடும்படியாக தெரியவில்லையே. ஆயினும் அவர்கள் வாழ்வில் இயல்பாக அமைந்திருக்கும் சுதந்திரமும், பற்றற்ற வாழ்க்கைப்போக்கும்தான், அவர்களை நில உடைமைசமூகத்தைவிடவும் கவர்ச்சியுடையவர்களாக இப்போதும் காட்டுகிறது.
    வள்ளுவமும், நீதி இலக்கியமும் முன்னிறுத்தப்பட்ட காலத்து தமிழர் வாழ்வை ஒத்த சமூகம் குறித்து ஹராரி என்ன சொல்கிறார்
    என்பதையும் நீங்கள்தான் விரிவாக எழுதமுடியும். இறுதியாக அவர் முன்வைக்கும் கருத்து தற்காலம் அதிகம் எல்லோராலும் பேசப்படுகிற
    ஒன்றாகத்தன் தெரிகிறது. மிக அருமையான அறிமுகத்தை தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஓநாய் குலச்சின்னத்தில் குறிப்பிடும்படி வேட்டை சமூகத்தை வேளாண் சமூகம் சூறையாடி விட்டதுதான். ஆனால் வளர்ச்சியின் கருதுகோள்கள் என்ன. ?

    நா. வானமாமலையின் மார்க்ஸிய தத்துவமும் இந்தியநாத்திகமும் குறிப்பிட்டது போல் இறைமையைக் கற்பித்ததே முடியாட்சி தான். இவர் குறிப்பிட்டது போல் வணிகம், மதம், பேரரசு (sovereignty ) ஆகியன மனிதர்களின் விருப்பங்களையும் வழிபாடுகளையும் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்றன. நோ அதர் வே. சேப்பியன்ஸ் பற்றி சரியான கணிப்பு.

    ReplyDelete