Monday 15 June 2020

காத்திருத்தல் - குறுங்கதை



நான் ரொம்ப நேரமாக காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அவர் வரவில்லை. நான் காத்துக் கொண்டிருந்த அறையில் ஒரேயொரு ஜன்னல் திறப்பு இருந்தது. அத்திறப்பில் இருந்து எதிரே இருக்கும் ஆளில்லாத உயரமான கட்டிடங்களைப் பார்க்க முடிந்தது. நான் தரைத்தளத்தில் இல்லை  என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த அறை இருப்பது ஒரு பெரிய அடுக்ககத்தில் என்பது தெரிகிறது. எதிரே உள்ள ஜன்னல் வழியே தெரியும் கட்டிடம் போன்ற அமைதி நான் அமர்ந்திருக்கும் அறை இருக்கும் அடுக்ககத்தில் இல்லை. அறைக்கு வெளியே விதவிதமான சத்தங்கள் கேட்கின்றன. கதவை எழுந்து சென்று திறக்கலாம்தான். ஆனால் திறக்கப் பிடிக்கவில்லை அலுப்பாக இருக்கிறது. மேலும் நான் காத்திருக்கிறேன். காத்திருத்தல் என்ற வேலையில் ஈடுபட்டிருக்கும் போது ஏன் இன்னொரு தேவையில்லாத வேலையில் தலையை நுழைக்க வேண்டும்? இப்படி தலையை நுழைப்பது சரி கிடையாது. ஏனெனில் அது நம்மை இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். மனதை நிலைக்க விடாமலடிக்கும். இப்படி அமர்ந்து கொண்டு இந்த அறையையும் ஆளரவம் அற்ற எதிர் கட்டிடங்களையும் பார்த்துக் கொண்டிருப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது? இந்த அறையில் சுவரில் நான்கு பக்கமும் பக்கத்துக்கு ஒன்றாக நான்கு ஃபிரேம்கள் மாட்டப்பட்டுள்ளன. அவற்றினுள் புகைப்படமோ ஓவியமோ இல்லை. வெறுமனே ஃபிரேம்கள். ஒரு மேசை கிடக்கிறது. ஆனால் அதில் மேற்பரப்பு இல்லை. இரண்டு நாற்காலிகள் கிடக்கின்றன. ஆனால் அவற்றில் ஆசனங்கள் இல்லை. ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட பெரிய பெரிய புத்தகங்கள் இருக்கின்றன. ஒன்றிலுமே ஒரு வரி கூட எழுதப்படவில்லை. அழகிய பேனாக்கள் இருக்கின்றன. எதிலுமே இங்க் இல்லை. எனக்கு கோபமாக வந்தது. இதெல்லாம் நிரப்பப்படத்தானே நான் காத்திருக்கிறேன். அவர் வந்தால் இதெல்லாம் நிரப்பப்பட்டுவிடும். அவர் நிச்சயம் வந்துவிடுவார். முன்னர் அவரைப் பார்த்தவர்கள் அவர் இந்த அறைக்கு நிச்சயம் வருவார் என்று சொல்லி இருக்கின்றனர். ஆனால் நாம் விடாப்பிடியாக காத்திருக்க வேண்டும். நம் காத்திருப்பு அவரை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும். நம் காத்திருப்பு அவரை கண்ணீர்விட வைக்க வேண்டும். நம் காத்திருப்பு அவரை அனிச்சையாக நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும். ஆனால் அவர் அறைக்கு வெளியே இருந்துதான் வருவார் என்று சொல்வதற்கில்லை.

2 comments:

  1. எல்லாமே வெறுமையாக தீர்ந்துபோயிருக்கும் ஆனால் காத்திருத்தல் மட்டுமே நிரம்பி இருக்கும் அறை.நல்லாருக்கு சுரேஷ்

    ReplyDelete
  2. ஆம்.அவர் தங்களுக்கு உள்ளிருந்து கூட வரலாம்...😀

    ReplyDelete