Tuesday 21 June 2016

பெருஞ்சுழி 4

4
ஆதிரை  மாரதிரன்  தலை வீழ்த்தியவன்று  சவில்ய கோட்டம்  உறைந்திருந்தது. எந்த வித ஒற்றுச் செய்தியோ வதந்தியோ நகரில்  பரவவில்லை.  ஆதிரையின்  படைவீரர்கள்  அன்று  முழுவதும்  நகர்  நுழைந்தவண்ணம்  இருந்தனர்.  நாற்பதாயிரம்  வீரர்கள்  கொண்ட  மாரதிரன்  காலாட்படை  தளபதிகளின்  ஆணை  பெற முடியாமல்  செயலற்று  நின்றது. நள்ளிரவு  நகர்  புகுந்த  கணபாரனின்  குறும்படை ஆதிரையின்  வீரர்களில் திறன் வலுத்தவர்களையே கொண்டிருந்தது. உச்சி   எட்டும் வேளையில்  கோட்டையின் அனைத்து  புறங்களில்  இருந்தும்  உள் நுழைந்தனர்  நானூறு  வீரர்கள்.  வெகு  நாட்கள்  போர் அறிகுறிகள்  தென்படாமல் வாழ்ந்திருந்த கோட்டைக் காவலை  ஏமாற்றுவதும் சில இடங்களில்  வீழ்த்துவதும்  கணபாரனின்  நேரடி  கட்டுப்பாட்டிலிருந்த  வீரர்களுக்கு  சிரமம்  தருவதாக  இருக்கவில்லை.

 நான்கு  பெருந்தொகுதிகளாக தொகுதிக்கு பத்தாயிரம்  வீரர்களை தலைமை  தாங்கிய  மாரதிரனின் பெருந்தளபதிகள் நால்வர் முதலில்  கொல்லப்பட்டனர். அடுத்தபடி ஆயிரவர் தலைவர்களாய் இருந்த  நாற்பது பேரும்  அவர்களின்  வீரர்  நோக்கவே கிழித்தெறியப்பட்டனர். கணபாரனின்  நிலைப்பாடு  அது. வீரர்களின்  உறுதியையும்  நம்பிக்கையையும்  தகர்ப்பது. ஆணையிட்ட நகை பேசிய கண்டித்த  தண்டித்த தளபதிகள் கண் முன்னே தசைக்கூறுகளாய் கிழித்தெறியப்படுவதைக் கண்ட ஒவ்வொரு வீரனும் உளம் சோர்ந்தான்.பெரு மழைக்குப் பின் எழும் கடுங்குளிர் காற்றென அச்சோர்வு சவில்ய கோட்டத்தின் ஒவ்வொரு வீரனின் மீதும் தொற்றி ஏறியது. முதல் நிலை  வீரர்கள்  அதிர்ச்சியிலிருந்து  மீண்டு தங்களை தொகுத்துக்  கொண்ட போது  மாரதிரனின்  சினம் அரண்மனை  முகப்பில்  கொழு கொம்பொன்றில் குத்தப்பட்டு கொடியென ஏற்றப்பட்டது.  நிருவரனும்  இறந்துவிட  ஆதிரையின் பெரும்படை நகர்  நுழையத்  தொடங்கியது.

ஒருவனிடம்  கூட  வெறியோ விழைவோ தென்படவில்லை.  இக்கணம்  காணவே  மண் நுழைந்தவர்கள் என கொலை மட்டுமே  பணியென நிகழ்த்தினர். அவர்களில்  வெட்டுண்டு வீழ்ந்தவர்கள்  அரற்றவில்லை. வெட்டி வீழ்த்தியவர்கள்  தருக்கி நிமிரவில்லை. அவர்களின் ஓரிரு  வாள்  வீச்சே எதிர்  நிற்பவனை வீழ்த்த  போதுமானதாக  இருந்தது.  நகரின்  அதிர்ச்சி  மீள்வதற்கு  முன்னே களியாட்டுக்கும்  விழவுகளுக்கும்  எனச் சொல்லி நிறுத்தப்பட்டிருந்த  ஆதிரையின்  களிற்று நிறை ஆயிரம்  துதிக்கைகளுடன்  கோட்டை அடைந்தது.  மதியவேளைக்கு  முன்பே  போர்  முடிந்தது.  சவில்ய கோட்டத்தின் கிழக்கெல்லையில்  விரிந்து கிடந்தது  ஆழி.  பெரு நாவாய்கள் கட்டப்படாத காலம்  என்பதால்  ஒரு  மீன் பிடித்  துறைமுகம்  மட்டுமே  அங்கிருந்தது. வடக்கில்  ஆநிலவாயிலும்  மேற்கில்  சுனதபாங்கமும் சவில்ய கோட்டத்தின் அண்டை தேசங்களாக இருந்தன. சவில்ய கோட்டத்தின்  மேல்  பகை கொண்டிருந்த  அவ்விரு தேசங்களும் நிலைமை  சீரடையும்  வரை  ஆதிரையின்  முழு பலம்
அறியும்  வரை  அமைதி  காக்க  முடிவு  செய்தன. தெற்கில்  புதிதாக  உருவான  சிற்றரசாகிய திருமீடத்தின் மன்னன் தரிந்திரன்  ஆதிரையை  வீழ்த்தும்  பேராவலுடன் தன் படையை  சவில்ய கோட்டம்  நோக்கி  அனுப்பினான்.  கோட்டையை நெருங்குவதற்கு  முன்பே  அப்படையில் ஒருவரும்  மிச்சமின்றி கொல்லப்பட்டனர்.  விவசாயம்  செழிக்காத கடற்கரை  நகர்  சவில்ய  கோட்டம்.  உப்பும்  உவர்மீனுமே  சவில்யதின் உற்பத்தி  பொருட்கள். ஆதிரை  அரியணை  அமர்ந்த பின்  நிலை  மாறியது.  கோட்டையை  விரிவுபடுத்த  நினைத்தாள்.

சவில்யத்தின் மக்கள்  ஆதிரையை முழுதும்  ஏற்கவில்லை.  அவள் யார் ? எங்கிருந்து  வந்தவள்?  என்ற  கேள்விகள்  எஞ்சி  நின்றன.  ஆழி  வடிந்து  ஆழிமேடு  உருவானபோது  எவர்தொடாமேடு என்ற பெரு மலையின்  உச்சியில்  துயரவர்  தலைவனாகிய சுனதன்  வாழ்ந்தான்  என்றும்  அவன்  வழி வந்தவளே ஆதிரை  என்றும்  பாணர்கள் நகர்  முழுக்கப்  பாடினர்.  கருணையே  வடிவென  மக்கள்  முன்  தன்னை  அள்ளி வைத்தாள்  ஆதிரை.  மோதமதியின்  கரம் பற்றியே  அவள்  உலவியதால் மக்கள்  மனதிலிருந்த நெருடல்  பெரிதும்  விலகியது.  பாணர்களின் தொடர்ச்சியான புகழுரைகள் ஆதிரையை  அறத் தெய்வமெனவே காட்சி  கொள்ள  வைத்தன. நகர்  குழப்பங்களை  கணபாரனிடம் விட்டு  அவள் கோட்டையை விரித்துச் செல்வதை  சிந்திக்கத்  தொடங்கினாள். அரிமாதரன்  மோதமதியின்  கையில்  வளர்வதை  நகர்  மக்கள்  கண்ணீருடன்  பார்த்திருந்தனர். கணவனை  கொன்றவளின் குழந்தையை கருணையோடு வளர்க்கும்  அன்னையென மோதமதி  அவர்கள்  மனதில்  ஆதிரைக்கடுத்த உப தெய்வமானாள். கணிக்க  முடியாதவற்றை  செய்து  குழப்பமும்  ஆவலும்  மக்கள்  மனதை  கவ்வி  இருக்குமாறு  செய்வது  ஆட்சியாளரின்  உண்மையான  இலக்குகளை மக்கள் உணரக்  கூடாது  என்பதெற்கென மோதமதி  அறிந்திருக்கவில்லை.  ஆதிரை  உருவாக்கி  அளித்த  சித்தரத்தில் சவில்யம் நிம்மதி  பெரு மூச்சு  விட்டது.  ஆதிரை  தன்  அடுத்த  இலக்கில்  கண் நாட்டினாள். மோதமதி  சுனதனின்  கதையை  அரிமாதரனுக்கு சொல்லத் தொடங்கினாள்  ஆதிரையின்  அடுத்த இலக்குகள்  பற்றி சொல்லத்  தொடங்கினாள். அரிமாதரன் தன் அன்னையின்  இலக்குகள் அறியாதவனாய்  கதையில்  கண் ஊன்றினான. இலக்குகள் மட்டுமல்ல அவன் அன்னையையும் அறிந்திருக்கவில்லை.

1 comment:

  1. கருணையும் இரக்கமும் உடைய ஆட்சியாளன் தோற்கடிக்கப்படுவதுதானே மரபு?

    ReplyDelete