Friday 14 September 2018

குட்டியப்பா - கேப்ஸ்யூல் கதை

காவக்காரன் மேட்டுக்கு போனால்தான் சாமிவரும் என்று மாரிமுத்து குட்டியப்பா சொல்லியபோது அவர் விபூதியடித்தால்தான் வீட்டுக்கு வரமுடியும் என்று மண்டபத்தில் காத்திருக்கும் மணமக்களை எண்ணி பீதி கொண்டு மண்டபத்திற்கு எதிர்திசையில் இருக்கும் மேட்டுக்கு செல்வதற்கு முன் டாஸ்மாக்கில் நிறுத்தி குட்டியப்பாவுக்கு ரொம்பவும் எனக்கு கொஞ்சமும் வாங்கி ஊற்றிக்கொண்டு நூறில் வைத்து வண்டியைத்திருகி குட்டியப்பாவை மேட்டில் இறக்கியதும் குடியாலோ கடவுளாலோ அவர் உடற்தசைகள் துள்ள பதமாக அவரை பைக்கில் ஏற்றியதும் "விபூதிய மறந்துட்டண்டா" என்றவர் கத்த யூடர்ன் அடித்து அவசரமாக விபூதியை எடுத்துக்கொண்டு நல்லநேரம் முடிவதற்குள் மண்டபத்துக்குள் நாங்கள் நுழைந்தபோது வெளியேறக்காத்திருந்த மணமக்கள் மீது குட்டியப்பா வந்தவேகத்தில் துள்ளிக்கொண்டே பாலிதீன் பைக்குள் கைவிட்டு விபூதியை எடுத்து ஓங்கி அடிக்கப்போகும் சமயத்தில்தான் அது எறும்பைக் கொல்லும் பூச்சிபௌடர் என்று எனக்குத் தெரிந்தும் தாமதமாகிவிட்டதால் மணமக்கள் சகிதம் குட்டியப்பா மயங்கிவிழுந்தார்.

No comments:

Post a Comment