Tuesday 4 October 2016

எஞ்சுபவன் - சிறுகதை

மூத்திரம் பெய்வதற்கு வீட்டெதிரே செல்லும் சாலையை கடந்து சென்று குத்துக்காலிட்டு அமர்ந்தேன். தூரத்தில் ஒரு ஈருருளி நெருங்கும் ஒலி கேட்டது. மூத்திரம் இன்னும் வரத் தொடங்கவில்லை. அந்த வண்டி என்னைக் கடப்பதற்குள் பெய்துவிட வேண்டுமே என்ற பதற்றம் ஏறியது. இயல்பான தன்னுணர்வினால் மூத்திரம் பெய்வதற்கு அப்போது வரவில்லை. படுப்பதற்கு முன் இது ஒரு சடங்கு போலவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. படுக்கையை நனைக்காமல் இருக்க சிறு வயதில் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. மூத்திரம் பெய்து விட்டு கை கழுவி விட்டு வாய் கொப்பளித்த பின் படுக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கையில் அப்படியே உறங்கி விடுகிறவர்களை பார்க்கையில் அடக்க முடியாத குரோதம் எழும். நல்ல வேளையாக அந்த ஈருருளி கடப்பதற்கு முன்னே சில சொட்டுகள் பெய்து விட்டு சாலையைக் கடந்து வீட்டிற்கு வந்து விட்டேன்.

அந்த கண நேரப் பதற்றம் கூட வீட்டிற்குள் வந்ததும் பெரிதாகத் தெரிந்தது.

குணசேகர் சொல்வான் "குடும்பம் மீண்டும் மீண்டும் நம்மீது படியும் உலகின் சேறுகளை அகற்றிக் கொண்டே இருக்கிறது. சில சமயம் அந்த சேற்றில் பொதிந்திருக்கும் வைரங்களையும் சேர்த்து."

"என்னோட பேரு பௌத்தத்திலேர்ந்து வந்திருக்கணும்னு நெனைக்கிறேன். குலசேகரன்னா குலத்தைக் காப்பவன். குணசேகரன்னா குணத்தை காப்பவனா?" என்பதே அவனுக்கும் எனக்குமான முதல் உரையாடல். அவன் ஏதாவது சொல்லும் போதெல்லாம் புண்ணில் டிஞ்சர் படுவது போல் எரியும்.

"நீ ஏன் கல்யாணம் வேணான்ற?" என்றேன் ஒருமுறை. வேலை முடிந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தோம்.

"நீ என்ன நினைக்கிற?" என்றான்.

பிரசங்கம் நிகழ்த்தப் போவதற்கான முகபாவனை அவனுக்கு ஏற்கனவே வந்துவிட்டது.

"நீ இம்பொடெண்ட் இல்ல செக்ஸ் வச்சிக்க பயப்பட்ற" என்றேன். அவ்வார்த்தைகள் அவனை ஒன்றும் செய்யாது என்றும் மனம் சொல்லியது.

"கல்யாணத்துக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்? பெண் உடல் எனக்கு பழக்கம் தான்" என்றான்.

அதை ஏற்கனவே அறிந்தது போல பதறாமல் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு "பட்டிக்காட்டு பதற்றம்" ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டாவது மனைவி உள்ளவனையே ஒழுக்கக் கேடானவனாக எண்ணிய அந்த அதீத ஒழுக்க மனநிலை என்னுள் மாறவில்லை என்பது அப்போது வெட்கமாக இருந்தது.

"பின்ன லட்சியவாதமா?" என்றேன் அவன் மறுப்பான் எனத் தெரிந்தும்.

சில வினாடிகள் புரியாதவன் போல் விழித்தான். நீளமாகப் பேசத் தொடங்குவதற்கு முன் அவன் மேற்கொள்ளும் பாவனை அது. அவன் நிச்சயம் வரலாற்றையும் சமூகத்தையும் தொட்டெடுத்தே தன் செயலுக்கு நியாயம் கற்பிப்பான் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே
"பழங்குடி சமூகங்களில் இருந்துதான் இந்த நவீனத்த நோக்கி நாம வந்திருக்கோம். தொடர்ச்சியான அப்டேஷன். இன்னிக்கு நாம இருக்குற தனித்த குடும்பம் அப்படிங்கற அமைப்பு எங்கேர்ந்து உருவானது. பழங்குடிகளுக்கு மேல அரசாங்கம்னு ஒன்னு உருவாகி வந்தப்ப தானே. அரசாங்கம் எந்த அளவுக்கு தனிப்பட்ட சமூகங்களோட தொடர்பு ஏற்படுத்திகிட்டோ அந்த அளவுக்கு அந்த சமூகத்தில விரிசல் விழ ஆரம்பிச்சது. திடமான பனிக்கட்டி உருகி மிதக்கற மாதிரி கூட்டான சமூகங்கள் விலகி விலகி சின்ன சின்ன சமூகங்களா ஆச்சு. அந்த சின்ன சமூகங்களோட இன்னும் சுருக்கப்பட்ட வடிவமே குடும்பம் இல்லையா?" என்று முதலில் எதையோ கண்டுபிடித்தவன் போல குறிப்பிட்டான். நான் தலையசைத்தேன்.

"சமூகங்கள் ஒன்றிணைந்து தேசம்ங்கிறது உருவான பிறகு இன்னிக்கு இருக்கிற முதலாளித்துவம் வந்த பிறகு குடும்பமும் சுருங்கிச்சு. உடல் ரீதியா தொடர்பு இருக்கிறவங்களால மட்டும் உருவான குடும்பம். உடலுறவு கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் அந்த உடலுறவினால் உற்பத்தியான குழந்தைகள். இன்றைய குடும்பம் அவ்வளவு தான். அந்த குடும்பத்த ஒன்றிணைச்சது அவங்களோட ரத்தம். நீ உன்ன ஒரு உலகக் குடிமகனா உணர்ந்து கொண்டே வீட்டுக்கு நல்ல பிள்ளையாவும் இருக்க முடியாது. இனி அடுத்தகட்டம் இன்னிக்கு இருக்கிற குடும்பமும் இல்லாம ஆகணும்ங்கிறது தான். பொதுவா ஜாதி சொத்து எமோஷனல் நீட் செக்ஸ் இதத்தாண்டி ஒருத்தன் குடும்பத்தோட இருக்க நினைக்கிறது அநாவசியம். குடும்பம் அற்ற இந்த விடுதலைய நோக்கித்தான் நம்ம விஞ்ஞானமும் சமூகமும் இத்தனை வருஷம் பயணம் பண்ணிருக்குன்னு கொஞ்சம் நாம கடந்து வந்த பாதைய பாத்தாலே புரியும். செக்ஸ் தவிர ஒரு மனுஷன் தனக்கு தேவையான அத்தனையும் தானே உருவாக்கிக்க முடியும். சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவசியம் இல்லாத தனியனா இருக்கிறது உண்மையிலேயே பெரும் சுதந்திரம். ஆனா அதை தைரியமானவங்களால மட்டும் தான் செய்ய முடியும். நான் அவர்கள்ல ஒருத்தன்" என்றான்.

"உன்னோட பயம்னு கூட சொல்லலாம்" என்றேன்.

"இன்னொருத்தன எந்த விதத்திலையும் சார்ந்திருக்காம இருக்க நினைக்கிறது பேரு பயம்னா அப்படியே இருக்கட்டும்" என்றான்.

"இல்ல நீ பெண்கள பயப்பட்ற" என்றேன். சீண்டப்பட்டு விட்டான்.

"இங்க பார்" அவன் குரலில் மெல்லிய எரிச்சல் தெரிந்தது " பெண்களோட விளையாடுறது சர்க்கிள்ல ரெண்டு டார்கெட் பிக்ஸ் பண்ணி ஓடுறது மாதிரி. பெண்ணுக்கு ஆணோட இருப்பு ஒரு முடிவிலி. அவ தொடர்ந்து எதிர்பார்த்துட்டே தான் இருப்பா. பெண்ணை எந்த விதத்திலும் ஒரு ஆண் திருப்தி படுத்த முடியாது. காதல் மாதிரி சில அசட்டுத்னங்கள வெச்சு பெண்ணை புரிஞ்சிக்கிற ஒன்ன மாதிரி இடியட்ஸ் தான் பெண்கள கடந்து போக கஷ்டப்படுவாங்க. பெண்ணை அவளோட அத்தனை நளினங்களையும் வேஷங்களையும் புறக்கணிச்சுட்டு அணுகுகிறவங்களுக்கு பெண் ஒரு பொருட்டே அல்ல. பெண்கள பொருட்படுத்தறவன் தான் அவ பின்னாலயே அலையுறான். மடத்தனமான பெண்கிட்ட கெஞ்சுறான். அவளோட உறுதி தெரிய வரும்போ அவள திட்றான். அடிக்கிறான். ஏன் கொலையே பண்ணிடறான். பொருட்படுத்தாம வெலகுறது தான் பெண்ணை சீண்டும். அவளை முடிவில்லாம வதைக்கும். இயற்கை அவளுக்கு கொடுத்த அத்தனையும் ஒரு பொருட்டாவே எடுத்துகாம போனா தான் பெண்ணை முடிவில்லாம புண்படுத்த முடியும். என் ஆட்டம் அது தான். ஒவ்வொரு பெண்ணை பத்தியும் ரொம்ப ஷார்ப்பா என்னால வர்ணிக்க முடியும். ஆனா அதுல என்னை மனசுல வெச்சுக்கங்கிற கெஞ்சல் இருக்காது. அது அவள சீண்டும். எங்கேயோ அவளை வழிபடுறதுக்கான திறப்பு எங்கிட்ட இருக்கும்னு தேடுவா. ஆனா அத கடைசிவரை கண்டுபிடிக்க முடியாது. அந்த ஆட்டத்தில் என் வாழ்க்கையை நான் வீணடிக்க விரும்பல. என் வீடும் எனக்கு அப்படித்தான். அதோட எனக்கு எந்தவித எமோஷனல் பாண்டேஜும் கிடையாது. என் பாக்கெட்டில இருக்கிற கடைசிப் பைசாவும் தீர்ந்து போற வரைக்கும் என்னால் அவங்களுக்காக உழைக்க முடியும். அது ஒரு நன்றிக்கடன். என் தலைமுறையோட என்னை இணைச்சதுக்கு என்னை உயிரோட இருக்க வெச்சதுக்கு." அவனுக்கே அதை சொல்லிக் கொண்டான் போல.

"பால குடிச்சிட்டு படுறா. ஏதாவது தின்னா தான உடம்புல தெம்பு நிக்கும். கருக்கள்ல முழிச்சிகிட்டு இடுப்ப வலிக்குது அடுப்ப வலிக்குதுன்னு சொல்லாத" என்றவாறே அருகே வந்தாள் அம்மா. சொறுகிய இமைகளை கிடுக்கியால் இழுத்தது போல வலி எழ விழித்துக் கொண்டேன்.

"ஏண்டி இப்படி கத்தித் தொலையுற. அமைதியா பேசத் தெரியாத உங்களுக்கெல்லாம். பொறந்தன்னைக்கே பொதைச்சு தொலச்சிருக்கலாம்ல. இந்த பால குடிச்சிட்டு தான் நாளைக்கு போய்  எல்லாத்தையும் பொரட்டி போறனா? எடுத்துட்டு போடி" என்ற வார்த்தைகளால் மனம் அலையடித்துக் கொண்டிருந்தது. சில நொடிகள் அப்படியே அம்மாவை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என்னுள் கொந்தளிக்கும் அத்தனை வார்த்தைகளையும் அவள் அறிவாள். இருந்தும் ஏதும் நடக்காதது போல என் எதிர்ப்பும் கோபமும் எந்த பக்கமும் வெளிப்பட்டு விட முடியாதபடி ஒரு சொல்லெடுப்பாள். அது மேலும் என்னை கோபமுறச் செய்தாலும் கோபத்திற்கான குவிமையத்தை இழந்து விடுவேன். பாலை எடுத்துக் குடித்தேன்.

"உள்ள வந்து படு. பனில கெடந்தன்னா அப்புறம் ஆஸ்பத்திரிக்கு அழணும்" என்றவாறே உள்ளே சென்றாள். இன்னும் என்னை சிறுவனாக அவள் கட்டுப்பாட்டில் இருப்பவனாக எண்ணச் செய்யும் பாவனை அந்த வார்த்தைகள். குணசேகர் முகம் நினைவில் எழுந்தது. உலகின் கட்டக்கடையனாக என்னை உணர்ந்தேன். நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே கை முட்டியால் ஓங்கிக் சுவற்றை குத்தினேன். வலி மெல்லப் பரவி ஒரு நிம்மதியை உருவாக்கியது.

தொடர்ந்து வாழ்க்கை நிறமிழந்து வருவதாகப்பட்டது. சனி ஞாயிறு இரு தினங்களும் விடுமுறை என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளின் விடியல் வித்தியாசமாகவே இருக்கும். புதுமையான அனுபவங்கள் ஏதுமில்லை தான். அப்பாவுடன் கறிக்கடைக்கு செல்வது கிரிக்கெட் மாலைத் திரைப்படம் என இன்று யோசிக்கையில் வழக்கமாகத் தெரியும் அந்த நாளை அழகாக்கியது எது? அப்பா தான். எழுந்ததும் முதல் நினைவு அவருடையதாகவே இருக்கும். ஞாயிறன்று மட்டும் இனிமையும் விரிவும் கொண்ட மனிதராக நடந்து கொள்ளும் அவரை மட்டுமே இன்று நினைவிருக்கிறது. என் எதிரே களைத்துச் சோர்ந்து நரைத்த தலையுடன் வானை வெறித்தபடி அமர்ந்திருக்கும் இந்த ஜடத்திற்குள்ளா அவர் இருந்தார். அவருக்குத் தெரியாதது எதுவும் இருக்க முடியாது என்ற நம்பிக்கை உடையத் தொடங்கிய பின்னே நான் வாழத் தொடங்கினேன். அதுவரை வாழ்ந்தது என் வாழ்க்கை கிடையாதா?

"தேவடியாப் பயலே அன்னிக்கு எங்கிட்ட என்ன கேட்ட? பொம்பள கூட படுக்க பயமான்னா?" வெகுநேரம் மௌனமாக குடித்துக் கொண்டிருந்தவன் திடீரெனப் பாய்ந்தான்.

சட்டென நிதானப்படுத்திக் கொண்டு "தன்னை பத்தி யோசிக்கிறவன் குழந்தை பெத்துகிறது மாதிரி அயோக்கியத்தனமெல்லாம் பண்ண மாட்டான் மணி. என்னைப் பொறுத்தவரை என் பையனோ பொண்ணோ செய்யக்கூடாதுன்னு நெனைக்கிற ஒன்ன முதலில் அப்பன் செய்யாம இருக்கணும். குடிக்கிற எந்த அப்பனுக்கும் பையனத் தண்ணி அடிக்காதடான்னு சொல்ற உரிமை தார்மீகமா இல்லாம ஆயிடுது. தன்னை மறைச்சி ஒளிச்சு நெளிச்சு ஒரு அப்பன் தன்னை பத்தி பிள்ளைக்கு குடுக்கிற சித்திரம் ரொம்பவே ஆபாசமானது. அந்த ஆபாசத்துக்கு துணை நிக்கிறது தான் பெரும்பாலும் அம்மாக்கள் இங்க செய்றது" அவன் குரல் இடறியது. தன்னுடைய நொய்மையான இடம் நோக்கி அவன் நகர்ந்து கொண்டிருந்தான்.

"ப்ரீ மேரிட்டல் செக்ஸ் பத்தியோ தொடர்புகள் பத்தியோ நீங்க பசங்கள்ட்ட சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் அவன் வளந்த பெறகாவது ஒழுங்கா இருக்கலாம்ல. பத்து வயசுப் பையன் குடிக்கவே மாட்டார்னு நெனச்ச அவனோட அப்பா அம்மாவோட சேர்ந்து குடிச்சிக்கிட்டு போர்னோகிராபி பிலிம் பாக்கிறது நேர்ல பாக்கிறது அவன எப்படி பாதிக்கும்ணு உனக்கு புரியாதுடா . ஏன்னா உன்ன பெத்ததுங்க எல்லாத்தையும் கவனமா பண்ணி இருக்குதுங்க" என்று பைத்தியம் போல சிரித்தான். என் தலை சூடாவதை உணர முடிந்தது.

"யோக்கியங்கிறவன் மத்தவனுக்கு தெரியாம தன்னோட ஆசைகளை நிறைவேத்திகிறவன். அவ்வளவு தானே" என்று மீண்டும் சிரித்தான்.

"ஒவ்வொரு தம்பதிகள்ட்டயும் நான் கேக்குற கேள்வி இதுதான். உங்க பிள்ளைக்கு நீங்க யோக்கியமா இருக்கீங்களா. நிச்சயமா கிடையாது. அந்த குற்றவுணர்வை போக்கிக்கத் தான் உங்க முட்டாள்தனமான மூளைக்கு எது நல்ல ஸ்கூல்னு தோணுதோ அங்க போய் எலும்பு துண்ட கடிக்கிற நாய் மாதிரி  நிண்ணு சீட்டு வாங்குறீங்க. லட்ச கணக்குல செலவு பண்றீங்க. குழந்தைகளுக்காக உங்களையே தேய்ச்சுகிறதா அசிங்கமா வேஷம் போடுறீங்க. உங்ககிட்ட அயோக்கியத்தனம் இருக்கிற வரைக்கும் உங்க பிள்ளை அயோக்கியனத்தான் உங்கள கஷ்டப்படுத்துறவனா தான் இருப்பான். அப்படி அவன் இருக்கிறது தான் சரி. முள் செருப்புல நடக்கிறதோ முட்டி போட்டு வேண்டிகிறதோ இல்ல உங்க பிள்ளைங்கள்ட்ட மன்னிப்பு கேளுங்க" என்ற போது முழுதாகவே அவன் உடைந்து விட்டான். வெகு நேரம் இரு கைகளாலும் தலையை மாறி மாறி அறைந்து கொண்டவன் திடீரென மதுப்புட்டியை எடுத்து ஒரே மூச்சில் குடித்துத் தீர்த்தான். பெரிதாக ஏப்பம் விட்டவன் மேசையில் சாய்ந்து விட்டான்.

திடீரென எழுந்து"கேட்க மாட்டீங்க. நீங்க யாரும் மன்னிப்பு கேக்க மாட்டீங்க. பெத்தவங்க பாவம் புள்ளைய தொடருங்கிறது ஒரு பழங்குடி நம்பிக்கை தான். ஆனா நீங்க பண்ற மொத்த செலவும் அந்த பழங்குடி நம்பிக்கைய மறுக்கத்தானே. உங்க புள்ள எதுவா வேணுன்னாலும் ஆகலாம். எந்த உச்சத்தை வேணுன்னாலும் தொடலாம். ஆனா எல்லாத்துக்கும் அப்புறம் உங்கள நம்பின பாவத்துக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்" என்றவாறே மீண்டும் படுத்துக் கொண்டான்.

பெருமூச்சுடன் எழுந்து வீட்டிற்குள் சென்றேன். அனலடிப்பது போன்ற வெக்கை. இருந்தும் தினமு‌ம் தூங்கும் இடம் என்பதால் அங்கேயே படுத்துக் கொண்டேன். தூக்கமும் வரவே செய்கிறது.

No comments:

Post a Comment