Tuesday 2 June 2020

பூரணி சிறுகதை குறித்து மணிகண்டன்


அன்புள்ள சுரேஷ் 

பூரணி மோகமுள் நாவலை படித்திருப்பார் என்று எழுதி உங்களை வெறுப்பேற்ற ஆசையாக இருக்கிறது. நல்ல சீரான நடையில் எந்த வித குழப்புமின்றி கதை முடிகிறது. மிகவும் ரசித்து படித்தேன்.

ஒளிர் நிழல் குறித்து முன்னர் உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.பூரணி கதையால் பாதிக்கப்பட்டேன் என்று கூற இயலாது, எனினும் நீங்கள் ஆளுமை சிக்கல் குறித்த பல நுட்பமான இடங்களை இந்தக் கதையில் பல இடங்களில் உராய்ந்து சென்றுள்ளீர்கள். நல்லது. 

நட்பு

இருப்பதிலேயே  எளிதானது நமது தேர்வின் வழி நாம் தேர்ந்தெடுக்கும் நமது நண்பர்களுக்கும் நமக்கும் உள்ள உறவை புரிந்து கொள்வது. நம் தேர்வின் வழி வருவதால் நமக்கு பிடித்தமானது அதே நேரத்தில் நண்பர்களின் மாற்று பார்வை நாம் ஆளுமையில் உராய்கையில் நாம் என்ன மாதிரி உணர்கிறோம், நட்பை எவ்வாறு தொடர்கிறோம் என்பதே நாம் ஆளுமையில் ஒரு பகுதியாகிறது. கதையில் விக்னேஷின் நண்பன் கசப்பான ஒன்றை கூறினாலும் அது மரபார்ந்த ஒன்றுக்கு அருகில் இருக்கிறது.

மரபு 

நாம் காலங்களின் அடுத்த சிக்கல் நாமே விரும்பி அணிந்து கொள்ளும் முற்போக்கு பாவனை , சமூக ஊடகங்கள் வழி இந்த பாவனையை நாம் உண்மை என்று நம்ப தொடங்குகிறோம் சமூக ஊடகத்தின் வெளியே  வாழ்வில் உள்ள அனைத்தையும் இந்த முற்போக்கு தராசில் வைக்கிறோம், அல்லது தராசில் வைக்கையில் முற்போக்கு பலமிழந்து மரபு பக்கம் நாம் சாய்கையில் நாம் ஆளுமை மீது நமக்கே நம்பிக்கை குன்றுகிறது. மரபு என்று வருகையில் குடும்ப பாரம் என்கிற ஓன்று ஆளுமையை பாதிக்கிறது. பொறுப்பு துறப்பை முற்போக்காக மீண்டும் மாற்றி பாவனை புனைகயில் மேலும் ஆளுமை சிக்கல் வருகிறது. விக்னேஷ் தேடுவது  குடும்ப பாரத்தை சுமந்து செல்ல 
இன்னொரு அம்மாவை என்று கருதவும் வாய்ப்பிருக்கிறது.
அலுவலகத்தில் மற்ற உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்து கூறுகையில் பாவனை அணிய வேண்டிய தேவை விக்னேஷுக்கு இருக்கிறது இல்லையேல் இது குறித்து பெரிதாக அவன் அலட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபான ஒரு சொல் , மரபான ஒரு வாழ்த்து மரபான ஒரு ஒப்பாரி அவனுக்கு கடினமான ஒன்றாக இருக்கிறது.

குடும்ப பாரம் 

இந்த குடும்ப பாரம் என்பது ஸ்தூலம் இல்லாதது எங்கெங்கும் வியாபித்து இருப்பது. அம்மாக்கு அப்பாவிற்கு தங்கைக்கு மனைவிக்கு குழந்தை களுக்கு பாட்டிக்குக் தம்பிக்கு அத்தைக்கு இன்னார்க்கு என பட்டியல் கேட்பது போல தோன்றுவது, செய்ய செய்ய வாங்க வாங்க குறையாத சம்சார சாகரம். எப்பேர்ப்பட்ட ஆளுமையையும் சரிக்கவோ தாங்கவோ வல்லமை உடையது ,இன்று வரை இதன் மாற்று பகல் கனவாய் இருக்கிறது. விக்னேஷின் ஆளுமை, பாவனைகளை வெறுக்கும் பாவனை விளையாட்டில் ஆட்டத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் காதலி ஆட்டத்தில் பங்கு பெற மறுக்கும் நண்பன் என அனைவரும் கசக்க தொடங்குகின்றனர், பூரணி ஒரு முறை ஆசைக்கு விளையாடுகிறார், விக்னேஷ் அம்மா, விக்னேஷ் தங்கை , விக்னேஷ் இடையே உள்ள உறவு பூடகமாக ஒன்றாக கதையில் வருகிறது. தந்தையின் இடத்தில் அவனை வைக்கவும் முடியாது அவன் குழந்தையும் கிடையாது , விக்னேஷ் ஆளுமை நிலைக்கு வரும் வரை தாயின் தங்கையின் பாடு சிக்கல், விதியின் வசத்தில் பூரணி அன்னையாகி விக்னேஷுக்கு அமூதூட்டுகிறாள். சற்றே நிலைக்கு வந்த பின் விக்னேஷ் தன் பாலபாடத்தை நினைவு கூறுகிறான். 

நல்ல கதை !

அன்புடன் 
மணிகண்டன்

No comments:

Post a Comment