Friday 23 March 2018

கூண்டிலிருக்கும் குற்றங்கள்

வெகுதூரத்தில் கேட்கிறது
குற்றத்தின் காலடிச்சத்தம்
பூழியை எழுப்பாமல் மெல்லப் பதிகிறது
குற்றத்தின் பாதம்
சத்தமில்லாமல் ஆதுரத்துடன் கவ்வி
துளி ரத்தமும் மண்சிந்தாமலுண்ணும்
புலிபோல
அத்தனை பரிவுடன்
என்னை எடுத்துக் கொள்கிறது குற்றம்
குற்றத்தின் தியான நிலையை
அஞ்சுகிறேன் என்று சொல்லி
அழுகிறார் கடவுள்
குற்றத்தின் வேர்மணத்தை தவிர
மற்றதனைத்தையும் வெறுப்பதாய்
விலக்கம் காட்டுகிறாள் இறைவி
குற்றங்களை குழந்தைகள் அஞ்சுவதில்லை என்கிறார் ஞானி
குற்றமே இல்லையென்கிறான் யோகி
குற்றம் கூண்டுக்குள் இருக்கும் வரை
என் எழுத்தில் இயற்றுகிறேன்
எல்லா குற்றங்களையும் என்கிறான்
கவி

No comments:

Post a Comment