Monday 20 June 2016

பெருஞ்சுழி 3

3

"தொடங்கியது  பெரும்  யுத்தம். மண்ணில்  நிகழ்ந்தவை  அனைத்தும்  இறைவனை கோபமுறச்  செய்தன.  மனிதன் வஞ்சம்  நிறைந்தவன். ஆணை  பெற்று  ஆள வேண்டியவன் ஆணை பிறப்பித்தவனை வீழ்த்த  நினைத்தான். மனித  பலம்  கூடிக்  கொண்டே  வந்தது.  பலம்  கூடுகையில் கடவுளின்  கருணை  சுரப்பான நீரின்  பரப்பு  குறையத்  தொடங்கியது.  இறைவனை  எதிர்க்கும்   மனிதனின்  யுக்தி  இறைவனைக்  குழப்பியது" மோதமதியின்  கதையை  புரிந்தும்  புரியாமலும்  கேட்டுக்  கொண்டிருந்தான் ஆதிரை மைந்தன்  அரிமாதரன். அவள்  தொடர்ந்தாள்.

 “மனித  இனத்திற்குள்ளாகவே இறைவனை  கசிந்துருகித்  தொழும் ஒரு  கூட்டம் உருவானது.மனிதனின்  செயல்கள்  ஒவ்வொரு  முறையும்  இறைவனின்  கோபத்தை தூண்டும்  போதும் அவர்களுக்குள்ளேயே  பக்தியும்  நம்பிக்கையும்  முதிர்ந்தவர்களால்  ஒவ்வொரு  முறையும்  காக்கப்பட்டது. அவர்கள்  இறையையும்  மறுக்கவில்லை  மனிதனையும்  வெறுக்கவில்லை. மனிதன்  உய்ய துயர் சூடி அலைந்தனர்.துயரவர்கள் என்றழைக்கப்பட்ட  அவ்வினத்தின் மூத்தோனாய் இருந்த சுனதன் ஒருமுறை  பெரு  வேதனை  கொண்டிருந்தான். தர்மம்  முழுதாக  அழிந்திருந்த  அக்காலத்தில்  இறை  நோக்கிய  அவன்  பக்தி  வலுத்திருந்தது.  அழிவுச் சாட்டையை  கை சுழற்றி  காத்திருந்த  இறைவனை  அவன்  அன்பே  கட்டியிருந்தது. ஆனால்  சுனதன்  அதை  அறிந்திருக்கவில்லை.  இனியும்  இவர்கள்  இருக்கக்  கூடாது  என நினைத்தான்.  உணவுக்கும்  உடல்  சுகத்திற்கும்  எதையும்  செய்யும்  கூட்டமாய்  வாழ்வு  தாண்டிய  மகத்துவங்களை  எண்ணத்  தெரியாத  மந்தையாய்  மாறியிருந்தது  மனித  இனம்.  “இறையே! எதற்கிருக்கிறேன்  நான்?" காற்றெனவும் வெளியெனவும் அவை  கடந்த  ஒன்றெனவும் நின்றிருந்த  இறைவனிடம்  பேசினான்  சுனதன். “ ஒன்றிலும்  நான்  பொருத்திப்  போக முடிவதில்லை. எனக்கு  தர்மமென தோன்றுவதை எண்ணி  நகைக்கின்றனர்  இவர்கள். இச்சைக்குள்  மூழ்கியே என்  இருப்பினை  உணர்த்த  வேண்டுமா?  என்னை  நிறைக்கும்  என் இறையே! இனியும்  மண் வாழ  வேண்டுமா  சுனதன்.  எழுவது அனைத்தும் வீழ்வதற்கே என்றறிருந்தும் எதைக் கட்டிக் கொண்டிருக்கிறேன் இங்கே நான்? உன்னிடமே  வருகிறேன். நீயே  தீர்ப்புரை.” என்று  சுனதன்  கடல்  புகுந்தான்.  அழிவாயுதம் சுழற்றி  எழுந்த  இறையை அன்னை மனம்  தடுத்தது.  அறிக மைந்தா! அறம் பிழைக்காதவனிடம்  அவ்வறத்தினால் இம்மியும் பயன் கொள்ளாதவனிடத்தில்  தெய்வமும்  எதிர்  நிற்க முடியாது.  சுனதனின் இச்சை  நிறைவேறும்  வரை அறத்துடன்  விளையாடட்டும்  மனிதன்  என நினைத்தான்  இறைவன்.

துயரவர் கூட்டம்  மட்டும்  தப்பி பிழைக்குமாறு  கடல்மட்டம்  உயர்ந்தது.  மலையுச்சிக்  குடில்களில்  வாழ்ந்த  துயரவர் இனம்  தனித்து  நின்றது.  மொத்த மனிதமும் கண்  முன்  அழிவதை  கண்டனர்  துயரவர். ஒரு அலை  மின்னலென  அம்மலையுச்சியில் விழுந்தது.  அதன் வழியே  தன் மக்கள்  நோக்கி  வந்தான்  சுனதன். சுனத மகானின் கருணையால் உலகே  நீரில்  மூழ்கி  இருக்க  இன்று  நிலமாய் விரிந்திருக்கும் ஆழிமேடு மட்டும்  எஞ்சியது.  பல்லாயிரம்  வருடங்கள்  கடந்தபின் துயரவர்களில் பல கிளைகள்  பிரிந்தன. நூற்றியிருபது  சிற்றரசுகளாய்  இன்றைய  நிலையை ஆழிமேடு அடைந்த  பின்  ஆழிமாநாடு என்றானது.  சுனதனின் கருணையால்  விரிந்து  பரந்த ஆழிமாநாடு  பெரும்  ஆறுகளால் சூழப்பட்டு  பசி என்பதே  இன்றி  வாழ்கிறது.  நூற்றியிருபது  சிற்றரசுகளும்  இருநூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  வரை சுனதனின் சொல்  மறவாமல்  ஆண்டனர்.  எல்லை  மீறல்  தொடங்கிய  அன்றே  ஆழிமாநாடு  அழியத் தொடங்கியது.  சுனதனைப் போல்  இன்னொருவன் இங்கு  எழுந்தால்  மட்டுமே  இறைக் கோபம்  தப்ப முடியும் . அறச் செல்வனாய் வளர்வாயடா என் செல்லமே" என்று  அரிமாதரனை  மடியில்  இருத்திக்  கொண்டாள் மோதமதி.ஆதிரையின் பாதக்குரடொலி கேட்டதும்  அரிமாதரனின் மீதான  பிடியை  லேசாகத்  தளர்த்தினாள்.

“ அன்னை” என  இரு கையும்  நீட்டியபடியே அவளிடம்  கால்  பின்ன  ஓடினான்.  அவள்  அவனை  அள்ளிக்  கொள்ளவில்லை.
“ பேரன்னை  சுனதனின்  கதை  சொன்னார்களா?” என்றாள்.
“ கடல்கோள் கடந்த  பின்  சுனதன்  நிகழ்த்தியவை சொன்னார்களா? “ என்று   மோதமதியை  பார்த்தாள்.
 அரிமாதரன்  உதட்டை  பிதுக்கினான்.
“ இவன்  அறிய  வேண்டியது  அதுவே  “ என்றுவிட்டு  அரசவை  நோக்கிச் சென்றாள்  ஆதிரை.  பெருமூச்சுடன் அரிமாதரனை  பார்த்தாள்  மோதமதி.  அவனைவிட  உயரமான  வாளொன்றை தூக்கிச்  சுழற்றிக்  கொண்டிருந்தான். 

2 comments:

  1. அப்படி என்ன செய்தார் சுனதர்? நானும் ஆவலுடன்.

    ReplyDelete
  2. அப்படி என்ன செய்தார் சுனதர்? நானும் ஆவலுடன்.

    ReplyDelete