Thursday 23 June 2016

பெருஞ்சுழி 6


6

அறிக நொடி நொடியாய்  துயரை தனிமையை  வலியை உணரும்  உயிர்களால்  உய்கிறது  இவ்வுலகென. பாணன்  தொடர்ந்தான்.

முப்பக்கமும் கடல் சூழப்பட்ட பெருநிலமான ஆழிமாநாட்டின் வடக்கெல்லையாய் உயர்ந்திருந்த எவர்தொடாமேடு   என்றழைக்கப்பட்ட  பெரு மலையின்  மையமே சுனத வனம்.ஆழிமாநாட்டின் விரிவின் உச்சமாய் நின்றிருந்தது  எவர்தொடாமேடு.  நூற்றியிருபது தனியரசுகளாய் பரவியிருந்த  ஆழிமாநாடு  சுனத  வனம்  என்பதை  கதைகளாய் மட்டுமே  அறிந்திருந்தது. அங்கு உறைகின்றனர்  நம் மூதாதையர்  என ஒவ்வொரு நாளும் அத்திசை தொழுதனர் மக்கள்.சுனத  வனத்தினரும் தங்கள் எல்லை  தாண்டி  ஆழிமாநாட்டின்  நிலம் நோக்கிச்  சென்றதில்லை.  அவர்களின்  தேவைகள்  அனைத்தும்  பெருங்கருணையின் வடிவென  நின்றிருந்த  சுனத  வனத்திற்குள்ளேயே நிறைவேறியது. பெருந்தந்தை சுனதன் பிறந்த  குடி வனம் கடந்து  மண்  அடைவதில்லை  என்ற  கொள்கையே வகுக்கப்பட்டிருந்தது சுனத  வனத்தினில். துயரவர்களில்  தலைமையானவர்கள் என தங்களை  கூறிக்  கொள்வதில்  சுனத  வனத்தில்  பரவியிருந்த  அத்தனை  சிறு  குடிகளும் பெருமை  கொண்டன.

அலங்கனின்  முப்பாட்டன்  பெருவயன் குடிப்  பெருமைகளை  நம்ப மறுத்தார்.  குளிரும்  இருளும்  சுனத  வனத்தினருக்கு பயத்தை  அளிக்க பெருவயன் மட்டும்  அவற்றை  விரும்பினார். ஒவ்வொரு  நாளும்   அவர் சிந்தையிலும்  செயலிலும் சுனதன்  என்ற ஒற்றைப்  பெயரே பற்றி  எரிந்தது. சுனதன்  மீது அவர் கொண்ட  வெறுப்பை  பெறும் பக்தியென நம்பியது சுனத வனம்.சுனத  வனத்தின்  அனைத்து  சிறு  குடிகளையும்  ஒன்றிணைத்தார் பெருவயர். அவருக்குப்  பின்  சுனத  வனத்தின்  அனைத்து  குடிகளுக்கும்  அவர்  உதிர வழியினரே தலைமை  தாங்கினார்.  ஆனால்  பெருவயரின் தனிமை  விரும்பும்  குணமும்  இரக்கமற்ற  வீரமும்  ஒற்றுமை  உண்டாக்குவதில்  இருக்கும்  ஈடுபாடும்  அவருக்கு  பின்  தலைமையேற்ற யாரிடமும்  இருக்கவில்லை.

ஆதிரை  அகைதனையும் நிவங்கனையும் மண் வீழ்த்தியபோது சுனத  வனம்  அதிரவில்லை. கண்ணீர்  உகுத்தது. “பெருவயர் மண் நிகழ்ந்துவிட்டார்” என்று  கூட்டத்தின்  எல்லையில்  இருந்து  எழுந்த  ஒலி உற்சாக  பெருமூச்சென சுனத வனம்  சூழ்ந்தது. ஆதிரையின்  வயதே  ஆன நிவங்கனின்  மகன் பல்லைக்  கடித்தபடி  வாளேந்தி ஓடி வந்தான். மார்பை நோக்கிப் பாய்ந்த அவன் வாளினை இடம்பக்கம் உடல் வளைத்துத் தடுத்து முன் நெற்றியில் ஓங்கி அறைந்து அவனை வீழ்த்தினாள்.

சூழ்ந்திருந்தவர்களில் "மாயம் நிறைந்தவள்" என்ற குரல் எழுந்தது. சொடுக்கி நிமிர்ந்தாள் ஆதிரை. சுனத வனம் கேட்டிராத இடிக்குரலில் முழங்கினாள்.

"இவ்வனத்தின் ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் மகவையும் அறைகூவுகிறேன். என் எதிர் நின்று என்னைக் கொல்ல விரும்புகிறவர் முன் வரலாம்" என்றாள். குரல் முழங்கிய போதும் முகம் முற்றமைதியே கொண்டிருந்தது. இறந்த உடல்களில் எறும்புகள் ஏறத் தொடங்கின. சனையரை நோக்கி "எறும்புகள் சொல்கின்றன என் தமையனும் அவர் துணையனும் மண் நீங்கியதை. கழுகுகள் சொல்லும் வரை காத்திருக்கப் போகிறீரா?" ஆதிரை கேட்டாள். அலங்கன் எழுந்தார். தன் கையணிந்த காப்பையும் கோலையும் ஆதிரையிடம் கொடுத்து அவளை தன் பீடத்திற்கு இட்டுச் சென்று அமர்த்தினார்.

காற்று மட்டுமே பேசிக்கொண்டிருந்த அவ்வேளையில் எங்கோ ஒரு மூலையில் எழுந்தது ஒரு குரல். "சுனதரின் தவப்புதல்வி ஆதிரை மண் நிகழ்ந்து விட்டாலென". சருகில் பற்றிய நெருப்பென நெஞ்சடைத்த சுனதம் நெஞ்சே வெடிபடும் அளவிற்கு உடைந்து கதறியது. மறக்கப்பட்டு பெயரென மட்டுமே நினைவில் நின்ற சுனதனின் மகள் மீண்டும் உருவென மாறுவதை மோதமதி கண்டாள். அரிமாதரனுக்கு அக்கதை சொல்லத் தொடங்கினாள்.

No comments:

Post a Comment