Tuesday 20 March 2018

தந்தையரே கருணை வையுங்கள்

தந்தையரே
உங்கள் கண்ணீரும் தியாகங்களும் எங்களுக்குப் புரிகிறது

தந்தையரே
உங்கள் தனிமையும் துயருங்கூட
எங்கள் சிறிய இதயங்களுக்கு
புரியவே செய்கிறது

தந்தையரே
உங்கள் மைந்தர் என்பதாலேயே
உச்சியின் தகிப்பை உணரும்
நடு ஆற்றினைப் போல
உங்களை உணரவும் செய்கிறோம்

இருந்தும் என்ன செய்ய
உணர முடியுமே அன்றி
போக்கிவிட முடியவில்லையே எங்களால்

தந்தையரே
நாங்கள் உங்களை விலகுகிறோம்
நாங்கள் அறிந்தே இருந்தாலும்
உங்கள் துயர் பெரிதென
எங்களை நீங்கள் உணரச்செய்கையில்

தந்தையரே
நாங்கள் உங்களை அஞ்சுகிறோம்
எது எங்களை ஆற்றுப்படுத்தியதோ
அதன் ஆகிருதியை முழுதுணர்கையில்

தந்தையரே
அனைத்தையும் கடந்து உங்களிடம்
அப்பட்டமான சுயநலத்துடன்
மன்றாடுகிறோம்

உங்கள் துயர் பெரிதே எனினும்
இரக்கமற்றுப் போய் இன்னும் நாங்கள் உங்களிடம் கருணையை எதிர்பார்க்கிறோம்

உங்கள் துயரை தமையர்களிடம் காண்பியுங்கள்
மைந்தர்களிடம் வேண்டாம் எனக் கெஞ்சுகிறோம் 

1 comment:

  1. Thanks for the wonderful poem. I really don't know what's with me and Dad and what's with me and my son.

    ReplyDelete